அத்தியாயம் 19
தன் கையில் இருந்த கடைசித் தொலைபேசி நம்பரின் ஒவ்வொரு எண்ணாகப் பார்த்து பார்த்து அழுத்தினான் நந்தா.
9…8…7…0……………..1 கடைசி எண்ணை அழுத்திவிட்டுப் பச்சை பொத்தானை அழுத்தப்போனவன் அப்பொழுது தான் பார்த்தான், அந்த எண்ணுக்கான பெயரை அவன் மொபைல் திரை காட்டியது. அந்த நம்பர் அவன் ஏற்கனவே அவன் மொபைலில் சேவ் செய்து வைத்திருந்த நம்பர்.
அந்தப் பெயர், ‘கௌஷிக்!’
அவன் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை. கௌஷிக் தானா? மீண்டும் ஒரு முறை தன் கையில் இருந்த பேப்பரில் இருந்த நம்பரையும், தான் பதிந்த நம்பரையும் சரி பார்த்தான். இரண்டு நம்பரும் ஒன்று தானா? அல்லது ஏதேனும் ஒரு நம்பரை மாற்றி அடித்துவிட்டேனா? இல்லை ரெண்டும் ஒரே நம்பர் தான். ஒரு எண் கூட மாறி இருக்கவில்லை.
அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்.
‘கௌஷிக் தனக்குத் துரோகம் செய்துவிட்டானா?’
‘ஆரம்பத்தில் இருந்தே அவன் தன்னை ஏமாற்றி இருக்கிறானா? இல்லை?’
‘பின், அன்று தான் நம்பர் கேட்டப்பொழுது அவன் முகத்தில் ஒன்றையும் பார்க்கவில்லையே?’
‘தெரிந்தே தான் கொடுத்தானா?’
அவனால் அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியவில்லை. இரண்டு நம்பரும் ஒன்று தான் என்று கண்காளால் பார்த்ததுமே, மாதுரியுடன் சேர்ந்துகொண்டு கௌஷிக் தனக்குத் துரோகம் செய்துவிட்டான் என்று முடிவு செய்துவிட்டான்.
உடனே கோபம் சுர்ரென்று ஏறியது நந்தாவுக்கு.
[the_ad id=”6605″]
“ ***** ******* ” கண்டமேனிக்கு திட்டியவன், உடனே கௌஷிக்கை தொலைபேசியில் அழைத்தான். ஆனால் அந்தப்பக்கமோ, “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர், தற்பொழுது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார். தயவு செய்து சிறிது நேரத்துக்கு பின்னர் அழைக்கவும்!” என்ற பதிவு செய்யப்பட்ட குரல் தான் கேட்டது. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் அதே செய்தி தான் வந்தது. கையில் இருந்த மொபைல் ஃபோனை தூக்கி எரியும் ஆத்திரம் வந்தது. ஆனால் பொது இடம் என்பதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
ஆத்திரத்தோடு கார் கதவை திறந்து ஏறியவன், கௌஷிக்கின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
சென்னையின் ஏதோ ஒரு பகுதியில் இருந்த சிறிய வகை அபார்ட்மெண்ட் அது. மிஞ்சி மிஞ்சி போனால், பத்து வீடுகள் இருக்கும். அதன் முன் தன் காரை பார்க் செய்துவிட்டு, காரில் இருந்து இறங்கிய நந்தா, வேகவேகமாகப் படிகளில் ஏறி, மூன்றாவது தளத்தில் இருந்த கௌஷிக்கின் வீட்டை நோக்கி சென்றான்.
வீட்டுக் கதவு அடைத்திருந்தது. காலிங் பெல்லை அடித்துவிட்டுக் காத்திருந்தான். ஒரு இளம் பெண் கதவை திறந்தாள். அனேகமாக அவள் கௌஷிக்கின் மனைவியாக இருக்க வேண்டும். நந்தாவை பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு அதிர்ச்சி வந்து போனது. அதுவும் ஒரு நொடி தான். பின் தன் முகத்தைச் சாதரணமாக வைத்துக் கொண்டாள்.
“கௌஷிக் இருக்கானா?” நந்தா கோபத்தை அடக்கியபடி கேட்க,
“இல்லையே! அவர் காலையே ஹாஸ்பிடல் கிளம்பி போய்ட்டார். நீங்க?” நந்தாவிற்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை என்று புரிந்துகொண்டு, தெரியாத மாதிரி கேட்டாள்.
