அத்தியாயம் 23
பைக்கை சுதர்ஷன் ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்தான் மிதுன். சஞ்சனாவைத் தனியே விட்டு வந்திருப்பதால், ஏனோ தெரியவில்லை ஒருவித சஞ்சலம் இருவருக்குள்ளும் இருந்தது. சாலை வேறு வெறிச்சோடி இருக்க, சுதர்ஷனின் கையில் பைக் பறந்தது.
வழக்கமாக ஆகும் நேரத்தை விடப் பாதி நேரத்திலேயே வீட்டை நெருங்கி இருந்தனர். இதோ இன்னும் சில நொடிகளில் அபார்ட்மெண்ட்டுக்குள் நுழையவிருக்கும் நேரம், மிதுனின் மொபைல் ஃபோன் அடித்தது. வேகமாக எடுத்துப் பார்த்தான். சஞ்சனா அழைத்திருந்தாள். உடனே ஆன் செய்து காதில் வைத்தான்.
“இதோ வந்துட்டோம் சஞ்சு.” அவன் சொல்லி முடிக்கவில்லை, அந்தப்பக்கம் ஏதோதோ சத்தம் கேட்டது.
“மிதுன்..சீக்கி…..யார்….ரெண்….பேர்…” அவளின் பேச்சு விட்டுவிட்டு கேட்க,
“ஹலோ! சஞ்சு! கேக்கல…ஹலோ…” என்ற பதறிய மிதுனுக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
இப்பொழுது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது. ஆனால் காதில் விழுந்த சம்பாஷனை மிதுனின் வயிற்றில் புளியை கரைத்தது.
“டேய்! யார் டா நீங்க? வெளிய போங்கடா!” அதைத் தொடர்ந்து ‘பளார்’ என்ற சத்தமும், பின் சஞ்சனாவின் “அம்மா!” என்ற அலறலுடன் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.
“மிதுன்! என்ன ஆச்சு? சஞ்சனாவுக்கு என்ன?” சுதர்ஷன் கேட்ட பின்பே நடப்புக்கு வந்த மிதுன், “சர்! சீக்கிரம் போங்க! யாரோ வீட்டுக்கு வந்திருக்கானுங்க. சீக்கிரம் சர்!” என்று படபடவெனச் சொல்ல, வண்டியின் வேகத்தை அதிகபட்ச வேகத்துக்குக் கொண்டு போனான் சுதர்ஷன்.
அடுத்தச் சில நொடிகளில், ‘க்ரீச்!!’ என்ற சத்தத்துடன் அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தவர்கள், பைக்கை ஸ்டான்ட் கூடப் போடாமல் அப்படியே தரையில் போட்டுவிட்டு, நாலு கால் பாய்ச்சலில் படிகளில் தாவி ஏறி, மிதுனின் வீடு இருக்கும் தளத்திற்கு வந்ததும், தூரத்தில் யாரோ இருவர் வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைப்பது தெரிந்தது. மிதுனுக்கு உயிரே போன மாதிரி ஆகிற்று. விழுந்தடித்துக் கொண்டு ஓடியவன், புயலென வீட்டை அடைவதற்குள் கதவு லாக் செய்யப்பட்டது. உள்ளே வேறு சஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டது.
“மிதுன் நீங்க நாகருங்க!” கத்திய சுதர்ஷன், துப்பாக்கியை எடுத்து லோட் செய்து கொண்டவன் தோள்களால் கதவை இடித்துத் திறக்க முயற்சிக்க, இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் கதவு திறக்காமல் இருக்க, சற்றே பின்பக்கம் நகர்ந்து, தன் நீண்ட கால்களால் ஓங்கி கதவை ஒரு எத்து எத்தினான். அடுத்த நொடி ‘டமார்’ என்ற சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது.
வேகமாக உள்ளே நுழைந்தவர்களின் கண்களில் விழுந்தது, சஞ்சனாவின் கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்திருக்க, மற்றொருவனோ வாசலை நோக்கி துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்த காட்சி.
அக்காட்சியைப் பார்த்ததும், உள்ளே நுழைந்த வேகத்தில் அப்படியே பிரேக் அடித்து நின்றனர் மிதுனும், சுதர்ஷனும்.
மிதுனோ, அதிர்ந்து போனான். ஏனெனில் எதிரில் நின்றிருந்த இருவரும் சற்று முன்பு அவர்களை ஜீப்பில் துரத்திக்கொண்டு வந்த நந்தாவின் அடியாட்கள். ஆம்! அவர்களே தான்.
‘இவனுங்க எப்படி இங்க வந்தானுங்க?’ அப்பட்டமான அதிர்ச்சி அவன் முகத்தில்.
‘நிச்சயம் நாம யாருன்னு தெரியாது! Cctv கேமெராலையும் என் முகம் பதிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏனா, உள்ள போகும்போது முகத்தைக் கர்ச்சீஃபால மூடிட்டு தான் போனேன். சரி அப்படியே ஓடும்போதும் என் முகத்தைப் பார்த்திருந்தா கூட, அதுக்குள்ளையா என்னோட வீட்டு அட்ரெஸ் கண்டுபிச்சானுங்க?’ குழப்பம் அவனைச் சூழ்ந்தது.
