அங்கே நந்தாவின் பங்களா வாசலில், மறைந்து நின்றிருந்த மிதுன், தன்னைக் கடந்து சென்ற இரண்டாவது காரை புகைப்படம் எடுத்து, அதை ஜூம் செய்து பார்க்க, அதிர்ந்து போனான்.
அந்தக் காரில் ஓட்டுனருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார் தற்போதைய தமிழக முதலமைச்சர், நரசிம்மன்.
“என்ன டா இது? சி.எம் போய் இந்த நேரத்தில?!!” புகைப்படத்தைப் பார்த்தவாறு கேட்டாள் சஞ்சனா.
ஆனால் மிதுனிடம் இருந்து பதில் இல்லை. அவனால் இந்த நொடி வரை தான் பார்த்த புகைப்படத்தையும், அதில் இருந்த உருவத்தையும் சுத்தமாக நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தான்.
“அடேய்! எத்தனை தடவை தான் பார்ப்ப? திரும்பத் திரும்பப் பார்த்தா, சி.எம் பி.எம்மா மாறிட போறாரா? நூறு தடவை பார்த்தாலும், அது சி.எம் தான்.”
“லூசே! என்னால நம்பவே முடியல! அதனால தான் பார்க்கிறேன். சி.எம் இங்க….? அதுவும் கலக்டர் கூட…?”
“மிதுன் ஒன்னு மறந்துட்டியா?”
“என்னது?”
“கலக்டரும், இதோ போறாரே சி.எம் நரசிம்மன், அவரோட பொண்ணும் ஒண்ணா சுத்துறதா, காஸிப் வந்ததே! நாம கூட ஒரு தடவை பார்த்தோமே! நியாபகம் இருக்கா? ரெண்டு பேரும் கூடிய சீக்கிரத்தில கல்யாணம் செய்துக்கப் போறதா கூட நியுஸ் வந்தது!”
“அட! ஆமாம் சஞ்சு! இப்போ ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள்ள போறதை பார்த்தா, பொண்ணு கலக்டர் பின்னாடி சுத்துற விஷயம் சி.எம்க்கும் தெரியும் போலையே! அப்போ இந்தப் பங்களா, சி.எம்மோட பினாமியோடதா?”
“இருக்கலாம்! ஆனா இவங்க ரெண்டு பேரும், இந்த ராத்திரி நேரத்தில் அப்படி என்ன பேசப் போறாங்க?”
“அதையும் தெரிஞ்சிக்கலாம்!” அழுத்தமாகச் சொன்னான் மிதுன்.
“டேய்! என்ன பண்ண போற?”
“உள்ள போய் அவங்க என்ன பேசப் போறாங்கன்னு கேட்க போறேன்.”
[the_ad id=”6605″]
“மிதுன் வேண்டாம். அந்த ஆள் ரொம்ப மோசமனாவன். அவனுக்கு எதிரா ஒரு தூசி அசைஞ்சா கூட, சுட்டுப் பொசிக்கிடுவான். நமக்கு ரிஸ்க் வேண்டாம்.”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது சஞ்சு. நாம என்ன, சி.எம் வீட்டுக்குள்ளையா போகப் போறோம், மாட்டுனா சுட! அவனே எதோ திருட்டுத் தனம் பண்ண தான், அர்த்தராத்திரி நேரத்தில, ஆள் அரவம் இல்லாத இந்தப் பங்களாவுக்கு வந்திருக்கான். அது என்னனு தெரிஞ்சிக்க வேண்டாமா?”
“ஒரு லேடியை பத்தி தேடப்போய் இப்போ நம்ம இன்வெஸ்டிகேஷன் எங்கையோ போகுது.”
“இல்லை சஞ்சு. நாம சரியான பதையில தான் போயிட்டு இருக்கோம். நீ ஒன்னை மறந்துட்ட, அவங்களோட ஹஸ்பண்ட் தான், இந்தக் கலக்டர்.”
“ஆமாம்!”
“நான் காலையிலையே சொன்னேன், இந்த விஷயத்தைத் தோண்ட தோண்ட, இன்னும் பயங்கரமான உண்மை எல்லாம் வெளிய வரும்னு. அதுக்கு அடித்தளம் போட போறது, இதோ, இந்த இன்சிடென்ட் தான். அதாவது கலக்டர், சி.எம் மீட்டிங்.”
தீவிரமான முகபாவனையுடன், ‘ஆம்’ என்பது போலத் தலை ஆட்டினாள் சஞ்சனா.
