அத்தியாயம் 22
ஆட்டோவை அனுப்பிவிட்டு கௌஷிக் கார் சென்ற தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் சுதர்ஷன். “நல்ல நேரதில் கழுத்தறுத்துட்டான்.” எரிச்சலோடு சொல்லியபடி, நடந்து வந்தவன், கௌஷிக்கின் கார் எந்த வீட்டிலாவது நிற்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான்.
சிறிது தூரம் நடந்து இருப்பான். யாரோ திபுதிபுவென ஓடி வரும் காலடி சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான். தூரத்தில் இரண்டு பேர் ஓடி வருவது, நிழல் உருவமாகத் தெரிந்தது. அவர்களைத் தாண்டி வெகு தூரத்தில், ஏதோ காரின் ஹெட்லைட் வெளிச்சம்.
‘யார் அது, ஓடி வர்றது?’ சுதர்ஷன் யோசிக்கும்போழுதே, ஒரு வீட்டின் போட்டிக்கோ லைட் வெளிச்சத்தில், சட்டென்று ஒரு நொடி உருவம் தெளிவாகத் தெரிந்தது.
பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். “அட! இது மிதுனாச்சே! அன்னைக்கு ஹாஸ்பிடல்ல பார்த்த பத்திரிக்கைகார பையன்! கூட அவன் வைஃப் சஞ்சனா இருக்கிற மாதிரி தெரியுதே?! இவன் இந்த நேரத்தில, இங்க? யாரோ துரத்திட்டு வர்றது போலத் தெரியுதே? எதாவது பொறுக்கி பசங்களா?” பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்டது.
பக்கவாட்டில் இருந்த காலி மணையில் இறங்கியவன், அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரோடு ஒன்றிக்கொண்டு அங்கிருந்த புதரின் பின் மறைந்து நின்றவன், துப்பாக்கியை ஒரு நொடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். அடுத்து என்ன செய்வது என்று மடமடவென யோசிக்க ஆரம்பித்தான்.
‘எடுத்து சுட்டுவிடலாமா?’ ஒரு நொடி அந்த எண்ணம் வந்து போனது. உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் அப்படிச் சட்டென்று சுட்டுவிட முடியாது. இங்குச் சூழ்நிலை வேறு சரி இல்லை போலத் தெரிந்தது. எத்தனை பேர் துரத்திக்கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் என்ன வகையான ஆயுதம் இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. சஞ்சனா வேறு இருக்கிறாள். எதிர்த்துப் போராடிகிறோம் என்று ஏதாவது முட்டாள் தனமாகச் செய்து, அவளுக்கு எதுவும் ஆபத்து வந்து விடக்கூடாது. நாளையும் யோசித்தவன், இப்போதைக்கு மறைந்துகொள்வது தான் புத்திசாலித்தனம், ஒருவேளை தங்களைக் கண்டுபிடித்து அவர்கள் தாக்க முயற்சித்தால், அப்பொழுது துப்பாக்கியை பயன்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தான்.
எட்டிப் பார்த்தான். உயிரை கையில் பிடித்தப்படி, சஞ்சனாவை இழுத்துக்கொண்டு, விழுந்து எழுந்து ஓடி வந்து கொண்டிருந்தான் மிதுன். அவன் தன் அருகில் வருவதற்காகக் காத்திருந்தான் சுதர்ஷன். இதோ காலடி சத்தம் வெகு அருகில் கேட்டது. துப்பாக்கியை கையிலெடுத்து தயாராக வைத்துக் கொண்டான்.
ஒன்று, இரண்டு, மூன்று….நொடிகள் கரைய, புயலெனத் தன்னைக் கடந்து சென்ற மிதுனின் கையை அழுத்தமாக பற்றி, வேகமாகப் புதருக்குள் இழுத்தான் சுதர்ஷன்.
சுதர்ஷன் இழுத்த வேகத்தில், குப்புற விழுந்த மிதுனும், சஞ்சனாவும் யார் நம்மை இழுத்தது என்று பயந்து போய், விழுந்தடித்துக்கொண்டு எழ, அதே நேரம் அவர்கள் பக்கம் திரும்பிய சுதர்ஷன், தன் உதடு மேல் கை வைத்துச் சத்தம் போடாதீர்கள் என்று சைகையில் அவர்களிடம் தெரிவித்தான். தர்ஷனை பார்த்ததும் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது மிதுனுக்கும், சஞ்சனாவுக்கும்.
