அத்தியாயம் 21
இரவு நேரம். மீட்டிங், அதனைத் தொடர்ந்து சிறிய வேலை எல்லாம் முடித்துவிட்டு ஸ்டேஷனை நோக்கி திரும்பி கொண்டிருந்தான் சுதர்ஷன். கையில் மாதுரி எழுதிய பேப்பர். அவனின் பார்வை கையில் இருந்த காகிதத்தை வெறித்துக் கொண்டிருக்க, அவனின் மனமோ, கைவிட்டு போன ஆதாரத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
‘கௌஷிக் பின்னாடி இருந்து வேலை பார்த்துட்டு இருக்கிறது அந்த நந்தா தான்னு நிச்சயம் தோணுது! அவனோட பார்வையும், முழியும் சரியே இல்லை. எதுக்கு என்னைப் பார்த்து அப்படி முறைக்கிறான்? நிச்சயம் அந்தப் பார்வையில துவேஷம் இருக்கு!’
‘ஆதாரத்தை வேற கோட்டை விட்டாச்சு. இப்போ அடுத்து என்ன பண்றது?’
தீவிர யோசனையில் இருந்தவனைக் கலைத்தது, ஓட்டுனரின் கேள்வி.
“இந்த ஜனங்க எல்லாம் ஏன் சர் இப்படி இருக்காங்க?”
“ஹான்! என்ன கேட்டீங்க முத்து?”
“அக்கம்பக்கத்தில என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம இருக்காங்களே ஜனங்க, அதுதான் ஏன் இப்படி இருக்காங்கன்னு கேட்டேன் சர்?”
“ஏன்? என்ன ஆச்சு?”
“இன்னைக்கு நியுஸ் பார்க்கலையா சர்?”
“இல்லை முத்து. ஒரு கேஸ் விஷயமா கொஞ்சம் பிசி. என்ன நியுஸ்?”
“அடையார் பக்கத்தில ஒரு குப்பம் இருக்குல சர், அங்க ஏதோ அழுகின நாத்தம் வருதுன்னு போலீஸ்ல எவனோ ஒருத்தன் சொல்லவும், அங்க போய்ப் பார்த்திருக்கார் அடையார் இன்ஸ்பெக்டர். ஏதோ ஆம்பள பிணம் கிடைச்சு இருக்கு. மெடிக்கல் டெஸ்ட் பண்ணதுல, அவன் செத்து நாலஞ்சு நாள் ஆகுதாம்.” சொல்லிவிட்டு டேஷ்போர்டில் இருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துக் கொடுத்தான் முத்து.
வாங்கிப் பார்த்தான் சுதர்ஷன்.
மூன்றாம் பக்கத்தில், இருந்தது அந்தச் செய்தி.
‘அடையார் குப்பத்தில் அழுகின நிலையில் ஆண் பிணம்!’ கொட்டை எழுத்தில் செய்தி இருக்க, அதன் கீழே இறந்தவனின் புகைப்படம் இருந்தது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும், சுதர்ஷனுக்குச் சட்டென்று பொறித் தட்டியது. உடனே பாக்கெட்டில் இருந்து தனது மொபைலை எடுத்தவன், மாதுரியை கொலை செய்ய முயற்சி நடைபெற்ற அன்று, மிதுன் சொன்ன அடையாளத்தை வைத்து வரையப்பட்டிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தேடி எடுத்தான்.
இரண்டையும் அருகருகே வைத்துப் பார்த்தான். ஒரே மாதிரி தான் இருந்தது, ஆனால் ஏதோ இடித்தது. உடனே முத்துவிடம் இருந்து பேனாவை வாங்கி, செய்தித்தாளில் இருந்த புகைப்படத்திற்குத் தாடி, கொஞ்சம் அடர்த்தியான மீசை எனச் சின்னச் சின்ன மாறுதல்களை மடமடவென வரைந்தான். பின் மீண்டும், இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்த்தான். அவன் முகம் பிராகசமைடைந்தது.
உடனே முத்துவிடம் திரும்பி, “முத்து! அடையார் ஸ்டேஷனுக்கு வண்டியை திருப்பு!” என்றான்.
[the_ad id=”6605″]
“என்ன ஆச்சு சர்?”
“சொல்றேன். சீக்கிரம் போ!”
“எஸ் சர்!”
அடுத்தச் சில நிமிடங்களில், உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட குப்பம் எல்லைக்குள் வரும் அந்த அடையார் காவல்நிலையம் முன்பு வண்டி நிற்க, காரில் இருந்து இறங்கிய சுதர்ஷன், வேகவேகமாக உள்ளே சென்றான்.
