ஆம்! சற்று முன்பு சாதனாவிடம் பேசிவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு அந்தத் தெரு கடைசி வரை சென்றவனுக்கு அப்பொழுதுதான், மதிய சாப்பாட்டிற்குக் கௌஷிக் வருவான் என்று சாதனா சொன்னது நியாபகம் வந்தது. சட்டென்று தெரு முனையிலேயே கௌஷிக்கின் அபார்ட்மெண்ட் கண்ணனுக்குத் தெரியும் வகையில், ஒரு மரத்திற்கு அடியில் காரை பார்க் செய்துவிட்டு, கௌஷிக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் நந்தா.
அவன் காத்திருந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருக்கும், கையில் ஒரு கவருடன், அபார்ட்மெண்ட்டை விட்டு சாதனா வெளியே வருவதைப் பார்த்தான். அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதற்குள் ஏதோ வைத்திருப்பாள் போல, கவரை இறுக பிடித்திருந்தாள். அவள் ஆட்டோவிற்குள் ஏறி அமர்ந்ததும் புறப்பட்ட ஆட்டோ, நந்தாவின் காரை தாண்டித் தான் சென்றது. சட்டென்று குனிந்து கொண்டான் நந்தா. ஆட்டோ நகரவும், காரை ஸ்டார்ட் செய்தவன், கோபத்துடன் சாதனாவை பின்தொடர்ந்தான்.
“புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்துகிட்டு ஆட்டமா காட்டுறீங்க. மவனே கௌஷிக், என் கையில் நீ மாட்டு அப்புறம் இருக்கு டா, உனக்குக் கச்சேரி!” கோபத்தில் ஸ்டியரிங்கை குத்தியவன், ஆக்ஸலேட்டரில் அழுத்தம் கொடுத்தான். கார் சீறிப் பாய்ந்தது.
அங்கே மருத்துவமனையில், சாதனா பேசிவிட்டு வைத்ததும், உடனே சுதர்ஷனை அழைத்தான் சித்தார்த்.
“சொல்லுங்க சித்தார்த். அங்க தான் வந்துட்டு இருக்கேன்.”
நடந்ததைச் சுருக்கமாகச் சொன்ன சித்தார்த், “அந்தப் பொண்ணு சொன்னது உண்மையா, பொய்யா தெரியல. இருந்தாலும் கிளம்பி வர சொல்லிட்டேன். அந்தப் பொண்ணு வர்ற நேரம், மாதுரி பாதுகாப்புக்கு நீங்களும் துணைக்கு இருந்தீங்கன்னா நல்லா இருக்குன்னு தான் உங்களுக்கு ஃபோன் போட்டேன் சர்.”
“சரியான காரியம் தான் செஞ்சு இருக்கீங்க சித்தார்த். அந்தப் பொண்ணு சொன்னது உண்மையா, பொய்யான்னு நான் வந்து பார்த்துக்கிறேன். நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.” சொல்லிவிட்டு வைத்த சுதர்ஷனுக்கு, அன்று நந்தாவின் மேல் ஏற்பட்ட சிறு சந்தேகம் இன்று இன்னும் வலுவடைந்தது.
“அந்தக் கவருக்குள்ள என்ன இருக்கும்?!” விடை தெரியா கேள்வி அவனுக்குள்.
மதிய வேளை. அரசு பொது மருத்துவமனை வளாகம். மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்க, பைக்கை அதன் இடத்தில் பார்க் செய்விட்டு இறங்கினான் கௌஷிக். அவனின் கை, பாக்கெட்டில் இருந்ததைத் தொட்டுப்பார்த்துக் கொண்டது. விறுவிறுவென்று படிகளில் ஏற ஆரம்பித்தான். அன்று நந்தா சொன்னது நியாபகம் வந்தது.
“நாளைக்கு டியூட்டிக்கு போறியா?
“ஆமாம் டா! Acp சாரப் பாக்க போகணும்.”
சில நொடிகள் அமைதிக்குப் பின், “அப்போ நான் சொல்ற மாதிரி செய்!”
[the_ad id=”6605″]
“என்ன டா?”
“acp சாரை பாக்கனும்னு சொல்லிக்கிட்டு ஜி.எச் போ.”
“அவர் ஸ்டேஷன்ல தான டா இருப்பார். அவரைப் பார்க்க நான் எதுக்கு ஹாஸ்பிடல் போகணும்?”
