கிழிந்த இடத்தில், பேப்பர் இரண்டு அடுக்காகத் தெரிந்தது. அதன் நுனியை பிடித்து உருட்டிப் பார்த்தாள், நிச்சயம் இரண்டு காகிதங்கள் ஒன்றாகத் தான் இருக்கும். முடிவுக்கு வந்தவள், நுனியை பிடித்து மெதுவாகப் பிரித்தாள். பள்ளி நோட்களில் ஓட்டும் லேபில் போல, காகிதம் இரண்டாகப் பிரிந்தது.
சஞ்சனா செய்ததை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சுதர்ஷனும், மிதுனும்.
முழுவதுமாகப் பிரித்த பின்பு, இப்பொழுது எழுத்துக்கள் தெளிவாக இருந்தது.
அதன்பின்பே புரிந்தது, லேபில் போல இரண்டு அடுக்குக் கொண்ட காகிதத்தின் உள் பக்கம் ஏதோ எழுதிவிட்டு, அதன் மேல் பேப்பரை ஒட்டி இருக்கிறாள் மாதுரி. யாருமே சட்டென்று முன்பக்கம் இருப்பதை மட்டுமே படிப்பர். பின்பக்கம் பார்க்க மாட்டார்கள்.
யோசனையை விடுத்து அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்துப் பார்த்தனர்.
‘கடிகாரத்தின் கண்ணாடிப் பேழைக்குள் மறைந்திருப்பது நேர முற்கள் மட்டுமில்லை, உன் எதிர்காலமும் தான்!’
என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
காகிதத்தை வாங்கிப் பார்த்தான் சுதர்ஷன். பின்புற காகிதம் பளபளப்பாக இருந்ததால், பின்பக்கம் எழுத்துக்கள் தெரியவில்லை. அன்று மருத்துவமனையில் காகிதத்தின் பின்புறம் திருப்பிப் பார்க்காததை நினைத்து வருந்தினான்.
“எதுக்குச் சர் இதை எழுதி இருக்காங்க?” மிதுன் கேள்வி கேட்க,
சில நொடிகள் யோசித்த சுதர்ஷன், “காட் இட்!” என்று கூச்சலுடன் எழுந்து நின்றான்.
மிதுனும், சஞ்சனாவும் குழப்பமாக அவனைப் பார்க்க, அதைப் புரிந்துகொண்ட சுதர்ஷன், “நந்தா எடுத்துட்டுப் போனது டம்மி பெண்ட்ரைவ். ஒரிஜினல் கடிகாரத்துக்குள்ள இருக்கு.” என்று சொல்ல,
“அட! ஆமா!” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் மிதுனும், சஞ்சனாவும்.
“உங்க பைக் சாவி கொஞ்சம் தரமுடியுமா மிதுன்? மார்னிங் கொண்டு வந்து கொடுத்துடறேன்.” சுதர்ஷன் கேட்க,
“சர், தனியா போக வேண்டாம். நானும் உங்க கூட வரேன்.” சொன்ன மிதுன், சுதர்ஷனின் மறுப்பைப் பொருட்படுத்தாமல், விறுவிறுவென்று அறைக்குள் சென்று பைக் சாவியை எடுத்து வந்தான்.
“சஞ்சு! கதவை பூட்டிக்கோ. யார் வந்தாலும் கதவை திறக்காத!”
“மிதுன்! சொல்றதை கேளுங்க! அவங்களைத் தனியா விட்டுட்டு வர வேண்டாம். நீங்களும் இங்கேயே இருங்க. கொஞ்ச முன்னாடி தான் ரவடி பசங்ககிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கோம். ஒருவேளை அவங்க நம்மை ஃபாலோவ் செஞ்சு, இங்க வந்திருந்தா? ரிஸ்க் வேண்டாம். நான் பார்த்துப்பேன். நீங்க இங்கேயே இருங்க!” சுதர்ஷன் மீண்டும் மீண்டும் சொல்ல,
“அதெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம் சர். இது எங்க ஏரியா! நான் பத்திரமா இருந்துப்பேன். நிறையத் தடவை அவர் இல்லாம நான் தனியா இருந்துருக்கேன்.” மிதுனை விடுத்தது, பதில் சொன்னாள் சஞ்சனா.