அதே நேரம், அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த ஜீப் அவர்களைக் கடந்து செல்லவும், மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, இருட்டுக்குள் ஒதுங்கினர் மூவரும். சுதர்ஷனோ, போகும் ஜீப்பை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான்.
அவர்களைக் கடந்து சென்ற ஜீப், சற்றுத் தூரம் தள்ளி சென்றதும், நின்றது. உள்ளே இருந்து ஒருவன் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான்.
“அதுக்குள்ள எங்க டா போனாங்க அவங்க ரெண்டு பேரும்?” அங்கே அவன் பேசியது, இங்கே நின்றிருந்த மூவரின் காதிலும் விழுந்தது.
ஜீப்பில் இருந்த மற்றொருவனும் வண்டியில் இருந்து இறங்கினான்.
[the_ad id=”6605″]
“டேய்! நீ அந்தப்பக்கம் போய்ப் பாரு. நான் இந்தப்பக்கம் போய்ப் பாக்குறேன்.” ஒருவன் சொல்ல, இரண்டு பேரும் எதிர் எதிர் திசையில் சென்றனர்.
தாங்கள் நிற்கும் திசை நோக்கி ஒருவன் வருவதைப் பார்த்ததும், காலடி சத்தம் கேட்காதவாறு இன்னும் பின்னோக்கி நகர்ந்தனர் மூவரும்.
சுற்றும் முற்றும் பார்த்தவாறு அவர்கள் அருகில் வந்தவன், நின்று அங்கும் இங்கும் திரும்பி பார்க்க, பயத்தில் வாயை இறுக மூடிக்கொண்டு, கணவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் சஞ்சனா.
சுதர்ஷனோ, துப்பாக்கியை அவனின் நெஞ்சிற்கு நேராகக் குறி வைத்தவாறு தூக்கி பிடித்துக்கொண்டான். திரும்பினால் சுட்டுவிடத் தயாராக இருந்தான்.
வெகு நேரம் ஆகியும் அவன் நகர்வர்தாக இல்லை. சஞ்சனாவுக்கு மூச்சு முட்டுவதுப்போல இருந்தது. இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அந்த நேரம் அவனின் மொபைல் ஃபோன் அடித்தது. எடுத்துப் பேசினான். அந்தப்பக்கம் என்ன சொன்னார்களோ,
“இப்போதான் ஓடிட்டு இருந்தாங்க சர். அதுக்குள்ள ஆளை காணோம்.”
“…”
“தெரு ஃபுல்லா பார்த்துட்டோம் சர்.”
“…”
“நல்லா பார்த்துட்டோம் சர்.”
“…”
“ஓகே சர்.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவன், மற்றொருவனை நோக்கிச் சென்றான்.
அதன்பின்பே லேசாக ஆசுவாசம் அடைந்தாள் சஞ்சனா.
“டேய்! சர் மெயின் ரோட்டுல போய்ப் பார்க்கச் சொன்னார்.”
“அப்படியா!!”
“ஆமாம்! வா, வந்து வண்டியை எடு!”
அடுத்தச் சில நொடிகளில் அவர்களின் வண்டி தெருவின் கடைசிக்கு சென்று, மெயின் ரோட்டில் ஏறி, இடப்பக்கம் திரும்பி சென்றது.
வண்டி சென்றதை பார்த்ததும், சுதர்ஷனிடம் திரும்பி “ரொம்ப நன்றி சர்!” என்றான் மிதுன்.
