சில நிமிடங்களில் மாதுரியின் வீட்டின் முன் வந்து நின்றவன், கதவை திறக்க முயற்சிக்க, அது பூட்டப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், அக்கம்பக்கத்தினர் யாரையும் காணவில்லை. பின் காலால் ஓங்கி கதவை மிதித்தான். டமாரென்ற சத்தத்துடன் கதவு திறந்துகொண்டது.
புயலென வீட்டிற்குள் நுழைந்தவன், படுக்கை அறையில் பார்க்க, மாதுரி குறிப்பிட்டு இருந்த அந்தப் பீரோ திறந்து கிடக்க, உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதறிக் கிடந்தது. அதிர்ந்து போனான். கீழே கிடந்த பொருட்களை எல்லாம் அலசி பார்த்தான். பெண்ட்ரைவ் மாதிரி எதுவும் இல்லை.
பொருளை கோட்டை விட்டுவிட்டோமே என்ற ஆத்திரத்தில் காலால் தரையை உதைத்தான். அதற்குள் வெளியே எதோ சத்தம் கேட்கவும், வீட்டை விட்டு வெளியே வந்தான். ஒரு பெண்மணி நின்றிருந்தார். சுதர்ஷனின் காக்கி உடையைப் பார்த்ததும் அவரின் முகத்தில் ஒரு பயம் வந்து போனது.
அதற்குள் அவர் அருகில் வந்த சுதர்ஷன், “இப்போ கொஞ்சம் முன்னாடி இந்த வீட்டுக்கு யாரவாது வந்தாங்களா?” என்று கேட்டான்.
முதலில் திருதிருவென்று முழித்த அப்பெண்மணி பின், “ஆமாம் சர். ஒரு கருப்பு கலர், ஸ்விஃப்ட் கார்ல் ரெண்டு பேர் வந்தாங்க. யாருன்னு கேட்டேன். மாதுரியோட அண்ணன்னு சொன்னாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்தில் வீட்டை பூட்டிட்டு போய்ட்டாங்க.” என்றார்.
அந்தப் பெண்மணி சொன்ன கார் அடையாளம், சற்று முன்பு ஜி.எச் மருத்துவமனையில் வைத்துக் கௌஷிக்கிடம் பேசும்பொழுது கீழே நின்றிருந்த கார்.
சட்டென்று பொறித் தட்டியது அவனுக்கு. நாம் பேசிக்கொண்டு இருந்ததை எப்படியோ கௌஷிக் கேட்டு இருக்கிறான். அவனும் அவனுடன் சேர்ந்த மற்றொருவன், அனேகமாக நந்தாவாகத் தான் இருக்க வேண்டும், இரண்டு பேரும் நமக்கு முன்பே இங்கு வந்து எவிடென்சை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இனி கௌஷிக்கை ஃபாலோவ் செய்தால் தான், நந்தாவை கையும் களவுமாகப் பிடிக்க முடியும்.
முடிவு செய்து கொண்டான்
அந்தப் பெண்மணியிடம் நன்றி சொல்லிவிட்டு வேகமாகக் காரை எடுத்துக்கொண்டு கௌஷிக் வேலை செய்யும் மனநல மருத்துவமனையை நோக்கி வண்டியை செலுத்தினான்.
ஆனால் அவன் துரத்ரிஷ்டம், வரவிருக்கும் அரசாங்க விழாவின் பாதுகாப்புச் சம்பந்தமாகப் பேச வேண்டும் என்று, தலைமை செயலகத்திற்கு வரும்படி கமிஷனர் அவனை அவசரமாக அழைத்தார். “இதோ வரேன் சர்!” என்று சொல்லிவிட்டு வைத்தவன், தலைமை செயலகத்தை நோக்கி விரைந்தான்.
போகும் வழியில் சித்தார்த்துக்கு அழைத்து நடந்ததைச் சொல்ல, அவனுமே அதிர்ச்சி அடைந்தான். “அடுத்து என்ன சர் செய்றது? மாதுரி கஷ்டப்பட்டுக் கலக்ட் பண்ண எவிடென்ஸ். இப்படி மிஸ் ஆகிடுச்சே!.”