“ஆமாம் சர். அதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்லை. நாம போவோம். நேரம் இல்லை.” மிதுன் அவசரப்படுத்த, சஞ்சனாவை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு மிதுனின் பைக்கில் மாதுரியின் வீட்டை நோக்கி கிளம்பினர், சுதர்ஷனும், மிதுனும்.
கணவன் சென்றதும், கதவை லாக் செய்துவிட்டு, ஜன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திய சஞ்சனா, விளக்குகள் அனைத்தையும் அணைத்தாள். பாதுகாப்புக்கு என்று கிரிகெட் மட்டையைத் தேடி எடுத்து, கையில் வைத்துக்கொண்டாள்.
[the_ad id=”6605″]
புயலெனப் பைக்கை ஓட்டிவந்த சுதர்ஷன், பதினைந்து நிமிடத்தில் மாதுரியின் அபார்ட்மென்ட் வந்து சேர்ந்தான். நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்ததால், எங்கும் நிசப்தம்.
வேகவேகமாகப் படிகளில் ஏறி, மாதுரியின் வீட்டின் முன் வந்து நின்றவன், கதவைப் பார்த்தான். பூட்டப்படாமல் வெறுமென அடைக்கப்பட்டிருந்தது.
சத்தம் வராமல் கதவை திறந்து உள்ளே சென்றனர் சுதர்ஷனும், மிதுனும். கதவை லாக் செய்துவிட்டு, லைட்டை போட்டான் மிதுன். மடமடவெனக் கடிகாரத்தைத் தேடினர். ஹால் சுவற்றில் ஒன்றும், படுக்கை அறையில் ஒன்றும் இருந்தது. ஹால் கடிகாரம் கொஞ்சம் பழைய மாடலில் நீண்ட மணியைக் கொண்ட பெரிய கடிகாரமாக இருந்தது. ஆனால் படுக்கை அறையில் இருந்ததோ, நார்மல் சைசில் இருந்தது. நிச்சயம் பெண்ட்ரைவ் படுக்கை அறை கடிகாரத்தில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், முதலில் அதைத் திறப்பது என்று முடிவு செய்தனர்.
இரண்டையும் சுவற்றில் இருந்து எடுத்தவர்கள், அதைத் திறக்க டூல் எதுவும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், கிடைத்த சுச்சிலைக்கொண்டு அதிகம் சத்தம் வராமல், படுக்கை அறையில் இருந்து எடுத்து வந்த கடிகாரக் கண்ணாடியை லேசாகத் தட்ட, அது இரண்டாகப் பிளந்தது. வேகமாக அதைப் பிரித்துப் பார்த்தனர். ஆனால், உள்ளே ஒன்றும் இல்லை.
குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஒருவேளை அந்த க்ளாக்ல இருக்கலாம் சர்.” சொன்ன மிதுன், வேகவேகமாக இரண்டாவது கடிகாரத்தின் முன்பக்க கண்ணாடியின் சைடில் இருந்த கொக்கியை விடுவிக்க, கதவு திறந்து கொண்டது. செல்ஃப் போல இருந்த அதிலும் எதுவும் இல்லை.
இருவரும் தவித்துப் போனார்கள்.
‘ஒருவேளை நாம் தான் அந்தப் பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டோமா?!’ தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டான் சுதர்ஷன். அன்று காலையில் ஆரம்பித்தது இந்த பெண்ட்ரைவ் தேடும் வேலை. இதோ நள்ளிரவு வரை நீண்டு கொண்டு இருக்கிறது. காலையில் இருந்து யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போனது.
மிதுனோ, கடிகாரத்தை உன்னிப்பாகப் பார்த்தான்.