அதேநேரம் எதிரில் இருந்த இருவரும், மிதுன் மற்றும் சுதர்ஷன் இருவரும் இந்நேரத்தில் வருவார்கள் என்பதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கப் போலும். முகத்தில் குழப்பம் தெரிந்தது. ஏனெனில் சற்று முன்பு தான் பார்த்தார்கள், சஞ்சனா வீட்டில் தனியே இருப்பதை. அதற்குள் இவர்கள் இருவரும் வீடு வரைக்குள் வந்து விட்டார்களா? சஞ்சனா ஃபோன் பேச முயன்றபொழுது ஏதோ தூரத்தில் வந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தனர். ஆனால்? இருவர் முகத்திலும் ஒரு பதற்றம் தெரிந்தது. அதிலும் சுதர்ஷனின் காக்கி உடை அவர்களைக் கலக்கத்துகுள்ளாகியது. அடிக்கடி பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.
[the_ad id=”6605″]
“வெப்பன்ஸ கீழ போட்டுட்டு ஒழுங்கா சரண் அடஞ்சிருங்க. அந்தப் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, உங்களைச் சுட்டுப் பொசுக்கக் கூடத் தயங்க மாட்டேன்.” கர்ஜித்தான் சுதர்ஷன்.
இப்பொழுது சஞ்சனாவை இழுத்துக்கொண்டு பின்னே நகர்ந்தனர் இருவரும்.
“எங்களைச் சுடணும்னு நினைச்சா, இந்த் பொண்ணைக் கொன்னுடுவோம்.” பதிலுக்கு மிரட்டினர்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, மிதுன், மனைவியைப் பார்த்தான். மிரண்டு போயிருப்பாள் போல. முகம் பயத்தில் சுருங்கி இருக்க, அவள் கண்கள் இரண்டும் கண்ணீரைத் தாங்கி நின்றது. கன்னத்தில் வேறு அடித்த கைவிரல் தடம். மனைவியைப் பார்க்கப் பார்க்க, பற்றிக்கொண்டு வந்தது. அடித்தவன் மட்டும் கையில் கிடைத்தால், பின்னி எடுத்துவிடுவான்.
அதே நேரம் சஞ்சனாவும் கணவனைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். சிறு பிள்ளை போல, உதடு வளைய, அழ தயாராக இருந்தாள்.
“உங்களுக்கு என்ன வேணும்?” சுதர்ஷனின் கேள்வி கணவன் மனைவி இருவரையும் கலைத்தது.
‘அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு வரவேண்டும்’ என்று நந்தா கட்டளையிட்டு இருக்க, எப்படிப் பதில் சொல்லுவார்கள். மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சற்று முன்பு, நந்தாவின் வீட்டின் மதில் சுவரில் இருந்து குதித்து இறங்கும்பொழுது, மிதுனின் ப்ரெஸ் ஐடி கார்ட் வீட்டுக் காம்பௌண்ட் சுவரு அருகே விழுந்திருக்க, அது எப்படியோ நந்தாவின் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தான். மிதுனின் பெயர், வேலை செய்யும் தொலைகாட்சி பெயர், வீட்டு முகவரி எல்லாம் இருந்தது.
இரவு பகல் என்று எந்த நேரத்திலும் வெளியே சுற்றும் வேலை அவனோடது என்பதால், வழியில் போலீஸ் செக்கிங் இருக்கும் நேரத்தில் எடுத்துக் காட்டவென எப்பொழுதும் அவனின் பேன்ட் பக்கெட்டில் இந்தக் கார்ட் இருக்கும். இப்பொழுது அதுவே அவனுக்கு எதிரான ஆயுதமாக மாறியது.
கார்டை பார்த்ததும், தன்னை வேவு பார்த்தது பத்திரிகைக்காரன் என்பது புரிய, கோபத்தில் முகம் சிவந்தது நந்தாவிற்கு. உடனே தன் ஆட்களிடம் விஷயத்தைத் தெரிவித்தவன், “நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது, என்னைப் பத்தி அவங்ககிட்ட ஏதாவது எவிடென்ஸ் இருந்தா அதை அழிச்சிட்டு அப்படியே அவங்களையும் அழிச்சிட்டு வந்துடுங்க!” என்று கோபத்துடன் கட்டளை இட்டுருந்தான்.
இப்பொழுதும் அவனின் அந்தக் கர்ஜனை காதில் விழ, சஞ்சனாவை எக்காரணம் கொண்டும் விடுவிக்க அவர்கள் விரும்பவில்லை.
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
“உங்களை யார் அனுப்பினான்னு எங்களுக்குத் தெரியும். அவங்களுக்காகப் பார்த்து, அப்புறம் உங்க உயிரை நீங்க இழக்காதீங்க. உங்களுக்குன்னு இருக்கிற குடும்பம் ஆனாதை ஆகிடும்.” பேரம் பேசினான் சுதர்ஷன்.