“அ….அவனோட ப்ரெண்ட்.” என்று சொன்னவன் கிளம்பாமல், வீட்டிற்குள் பார்வையைப் பதித்தவாறு இருக்க,
“எதாவது அவசரமா அவர பார்க்கணுங்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில் லஞ்ச சாப்பிட வருவாரு.”
“ஒ…ஒண்ணுமில்லை..” என்று சொல்லிவிட்டு நகரப்போனவன், பின் மீண்டும் அந்தப்பெண் பக்கம் திரும்பி, “என்னோட ஃபைல் ஒன்னு கௌஷிக் கிட்ட கொடுத்து வச்சிருந்தேன். அது இப்போ எனக்கு வேணும். அதைக் கேட்க தான் வந்தேன். கொஞ்சம் அர்ஜென்ட். எங்க இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சா, எடுத்து தர முடியுமா சிஸ்டர்?” குத்துமதிப்பாகக் கேட்டான் நந்தா.
இந்த முறை கதவின் பிடியை பிடித்திருந்த அப்பெண்ணின் கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தது. ஆனால் நந்தா இதைக் கவனிக்கவில்லை.
“இ…” உடல் நடுக்கத்தில் குரல் வராமல் காற்று மட்டும் வர, குரலை செருமிக் கொண்டாள். “இல்லைங்க. அப்படி எதுவும் எனக்குத் தெரியாது.” ஒரு வழியாகச் சொல்லி முடித்தாள்.
நந்தாவின் முகத்தில் ஏமாற்றம்.
அதற்குள் பக்கத்துக்கு வீட்டு பெண்மணி, “என்னம்மா? யார் இவர்? தெரிஞ்சவங்களா?” என்று கேட்டுக்கொண்டே நந்தா அருகில் வர, “வீட்டுகாரரோட ப்ரெண்ட் மா.” என்று பதில் சொன்னாள் கௌஷிக்கின் மனைவி.
இதற்கு மேல் இங்கு நிற்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட நந்தா, “நான் அப்புறம் வரேங்க.” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
நந்தா சென்ற அடுத்த நொடி, சட்டென்று கதவை அடைத்து லாக் செய்துவிட்டு, விறுவிறுவென்று படுக்கை அறைக்குள் சென்ற கௌஷிக்கின் மனைவி, அவளின் புடவைகள் இருந்த பீரோவை திறந்து, கீழ் ஷெல்ஃபில் பழைய புடவைகளுக்கு அடியில் இருந்த அந்தக் காகித கவரை எடுத்தாள்.
அவளின் நியாபகங்கள் பின்னோக்கி சென்றது.
அன்றொரு நாள், இதே மாதிரி மதிய வேளை. சமையலுக்குக் காய்களை நறுக்கிக் கொண்டே தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள், சாதனா, கௌஷிக்கின் மனைவி.
அப்பொழுது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து போய்க் கதவை திறந்தாள். வாசலில் அவளின் தோழி மாதுரி நின்றிருந்தாள்.
அவர்கள் இருவருக்கும் இடையில் சமீபத்தில் தான் பழக்கம். பக்கத்தில் இருந்த சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற பொழுது தான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஏனோ தெரியவில்லை, எல்லா விஷயங்களிலும் இருவருக்கும் ஒரே டேஸ்ட் இருக்கவே, குறுகிய காலத்தில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர்.
ஆனால் இவர்களின் நட்பு, நந்தாவுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மளிகை சாமான் வாங்க போகும் இடத்தில் ஒரு பெண்ணுடன் மனைவி நன்றாகப் பேசுவாள் என்ற அளவில் மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது.
ஆகையால் தானோ என்னவோ, மாதுரியின் தோழிகளைத் தேடும் வேட்டையில், சாதனாவை இவன் கோட்டை விட்டுவிட்டான்.
அதேநேரம் சாதனாவிற்கு, மாதுரி நந்தாவின் மனைவி என்றும், நந்தா சென்னையின் கலக்டர் என்றும் தெரியும். அவர்களின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள். அதே போலச் சாதனாவின் திருமணப் புகைப்படத்தில், கௌஷிக்கை பார்த்திருக்கிறாள் மாதுரி.