“ஆனாலும், எனக்குப் பயமா இருக்கு டா? இது மத்த விஷயம் மாதிரி சின்ன இடம் இல்லை. அதை நினைச்சா தான்….” அவள் கவலைக்கொள்ள,
மனைவியின் முகத்தைக் கைகளில் ஏந்திய மிதுன், “சஞ்சு குட்டி! நீ பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகாது. நான் போய், என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன். அது வரைக்கும் நீ இங்கயே பத்திரமா இரு. ஒகே யா?” ஆறுதால் சொன்னவனுக்குமே, மனைவியைத் தனியே விட்டுச் செல்ல, கவலையாகத் தான் இருந்தது.
அவனும் தான் என்ன செய்வான். இந்த வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்து தான் இங்கு வந்தான். ஆனால் இப்படி நினைக்காதது எல்லாம் நடக்கும் என்று அவன் நினைக்கவில்லை. ஏதோ இருக்கிறது என்று தெரிந்தும், விலகிச் செல்ல அவனின் பத்திரிக்கை புத்தி விடவில்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனி பாதியில் விடுவது அவனால் முடியாத காரியம்.
“ம்ம்!” மனமே இல்லாமல் தலையை ஆட்டினாள் சஞ்சனா.
“சரி செல்ஃபோனை வைப்ரேஷன்ல போட்டுக்கோ. எதாவது பிரச்சனைனா, நான் உனக்குக் கால் பண்றேன்.” சொல்லிவிட்டு, வீட்டின் பின்பக்கம் சென்றான் மிதுன். சஞ்சனா இன்னும் கவனமாக மறைந்து நின்றுகொண்டாள். அவளின் மனம் திக்திக் என்று அடித்துக்கொண்டது.
அந்த இரவு நேர சில்லென்ற காற்றில் கௌஷிக் தன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருக்க, அவனைப் பின்தொடர்ந்து வந்த ஆட்டோவின் வேகம் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல், திக்கித் திணறி சென்று கொண்டிருந்தது.
“கொஞ்சம் ஸ்பீடா போப்பா!” சுதர்ஷன் சொல்ல,
“இதுக்கு மேல ஸ்பீடா போகாது சர். இது தான் அதிகபட்ச ஸ்பீடு.” சுதர்ஷன் திட்டுவானோ என்று பயந்தப்படி சொன்னான் ஆட்டோ ஓட்டுனர்.
அதிருப்தியை வெளிக்காட்டியது சுதர்ஷனின் முகம்.
இதோ தூரத்தில் சென்று கொண்டிருந்த கௌஷிக்கின் கார் வேகம் குறைந்து, இடப்பக்கம் இருந்த தெருவுக்குள் நுழைந்தது.
“ஸ்பீடை குறைங்க! கார் திரும்புது.”
“சரி சர்!” சொன்ன ஆட்டோ டிரைவர், வண்டியின் வேகத்தைக் குறைக்க, அதுவோ, மக்கர் செய்தது.
“என்ன ஆச்சுப்பா?!”
“தெரியல சர்.” பதில் சொன்னவர், எவ்வளவோ முயற்சிச்சு பார்த்தும், திக்கித் திக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒரு கட்டத்தில் சுத்தமாக நின்றுவிட, தலையைச் சொரிந்தான் ஆட்டோ டிரைவர்.
அவனை முறைத்த சுதர்ஷன், பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ருபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு, கௌஷிக் கார் சென்ற தெருவுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கே நந்தா பங்களாவில், எப்படியோ யார் கண்ணிலும் படாமல் பைப்பை பிடித்து மேலே ஏறி, சன்ஷேடில் நின்றுகொண்ட மிதுன், கீழே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, பல்லியை போலச் சுவற்றோடு ஒண்டிக்கொண்டு நீளமாக இருந்த அந்தச் சன்ஷேடில் கீழே விழாதபடி மெல்ல நடக்க ஆரம்பித்தான். இடையிடையில் சின்னச் சின்னப் பூந்தொட்டி இருக்கவே, அவற்றைத் தள்ளிவிடாவதவாறு கவனமாக நடந்தான்.
சன்ஷேட் முடியும் தருவாயில், பெரிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. அதன் வழியே எட்டிப்பார்த்தான். உள்ளே விசாலமான அறையில் நந்தாவும், நரசிம்மனும் சோஃபாவில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் முன் இருந்த மேசையில், ஒரு லேப்டாப் இருந்தது. இங்கே இருந்து பார்கையில் அவர்களின் முதுகு பகுதி தான் மிதுனுக்குத் தெரிந்தது. கணினி திரை மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. ஜன்னல் லேசாகத் திறந்திருக்க, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று உற்று கவனிக்க ஆரம்பித்தான்.