“பரவால்ல மிதுன். மொதல்ல இங்க இருந்து கிளம்புவோம்.” பதில் சொன்ன சுதர்ஷன், வேறு யாரும் வருகிறார்களா என்று, சுவற்றுக்கு அந்தப்பக்கம் எட்டிப் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. “என் பின்னாடியே வாங்க.” இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு, முன்னே நடக்க, மிதுன், சஞ்சனா இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
வேகவேகமாகத் தெருவின் கடைசிக்கு வந்தவன், மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் திரும்பி, சற்று முன்பு சென்ற வாகனம் எங்கும் தென்படுகிறதா என்று பார்த்தான். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை எந்த வாகனும் இல்லை. உடனே இருவரையும் அழைத்துக்கொண்டு ரோட்டை க்ராஸ் செய்தான். ஏனெனில் ஜீப் சென்றது இடப்புறம். அதே வழியில் தாங்களும் சென்றால் அவர்கள் பார்த்துவிடக்கூடும் என்பதால், அவர்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் செல்ல முடிவெடுத்தான்.
ரோட்டின் அந்தப்பக்கம் வந்ததும் வழியில் வந்த காலி ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோவின் பின்பக்கம் அவர்கள் இருவரையும் ஏற சொல்லிவிட்டு, ஓட்டுனரின் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டான் சுதர்ஷன்.
சுதர்ஷனுக்கு, மிதுனையும், சஞ்சனாவையும் தனியே அனுப்ப விருப்பமில்லை. அதே நேரம் அவனுக்குச் சிறு சந்தேகம் இருந்தது. என்னவென்றால், அனேகமாக ஏதோ துப்பறியும் நோக்கத்தோடு தான், கௌஷிக் சென்ற அதே வீட்டிற்கு மிதுனும் சென்றிருக்கக் கூடும் என்பது அவனின் அனுமானம். ஏற்கனவே அவர்கள் இருவரும், ஆரம்பத்தில் இருந்தே மாதுரி விஷயத்தில் அடிக்கடி தலையிட்டு கொண்டிருப்பதை அவனும் தான் பார்த்திருக்கிறானே!
“உங்க வீடு எங்க?” சுதர்ஷன் கேட்க, இடத்தைச் சொன்னான் மிதுன்.
அதை ஓட்டுனரிடம் சொன்ன சுதர்ஷன், “கொஞ்சம் சீக்கிரம் போங்க!” என்றான் கட்டளையாக.
ஆட்டோ ஓட்டுனரோ, காக்கி உடையில் இருந்த சுதர்ஷனையும், பின்னால் அமர்ந்த மிதுன், மற்றும் சஞ்சனாவையும் குழப்பத்துடன் பார்த்தான்.
‘இந்த நேரத்தில, இந்த மாதிரி ஆள் அரவம் இல்லாத ஏரியால இருந்து வருதுங்க! பார்த்தா தப்பிச்சு வந்த மாதிரி தெரியுது. பொண்ணு வேற பார்க்க அழகா இருக்கு. எவனாவது ரௌடி பசங்க கிட்ட மாட்டிகிச்சுங்களோ, அதான் போலீஸ் ஆஃபிசர் காப்பாத்தி கூட்டிட்டு வரார் போல.’ அவன் பாட்டுக்குக் கற்பனை குதிரையைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான்.
இது தெரியாமல், மிதுன் சுதர்ஷனுக்கு மீண்டும் தன் நன்றியை தெரிவிக்க, ஆட்டோ ஓட்டுனரின் முகத்தைப் பார்த்த சுதர்ஷன், “வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம் மிதுன்.” என்று அவன் பேச்சுக்கு அப்போதைக்குத் தடைப் போட்டான். காரணத்தைப் புரிந்துகொண்ட மிதுன், தன் வாய்க்கு பூட்டுப் போட்டுக்கொண்டான்.
காலியாக இருந்த ரோட்டில், ஆட்டோ ஓட்டுனர் வேகமாக வண்டியை செலுத்த, அரை மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர் மூவரும். பணம் கொடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டு, அவர்களுடனே இறங்கி கொண்டான் சுதர்ஷன்.