வேர்த்து விருவிருக்க வாசலில் நிற்கும் தோழியைப் பார்த்ததும். மடமடவெனச் சாவியை எடுத்துவந்து கிரில் கதவை திறந்துவிட்ட சாதனா, “என்னடி ஆச்சு? ஏன் இவ்ளோ வேர்த்துவிருவிருக்க வந்து நிக்குற? உள்ள வா!” என்றவள் மாதுரி உள்ளே வந்ததும் கதவை சாத்திவிட்டு, கிட்சனில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தோழியிடம் கொடுத்தாள்.
தண்ணீரை வாங்கி ஒரே மடக்கில் குடித்த மாதுரி, தன் பையில் இருந்து ஒரு கவரை எடுத்துச் சாதனாவிடம் கொடுத்தவள், “இந்தக் கவரை பத்திரமா வச்சுக்கோ சாதனா. எக்காரணம் கொண்டும் இந்தக் கவர் யார் கைக்கும் கிடைக்கக் கூடாது. முக்கியமா என் புருஷன் கைக்கு.”
“ஏன் டி? ஏதாவது பிரச்சனையா?”
[the_ad id=”6605″]
“இப்போதைக்கு இல்லை. ஆனா….” என்று ஏதோ சொல்ல வந்தவள் அதை விடுத்தது, “சரி அதை விடு. நான் கூடிய சீக்கிரம் வந்து இதை உன்கிட்ட வாங்கிக்கிறேன். இதைப் பத்தி யார் கிட்டையும் மூச்சு விடக்கூடாது.”
“என் புருஷன் கிட்ட நான் எதையும் மறைச்சது இல்லையே டி!”
“இப்போதைக்கு அவர் கிட்ட கூடச் சொல்ல வேண்டாம் சாதனா. ப்ளீஸ் டி, எனக்காக. நானே வந்து எல்லாத்தையும் சொல்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு. இன்னொரு விஷயம், நானே வந்து கேட்டா மாட்டும் தான் கொடுக்கணும். வேற யார் வந்து என் பேர் சொல்லி கேட்டாலும் கொடுக்கக்கூடாது. சரி எனக்குப் பேச நேரம் இல்லை. நான் கிளம்புறேன்.” என்றுவிட்டு விறுவிறுவென்று தோழியின் வீட்டில் இருந்து கிளம்பினாள் மாதுரி.
அன்று போனவள் தான் அதற்குப் பின்பு, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு தொலைபேசியில் அழைத்திருந்தாள்.
சாதனாவின் வீட்டில் அன்று கரென்ட் இல்லாத காரணத்தால், சார்ஜ் இல்லாமல் அவளின் மொபைல் ஃபோன் சுவிட்ச் ஆகி இருந்தது. கௌஷிக் வேறு, இரவு பணிக்கு செல்லவேண்டி இருந்ததால், மனைவியின் பாதுகாப்பு கருதி தன்னுடைய மொபைலை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். மாதுரிக்கு சாதனாவின் நம்பர், அவளின் கணவனின் நண்பர் இரண்டுமே தெரியும். அவசரத்திற்கு என்று கௌஷிக்கின் நம்பரையும் சாதனா கொடுத்து வைத்திருந்தாள்.
“ஹலோ!”
“ஹலோ சாதனா?!”
“ஆமாம், நீங்க?”
“நான் மாதுரி பேசுறேன் டி!” குரலில் பதற்றம் அப்பிக்கிடந்தது.
“மாதுரி!! நீயா?! எங்க டி போன? இவ்ளோ நாளா ஆளையே காணோம்? என் வீட்டுக்காரரை விட்டு உன் வீட்டுக்காரர் கிட்ட கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.”
“ஐயோ! வேண்டாம் டி. அதை மட்டும் எக்காரணம் கொண்டும் செஞ்சுடாத! இந்த விஷயம் முக்கியமா உன் புருஷனுக்குத் தான் தெரியக்கூடாது.”
“ஏன் டி அப்படிச் சொல்ற?!”
“அது…அது…நான் வந்து சொல்றேன் டி. ப்ளீஸ்.” யாரோ வரும் சத்தம் கேட்கவும் அத்தோடு முடித்துக் கொண்டாள் மாதுரி.
“சரி டி.” குழப்பத்துடன் பதில் சொன்னாள் சாதனா.