உள்ளே,
கோபமாகப் பேசிக்கொண்டு இருந்தார் நரசிம்மன்.
[the_ad id=”6605″]
“இப்படி ஒரு வேலை செஞ்சி வச்சிருக்காளா உன் பொண்டாட்டி? வக்கீல்ல, அதான் அவ புத்தியை காட்டிட்டா! அது கூடத் தெரியாம இருந்திருக்கியே நந்தா?”
சமீபகாலமாக அவர் நந்தாவை இப்படித் தான் அழைக்கிறார். தேவைப்பட்டால் மட்டுமே ‘மாப்பிளை’ என்ற அழைப்பு அவர் வாயில் இருந்து வரும். ஒருவேளை முதலமைச்சர் ஆனதாலோ?!
நரசிம்மன் சொல்லவும், “இப்படி ஒரு செகண்ட் காப்பி வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும்? நல்லவேளை நம்ம கைக்குக் கிடைச்சது. அந்த ACP கையில மட்டும் கிடைச்சு இருந்தது, நாம ரெண்டு பேரும் மாட்டி இருப்போம்.”
“அட! என்ன மாப்பிளை நீங்க! அதெல்லாம் நீங்க அப்படி விட்டுடுவீங்களா?”
‘இப்போ மட்டும் மாப்பிள்ளையாக்கும்!’ மனதுக்குள் நினைத்த நந்தா, திரும்பி நரசிம்மனை பார்த்தான். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
“என்னை விடுங்க மாமா! உங்களுக்குத் தான் இது ரொம்ப முக்கியம்.” சொன்னவன் பாக்கெட்டில் இருந்து அந்தப் பெண்ட்ரைவை வெளியே எடுத்தான்.
“மொதல்ல அதுல எல்லாம் இருக்கான்னு பாருங்க மாப்பிள்ளை!”
நரசிம்மன் சொல்லவும் பெண்ட்ரைவை தன் முன் இருந்த லேப்டாப்பில் நுழைத்தான் நந்தா.
‘அப்படி என்ன இருக்கு அதுல? ரெண்டு பேரும் இப்படிப் பயப்படுறானுங்க!’ நினைத்த மிதுன், கணினித் திரையை உற்று கவனிக்க ஆரம்பித்தான்.
“சில நொடிகளில், கணினி திரையில் பெண்ட்ரைவின் பெயர் காட்ட, அதைக் கிளிக் செய்தான் நந்தா. உள்ளே சில டாக்குமெண்ட்ஸ், ஆடியோ கிளிப்பிங், வீடியோக்கள் இருக்க, அதில் ஒரு வீடியோவை கிளிக் செய்தான்.
ஓபன் செய்ததும் திரையில் ஏதோ எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வந்தது. ‘என்ன இது?’ என்ற குழப்பத்துடன் நந்தா திரையைப் பார்க்க, சில நிமிடங்களுக்குப் பிறகே தெரிந்தது அது ஒரு திரைப்பட வீடியோ என்று.
கோபத்தோடு அதை மூடிவிட்டு, மீதம் இருந்த வீடியோக்களையும் ஒவ்வொன்றாக ஓபன் செய்தான். எல்லாமே திரைப்பட வீடியோ தான். பின் டாக்குமெண்ட்சையும், ஆடியோ கிளிப்பிங்கையும் ஓபன் செய்தான். பாடல்களும், ஏதேதோ புத்தகங்களும் தான் இருந்தது.
எல்லாவற்றையும் ஓபன் செய்து ஏமாந்து போய் வெறுத்துப்போன நந்தா, “இதுல ஒண்ணுமே இல்லை. நாம ஏமாந்துட்டோம் மாமா! மாதுரி நம்மளை ஏமாத்திட்டா!” சொன்னவன், ஆத்திரத்தோடு பெண்ட்ரைவை பிடுங்கி விசிறி அடித்தான்.
“என்ன சொல்றீங்க மாப்பிளை!” அப்பட்டமான அதிர்ச்சி, நரசிம்மனின் முகத்தில்.
“நாம தேடிட்டு இருக்கிற எவிடென்ஸ் எதுவும் இதுல இல்லை மாமா. ப்ளேன் செஞ்சு நமம்ளை ஏமாத்தி இருக்கிறா!” பல்லை கடித்தான்.
“அப்போ, ஏதோ லெட்டர் எழுதி வச்சிருக்கான்னு கௌஷிக் பையன் சொன்னது?