“யார் அவங்க? எதுக்காக உங்களைத் துரத்திட்டு வந்தாங்க?” சுதர்ஷன் நேரடியாகக் கேள்வியைக் கேட்டுவிட,
சொல்லலாமா? வேண்டாமா? என்று தயங்கினான் மிதுன். சஞ்சனாவோ, “செத்து பிழைச்சு இருக்கோம். இதுக்கு மேல ரிஸ்க் வேண்டாம். ஆரம்பத்தில இருந்து எல்லாத்தையும் சொல்லிடலாம் மிதுன்.” என்று அவன் காதை கடிக்க,
“எதுவா இருந்தாலும் மறைக்காம் சொல்லிடுங்க மிதுன். நாளைக்கே அவங்களால உங்களுக்கு ஆபத்துனா, அப்புறம் கஷ்டம். தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிற கதையா ஆகிடும்.” அவர்களின் கிசுகிசுப்பை பார்த்துவிட்டுக் கூறினான் சுதர்ஷன்.
சில நொடிகள் யோசித்த மிதுன், எல்லாவற்றையும் சொல்வது என்று முடிவுக்கு வந்தான்.
“சொல்லிடறேன் சர். வீட்டுக்குப் போய்ப் பேசுவோமா?”
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா….” இரவு நேரத்தில், ஒரு போலீசுடன் வீட்டுக்கு செல்வதை அவன் அபார்ட்மெண்ட் வாசிகள் பார்க்க நேர்ந்தால் என்ன நினைப்பர்களோ என்று நினைத்து சுதர்ஷன் தயங்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை சர். நீங்க வாங்க!” உறுதியாகச் சொன்னான் மிதுன்.
அடுத்தப் பத்து நிமிடத்தில், மிதுனின் வீட்டில் இருந்தனர் மூவரும். மடமடவென மூவருக்கும் காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் சஞ்சனா.
காஃபீயை குடித்தவாறு எதிர் எதிர் சோஃபாவில் அமர்ந்து பேசினார் மிதுனும் சுதர்ஷனும். கணவன் அருகில் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.
தாங்கள் எப்படி இந்த வழக்குக்குள் நுழைந்தோம் என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான் மிதுன்.
நர்ஸ் ஒருவர் சொன்ன தகவலை வைத்துக்கொண்டு, மாதுரியை பார்க்க மருத்துவமனை வந்தது, அப்பொழுது கிடைத்த விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு அந்த ஈசிஆர் பங்களாவுக்கு அன்று இரவு சென்றது, அதன்பின் ஒருவனைப் பின்தொடர்ந்து அடையார் குப்பம் சென்றது, அங்கே அவன் இறந்து போனது, துப்பறியும் நண்பன் மூலம் மாதுரி நந்தாவின் மனைவி என்று தெரிந்துகொண்டது, அதன் தொடர்ச்சியாக நந்தாவை கண்காணிக்க மீண்டும் அன்று இரவு அந்தப் பங்களாவுக்குச் சென்றது வரை முழுவதையும் சொன்ன மிதுன்,
“அந்த வீட்டுக்கு கலக்டர் வருவார்ன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சர். இதுவே அதிர்ச்சினா அதுக்கு மேல ஒரு அதிர்ச்சி அங்க காத்துட்டு இருந்துது.”
“என்ன அதிர்ச்சி?”
“சீ.எம் நரசிம்மன் சாரும் அந்தப் பங்களாவுக்கு வந்தாரு.”
“வாட்?!!” அதிர்ந்து போனான் சுதர்ஷன்.
“நிஜம் சர். வேணும்னா இதைப் பாருங்க.” சொன்ன மிதுன், டிஜிட்டல் கேமராவில் தான் எடுத்த அந்தப் புகைப்படத்தை அவனிடம் காண்பித்தான்.
‘ஆம்! முதல்வரே தான்!’ பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான் சுதர்ஷன்.
[the_ad id=”6605″]
“ஆனா, அவர் ஏன் அங்க போனாரு?” குழப்பத்துடன் அவன் கேட்க,
“இதே டவுட் தான் சர் எங்களுக்கும் வந்துது. அதான் அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்க, சுவர் ஏறி குதிச்சு உள்ளே போனேன்.”
“அதான் அந்த ஆளுங்க உங்களைத் துரத்திட்டு வந்தாங்களா?” என்று கேட்டவனின் பார்வையே சொன்னது, ‘பொண்டாட்டியை பக்கத்தில வச்சுக்கிட்டு எதுக்கு உங்களுக்கு இந்த ரிஸ்க் எல்லாம்?’ என்று.