“சாதனா எனக்கு இப்போ பேச நேரம் இல்லை. நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ. நான் அன்னைக்கு உன்கிட்ட கொடுத்ததைப் பத்திரமா வச்சிருக்கத் தானே?!”
“ஆமாம்!”
“அதைப் பத்திரமா வச்சுக்கோ. நான் கூடிய சீக்கிரம் அதை வாங்க வரேன். என்னைத் தவிர யார்கிட்டையும் இதைப் பத்தி மூச்சு விட வேண்டாம்.” அதற்குள் பட்டென்று தொலைப்பேசி வைக்கப்படும் சத்தம் கேட்கவும், பீப் ஒலி கேட்டது.
காதில் இருந்து மொபைலை எடுத்த சாதனா, திரையில் தெரிந்த நம்பரை பார்த்தாள். அவளுக்குப் பரிச்சயமான நம்பர். ஆனால் பிடிபடவில்லை. அதன்பின் அவளின் கவனம் மாதுரி சொன்னதில் வந்து நிற்க, உடனே சென்று பீரோவை திறந்து அக்கவரை வெளியே எடுத்தாள். உள்ளே எதுவும் கனமாக இருப்பது போலத் தெரியவில்லை. ஏதோ காகிதம் இருக்க வேண்டும். பிரித்துப் பார்க்கலாமா வேண்டாமா? யோசித்தவளின் மனதில், சற்று முன்பு மாதுரி சொன்னது நியாபகம் வந்து. உடனே கவரை இருந்த இடத்தில் வைத்துவிட்டு பீரோவை பூட்டிவிட்டாள். ஆனால் அவள் மனம் மாதுரி சொன்ன வார்த்தைகளையே சுற்றி சுற்றி வந்தது.
[the_ad id=”6605″]
“என்ன விசயமா இருக்கும்?!”
“எதுக்கு மாதுரி இவ்ளோ பயப்படுறா?”
“அவ புருஷனுக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னா, இப்போ என் புருஷனுக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்றா? என்னவா இருக்கும்?!” மண்டை காய்ந்தது அவளுக்கு.
அதற்கு மேல் யோசிக்க விடாமல், அவளது மகனின் அழுகை சத்தம் கேட்க, தன் வேலைகளில் மூழ்கி போனாள்.
அதன்பின்பு எப்பொழுதும் அவள் மண்டைக்குள் அந்த விஷயமே ஓடிக்கொண்டு இருந்தது. கௌஷிக் கூட ஒரு சில முறை கேட்டான்.
“என்ன சாதனா? எப்போ பாரு எதையோ யோசிச்சிட்டே இருக்க? என்னை வேற வித்தயாசமா பார்க்கிற? என்ன ஆச்சு உனக்கு?” மனநல மருத்துவன் என்பதால் சரியாகக் கணித்துக் கேட்டான்.
“ஒன்னுமில்லைங்க!” சட்டென்று பேச்சை கத்தரித்தாள் அவள்.
அதன்பின் இன்று தான், அந்தக் கவரை எடுத்து பார்க்கிறாள் சாதனா. சற்று முன்பு நந்தா வந்து கேட்கவும் ஏனோ தெரியவில்லை, அவளுக்குச் சட்டென்று இந்தக் கவரின் நியாபகம் தான் வந்தது. அதே நேரம் மாதுரி அவளின் கணவனுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்லி இருந்ததும் சேர்த்தே.
“அவர் இந்தக் கவரை தான் தேடி வந்திருக்கிறாரா?”
“அவருக்கும், என்னோட வீட்டுக்காரருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல?!”
“அப்படி இந்தக் கவர் குள்ள என்ன தான் இருக்கு?”
“இனி இந்தக் கவர் என்கிட்டே இருக்கிறது ஆபத்து. எப்படியாவது மாதுரிகிட்ட சேர்த்திடனும். ஆனா அன்னைக்குப் ஃபோன் பேசி வரேன்னு சொன்னவ, அதுக்கு அப்புறம் ஆளையே காணோம். இப்போ என்ன பண்ண? அவளை எங்க போய்த் தேட?” பயமும், குழப்பமும் அவளைச் சூழ்ந்து கொண்டது.
