அத்தியாயம் 20
ஜீப்பை விட்டு இறங்கிய சுதர்ஷனின் கண்களில் தூரத்தில் சென்று கொண்டிருந்த சாதனா தென்பட்டாள். ஒருவேளை சித்தார்த் சொன்ன பெண் அவளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. உடனே வேகவேகமாக அப்பெண்ணைப் பின் தொடர்ந்தான்.
அதேநேரம் மாடியில் இருந்து மனைவி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌஷிக், வேகமாகப் படிகளில் இறங்கியவன், படிகளின் இடுக்கு வழியே மனைவியைப் பார்த்துவிட, “சாதனா!” என்று சத்தமாக அழைத்தான்.
சத்தம் கேட்டு மேலே பார்த்தாள் சாதனா. கணவனை இங்கே எதிர்பார்க்காதவள் அதிர்ந்து போனாள். உடல் நடுங்க ஆரம்பித்தது.
அதே நேரம், சாதனாவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுதர்ஷனின் காதிலும் அந்தப் பெயர் விழுந்தது. சற்று முன்பு சித்தார்த் சொன்ன அதே பெயர். உடனே உஷாரானவன் சித்தார்த்தை தொலைபேசியில் அழைத்து, “அந்தப் பொண்ணு வந்துட்டு இருக்கா. ரூமுக்கு வந்ததும் எங்கையும் போக விடாதீங்க சித்தார்த். நான் இதோ வந்துட்டே இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு வைத்தவன் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி வேகமாக ஏறினான்.
சாதனாவை அங்கேயே நிற்க சொன்ன கௌஷிக், தான் நின்றிருந்த தளத்தில் இருந்து கீழே இறங்கி, படிகளில் நின்றிருந்த மனைவியைக் கைபிடித்துக் கீழ் தளத்தின் வராண்டாவின் ஓரத்திற்கு அழைத்து வந்தவன், மனைவி உஷாராகிவிடாமல், தற்செயல் போலப் பேச ஆரம்பித்தான்.
“நீ எங்க இங்க? காலையில கூடச் சொல்லல?!”
ஏற்கனவே மாதுரி சொன்னதில் இருந்து, ஏதோ தவறான காரியம் என்றும், அதில் தனது கணவனுக்கும் பங்கு இருக்கிறது என்பதை யூகித்திருந்த சாதனா, எப்படி அவனிடம் இருந்து தப்பிப்பது என்று நினைத்து தட்டுத்தடுமாறி பேசினாள்.
“அது…அது ஒரு ப்ரெண்ட பார்க்க வந்தேங்க. டெலிவரி ஆச்சுன்னு போன் வந்துச்சு. அதான் அவளையும், பாப்பாவையும் பார்க்க வந்தேன்.” அநியாயத்திற்குக் குரல் நடுங்கியது.
[the_ad id=”6605″]
“இங்கயா?”
“ஆமாங்க!”
“அதென்ன கையில கவர்?”
“ஒன்னுமில்லைங்க சும்மா பர்ஸ் தான்.”
சாதனா சொல்லவும், கௌஷிக் அந்தக் கவரை வாங்க போகும் நேரம், “கௌஷிக்!” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.
பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். சுதர்ஷன் படிகளில் ஏறி அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தான். ஏற்கனவே மனநல மருத்துவமனை ரெஜிஸ்டரில் அவனின் புகைப்படத்தைப் பார்த்திருந்ததால் சுதர்ஷனுக்குக் கௌஷிக்கை அடையாளம் தெரிந்தது.
அதே நேரம் கௌஷிக் பக்கத்தில் நின்றிருந்த சாதனாவையும் பார்த்தான். தான் பின்தொடர்ந்து வந்த அதே பெண். அதே புடவை! அதே உயரம்! ‘இவள் எதற்கு, கௌஷிக்குடன் நிற்கிறாள்?’ கேள்வி அவன் மனதில்.