“உண்மை தான். இப்போ தோணுது, ஏன் டா உள்ள போனேன்னு. நீங்க மட்டும் சரியான நேரத்தில வராம இருந்திருந்தா….”
“பத்திரிக்கைகாரங்க கொஞ்சம் துறுதுறுன்னு தான் இருப்பாங்க. ஆனா அதுக்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கக் கூடாது மிதுன். அதுவும் கூட லேடியை வச்சுக்கிட்டு. இனி இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காதீங்க. எதுவா இருந்தாலும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சொல்லுங்க.”
“சாரி சர்!”
“சரி, உள்ள போனீங்களே, என்ன ஆச்சு?”
“உள்ள போயும் வேஸ்ட் தான் சர்.”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“ஏதோ ஒரு பெண்ட்ரைவை லேப்டாப்ல போட்டுப் பார்த்தாங்க, ஆனா அதுல அவங்க தேடுன எதுவும் இல்லை போல. அது என்ன பெண்ட்ரைவ்? அவங்க எதைத் தேடுனாங்க? எதுவும் எனக்குப் புரியல சர். அதுதான் வேஸ்ட் சொன்னேன்.”
மிதுன் பெண்ட்ரைவ் என்று சொன்னதுமே, அதிர்ந்து போன சுதர்ஷன், “பெண்ட்ரைவுன்னா சொன்னீங்க மிதுன்?”
“ஆமாம் சர்.”
“அப்போ நிச்சயம், மாதுரி வீட்டில இருந்து எடுத்த பெண்ட்ரைவா தான் இருக்கணும். ஆனா அதுக்குள்ள ஒன்னும் இல்லையா? எப்படி?” தனக்குள் அவன் கிசுகிசுக்க,
சுதர்ஷன் பேசியதும் குத்துமதிப்பாக விழ, “என்ன பேர் சர் சொன்னீங்க, மாதுரியா?” பரபரப்பாகக் கேட்டான் மிதுன்.
“ஆமாம் மிதுன்.”
“சர்!! இதே பேர் தான் அவங்களும் சொன்னாங்க?”
“என்ன சொன்னாங்க?” கூர்மையானான் சுதர்ஷன்.
“யாரோ மாதுரின்றவங்க அவங்களை ஏமாத்திட்டாங்கன்னும், அந்தப் பெண்ட்ரைவ்ல அவங்க தேடுன எவிடென்ஸ் இல்லைன்னு கோபமா சொல்லிட்டு இருந்தார் அந்தக் கலக்டர்.”
சுதர்ஷனின் முகம் பிரகாசம் ஆனது. “அப்போ ஒரிஜினல் பெண்ட்ரைவ் அங்கேயே தான் இருக்கா? இல்லை மாதுரி வேற யார் கிட்டையாவது கொடுத்து வச்சு இருக்காளா?” குழம்பினான்.
சுதர்ஷனின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் மிதுனும் சஞ்சனாவும். மிதுனோ சுதர்ஷனிடம் திரும்பி, “என்ன சர்? என்ன ஆச்சு? அந்தப் பெண்ட்ரைவ்ல அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்த சுதர்ஷன், சில நொடிகள் யோசனைக்குப் பிறகு, நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். இந்த நொடி அவர்கள் மேல் நம்பிக்கை வந்திருந்தது அவனுக்கு.
மாதுரியின் வாழ்கையைக் கேட்ட மிதுனுக்கும் சஞ்சனாவுக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. சொத்தை இழந்து, பெற்றவரை இழந்து, கடைசியில் அனாதையாக மனநல மருத்துவமனையில் இருந்ததை நினைக்கையில் கண்கள் கலங்கியது இருவருக்கும்.
சில நிமிடங்களில் தன்னைச் சமன் செய்துகொண்ட மிதுன், “அவங்க ப்ரெண்ட் சொன்னது உண்மைன்னு நல்லா தெரியுமா சர்? என்று கேட்க,
“நல்லா தெரியும் மிதுன். அன்னைக்கு அந்தப் பொண்ணோட ஹஸ்பன்ட், கௌஷிக் கூட இந்த எவிடென்சை தேடிகிட்டு தான் அங்க வந்திருக்கான். அவன் மூலமா தான் செய்தி அந்தக் கலக்டருக்கு தெரிஞ்சு இருக்கு.”