சுதர்ஷனை பார்த்ததும் எழுந்து சல்யுட் வைத்தார் இன்ஸ்பெக்டர். தலை அசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவன், அவரை உட்கார சொல்லிவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்தவன், செய்தித்தாளில் வந்த செய்தியை சொல்லி, “ஒரு கேஸ் விஷயமா எனக்கு அந்த ஆளை பத்தின இன்ஃபர்மேஷன் வேணும். மர்டர் எதனாலன்னு கண்டுபிடிச்சாச்சா?” என்றான்.
“ACP கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு….” அவன் இழுக்க,
“உங்க ACP கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க சொல்லுங்க.”
‘சரி’ என்று தலை அசைத்த இன்ஸ்பெக்டர், “402! அந்தக் குப்பம் டெட் பாடி கேஸ் சம்பந்தமான ஃபைலை கொண்டாயா!” என்று கான்ஸ்டபிளுக்கு உத்தரவிட, ஐந்து நிமிடத்தில் ஃபைல் சுதர்ஷனின் கையில் இருந்தது.
FIR, இறந்தவனின் பெயர், உயரம், நிறம், அங்க அடையாளங்கள் வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களை அவன் படித்துக் கொண்டிருக்க, “போஸ்ட்மார்டம் ரிபோர்ட் படி, ட்ரிங்க்ஸ்ல விஷம் கலந்து குடிச்சு இருக்கான் சர். இறந்ததுக்கு அதுதான் காரணம்.” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ஸ்பாட்ல எதுவும் எவிடென்ஸ் கிடைச்சுதா?”
“சந்தேகப்படும்படியா எந்த எவிடென்சும் கிடைக்கல சர். ஒரு செல்ஃபோன் மட்டும் கிடைச்சது.” சொன்னவர், இறந்தவனின் செல்ஃபோனை எடுத்துச் சுதர்ஷனிடம் கொடுத்தார்.
“இறந்தவனுக்குச் சொந்தகாரங்க யாரும்?”
“ஆள் ஒண்டிக்கட்டை சர். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே பொண்டாட்டி பிரிஞ்சு போய்ட்டா!”
இன்ஸ்பெக்டர் கொடுத்த ஃபோனை ஆன் செய்த சுதர்ஷன், “கால் லாக் எல்லாம் செக் செஞ்சு பார்த்துட்டீங்களா?” என்க,
“பார்த்துட்டோம் சர். சமீபமா ஒரு நம்பருக்கு அடிக்கடி பேசி இருக்கான். அந்த நம்பரை செக் செஞ்சு பார்த்துட்டோம். ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்துது. கம்பெனிக்கு விசாரிச்சு பார்த்ததில, சிம் ரவின்ற பேர்ல இருந்துச்சு. போலியான ஐ.டி, கார்ட் கொடுத்து நம்பரை வாங்கி இருக்காங்க. அதுல இருந்த அட்ரெசம் போலியான அட்ரெஸ். நாள் நாளைக்கு முன்னாடி தான், அந்தச் சிம் நம்பர் டி-ஆக்டிவேட் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க.”
“எந்த இடதில் டி-ஆக்டிவேட் ஆகி இருக்கு?”
“அடையார் டூ ஈ.சி.ஆர் போற வழியில சர்.”
சுதர்ஷனின் முகத்தில் யோசனை. பின் இருக்கையில் இருந்து எழுந்தவன், “ஸ்பாட்டைப் பாக்கணும். உங்க கான்ஸ்டபிள் ஒருத்தரை அனுப்பி வைக்க முடியுமா?” என்றான்.
“ஒரு நிமிஷம் சர்.” என்று பதில் சொன்ன இன்ஸ்பெக்டர். “402! மூர்த்தியை கூப்பிடு!” என்று யாரையோ அழைக்க, சில நிமிடங்களில் அங்கு வந்தார் நாற்பது வயது மதிக்கத்தக்க மூர்த்தி.
இன்ஸ்பெக்டர் அவரிடம், “ACP சர், அந்த அடையார் குப்பத்தில டெட் பாடி கிடைச்சுதுல அந்த ஸ்பாட்டைப் பாரக்கனுமாம். கூட்டிட்டு போ!” என்று சொல்ல,
“ஒகே சர்!” என்ற மூர்த்தி, சுதர்ஷனிடம் திரும்பி, “போலாமா சர்?!” என்றார்.
“ம்ம்!” எனத் தலை அசைத்த சுதர்ஷன் முன்னே நடக்க, அவரைப் பின்தொடர்ந்து சென்றார் மூர்த்தி.