சுதர்ஷனை பார்த்ததும் மனைவியின் கையைப் பிடித்திருந்த கௌஷிக்கின் பிடி தளர, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயணப்படுத்திக்கொண்டு மெதுவாகப் பின்னே சென்றாள் சாதனா.
அதற்குள் சுதர்ஷன் அவர்கள் அருகில் வந்துவிட, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் சாதனா. அதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டான் சுதர்ஷன்.
“நீங்க தானே கௌஷிக்?
“ஆமாம் சர். நீங்க வர சொன்னதா, ஹாஸ்பிடல் டீன் சொன்னார். அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்.”
“அதுக்கு ஸ்டேஷனுக்குப் போகாம, இங்க எதுக்கு வந்தீங்க?”
“ஸ்டே….ஸ்டேஷன்ல நீங்க இல்லை சர். இங்க வந்திருக்கிறதா கான்ஸ்டபிள் சொன்னார்.” உளறிக் கொட்டினான்.
‘சற்று முன்பு வரை ஸ்டேஷனில் தான் இருந்தேன். இவனைப் பார்க்கவில்லையே! இவன் எதற்குப் பொய் சொல்ல வேண்டும்?!’ கௌஷிக்கின் மேல் சந்தேகம் வலுத்தது. இருந்தும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தான் சுதர்ஷன்.
“ஓஹ்! சரி! சரி!” அவனோடு சேர்ந்து ஒத்து ஊதினான்.
பின் விசாரணை என்ற பெயரில் சில கேள்விகளைக் கேட்டான்.
“எப்போ வெளியூர் போனீங்க?”
“எதுக்குப் போனீங்க?”
“அன்னைக்கு இன்சிடென்ட் அப்போ, எத்தனை பேர் வார்ட்ல இருந்தாங்க?”
“வேற எதுவும் சந்தேகப்படும்படியான நபரை பார்த்தீங்களா?”
இப்படிச் சுதர்ஷன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்க, கௌஷிக்கின் வாய் பதில் சொன்னாலும், அவன் பார்வை சுதர்ஷனின் பின்னால், தூரத்தில் செல்லும் சாதனாவையும், கீழே காரில் காத்திருக்கும் நந்தாவையும் தான் மாறி மாறிப் பார்த்தது.
கெஷிக் மனநல மருத்துவர் என்றால், சுதர்ஷன் ஐ.பி.எஸ் ஆஃபிசர் ஆயிற்றே! எத்தனை குற்றவாளிகளைப் பார்த்திருப்பான்? எத்தனை பேரை விசாரித்து இருப்பான்! இவற்றுக்கு எல்லாம் மேலே, குற்றவாளிகளின் கண் அசைவு, உட்கார்ந்திருக்கும் முறை, கை விரல்களின் அசைவு, போன்ற உடல்மொழிகளை வைத்தே அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதைத் தானே பயிற்சியில் அவன் கற்றது. கௌஷிக்கின் அசைவுகள் அவன் கண்களில் இருந்து தப்பாமல் இருக்குமா!
கௌஷிக்கின் கண் அசைவை சரியாகக் கண்டு கொண்டான் சுதர்ஷன். அவன் பார்க்காத நேரம், ஓரக்கண்ணால் கீழே நின்றிருந்த காரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். ஆனால் உள்ளே இருந்தது நந்தா என்று அவனுக்குத் தெரியவில்லை. நந்தாதான் தொப்பி, கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தானே! அதேநேரம் மேலே இருந்து பார்த்ததில், காரின் பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே தெரிய, காரின் நம்பரை சுதர்ஷனால் பார்க்க முடியவில்லை. இருந்தும் காரின் மாடலை நோட் செய்து கொண்டான்.
“சரி மிஸ்டர் கௌஷிக்! பின்னாடி தேவைப்பட்டா விசாரனைக்கு வரணும். என்கிட்டே சொல்லாம எங்கையும் வெளியூருக்குப் போகக் கூடாது. சரியா?”