அதன்பின் சில நொடிகள் அமைதியாக இருந்த மிதுன்,
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, நான் அந்தப் பேப்பரை பார்க்கலாமா சர்?” என்றான் தயக்கமாக.
[the_ad id=”6605″]
அவனுக்கும் தெரியுமே, காவல்துறை விசாரணை என்பது எப்பொழுதும் ரகசியம் தான். அவ்வளவு சீக்கிரத்தில் அதை ஆக்செஸ் செய்ய முடியாது என்று.
சுதர்ஷன் மறுப்பு தெரிவிக்கவில்லை. பாக்கெட்டில் இருந்து அந்தக் காகிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
லெட்டரை வாங்கி முழுவதும் படித்துப் பார்த்தான் மிதுன். உடன் சஞ்சனாவும்.
சுதர்ஷன் சொன்னது போலத் தான் இருந்தது.
“அங்க ஒரு பீரோ தான் இருந்துச்சா சர்?”
“ஆமாம் மிதுன். ஒன்னு தான் இருந்துச்சு. அதுவும் திறந்து கிடந்தது. அந்த ரூம் ஃபுல்லா அலசி பார்த்துட்டேன். வேற பென்றைவ் எதுவும் இல்லை. சீல்ட் கவர்ஸ் கூட எதுவும் இல்லை. வெறும் டிரஸ்சஸ் தான் இருந்துச்சு.”
சுதர்ஷன் சொல்லவும், குழம்பி போனான் மிதுன்.
‘ஒரு பெண்ட்ரைவ் தான் இருந்திருக்கு. ஆனா அதுலையும் எவிடென்ஸ் இல்லை. அப்போ..?’
ஆண்கள் இருவரும் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க, சஞ்சனாவோ, “மிதுன், அந்தப் பேப்பரை இப்படிக் கொடு!” என்று கேட்க, கையில் இருந்ததைக் கொடுத்தான் மிதுன்.
வாங்கிப் படித்துப் பார்த்தாள். அவர்கள் சொன்னது தான் இருந்தது. காகிதத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள், வேறு எதுவும் க்ளூ இருக்கிறதா என்று. ஒன்றும் தென்படவில்லை.
பின் ஏதோ தோன்ற, லைட் வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பார்த்தாள். பின்பக்கம் ஏதோ எழுதி இருந்தது போலத் தெரிந்தது. உடனே பின்பக்கம் திருப்பிப் பார்த்தாள். எதுவும் இல்லை.
“மிதுன் இங்க பாரேன்!” பரபரப்பாக அவள் சொல்ல,
“என்ன சஞ்சு?!”
“இந்தப் பேப்பரை லைட் வெளிச்சதில வச்சுப் பாரு. ஏதோ எழுதி இருக்கிற மாதிரி தெரியுது.”
“அப்படியா!! இங்க கொடு!!” சஞ்சனாவின் பதற்றம் அவனையும் தொற்றிக்கொண்டது.
மனைவி சொன்னது போலவே, லைட் வெளிச்சத்தில் பார்த்தான். ஆம்! சஞ்சனா சொன்னது போலப் பேனாவால் ஏதோ எழுதப்பட்டிருந்தது. மாதுரியின், அதே கையெழுத்து.
“சர்! இங்க பாருங்களேன்!” விஷயத்தைச் சுதர்ஷனிடம் பகிர்ந்து கொண்டான். அவனுமே வாங்கிப் பார்த்தான். ஆனால் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை.
சஞ்சனா பேப்பரை மீண்டும் வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தாள். எப்படி இது?! ஏதாவது மேஜிக் ட்ரிக்கா? பணக் காகிதங்கள் மாதிரி, இந்தப் பேப்பரே டபிள் ஷேட் பேப்பரா? ஒருவேளை இரண்டு காகிதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதா? யோசித்தவள், பேப்பரை இரண்டாகப் பிரிக்க முயற்சிக்க, முடியவில்லை. கிழிந்தது.
அப்பொழுது தான் அதைக் கவனித்தாள்.