“தெரியலையே?! அவ எழுதி இருந்த லெட்டர்ல சொல்லி இருந்த மாதிரி, அபார்ட்மெண்ட் வீட்டில நானும் கௌஷிக்கும் போய்ப் பார்த்தப்போ, அவ சொன்ன இடத்தில இந்தப் பெண்ட்ரைவ் இருந்துச்சே! ஆனா இதுல ஒண்ணுமே இல்லை. எப்படி இது…?” குழப்பத்தில் தலையைப் பிடித்துக் கொண்டான்.
சரியாக அதே நேரம், நந்தா இருந்த அறைக்குள் நுழைந்தான் கௌஷிக்.
“கொஞ்சம் வேலை. அதான் லேட் ஆகிடுச்சு.” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தவன், நந்தாவுக்குப் பின்னால் இருந்த ஜன்னலில் யாரோ நிற்பது போல நிழல் தெரியவும், “ஏய்! யாரது?!” என்று கத்திக்கொண்டு விறுவிறுவென்று ஜன்னலுக்கு அருகில் வந்தான்.
கௌஷிக் தன்னை நோக்கி வருவதைப் பார்த்துவிட்ட மிதுனுக்கு, தூக்கி வாரிப்போட்டது. சட்டென்று தலையை இழுத்துக்கொண்டு பின்னோக்கி நகர, அவன் கால் பட்டு பூந்தொட்டி ஒன்று கீழே விழுந்து சிதறியது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வந்து வழியே திரும்பி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனின் காதுகளுக்கே கேட்டது.
கௌஷிக் கத்தவுமே உஷாரான நந்தா, எழுந்து வந்து ஜன்னலை திறக்கும் நேரம், பூந்தொட்டி கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. ஆத்திரத்தோடு ஜன்னலின் இரண்டு பக்கமும் பார்த்தான், பைப்பை பிடித்துக்கொண்டு யாரோ இறங்குவது தெரிந்தது. உடனே காவலாளியை தொலைபேசியில் தொடர்பு கொண்டவன்,
[the_ad id=”6605″]
“டேய் பரதேசி! அங்க என்ன செஞ்சுட்டு இருக்க? எவனோ ஒருத்தன் உள்ள வரைக்கும் வந்துட்டு போறான்.” என்று கர்ஜித்தான்.
“நான் வாசல்ல தான் நின்னுட்டு இருக்கேன் சர்.
“போடா! பின்பக்கம் போய்ப் பாரு! சீக்கிரம்!” கர்ஜித்துவிட்டு ஃபோனை வைத்தவன், நரசிம்மனை காத்திருக்கச் சொல்லிவிட்டு, கௌஷிக்குடன் விறுவிறுவென்று கீழே இறங்கி வந்தான்.
எப்படியோ யாரும் வருவதற்குள், பதுங்கி பதுங்கி வந்து, மதில்சுவரை தாண்டி குதித்துவிட்ட மிதுன், மூச்சு வாங்க சஞ்சனாவின் அருகில் வந்தவன், “சஞ்சு! சீக்கிரம்! இங்க இருந்து கிளம்பனும்!” சொல்லிவிட்டு, மனைவியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.
முந்தின நாள் வரை பைக்கில் வந்தவர்களின் போதாத நேரம், அன்று மிதுனின் பைக் ரிபேர் ஆகி இருக்க, ஆட்டோ பிடித்து வந்திருந்தனர். இப்பொழுது வாகனம் எதுவும் இல்லாததால், திக்திக் இதயத்துடன், பின்னால் திரும்பி திரும்பி பார்த்தவாறு மூச்சு வாங்க ஓடி கொண்டிருந்தனர் மிதுனும், சஞ்சனாவும்.
“உன்னைப் பார்த்துட்டாங்களா டா?” ஓட்டத்துக்கு இடையில் பயத்துடன் கேட்டாள் சஞ்சனா.
“ஆமாம் சஞ்சு!”
“ஐயோ!! இதுக்குத் தான் சொன்னேன், போக வேண்டாம்ன்னு. கேட்டியா நீ?!” அவள் அழ ஆரம்பித்துவிட,
“ஏய்! அழு மூஞ்சி! கவலைப்படாத, என் முகத்தை யாரும் பார்க்கல. அதுக்குள்ள ஓடி வந்துட்டேன்.”
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே, தூரத்தில் ஆட்கள் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான் மிதுன். இன்னும் சில அடிகளில் அவர்களை நெருங்கிவிடும் வேகத்தோடு, ஓபன் டைப் ஜீப் ஒன்று அவர்களை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருந்தது.