“ஓகே சர்!” எப்போதடா சுதர்ஷன் இங்கிருந்து நகருவான் என்றிருந்தது கௌஷிக்கின் குரல்மொழி.
“ஆமா! நீங்க மெண்டல் ஹாஸ்பிடல்ல தானே டாக்டரா வொர்க் பண்றீங்க? அப்புறம் இங்க?” அவனை நகரவிடாமல் கேள்வி கேட்டான்.
சட்டென்று இப்படி ஒரு கேள்வி வரவும், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தவன், பின் எதையோ சொன்னான்.
“ஃப்ரெண்ட் ஒருத்தவங்க இங்க வொர்க் பண்றாங்க. ஒரு கேஸ் விஷயமா அவங்களைப் பார்க்க வந்தேன்.”
பதில் சொன்னவனுக்கு, அந்த ஃப்ரெண்ட் யார்? அவரைக் காட்டுங்கள்! என்று சுதர்ஷன் கேட்டுவிடக் கூடாதே என்று பதற்றமாக இருந்தது. நல்லவேளை அப்படி நடக்கவில்லை.
“சரி மிஸ்டர் கௌஷிக். நான் ஸ்டேஷன் கிளம்புறேன். முக்கியமான கேஸ் இருக்கு. நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்.”
“ஓகே சர்!
அதன்பின் சுதர்ஷன் அவனைக் கடந்து சென்றுவிட, அவன் அந்த ‘ப’ வடிவ வராண்டாவின் கடைகோடிக்குப் போய்த் திரும்பும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்த கௌஷிக், அவன் தலை மறையவும், விறுவிறுவென்று சாதனா சென்ற திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினான்.
ஆனால் அங்கே சுதர்ஷனோ, வராண்டாவின் கடைகோடியில் திரும்பி இரண்டடி எடுத்து வைத்தவன், அதற்கு மேல் செல்லாமல் சில நொடிகள் அப்படியே நின்றவன், பிறகு திரும்பி, சுவற்றுக்கு அந்தப்பக்கம் மறைந்து கொண்டு, தலையை மட்டும் நீட்டி, கெள்ஷிக் நிற்கிறானா என்று பார்த்தான். ஆனால் அவனோ யாரையோ (சாதனாவை) தேடி வராண்டாவின் அந்தப்பக்க திருப்பத்தை நோக்கி ஓடுவதைப் பார்த்ததும், விறுவிறுவென்று திரும்பி வந்து வராண்டாவின் நடுவில் இருந்த படிகளில் குதித்து ஏறி, மாதுரி இருக்கும் தளத்திற்கு வேகமாக ஓடி வந்தான்.
வந்தவன், தனக்கு இரண்டு பக்கமும் தலையைத் திரும்பி பார்த்தான். தூரத்தில் வந்து கொண்டு இருந்தாள் சாதனா. எப்படியும் அவளைப் பின்தொடர்ந்து கௌஷிக் வருவான் என்பதை உணர்ந்து, அருகில் காலியாக இருந்த அறைக்குள் நுழைந்தவன், வாசலுடன் ஒண்டியபடி சாதனா வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதோ பத்தடி, ஏழடி, ஐந்தடி என அவர்களுக்குள் இடைவெளி குறைந்துகொண்டே வர, சாதனா அவனைக் கடக்கவிருந்த நேரம், தூரத்தில் தென்பட்டான் கௌஷிக்.
சுதர்ஷன் ஏறி வந்த படிகள் மாதிரி, சற்று தள்ளி மற்றுமொரு படிகள் இருந்தது. அதன்வழியே ஏறி வந்திருப்பான் போல. மூச்சுவாங்க மனைவியைத் தேடியவன், அவனுக்கு அந்தப்பக்கம் பார்த்துவிட்டு, சுதர்ஷன் இருந்த திசைபக்கம் தலையைத் திருப்பிச் சாதனாவை பார்ப்பதற்குள், தன்னைக் கடந்து சென்றவளை சட்டென்று அறைக்குள் இழுத்துக் கொண்டான் சுதர்ஷன். மறக்காமல் அவளின் வாயை பொத்தினான்.
