எதோ ஒரு பெண்ணின் (ஐஸ்வர்யா) தோளில் கைப்போட்டுக் கொண்டு சிரித்துப் பேசியபடி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நந்தா!
கணவனை வேறு ஒரு பெண்ணுடன், அதுவும் இவ்வளவு நெருக்கமாகப் பாப்போம் என்று எதிர்பார்த்திராத மாதுரிக்கு, அக்காட்சி தலையில் இடியை இறக்கியது போல இருந்தது.
தங்களுக்குள் சின்னச் சின்னச் சண்டைகள், விரிசல்கள் இருக்கிறது தான், அதற்காகக் கணவன் தனக்குத் துரோகம் செய்வானா? நினைத்துக் கூடப் பார்க்கவில்லை அவள்.
அதுநாள்வரை ஒரு சிறு நூலில் தொங்கி கொண்டிருந்த அவர்களின் கணவன் மனைவி என்ற உறவு, இந்த நொடி அறுந்து வீழ்ந்தது போல உணர்ந்தாள் மாதுரி.
ஒருவனைத் தேடி வந்தோமே என்பதைக் கூட மறந்து போய் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்து விட்டாள். கணவனின் சிரிப்பை பார்க்க பார்க்க, அவனை விட்டு எங்கோ தூரமாகச் செல்வது போல உணர்ந்தாள். பற்றிக்கொண்டு வந்தது.
பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து வாசலுக்கு ஓடினாள். ஆனால் அதற்குள் நந்தாவின் கார், அங்கிருந்து சென்றிருந்தது. அப்படியே படியில் அமர்ந்து விட்டாள்.
‘யார் அவள்?’
‘அவளுக்கும், நந்தாவுக்கும் என்ன தொடர்பு?’
‘எந்த அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருக்கிறது?’
‘வெறும் நட்பு தானா? இல்லை அதற்கும் மேலையா?’
‘எத்தனை நாளாக இது தொடர்கிறது?’
‘அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’
என ஆயிரம் கேள்விகள் அவள் மண்டையைக் குடைந்தது.
அந்த நினைவுடனே வீட்டிற்கு வந்தவளுக்கு, என்ன முயன்றும் கணவனை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்ததை மறக்க முடியவில்லை, அவனிடம் அது பற்றிக் கேட்காமலும் இருக்க முடியவில்லை.
இரவு, வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான் நந்தா. அவன் முகத்தில் எதுவும் இல்லை. கணவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த மாதுரி, அவனிடம் நேரடியாகவே அக்கேள்வியைக் கேட்டாள்.
“யாருங்க அந்தப் பொண்ணு?!”
“எந்தப் பொண்ணு?!” ஒன்றும் தெரியாதது போலக் கேட்டான் நந்தா.
“அதான் மதியம் ஹோட்டல் ஹாட் சூப்க்கு, சிவப்பு கலர் சுடில இருந்த ஒரு பொண்ணோட ஹோட்டலுக்குப் போனீங்களே அந்தப் பொண்ணு?!” அழுத்தம் திருத்தமாக வந்தது அவளின் குரல்.
மனைவிக்கு விஷயம் தெரிந்துவிட்டது, உஷாரானான் நந்தா.
“ஓஹ்!! அந்தப் பொண்ணா! அவங்க எனக்குத் தெரிஞ்ச ஃப்ரெண்ட் தான் மாதுரி. அபீஸ்க்கு வந்தாங்க. உன் கல்யாணத்துக்குக் கூட நான் வரல, நான் தான் இன்னைக்கு ட்ரீட் கொடுப்பேன்னு சொல்லி கட்டாயப்படுத்தி ஹோட்டலுக்குச் சாப்பிட கூட்டிட்டு போய்ட்டாங்க.” மனைவி தன்னை எந்தக் கோலத்தில் பார்த்தாள் என்பது தெரியாமல், பொய்யை சரளமாகக் கூறினான்.
[the_ad id=”6605″]
“மினிஸ்டர் பொண்ணு உங்களுக்கு ஃப்ரெண்ட்டா/ அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே?” மாலையே அப்பெண்ணைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்ட தகவலை, நக்கலாகச் சொன்னாள் மாதுரி.
“இப்போ என்ன சொல்ல வர மாதுரி நீ? ஏன்?! மினிஸ்டர் பொண்ணு எனக்கு ஃபிரெண்ட்டா இருக்கக் கூடாதா? ஃபைல்ல கையெழுத்து வாங்க அடிக்கடி அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அப்போ பழக்கம். அந்தப் பழக்கத்தில அவங்க கூடச் சாப்பிட போனேன். இதுல என்ன தப்பு இருக்கு? ஏன் நீ போனதில்லை, உன்னோட பாய் ப்ரெண்ட்ஸோட?” பட்டென்று ப்ளேட்டை மனைவி பக்கம் திருப்பினான் நந்தா.