‘என்ன செய்ய? என்ன செய்ய?’ வெகு நேரம் யோசித்தவளுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. “பேசாம சித்தார்த் அண்ணனுக்கு ஃபோன் போட்டு கேட்டா என்ன? ஆபத்து எதுவும் இருக்காது. இப்போ இருக்கிற சூழ்நிலையில அவ வீட்டுகாரர் கிட்டயும் கேட்க முடியாது. என் வீட்டுக்காரருக்கும் சொல்ல முடியாது. இது தான் சரியான வழி.”
என்றோ ஒரு நாள், விடுமுறைக்குச் சூரத்துக்குச் சென்றிருந்த பொழுது, தன் சிம் எடுக்காமல் போகவே, அவசரத்துக்குச் சித்தார்த்தின் மொபைலில் இருந்து அழைத்துப் பேசி இருந்தாள் மாதுரி. கேட்டதிற்கு அண்ணனின் நம்பர் என்றாள். சாதனாவும் அந்த நம்பரை நோட் செய்து வைத்திருந்தாள்.
இப்பொழுது அந்த நியாபகம் வர, மடமடவெனத் தன் பெர்சனல் டைரியை எடுத்துப், பக்கங்களைப் புரட்டினாள். கடைசிப் பக்கத்தில் கிறுக்கலான எழுத்தில் இருந்தது சித்தார்த்தின் எண். ‘கடவுளே! இந்த நம்பரா தான் இருக்கணும்!’ என்ற வேண்டுதலுடன், உடனே அந்த நம்பருக்கு தனது மொபைலில் இருந்து அழைத்தாள்.
இரண்டு அழைப்புகளுக்குப் பிறகு, மூன்றாவது தடவை எடுக்கப்பட்டது.
“ஹலோ!” அந்தப்பக்கம் சித்தார்த் பேச,
‘உண்மையில் சித்தார்த் தானா? ஆமாம் என்றால் என்ன பேசுவது?’ என்று சில நொடிகள் தயங்கியவள், பின் வேறு வழி இல்லை என்பதால், பேசினாள்.
“ஹலோ மாதுரியோட அண்ணாவா?!”
“ஆமாங்க. நீங்க?”
“அண்ணா! நான் மாதுரியோட ஃப்ரெண்ட் பேசுறேன். அவளைக் கொஞ்சம் அவசரமா பார்க்கணும். அவளோட நம்பர் தொலைஞ்சு போச்சு. அவ இப்போ எங்க இருக்கா?” வாய்க்கு வந்ததை உளறினாள்.
அந்தப்பக்கம் சில நொடிகள் அமைதி. தங்கை ரகசிய பாதுகாப்பில் இருக்க, எப்படி அவள் இருக்கும் இடத்தைச் சொல்வது என்று தயங்கினான் சித்தார்த்.
“எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா மா?”
சட்டென்று உண்மையைச் சொல்லவும் தயக்கமாக இருந்தது சாதனாவுக்கு. வெகு நேர யோசனைக்குப் பிறகு, மாதுரி அன்று வந்து தன்னிடம் கவரை கொடுத்ததையும், அவள் சொன்னவற்றையும் சுருக்கமாகச் சொன்னவள், “இப்போ அந்தக் கவரை அவகிட்ட கொடுக்கணும் அண்ணா. ப்ளீஸ்!”
சாதனா சொன்னதைக் கேட்ட சித்தார்த் பலமான யோசனைக்குப் போனான். ‘எதுக்கு நந்தாக்கு தெரியக்கூடாதுன்னு மாதுரி சொல்லி இருக்கா?!’ பயங்கரக் குழப்பம் அவனுக்கு.
“அண்ணா! அண்ணா! லைன்ல இருக்கீங்களா?”
“ஆஹ்ன்! இருக்கேன் மா. அவளுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. நீ உடனே கிளம்பி ஜி.எச் வந்துடு மா.” என்றவன், அவள் இருக்கும் அறை எண்ணையும், தளத்தையும் சொல்லிவிட்டு வைத்தான்.
சித்தார்த் பேசிவிட்டு வைத்ததும், மடமடவென உடைமாற்றிக்கொண்டு, மாதுரி கொடுத்த கவரை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு கீழே வந்த சாதனா, வழியில் சென்ற ஆட்டோவை பிடித்து, “ஜி.எச் ஹாஸ்பிட்டல் போங்க!” என்று சொல்லிவிட்டு ஏறி அமர்ந்தவள், வேர்த்து வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
அதே நேரம் சாதனா ஏறிய ஆட்டோவை பின்தொடர்ந்தது நந்தாவின் கார்.