“அதுக்குள்ள எங்க போனா இவ!” எரிச்சல் அடைந்த கௌஷிக், மனைவியைத் தேடி, சற்று முன்பு சாதனா வந்த திசையை நோக்கி நடந்து வந்தான்.
கௌஷிக் தங்களைக் கடக்கும் வரை பொறுமையாக இருந்த சுதர்ஷன், பின் சாதனாவை தன்பக்கம் திருப்பி ‘சத்தம் போடாதே’ என்று சைகை செய்ய, காக்கி உடையில் இருந்த சுதர்ஷனை அடையாளம் கண்டுகொண்டாள் அவள். சற்று முன்பு கணவனுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது வந்தவன் ஆயிற்றே! அப்படியே கப்சிப் என்றாகி விட்டாள்.
அதன்பின் தலையை நீட்டி பார்த்தான் சுதர்ஷன். கௌஷிக் கடைகோடியில் சென்று திரும்பவும், சாதானாவை இழுத்துக்கொண்டு எதிர் திசையில் சென்றவன், சற்று தள்ளி இருந்த மாதுரியின் அறைக்குள் அவளுடன் நுழைந்தான். மறக்காமல் கதவை பூட்டினான்.
[the_ad id=”6605″]
இங்கே, மனைவியைத் தேடி தேடி அலுத்துப்போன கௌஷிக், உடனே நந்தாவிற்கு அழைத்தான்.
“என்ன டா, கவரை வாங்கிட்டியா?!”
“இல்ல டா. அதுக்குள்ள அந்த ACP வந்துட்டான்.”
“அவனா?!”
“ம்! என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டு இருக்கும்போதே வந்துட்டான். அவளும் போய்ட்டா. அவன் பேசிட்டுப் போனதும், சாதனாவை தேடி போனேன். ஆனா அவளை எங்கையம் காணோம்.”
கௌஷிக் சொன்னதை வைத்து நடந்த சம்பவங்களைத் தொடர்புபடுத்திப் பார்த்தான் நந்தா. சட்டென்று அவனுக்குப் புரிந்துவிட்டது. சாதனா காணாமல் போனதற்கும், சுதர்ஷனுகும் ஏதோ சம்பந்தம் இருக்கு என்று. ஒருவேளை சாதனா, சித்தார்த்திற்கு ஃபோன் செய்திருக்கலாம், அதன்பின் அவன் சுதர்ஷனுக்கு, சாதனா வரும் விவரத்தை சொல்லி இருக்கலாம். இல்லையென்றால் இந்த நேரத்தில் ஸ்டேஷனில் இல்லாமல் இங்கு எதற்கு வரப் போகிறான்?
உடனே உஷாரானவன், “டேய் கௌஷிக்! உன் பொண்டாட்டி வரப்போற விஷயம் தெரிஞ்சு தான் அந்த ACP இங்க வந்திருக்கான். இந்நேரம், உன் பொண்டாட்டி, அந்தப் போலீஸ்காரன் எல்லாம் மாதுரி ரூம்ல தான் இருப்பாங்க. நீ என்ன பண்ற, அங்க போய், அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு ஒட்டு கேட்க முடியுமான்னு பாரு. இல்லனா உன் பொண்டாட்டியை எப்படியாவது கடத்திட்டு வந்திடு.”
“அவ எதுக்கு டா?”
“நிச்சயம் அவளுக்கும், இந்நேரம் விஷயம் தெரிஞ்சு இருக்கும். அதைக் கேட்டு தெரிஞ்சிக்கத்தான்.” என்றவன், மாதுரியின் அறை எண்ணை சொல்லிவிட்டு வைத்தான்.