“அது எனக்கும் தெரியாதா! ஸ்டேஷன் போனேன். ஆனா அங்க அவர் அங்க இல்லை. அதான் ஹாஸ்பிட்டல் வந்தேன்னு ஒரு பொய்யச் சொல்லு.”
“பொய் சொல்லி?”
“பொய் சொல்லி ஹாஸ்பிடல் போற. அங்க மாதுரி இருக்கிற ரூம்க்குப் போகப் போற. ஆள் இல்லாத நேரம் பார்த்து, அவளுக்கு விஷ ஊசி போட போற…” நந்தா பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே போக,
அதிர்ந்து போன கௌஷிக் மறுப்பு தெரிவிக்க, எப்படியோ மிரட்டி சம்மதிக்க வைத்திருந்தான் நந்தா.
அன்று நந்தா சொன்னது போலவே, விஷ ஊசிய எடுத்துக்கொண்டு படிகளில் வேகமாக ஏறினான் கௌஷிக்.
அப்பொழுது திடீரென்று அவனது மொபைல் போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டது. ஏறிக்கொண்டே மொபைலை எடுத்துப் பார்த்தான்.
‘You have missed a call from Nandhakumar collector!’ என்று இரண்டு தடவை மெசேஜ் வந்திருந்தது.
‘நந்தா எதுக்கு ஃபோன் போட்டான்? ஒருவேளை இந்த விஷ ஊசி வேண்டாம் சொல்லவா?’ யோசித்தவன், உடனே நந்தாவிற்கு அழைத்தான்.
ஆட்டோவை ஃபாலோவ் செய்து கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்த நந்தா, மொபைலை எடுத்துப் பார்த்தான். கௌஷிக்கின் பெயர் திரையில் ஒளிர்ந்தது.
பட்டென்று அழைப்பை ஏற்றவன், கௌஷிக்கை பொரிந்து தள்ளிவிட்டான்.
“என்ன தைரியம் இருந்தா, என்னையே ஏமாத்த பார்ப்ப,?!என் கையில மட்டும் மாட்டு, உன்னைக் கண்டம் துண்டமா வெட்டி போட்டுடறேன்.”
“ஹலோ! நந்தா! நான் கௌஷிக் பேசுறேன்.”
“உன்னைத் தாண்டா சொல்றேன் பரதேசி!”
[the_ad id=”6605″]
அவன் அப்படிச் சொன்னதும் காதில் இருந்து ஃபோனை எடுத்து திரையைப் பார்த்தான் கௌஷிக். ‘சரியான நம்பருக்கு தான் போட்டு இருக்கேனா? ஆமாம், நந்தா நம்பர் தான். பின் ஏன் இப்படிப் பேசுறான்? என்ன ஆச்சு அவனுக்கு?’ குழப்பத்துடனே மீண்டும் ஃபோனை காதில் வைத்தான் கௌஷிக்.
“ஹலோ நந்தா! ஏன் இப்படி எல்லாம் பேசுற? உன்கிட்ட இருந்து கால் வந்ததுன்னு மெசேஜ் பார்த்தேன். டவர் இல்ல போல. அதான் அப்போ என் ஃபோன் எடுக்கல. அதான் இப்போ கால் போட்டேன். நீ சொன்ன மாதிரி மாதுரிக்கு விஷ ஊசி போடத்தான் ஜி.எச் வந்திருக்கேன். அதுக்குள்ள உனக்கு என்ன ஆச்சு?” படபடவெனச் சொன்னான்.
“என்ன சொன்ன? ஜி.எச்சுக்கா?” அதிர்ச்சி அடைந்தான் நந்தா.
‘இவன் உண்மையைத் தான் சொல்றானா? இல்லை என்னைச் சமாளிக்கப் பொய் சொல்றானா? அவன் பொண்டாட்டி அதுக்குள்ள ஃபோன் செஞ்சு சொல்லி இருப்பாளோ?’ கேள்விகள் அவன் மண்டையைக் குடைந்தது.
“இப்போ தான் உன் வீட்டுக்கு போயிட்டு வரேன்.” போட்டு வாங்கினான் நந்தா.
“என் வீட்டுக்கா? எதுக்கு?” குழப்பம் அடைந்தான் கௌஷிக்.
“இன்னைக்குக் காலையில தான் ஃபோன் நம்பர்ஸ் கிடைச்சுது. அதுல ஒரு நம்பர் உன்னோட மொபைல் நம்பர்.”