“கவலைப்படாதீங்க சித்தார்த். அந்த டாக்டரை ஃபாலோவ் செஞ்சா நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு.” சொன்னவன், சாதனாவிடம் ஃபோனை கொடுக்கச் சொன்னான்.
“சாதனா, சித்தார்த் கிட்ட இருந்து என்னோட பெர்சனல் நம்பர் வாங்கிக்கோங்க. சப்போஸ் உங்க கணவரால உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா, உடனே எனக்குக் கால் பண்ணுங்க. எந்த நேரமா இருந்தாலும் சரி.” என்று சொல்லிவிட்டு வைத்தான். இருந்தும் அவனுக்கு நம்பிக்கை இருந்தது, கௌஷிக் அந்த அளவுக்கு மோசமனாவனாக இருக்க மாட்டான் என்று. அவனிடம் பேசும்பொழுதே தெரிந்தது, அவன் ஒரு பயந்த சுபாவம் என்று. அத்தோடு எவிடென்ஸ் கையில் கிடைத்துவிட்டதால், இனி சாதனாவிற்குப் பிரச்சனை இருக்காது என்றும் நம்பினான்.
[the_ad id=”6605″]
அதே நேரம் நந்தாவுக்கும் ஆட்சியர் என்ற முறையில், மீட்டிங்கில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக்க, கௌஷிக்கை இடையில் இறக்கி விட்டவன், “இன்னைக்கு நைட் ECR பங்களாவுக்கு வந்துடு. அங்க வச்சு, இந்தப் பெண்ட்ரைவில என்ன இருக்குன்னு பார்த்திடலாம்.” என்றான், கையில் வைத்திருந்த அந்தச் சிகப்பு கலர் சிறிய கையடக்கக் கருவியைப் பார்த்துக்கொண்டே.
“அதுவரைக்கு இந்தப் பெண்ட்ரைவ் பத்திரமா இருக்குமா?”
“இந்த நந்தாகிட்ட இருக்கிற வரைக்கும், எதுவும் மிஸ் ஆகாது. நீ மட்டும் எவன் கிட்டையும் உளராம இருந்தா சரி. அப்புறம் இன்னொன்னு, உன் பொண்டாட்டிகிட்ட எதையும் போய்க் கேட்காத. நம்ம கிட்ட எவிடென்ஸ் கிடைச்சிடுச்சுன்றது அவளுக்கு இம்மி அளவுக்கூடத் தெரியக்கூடாது. விஷயத்தை அப்படியே விட்டுடு.” படபடவெனச் சொல்லிவிட்டு, தலைமை செயலகத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்.
தலைமை செயலக வளாகத்தில், முதலமைச்சர் அலுவகத்தை நோக்கி வராண்டாவில் நடந்து கொண்டிருந்தான் சுதர்ஷன். எதிரில் வந்து கொண்டு இருந்தான் நந்தா. இருவரின் பார்வையும் ஒரு நொடி தொட்டு மீண்டது. பார்வை என்று சொல்வதை விட, முறைப்பு என்று சொல்லலாமோ?!
‘கூடிய சீக்கிரம் உன்னைத் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தனும்!’ சுதர்ஷனை பார்த்ததும், மனதுக்குள் நினைத்துக் கொண்டான் நந்தா. ஆனால் அவனோ, ‘எந்த எல்லைக்கும் போகனும்னாலும் சரி, அந்த எல்லைக்குப் போய், உனக்குப் பின்னாடி இருக்கிற மர்மத்தை கண்டு பிடிச்சே தீருவேன்.’ முடிவெடுத்துக் கொண்டான்.