பெரும்பாலான கணவன்மார்கள் செய்யும் அதே தப்பு. மனைவி நியாயமாக ஒரு கேள்வி கேட்டால், தன் தவறை நியாப்படுத்த அல்லது மறைக்க, குற்றத்தை உடனே மனைவியை நோக்கி திருப்புவது. ஏனெனில் மனைவி கணவனைக் கேள்வி கேட்பது வெறும் கேள்வி தான். ஆனால் கணவன் மனைவியைக் கேள்வி கேட்பது என்பது அவளது நடத்தையையே சந்தேகிப்பதில் கொண்டு வந்து நிறுத்திவிடும். அதன்பின் வேறென்ன, தன் மேல் எழும் சந்தேகத்தைத் தீர்ப்பதில் அவளின் முழுகவனமும் சென்றுவிட, கணவனின் தவறு அதில் புதைந்து போகிறது.
இங்கே நந்தாவும் அதே செயலை தான் செய்தான். தன் மேல் மாதுரிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைத் திசைத்திருப்ப, அவளின் நட்புக்களைச் சண்டைக்குள் இழுத்தான்.
விளைவு அவன் நினைத்தது போலவே நடந்தது.
“என்னைக்காவது ஒரு நாள், என்னோட பாய் ஃப்ரெண்ட்ஸோட கையை நான் பிடிச்சு நீங்க பார்த்து இருக்கீங்களா? ஆனா நீங்க, பப்ளிக் ப்ளேஸ்ல அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சுக்கிட்டு, ச்சே….”
“ஏய்! மரியாதையா பேசுடி! லஞ்ச சாப்பிடத்தான் போனேன்னு சொல்றேன். நீ பேசுறதை பார்த்தா, என்னமோ எங்களுக்குள்ள இல்லீகல் அஃபைர் இருக்கிற மாதிரில இருக்கு? ச்சை! இத்தனை நாளா சின்னச் சின்ன விஷயத்துக்குத் தான் சண்டை போட்டுக்கிட்டு இருந்த, இப்போ என்னடான்னா கட்டின புருஷனையே சந்தேகப்படவே ஆரம்பிச்சிட்ட? எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!” வழக்கம்போல மாதுரி பேசியது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசியவன், அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.
போகும் அவனையே வெறித்தபடி பார்த்திருந்தாள் மாதுரி.
மதிய வேளை. நரசிம்மனின் இல்லம். அவருக்கு எதிரில் கோபமாக அமர்ந்திருந்தான் நந்தா. அன்று மாதுரி அவனிடம் சண்டையிட்ட பொழுது ஏதேதோ பேசி சமாளித்துவிட்டான் தான். ஆனால் அவளின் முகப் பாவனையே தெரிவித்தது, தான் சொன்னதை அவள் நம்பவில்லை என்று. மாதுரி ஒரு வக்கீல் என்பதை நந்தா இன்னும் மறக்கவில்லை. அவர்களுக்குள் ஏற்ப்பட்ட முதல் சந்திப்பே அதனால் தானே! இதற்குப் பிறகு அவள் சும்மா இருக்க மாட்டாள், தன்னைப் பற்றி ரகசியமாக விசாரிக்கவும் செய்வாள் என்பது நந்தாவுக்கு நன்றாகத் தெரியும்.
“அப்போ பேசாம அவளையும் போட்டுத் தள்ளிட வேண்டியது தானே?!” நந்தா சற்று முன்பு சொன்ன செய்தியை வைத்து, நரசிம்மன் இவ்வாறு கேட்டார்.
“போட்டுத்தள்ளுறதுனா, என்னைக்கோ அவளைப் போட்டுத்தள்ளி இருப்பேனே மாமா! ஆனா அவளைக் கொல்றது அவ்வளவு ஈசி இல்லை. அது ரிஸ்க். இப்போ போலீஸ் எல்லாம் ரொம்ப உஷாரா இருக்காங்க. உண்மை எப்படிப் புதைஞ்சு கிடந்தாலும் சரி, தோண்டி எடுத்துடறாங்க. இவ்ளோ தூரம் வந்துட்டேன். நீங்க சொன்ன மாதிரி இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ வெயிட் பண்ணா போதும். அதுக்கு அப்புறம் நான் தவம் இருந்த செகரெட்ரி போஸ்ட் எனக்குக் கிடைச்சிடும். அது வரைக்கும் நான் பொறுமையா தான் இருக்கணும். கொஞ்சம் அவசரபட்டேனா கூட, என்னோட செர்வீஸ்ல பெரிய கரும்புள்ளி விழுந்துடும். அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. நாம ரெண்டு பேருமே மாட்ட வாய்ப்பிருக்கு.”
[the_ad id=”6605″]
“அப்போ, என்னதான் செய்யப் போறீங்க?!”
“அதுக்கு ஒரு யோசனை வச்சுருக்கேன்.” என்றவன், தன்னுடைய திட்டத்தைச் சொல்ல,
“சபாஷ் மாப்பிள்ளை! சூப்பர் திட்டம். கையில ரத்தமே படாம, குழம்புக்கு கோழியை நறுக்கின மாதிரி ஆகிடும்.”
“ம்ம்! அதுக்கான சரியான ஆளை தான் தேடிட்டு இருக்கேன்.”