நந்தா சொன்னது போலவே, மாதுரியின் அறையை நோக்கி ஓடினான் கௌஷிக்.
வேர்கவிருவிருக்க, அறைக்குள் நுழைந்த சுதர்ஷனையும், அருகில் இருந்த பெண்ணையும் பார்த்த சித்தார்த், குழப்பத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.
“என்ன ஆச்சு சர்? யார் இவங்க?”
சித்தார்த்துக்குப் பதில் சொல்வதற்கு முன், சாதனாவின் பக்கம் திரும்பிய சுதர்ஷன், “உங்க ஃப்ரெண்ட் மாதுரி கேஸை நான் தான் பார்த்துட்டு இருக்கேன் சாதனா. அதைப்பத்தி விவரமா உங்களுக்கு அப்புறம் சொல்லுறேன். மாதுரி உங்ககிட்ட ஏதோ கவரை கொடுத்ததைப் பத்தி கொஞ்ச முன்னாடி, இவருக்கு ஃபோன் செஞ்சதா, சித்தார்த் எனக்குச் சொன்னாரு. அதுக்காகத் தான் நான் கிளம்பி இங்க வந்தேன். அது என்ன கவர்?”
சுதர்ஷன் கேட்க, சாதனாவோ, சித்தார்த்தை கேள்வியாகப் பார்த்தாள். அவனை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு. இதைப் புரிந்துகொண்ட சுதர்ஷன், “இவர் தான் மாதுரியோட அண்ணன், சித்தார்த். இவருக்குத் தான் கொஞ்ச முன்னாடி நீங்க கால் செஞ்சீங்க!” என்றான்.
சித்தார்த்துமே, “ஆமாம் மா. நான் தான் மாதுரி அண்ணன். இது மாதுரி அட்மிட் செஞ்சிருக்கிற ரூம் தான்.” என்றவன் தனக்குப் பின்பக்கம் இருந்த கட்டிலை காட்டி, “அதோ இருக்கிறா மாதுரி!” என்றான் கூடுதல் தகவலாக.
கட்டிலை எட்டிப்பார்த்தாள் சாதனா. மாதுரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். முன்பு பார்த்த மாதுரி மாதிரி இல்லை. ரொம்பவே வித்தியாசமாக இருந்தாள். ஆனால் முகம் மட்டும் அடையாளம் தெரிந்தது.
“அவளுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அதுக்கு ஆப்பரேஷன் செஞ்சுருக்கு.” அவளுக்குப் புரியும்படி சொன்னான் சித்தார்த்.
தோழியை ஒரு மேற்பார்வை பார்த்துவிட்டு, உடனே தன் கையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்து, ஒரு என்வலப் கவரை எடுத்துச் சுதர்ஷனிடம் நீட்டினாள்.
“இது தான் மாதுரி என்கிட்டே கொடுத்த கவர்.” என்றவள் சற்று முன்பு சித்தார்த்திடம் சொன்னதை, சுதர்ஷனிடம் சுருக்குமாகக் கூறினாள்.
“அன்னைக்கு மாதுரி கூட யாராவது வந்தாங்களா?!”
“இல்லை சர்!”
“உங்ககிட்ட வேற எதுவும் சொன்னாங்களா? யார் என்னனு?”
“இல்ல சர். இந்தக் கவரை கொடுத்தா, அவ வீட்டுக்காரருக்கு மட்டும் விஷயம் தெரிய வேண்டாம்ன்னு சொன்னா அவ்ளோதான்.”
“இப்போ கொஞ்ச முன்னாடி யார் கிட்டையோ பேசிட்டு இருந்தீங்களே, அது யார்?”
“அவர் என்னோட ஹஸ்பண்ட்!”
“என்னது! அவர் உங்களோட ஹஸ்பண்ட்டா?”
“ஆமாம் சர்!”