அந்தக் கால மாளிகைகளில் இருக்கும் நீளமான கடிகாரம். இரண்டு பகுதியாக இருந்தது. மேல் பகுதியில் வட்ட வடிவ தட்டு போன்ற அமைப்பில், எழுத்துக்கள் பித்தளையில் இடம்பெற்றிருக்க, நடுவில் கடிகார முற்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதன் பின்பகுதியில் இருந்து நீண்டு பெட்டியின் முழு நீளத்துக்குத் தொங்கி கொண்டு இருந்தது, பெண்டுலம். ஆனால் அதன் பாதி உயரம் தான் கண்ணனுக்குத் தெரியும். மீத கடிகாரத்தின் பின்னே மறைந்து இருக்கும்.
வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருந்த மிதுன், திடீரென்று ஏதோ தோன்ற, பெண்டுலத்தின் பித்தளை கம்பியை பிடித்தவாறு, அப்படியே தடவிக்கொண்டு மேலே கைகளைக் கொண்டு போனான். கைகள் எட்டவில்லை. சற்றே உடலை வளைத்து, கையை நீட்டினான். கம்பியை பிடித்திருந்த அவனின் விரல்களில் ஏதோ தட்டுப்படுவது போன்று இருந்தது.
பிடித்துப் பார்த்தான். ஏதோ சாவி போல இருந்தது. அது கம்பியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. இழுத்துப் பார்த்தான் வரவில்லை. உடனே செய்தியை சுதர்ஷனிடம் சொன்னான்.
“சர், உள்ள கம்பியோட ஏதோ சுத்தி கட்டி வச்சிருக்காங்க. ஏதோ சாவி மாதிரி தெரியுது.”
மிதுன் சொல்ல, தானும் கையைவிட்டுப் பார்த்தான். ஆமாம்! ஏதோ சாவி போலத் தான் தெரிந்தது. வெகு நேரம் முயன்றும் அதை எடுக்க முடியாமல் போகவே, கடிகாரத்தைப் பின்பக்கம் புரட்டினான். மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது. உடனே எழுந்து சென்று கிச்சனில் இருந்து ஒரு கத்தியை எடுத்து வந்தான். அதைக்கொண்டு பலகையைக் குத்த, கீறல் விழ ஆரம்பித்தது. பின் சுச்சிலை கொண்டு லேசாகத் தட்ட, உடைந்து விழுந்தது. பலகையின் துண்டுகளை எடுத்துப் போட்டுவிட்டு பார்க்க, கடிகார முள்ளின் பின்பக்கத்தோடு பொருத்தப்பட்டு, கீழே வரை நீண்டு இருந்த பெண்டுல கம்பியில், காப்பர் கம்பியை கொண்டு சாவியைச் சுற்றி கட்டி வைத்திருந்தாள் மாதுரி.
கம்பியை திருகி, சாவியை வெளியே எடுத்தான் சுதர்ஷன். ஆனால் இது எதற்கான சாவி என்று தெரியவில்லை. இருந்தும் தேடியாக வேண்டுமே. சாவியை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பீரோ, லாக்கர் என்று எங்கெல்லாம் சாவி போட முடியுமோ அங்கெல்லாம் முயன்றுப் பார்த்தான். எதற்கும் அந்தச் சாவி செட் ஆகவில்லை.
யோசிக்க ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
மாதுரி ஒரு வக்கீல் என்றாலும் அவளும் ஒரு பெண் தான். கணவனுக்குத் தெரியாமல் ஒரு பொருளை ஒளித்து வைக்க வேண்டும் என்றால்..? பொதுவாகப் பெண்கள் எங்கு வைப்பார்கள்? கணவன் பயன்படுத்தாத இடத்தில தான் வைப்பார்கள். அப்படிப் பார்கையில் ஒன்று மேக்கப் பொருட்கள் வைத்திருக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் அல்லது சமையல் அறை.