“அந்தக் கவலையை விடுங்க மாப்பிளை. எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். உடனே அவனை வரச் சொல்றேன்.” சொன்னவர் தனது தொலைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் போட்டார்.
அடுத்த அரை மணிநேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் அவன்.
“வணக்கம் சர்!” வந்தவன் நரசிம்மனுக்கு ஒரு வணக்கத்தை வைக்க,
“இவன் தான் நான் சொன்ன ஆள். பேரு கௌஷிக். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் டாக்டரா வேலை பாக்கான்.” அந்தப் புதியவனைக் கைகாட்டி நரசிம்மன் சொல்ல,
அவனை உட்கார சொன்ன நந்தா, அவனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“இருக்கு சர்.” என்றவன் அதன் முழு விவரத்தையும் சொன்னான்.
முழுவதையும் கேட்ட நந்தா, மடமடவெனத் திட்டம் போட்டான்.
ஆனால் அடுத்தச் சில மாதங்களில் நந்தா எதிர்பார்க்காத ஒன்று நடந்தது.
“அப்பா! அப்பா!” எங்கோ கிணற்றில் இருந்து குரல் கேட்க, தன் கால்களை ஏதோ பிஞ்சு கரங்கள் உலுக்குவதை உணர்ந்து மெல்ல கண் விழித்தான் நந்தா.
ஜன்னலில் இருந்து வந்த வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு, ‘அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா! அப்படியே தூங்கிட்டேன் போல!’ என்று தனக்குள் சொன்னவன், அப்பொழுது தான் கவனித்தான், காலடியில் மகள் நிற்பதை. அவள் அறையில் இருந்து எழுந்து வந்து நந்தாவின் அறைக் கதவை திறந்துகொண்டு வந்திருக்கிறாள்.
உடனே எழுந்து, மகளைத் தூக்கி கொண்டவன், “என்ன டா அப்புக்குட்டி? காலையிலேயே எழுந்துட்டீங்க?!” என்றான், மகளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு.
“சுச்சா போனும்!” கண்களைக் கசக்கிகொண்டே கூறினாள் தனிஷ்கா.
உடனே மகளைக் குளியல் அறைக்குக் கூட்டிச்சென்று அவளின் காலை கடன்களை முடிக்க வைத்துவிட்டு, அப்படியே பல்துலக்கி, குளிக்க வைத்தவன், தானும் குளித்துவிட்டு வந்தான்.
அதன்பின் கிளம்பி அலுவகம் சென்றவன், கிடைத்த இடைவெளியில், தொலைபேசி அலுவகத்தில் இருக்கும் தன்னுடைய ஆளுக்கு ஃபோன் செய்தவன், சற்று முன்பு கௌசிக் அனுப்பிய நம்பரையும், தீ விபத்து நடந்த குறிப்பிட்ட தேதியையும் சொல்லி, அந்த நம்பருக்கு உண்டான இன்கமிங், அவுட்கோயிங் கால்ஸ் அடங்கிய விவரத்தின் நகலை எடுத்துக்கொண்டு, தன்னைச் சந்திக்கும்படி கூறியவன், எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதைச் சொல்லிவிட்டு வைத்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் கையில் அந்த விவரம் இருந்தது.
டயல் செய்யப்பட்ட நேரம், அழைப்பு விடுக்கப்பட்ட தொலைபேசி எண், இடம், பேசிய கால அளவு, யுனிட், தொகை உள்ளிட்ட விவரங்கள் வரிசையாக அச்சடிக்கப்பட்டிருக்க, அனைத்தையும் வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தவன், கௌஷிக் சொன்ன அந்தக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விரலை நிறுத்தினான். பின் அதற்கு நேர் வரிசையில் பார்த்தான். மூன்று எண்கள் இருந்தது.
[the_ad id=”6605″]
மூன்று எண்களையும் வரிசையாக ஒரு பேப்பரில் எழுதி கொண்டவன், தன் மொபைலில் இருந்து ஒவ்வொரு எண்ணாக அழைப்பு விடுத்தான்.
“ஹலோ! மாதுரி ப்ரெண்ட்டுங்களா?!” குரல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, கட்டைக்குரலில் பேசினான்.
ஆனால் அந்தப்பக்கமோ, “ஹலோ! யாருங்க அது? நீங்க சொல்றது கேக்கல!” என யாரோ கன்னடத்தில் சொல்ல, பட்டென்று ஃபோனை வைத்துவிட்டான்.
அடுத்த நம்பருக்கு அழைத்தவன் அதே கேள்வியைக் கேட்க, “அப்படி யாரையும் தெரியாதே! நீங்க யாருங்க?” என்று ஒரு வயதான தாத்தா பேசினார்.
“ராங் நம்பருங்க!” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
“ச்சே! இன்னும் ஒரு நம்பர் தான் இருக்கு. இதாவது நான் தேடுற நம்பரா இருக்கணும்.” சொல்லிவிட்டு, அந்த மூன்றாவது நம்பரின் ஒவ்வொரு எண்ணாக அழுத்தியவன், அப்பொழுது தான் மொபைல் திரையில் அதைப் பார்த்தான்.
பார்த்தவன் அதிர்ந்து போனான்!