“அப்போ எதுக்கு அவரைப் பார்த்து பயந்தீங்க?!”
சொல்லவா வேண்டாமா என்று அவள் யோசிக்க, அதைப் பார்த்த சுதர்ஷன், “மாதுரி கேசை பொறுத்தவரை எங்களுக்குக் கிடைக்கிற சின்னச் சின்ன க்ளூ கூட உதவும். இப்போ மாதுரி இருக்கிற கண்டிஷனுக்கு, அவங்ககிட்ட எந்த விசாரணையும் செய்ய வேண்டாம்ன்னு டாகடர் சொல்லிட்டாங்க. அதனால எங்களுக்கு வேற வழி இல்லை சாதனா. எனன் விஷயம்ன்னு மறைக்காம சொல்லுங்க!” என்றான்.
“சாரி சர். அது வந்து….அன்னைக்குக் கவர் கொடுத்துட்டு போனபிறகு, ஒரு வாரத்துக்கு முன்னாடி, மாதுரி என்னை ஃபோன்ல காண்டக்ட் பண்ணா. அப்போ, இந்தக் கவர் பத்தின விஷயம் என்னோட வீட்டுக்காரருக்கு கூடத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னா. இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி, அவளோட ஹஸ்பண்ட் என்னோட வீட்டுக்கு வந்து, இந்தக் கவரை பத்தி விசாரிச்சாரு. சட்டுன்னு எனக்கு மாதுரி சொன்னது நியாபகம் வந்ததும், உடனே எனக்குச் சந்தேகம் வந்துடுச்சு. அதான் அவர் போனதும் கிளம்பி வந்துட்டேன். இங்க வந்து பார்த்தா சொல்லிவச்ச மாதிரி என்னோட வீட்டுகாரரும் இந்தக் கவரை பத்தி தான் கேட்டாரு. அவருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாதுன்னு மாதுரி சொன்னதால தான், அவரை எப்படிச் சமாளிக்கிறதுன்னு தெரியாம பயந்துட்டேன்.”
சாதனா சொன்ன எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டான் சுதர்ஷன். ‘அப்போ, நந்தா சம்பந்தமான ஏதோ ஒரு விஷயம் மாதுரிக்கு தெரிஞ்சு இருக்கணும். அதனால தான் யார்கிட்டயும் கொடுக்காம இந்தக் கவரை சாதனாகிட்ட கொடுத்து இருக்கா. அப்படி என்ன விஷயம்?’ ஆர்வம் தொற்றிக்கொள்ள, கவரை பிரித்தான் சுதர்ஷன்.
சரியாக அதே நேரம், மாதுரி இருக்கும் அறை வாசல் அருகில் வந்த கௌஷிக், யாரும் வருகிறார்களா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, பாதி உயரம் கண்ணாடியால் ஆன, அறை கதவின் வழியே உள்ளே எட்டி பார்த்தான். சுதர்ஷன், சாதனா, சித்தார்த் மூவரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்காவிடினும், ஏதோ மங்கலாகக் கேட்டது. கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
மடமடவெனக் கவரை பிரித்தான் சுதர்ஷன். உள்ளே ஒரு காகிதம் இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. எடுத்து எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக வாசிக்க ஆரம்பித்தான்.
காவல்துறைக்கு எழுதப்பட்டிருந்த கடிதம் அது.