வேகமாக எழுந்தவன், சென்று டிரெஸ்ஸிங் டேபிளை திறக்க முயற்சிக்க, சாவி அதில் இருந்த பூட்டில் பொருந்தவில்லை. மேலும் இரண்டு முறை முயற்சித்துப் பார்த்தான். முஹூம்! எத்தனை முறை முயன்றும் பொருந்தவில்லை. பின் உடனே சமையல் அறைக்குச் சென்றான். மிதுன் அவனைத் தொடர்ந்து சென்றான்.
மாடர்ன் டைப் மாடுலர் கிட்சென் அது. மேடைக்குக் கீழே வரிசையாகக் கதவுகள் இருக்க, அவை எவற்றிலும் சாவி துவாரம் இல்லை. சமையல் மேடைக்கு மேலே பார்த்தான். கீழே போலவே, சாவி துவாரங்கள் இல்லாத கதவுகள் தான் வரிசையாக இருந்தது.
ஆனால் அதற்கு மேல் பரணில் இருந்த கதவுகளில் சாவி துவாரம் இருந்தது. பக்கத்தில் கிடந்த உணவு மேசை சேரை இழுத்து போட்டவன், அதன் மேல் ஏறி, ஒவ்வொரு கதவாக முயன்று பார்த்தான். எதற்கும் செட் ஆகாத சாவி, கடைசியாக இருந்த கதவுக்குச் செட் ஆக, திறந்து பார்த்தான்.
உள்ளே ஒரு சிப்லாக் கவர் தூசி படிந்து இருந்தது. வெளிய எடுத்து தூசியை தட்டிவிட்டு திறந்துப் பார்த்தான். சில டாக்குமெண்ட்ஸ், சீடீக்கள் கூடவே ஒரு பெண்ட்ரைவும் இருந்தது.
அவற்றை எல்லாம் பார்த்ததும், மிதுன், சுதர்ஷன் இருவரும் முகத்திலும் மகிழ்ச்சி. மேலே இருந்து கீழே இறங்கிய சுதர்ஷன், டாக்குமெண்ட்சை ஒவ்வொன்றாக எடுத்து மேலோட்டமாகப் படித்துப் பார்த்தான்.
நந்தகுமார் என்ற பெயரில் சில பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ், அவனின் வாட்சப் உரையாடல்களின் நகல்கள், உள்ளிட்ட பல டாக்குமெண்ட்ஸ் இருந்தது.
அவற்றை வைத்துவிட்டு, பெண்ட்ரைவ்வை பார்த்தான். தற்போதைக்கு அதைப் போட்டுப்பார்க்க வசதி இல்லாததால், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மிதுனின் வீட்டிற்கு விரைந்தனர் இருவரும்.
[the_ad id=”6605″]
தூக்கம் கண்களைச் சொக்க, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் சஞ்சனா. அடிக்கடி அவளின் பார்வை கடிகாரத்தைத் தொட்டு மீண்டது.
அப்பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
‘மிதுன் வந்துட்டானா?’
‘இல்லையே அவன் ஃபோன் பண்றேன்னு சொன்னானே?’
‘ஒருவேளை ஏதோ அவசரத்தில வந்துட்டானோ?’
‘திறந்து பார்க்கலாமா?’
வெகு நேரம் குழம்பியவள், மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவின் அருகில் சென்றாள்.
கதவில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். யாருன் தென்படவில்லை.
“யாரது?!” மெதுவாகக் கேட்டாள்.
பதில் இல்லை. மீண்டும் கேட்டாள். இம்முறை கொஞ்சம் சத்தமாகவே.
கதவுக்கு அந்தப்பக்கம் ஏதேதோ பேச்சு குரல். அதன்பின் சில நொடிகள் அமைதி. பின் பதில் வந்தது.
“நான் தான் மிதுன்.” கிசுகிசுப்பாக வந்தது குரல்.
அதன்பின்பே உயிர் வந்தது சஞ்சனாவுக்கு. மடமடவென லாக்கை விடிவித்துக் கதவை திறந்தவள் எதிரில் இருந்தவனைப் பார்த்து அதிர்ந்து போனாள். உடல் நடுங்க ஆரம்பித்தது.