பத்து நிமிட பயணத்திற்குப் பிறகு, அந்தக் குறுகலான தெருவுக்குள் இறங்கி நடந்தனர் சுதர்ஷனும், மூர்த்தியும்.
“பார்த்து வாங்க சர். இருட்டா இருக்கு. ஒரே பாட்டிலா கிடக்கும். குடிகார பசங்க!” மூர்த்திச் சொல்ல,
“இந்த ஏரியா எப்படி?” கேட்டான் சுதர்ஷன்.
“மாசம் தவறாம ஒரு கேஸ் வந்திடும் சர். மோசமான ஏரியா. எப்போ பார்த்தாலும், ஏதாவது பிரச்சனை தான் சர். ஊருல இருக்கிற ரவுடி பயலுங்க பூரா இங்க தான் இருப்பானுங்க போல. அடிக்கடி சூசைடு, கொலை நடக்கும்.”
[the_ad id=”6605″]
பேசியபடியே அந்தக் குடிசைக்கு அருகில் வந்த மூர்த்தி, “இது தான் டெட் பாடி கிடந்த வீடு.” என்று ஒரு சிறு குடிசையைச் சுட்டிக்காட்டிவிட்டு, கதவில் கிடந்த பூட்டை திறந்தார். கதவு திறக்கப்பட்டதும், உள்ளே நுழைந்தான் சுதர்ஷன்.
பத்துக்குப் பத்து சதுரடி கொண்ட, சின்னக் குடிசை. சிமின்ட் தரை போடப்பட்டிருக்க, பெயருக்கு என்று நான்கு சுவர்கள். அதுவும் ஆங்காங்கு பேந்து போயிருந்தது. தரையில் ஓர் இடத்தில உடல் கிடந்ததற்கான அடையாளம் வரையப்பட்டிருக்க, அதன் வாய் பகுதியில், ரத்தக்கறை காய்ந்து போய்க் காட்சி அளித்தது.
சுற்றி பார்வையைச் சுழல விட்டான். மரதடுப்புக்கு அந்தப் பக்கம் அடுப்படி தெரிந்தது அங்கே பானை, அலுமினிய தட்டு, எவர்சில்வர் க்ளாஸ் எனக் கொஞ்சம் பொருட்கள் சிதறிக் கிடைந்தது.
அடுப்படிக்கு இந்தப்பக்கம், பொருட்கள் என்றும் எதுவும் இல்லை. பாய் ஒன்று சுவற்றின் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்க, அதன் அருகே, ஒரு இரும்பு பெட்டி.
பெட்டியின் அருகில் சென்ற சுதர்ஷன், அதைத் திறந்து பார்த்தான். உள்ளே நாலைந்து லுங்கி, இரண்டு சட்டை, சில உள்ளாடைகள் எனக் குறைந்த அளவே துணிமணிகள் இருந்தது. துணிகளை லேசாகக் கிளறிப் பார்த்தான். உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை.
பெட்டியை மூடிவிட்டு எழப்போனவன் அப்பொழுதுதான் அதைக் கவனித்தான். பெட்டிக்கு பின்பக்க சுவற்றில், பென்சிலால் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. அருகில் சென்று உற்றுப்பார்த்தான்.
‘ஜி.எச் பார்டி அட்ரெஸ்’ என்று எழுதப்பட்டிருக்க, அதற்குக் கீழே, நம்பர் 22/78, சந்திர விலாஸ், முட்டுக்காடு, ஈ.சி.ஆர்’ என்ற முகவரி இருந்தது.
அன்று மிதுன் விசாரித்ததாகக் கான்ஸ்டபிள் சொன்ன அதே முகவரி. அதன்பின்பு சுதர்ஷனுமே விசாரித்துப் பார்த்தான். அருணாச்சலம் என்றவரின் பெயரில் இருந்தது அந்த வீடு. அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரிடம் கூடக் கேட்டுப் பார்த்தான், அந்த வீட்டில் சந்தேகப்படும்படியாக யாரும் வசிக்கவில்ல என்றும், எந்த ஒரு தவறான செயலும் நடக்கவில்லை என்றும் தான் சொன்னார். ஒருவேளை மிதுன் வேறு எதற்க்காகவோ கூட இந்த முகவரியை விசாரிக்கலாமோ என்று நினைத்துவிட்டு, வேலைப்பளுவில் அப்போதைக்கு அதை அப்படியே விட்டுவிட்டான்.