“என்னது?!!” அதிர்ந்து போனான் கௌஷிக்.
“ஆமாம்!”
“டேய் நந்தா! சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. எப்படி என்னோட ஃபோன் நம்பர் அதுல?” அதற்கு மேல் சொல்ல முடியாமல் திணறினான்.
ஆனால் நந்தா கணித்துவிட்டான். “ஷிட்!!” என்று கத்திக்கொண்டே ஸ்டியரிங்கை குத்தினான்.
“என்ன நந்தா? என்ன ஆச்சு?” நந்தாவின் கோபம், கௌஷிக்கிற்குப் பதற்றத்தை கொடுத்தது.
“அன்னைக்கு இன்சிடென்ட் அப்போ, உன்னோட மொபைல் ஃபோனை வீட்டுல விட்டுட்டு வந்தியா?”
சில நிமிடங்கள் யோசித்த கௌஷிக், “ஆமாண்டா! அன்னைக்கு என்னோட வைஃபோட மொபைல்ல சார்ஜ் இல்லை. அதான் வீட்டில வச்சுட்டு வந்தேன். ஏன் கேட்கிற?”
“ம்ம்!!” என்று கர்ஜிதத்தவன், “நாம தேடிட்டு இருக்கிற ஆள் வேற யாரும் இல்லை. உன் பொண்டாட்டி தான்.” என்றான் கோபத்தோடு.
“வாட்!! என்ன டா சொல்ற? நிஜமாவா?” அப்பட்டமான அதிர்ச்சி அவனிடம்.
சற்று முன்பு கௌஷிக்கின் வீட்டிற்குச் சென்றதில் ஆரம்பித்து, இதோ இந்த நொடி வரை நடந்ததைச் சுருக்கமாகச் சொன்ன நந்தா, “உன் வைஃபை தான் ஃபாலோவ் செஞ்சுட்டு இருக்கேன். அநேகமாக அவ அங்கத்தான் வந்துட்டு இருக்கணும்.”
கெளஷிக்கிற்கோ, உடல் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. ‘அப்போ! என்னைப் பத்தி எல்லா விஷயமும் சாதனாவுக்குத் தெரிஞ்சு இருக்குமா? அதனால தான் ஒரு வாரமா என்கிட்டே சரியா பேசுறது இல்லையா? ஐயோ! செத்தேன் நான்!’
அதற்குள் நந்தா அழைக்கவும், “ஆஹ! என்ன டா? என்ன சொன்ன?”
[the_ad id=”6605″]
“நீ எங்க இருக்க?”
“ஜி.எச்ல தான், செகண்ட் ப்ளோர்.”
“அப்போ அப்படியே கீழ ரோட்டை பாரு. ஒரு ஆட்டோ வருதா?”
ரோட்டை உற்றுப்பார்த்தான் கௌஷிக். ஆம்! நந்தா சொன்னது போலவே ஒரு ஆட்டோ வந்து நின்றது.
“அதுல இருந்து உன் பொண்டாட்டி இறங்குறாளா?”
உற்றுப் பார்த்தான். ஆம்! அவளே தான்!
“ஆமாம் டா! என் பொண்டாட்டி தான்.”
“அவ கையில ஒரு கவர் இருக்கா?”
“ஆ….ஆமாம் டா.”
“அதுக்குள்ள தான் நாம தேடிட்டு இருக்கிற எவிடென்ஸ் இருக்கு.”
“ஐயோ!”
“நீ என்ன பண்ணுவியோ தெரியாது. மாதுரியை தேடி அவ போறதுக்குள்ள அவ கையில இருக்கிற எவிடென்ஸ் உன் கைக்கு வந்தாகணும்.”
“அப்போ அந்த விஷ ஊசி?”
“அது இப்போ வேண்டாம். உன் கைக்கு எவிடென்ஸ் கிடைச்சதும், கீழ வா. நான் கார்ல வெயிட் பண்றேன்.”
“சரி!” சொல்லிவிட்டு வைத்தவனின் பார்வை, படிகளில் ஏறப்போன மனைவியின் மேல் விழுந்தது.
“எப்படி அவ கையில இருந்து எவிடென்சை வாங்க?” தீவிரமாக யோசித்தான்.
அதே நேரம் சுதர்ஷனின் காவல்துறை வாகனமும், ஜி.எச் வாசலில் வந்து நின்றது!