இந்தப் பார்வை பரிமாற்றத்தை எல்லாம் தாண்டி, அவர்கள் இருவரும் அதிகாரிகள் என்பதால், நந்தா தன் அருகில் வந்ததும், ஆட்சியர் என்ற முறையில், அவனுக்குச் சலுயூட் வைத்தான் சுதர்ஷன். தலை அசைப்புடன் அதை ஏற்றுக்கொண்ட நந்தா, மீட்டிங் அறைக்குள் சென்றுவிட, அவனின் முதுகை வெறித்தபடி அவனைத் தொடர்ந்து தானும் அறைக்குள் சென்றான் சுதர்ஷன்.
[the_ad id=”6605″]
இரவு நேரம், அந்தத் தெருவே இருட்டாக அமைதியாக இருக்க, அந்தப் பங்களாவின் பக்கத்தில் இருந்த மரத்துக்கு அடியில் ஒளிந்திருந்தனர் மிதுனும், சஞ்சனாவும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, மாதுரி கலக்டரின் மனைவி என்ற உண்மை தெரிந்ததும், அதிர்ந்து போன மிதுன், சஞ்சனாவிடம் அந்த உண்மையைச் சொன்னான். கேட்ட அவளுமே அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னடா சொல்ற? அவங்க கலக்டர் வைஃபா!”
“ஆமாம் சஞ்சு!”
“என்னடா இது? இந்தக் கேஸ்ல நாம எதிர்பார்க்காத நிறைய விஷயம் இருக்கும் போலையே!”
“எனக்கென்னவோ இந்த விஷயத்தைத் தோண்ட, தோண்ட இன்னும் பயங்கரமான உண்மை எல்லாம் வெளிய வரும்னு தோணுது.”
“எப்படி?!”
“அதுக்காகத் தான் நாம ஒரு காரியம் பண்ண போறோம்.”
“என்ன காரியம் டா?”
“இன்னைக்கு மறுபடியும் அந்தப் பங்களாவுக்குப் போகப் போறோம்.”
“எது? அந்த அருணாச்சலத்தோட வீட்டுக்கா?’
“ஆமாம்! அங்க தான்.”
மிதுன் சொன்னதும், அன்றைய இரவு குடிசையில் செத்து கிடந்தவனின் முகமும், அந்தக் கண்ணும், இப்பொழுது கண்முன் வந்து போக, நடுங்கி போனாள் சஞ்சனா.
“ஐயோ! அந்தப் பங்களாவுக்கு எதுக்கு டா?”
“இல்லடி, அன்னைக்கு நாம தேடிட்டு வந்த ஆள், அந்தப் பங்களாவுக்குள்ள தான் போயிட்டு வந்தான். அதுக்கு அப்புறம் தான் செத்துப் போனான். எனக்கு என்னமோ, அந்தப் பங்களாவுல இன்னைக்கு நமக்கு ஏதோ கிடைக்கப் போகுதுன்னு என் உள்மனசு பிராண்டுது.”
“ஹம்! பிராண்டுதாம். உனக்கு என்ன சொரியா, பிராண்ட! உன் உள்மனசு சொல்ற மாதிரி எதுவும் கிடைக்காது. மாட்டுனா அடிதான் கிடைக்கப் போகுது.”
“அதெல்லாம் ஒன்னும் மாட்ட மாட்டோம். இன்னைக்கு நைட் அந்தப் பங்களாவுக்குப் போறோம். நான் முடிவு செஞ்சுட்டேன்.”
“நானும் முடிவு செஞ்சுட்டேன்.”
[the_ad id=”6605″]
“என்னது?!”
“இந்தக் கேஸ் முடிஞ்சதும் உன்னை டிவோர்ஸ் செஞ்சுடலாம்னு.”
“ஏன் டி! இந்தக் கேஸ்ல ஏதோ இருக்கு, வெங்காயம் இருக்குன்னு என்னை உசுப்பிவிட்டுட்டு, இப்போ நீ மட்டும் எஸ்கேப் ஆகப் பாக்குறியா?”