ஆனால் அதே முகவரி, இதோ இன்று குற்றவாளியின் வீட்டிலும் இருக்கிறது. பார்த்ததுமே அவனுக்குப் புரிந்துபோனது மாதுரியை கொல்ல வந்த ஆள் இவன் தான் என்றும், அவனை ஏவி விட்டவர்களின் முகவரி தான் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது என்றும். உடனே தனது மொபைலில் அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டான். அதற்குள் மூர்த்தி அவனை அழைக்க, எழுந்து வெளியே வந்தான்.
“என்ன சர்? ஏதாவது கிடைச்சுதா?”
“இல்லை மூர்த்தி. உருப்படியா எதுவும் கிடைக்கல. சரி கிளம்புவோமா?”
“இதோ ஒரு நிமிஷம் சர். பூட்டிட்டு வரேன்.” சொல்லிவிட்டு இரண்டு நிமிடத்தில் அவர் பூட்டிவிட்டு வர, அவரை ஏற்றிக்கொண்டு அடையார் ஸ்டேஷனில் இறக்கிவிட்ட சுதர்ஷன், இன்ஸ்பெக்டரிடம் நன்றியை தெரிவித்துவிட்டு வந்தான்.
தன்னுடைய காவல்துறை வாகனத்தில் ஏறிய சுதர்ஷன், “முத்து முட்டுக்காடு போ!” என்றான் ஓட்டுனரிடம். சொன்னபடி செய்தான் முத்து.
அடையார் சிக்னல், திருவாண்மியூர் எல்லாம் தாண்டி, கிழக்கு கடற்கரை சாலையில் நுழைந்தது சுதர்ஷனின் கார். நேரே சென்றால் முட்டுக்காடு பகுதி. காரை முத்து ஓட்டிக் கொண்டிருக்க, அந்த முகவரி எங்கு இருக்கிறது என்று கூகிள் மேப்பில் பார்த்துக் கொண்டிருந்தான் சுதர்ஷன். அப்பொழுது ஓர் சிக்னலில் கார் நிற்க, எதேர்ச்சையாகப் பக்கத்தில் பார்த்தான். பார்த்தவன் துணுக்குற்றான்.
ஏனெனில் இரண்டு கார் தள்ளி நின்றிருந்த அந்தச் சிவப்பு நிற காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான் கௌஷிக். காருக்குள் இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாகத் தெரிந்தது. ஃபோனில் யாருடனோ பதற்றமாகப் பேசிக்கொண்டு இருந்தான். அடிக்கடி ‘சரி’ என்பது போலத் தலையை ஆட்டினான்.
[the_ad id=”6605″]
நிச்சயம் அவன் நந்தாவை பார்க்கத் தான் போகிறான் என்று யூகித்த சுதர்ஷன், அவனைப் பின் தொடர்வது என்று முடிவு செய்தான். ஆனால் காவல்துறை வாகனத்தில் சென்றால், ஏதாவது ஒரு கட்டத்தில் கௌஷிக் இந்தக் காரை பார்த்துவிடும் சந்தர்ப்பம் இருப்பதால், என்ன செய்யலாம் என்று யோசித்தவனின் கண்களில், சைட் மிரரில் தெரிந்த அந்த ஆட்டோ விழுந்தது.
காலையில் கிடைக்காமல் போன சந்தர்ப்பம் இப்பொழுது கிடைக்க, ஓட்டுனர் பக்கம் திரும்பிய சுதர்ஷன், “முத்து நீ ஸ்டேஷன் போ. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.” என்று சொல்ல,
“சர் எப்படிப் போவீங்க?!” பதில் கேள்வி கேட்டான் முத்து.
“அது நான் பார்த்துக்கிறேன்.” சொன்னவன், காரை விட்டு இறங்கி, அவனின் காருக்கு நான்கைந்து வாகனங்களுக்குப் பின்னால் நின்றிருந்த அந்தக் காலியான ஆட்டோவில் சென்று ஏறிக் கொண்டான்.
ஆட்டோ ஓட்டுனரோ சுதர்ஷனின் காக்கி உடையைப் பார்த்துவிட்டு, “சர்! நான் எதுவும் பண்ணல சர்! சத்தியமா சொல்றேன் சரி. மீட்டருக்கு மேல கூட ஒரு பைசா வாங்க மாட்டேன் சர். என்னை நம்புங்க சர்!” என்று நடுங்கியபடி சொல்ல,
“யோவ்! புலம்பாம அந்தக் காரை பாலோவ் பண்ணு.” என்று சுதர்ஷன் கத்தவும், கப்சிப் என்று வாயை மூடிக்கொண்ட ஆட்டோ டிரைவர், பச்சை சிக்னல் விழவும், கௌஷிக்கின் காரை பின்தொடர ஆரம்பித்தான்.