‘மதிப்பிற்குரிய காவல்துறை ஆணையர் அவர்களுக்கு,
என் பெயர் மாதுரி நந்தகுமார். என் கணவர், சென்னை மாவட்டத்தின் ஆட்சியர் நந்தகுமார் ஆவர். அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் சந்தேகபடும்படி இருக்கவும், வக்கீல் என்ற முறையில் அவரை நான் உளவு பார்த்தேன். அப்பொழுது திடிக்கிடும் சில உண்மைகள் எனக்குத் தெரியவந்தது. அவற்றிற்கான ஆதாரங்கள் எல்லாவற்றையும், ஒன்றாகச் சேகரித்து ஒரு பெண்ட்ரைவில் சேகரித்து வைத்திருக்கிறேன். அந்தப் பெண்டிரைவ் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் எனக்குச் சொந்தமான அபார்ட்மெண்ட் வீட்டில் உள்ள பீரோவில் பாதுகாத்து வைத்துள்ளேன். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்குமாயின், அந்த ஆதாரங்களின் உதவியுடன் என் கணவரை சட்டத்திற்கு முன் நிறுத்தி, அவருக்குத் தக்க தண்டனை வாங்கித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன் முடிந்திருந்தது அக்கடிதம்.
‘அது என்ன எவிடென்ஸ்?’
‘எதுக்காகப் போலீசுக்கு லெட்டர் எழுதி இருக்கா?’
பல கேள்விகள் சுதர்ஷனின் மனதை குடைந்தாலும், கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த செய்தி அப்போதைக்கு அவனை முழுவதுமாக ஆட்கொண்டது.
‘நந்தகுமார் நல்லவனில்லை!’
‘ஏதோ ஒரு பெரிய தப்பை செஞ்சு இருக்கான்!’
‘அந்த உண்மை மாதுரிக்கு தெரிஞ்சு இருக்கு.’
‘ஒருவேளை மாதுரியை கொல்ல முயற்சி நடந்தது கூட நந்தகுமாரால் தானோ?’
‘இதுக்கு உடைந்தயா அந்த டாக்டர் கௌஷிக் இருக்கணும்.’
‘ஆனா நந்தா செஞ்ச அந்தப் பயங்கரம் என்ன?’
போன்ற பல கேள்விகள் எழுந்தது.
[the_ad id=”6605″]
‘கிணறு தோண்ட பூதம் கிளம்பின கதையா, அந்த எவிடென்ஸ் குள்ள நாம நினைச்சு பார்க்காத ஏதோ ஒன்னு இருக்கு!’ என்று உறுதியாக நம்பினான் சுதர்ஷன்.
இவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க, அங்கே கௌஷிக்கோ, நந்தாவுடன் காரில் சென்று கொண்டிருந்தான், மாதுரியின் அபார்ட்மெண்ட் வீட்டை நோக்கி.
சற்று முன்பு சுதர்ஷன் படித்துக் கொண்டிருந்ததில் இருந்து, அந்த எவிடென்ஸ், மாதுரியின் அபார்ட்மெண்ட் வீட்டில் உள்ள பீரோவில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட கௌஷிக், விறுவிறுவென்று கீழே சென்று தெரு முனையில் காத்திருந்த நந்தாவிடம் வந்தவன், அனைத்தையும் சொல்ல, அப்பொழுதுதான் நந்தாவிற்கு, காரின் டேஷ்போர்டில் என்றோ போட்டி வைத்திருந்த மாதுரியின் அபார்ட்மெண்ட் வீட்டுச் சாவி நியாபகம் வந்தது. உடனே காரை மாதுரியின் அபார்ட்மெண்ட் (அம்பரீஷ் மகளுக்குப் பரிசாகக் கொடுத்த அபார்ட்மெண்ட் அது) வீட்டை நோக்கி செலுத்தினான் நந்தா.
நந்தா கிளம்பிய பின்னரே, சித்தார்த்திடம் முகவரியை வாங்கிகொண்டு, சுதர்ஷன் அந்த வீட்டிற்குக் கிளம்பினான்.
வண்டியை வேகவேகமாக ஓட்டினான் சுதர்ஷன். எப்படியாவது அந்த இடத்திற்குச் சீக்கிரம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. எப்படியோ ஒருவழியாக மாதுரியின் அபார்ட்மெண்ட் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தவன், அபார்ட்மெண்ட் வாசலில் காரை பார்க் செய்துவிட்டு, வேகவேகமாகப் படிகளில் தாவி ஏறினான்.