“எஸ்கேப் ஆகிட்டாலும்!” இதழ்களைச் சுளித்துக் கொண்டாள் சஞ்சனா. சிரித்துக் கொண்டான் மிதுன்.
மிதுன் சொன்னது போலவே, அந்த வீட்டிற்குப் போனார்கள். ஆனால் மிதுன் சொன்னது போல எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் அவர்கள் முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக வந்து கொண்டிருந்தவர்கள், அன்றும் அந்த வீட்டின் முன் காத்திருந்தனர்.
“கொசுக்கடியில, இப்படி என்னை நிக்க வச்சுட்டியே டா! கொசுக்கடி தாங்க முடியல!” சொல்லிவிட்டு கையை அடித்துக் கொண்டாள் சஞ்சனா.
“யோகியனுங்களுக்கு இருட்டில என்ன வேலை! இந்த மாதிரி நைட்ல தான் வெளிய வருவானுங்க. அவங்களைப் பிடிக்க வேண்டாமா? கொஞ்சம் கஷ்ட்டப்படு.”
“அப்போ நாம?”
“ஹான்!” புரியாமல் விழித்தான் மிதுன்.
“இல்ல, யோகியனுங்களுக்கு இருட்டில என்ன வேலைன்னு கேட்டியே! நாம கூட இப்போ இருட்டுல தான் நிக்குறோம்.” சொல்லிவிட்டு சிரித்தாள்.
மனைவியைத் திரும்பி முறைத்த மிதுன், “நீ அயோக்கி நம்பர் ஒன்னு. நான் அயோக்கி நம்பர் டூ.”
கணவன் சொன்னது புரிந்ததும், அவனை மொத்த ஆரம்பித்துவிட்டாள் சஞ்சனா.
“ஹே! நிறுத்து டி. யாரோ வராங்க.” மிதுன் சொல்ல, இருவரும் பரபரப்பானார்கள்.
தூரத்தில் ஒரு கார் அந்தத் தெருவிற்குள் நுழைய, பதுங்கி கொண்டனர் மிதுனும், சஞ்சனாவும். அவர்களைக் கடந்து சென்ற அந்தக் கார், பங்களாவுக்குள் நுழையவும், தன்னிடம் இருந்த நைட் விஷன் கேமெராவில், சட்டென்று அந்தக் காரை புகைப்படம் எடுத்துக்கொண்ட மிதுன், அதன் தொடு திரையில் தெரிந்த, புகைப்படத்தை ஜூம் செய்து, ஓட்டுனர் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தான். அந்த முகம் அடக்கடி பார்த்த பரிச்சயமான முகம்.
“சஞ்சு! இது யாருன்னு தெரியுதா?”
அவளும் உற்று பார்த்தாள். சட்டென்று அவள் முகம் ப்ராகசமானது.
“இது சென்னை கலக்டர் நந்தகுமார் டா!” என்றாள் உற்சாகமாக.
பத்திரிகை துறையில் வேலை செய்வதால், அதிகாரிகள், காவல்துறையினர் என எல்லோரையும் ஓர் அளவுக்கு அவர்களுக்கு நன்றாக நியாபகம் இருந்தது.
“இவரு இந்த நேரத்தில இந்தப் பங்களாவுக்குள்ள என்னடா பண்றாரு?!” அதிர்ச்சியுடன் கேட்டாள் சஞ்சனா.
அப்பொழுது மீண்டும் ஒரு கார் வரும் சத்தம் கேட்கவும், மரத்துக்கு அடியில் பதுங்கிய சஞ்சனா, “இது யாருடா, இன்னொருத்தரு?” என்றாள் குழப்பமாக.
“இரு பார்த்திடலாம்.” சொன்ன மிதுன், இந்தக் காரையும் புகைப்படம் எடுத்துவிட்டு, திரையை ஜூம் செய்து பார்க்க, அதில் தெரிந்த உருவத்தைப் பார்த்து, இருவரும் அதிர்ந்து போயினர்.
“CM!!!” என்றது மிதுனின் உதடுகள்.