முஹூம்! இப்பொழுதும் பதில் இல்லை!
“கடைசியா சொல்றேன். எனக்கு நீங்க ரெண்டு பேரு தான் முக்கியம். உங்களைப் பிடிக்க யாரோட உயிர் போனாலும் எனக்குக் கவலை இல்லை.” சொன்னவன், தன் துப்பாக்கியை சஞ்சனா பக்கம் திருப்பினான்.
மிதுன், சஞ்சனா இருவரும் அதிர்ந்து போக, கொலைகாரர்களோ, குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
[the_ad id=”6605″]
அந்த ஒரு நொடி சுதர்ஷனுக்குச் சாதகமாக இருக்க, பக்கத்தில் இருந்த பூச்சாடியை எடுத்து துப்பாக்கி வைத்திருந்தவனின் கையைக் குறிபார்த்து வீசவிட்டு, அதே நேரம் சஞ்சனாவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தவனின் மேல் பாய்ந்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட மிதுன், துப்பாக்கி வைத்திருந்தவன் மேல் பாய்ந்தான். சட்டென்று நடந்துவிட்ட இந்நிகழ்வில், சஞ்சனாவின் கழுத்தில் லேசான கீறல் உண்டானது.
அதைப் பொருட்படுத்தாமல், சற்றுத் தள்ளி கீழ கிடந்த கிரிகெட் மட்டையை எடுத்து வந்தவள், கொலைகாரர்கள் இருவரையும் மாறி மாறி மொத்தி எடுத்துவிட்டாள். சில பல நிமிட போராட்டத்திற்குப் பிறகு, வந்தவர்கள் இருவரையும் சிறைப் பிடித்தனர் மிதுனும், சுதர்ஷனும்.
“சஞ்சு! போய் அந்தக் கயித்தை எடுத்துட்டு வா!” மிதுன் கத்த, ஓடிச்சென்று துணிகள் காயப்போட வாங்கி வைத்திருந்த கயிற்றை எடுத்து வந்தாள் சஞ்சனா. அதைக்கொண்டு இருவரையும், டைனிங் டேபிள் சேரோடு கட்டினர்.
உடனே தனது செல்ஃபோனை எடுத்த சுதர்ஷன், காவல் நிலையத்திற்குபோன் போட்டு, மிதுனின் வீட்டு முகவரியை சொல்லிவிட்டு, “அக்யுஸ்ட் ரெண்டு பேரை கூட்டிட்டு போகணும். எஸ்.ஐயையும், கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேரையும் உடனே அனுப்பி வைங்க.” என்று சொல்லிவிட்டு வைத்தான்.
பின் அவர்கள் இருவர் பக்கமும் திரும்பியவன், “ம்ம்! சொல்லுங்க உங்களை அனுப்பினது கலக்டர் நந்தகுமார் தானே?” என்றான் கோபமாக.
அவர்கள் முகத்தில் அதிர்ச்சி.
“ஒழுங்கு மரியாதையா உண்மையைச் சொல்லிடுங்க. வீணா அடிபட்டு சாகாதீங்க!” சற்றே குரலை உயர்த்தினான்.
இப்பொழுதும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவர்களின் முகத்தையே வெகு நேரம் பார்த்திருந்த சுதர்ஷன், சஞ்சனா பக்கம் திரும்பி, “சஞ்சனா! போய் ஒரு தலையணை எடுத்துட்டு வாங்க!” என்று சொல்ல, அனைவர் முகத்திலும் குழப்பம்.
[the_ad id=”6605″]
சில நிமிடங்களில் தலையணையுடன் சஞ்சனா வர, அதை வாங்கிக்கொண்ட சுதர்ஷன், “வாயை திறந்து பேசாம இருக்கிறதுக்கு இவனுங்க சாகுறது மேல். யாராவது கேட்டா, என்னை அடிச்சிட்டு தப்பிச்சு ஓட பார்த்தாங்க, அதனால ஷூட் பண்ண வேண்டியதா போச்சுன்னு சொல்லிடறேன்.” தனக்குள் பேசுவது போல அனைவர் காதிலும் கேட்கும்படி சொன்னவன், குற்றவாளிகளை நோக்கி நெருங்க,
சுதர்ஷன் என்ன செய்யப் போகிறான் என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கொலைகாரர்கள் இருவரில், ஒருவன் அருகே சென்றவன், அவன் திமிர திமிர தலையைனை அவன் முகத்தில் வைத்து அழுத்தினான்.
முகம் மூடப்பட்டவனோ, “ம்ம்ம்ம்!!” என்று முனங்க, அருகில் இருந்த மற்றொருவனோ, சுதர்ஷன் செய்வதை மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு அஞ்சு செகண்ட் டைம் தரேன். அதுக்குள்ள உண்மையைச் சொல்லலைனா….” தொடராமல் விட்டவன், துப்பாக்கியை அப்படியும் இப்படியும் திருப்பிவிட்டு, “எப்படியும் ரெண்டு புல்லட்டுக்கு மேலையே இருக்கும். ஆளுக்கு ஒன்னு. எனக்கு வேலை சிம்பிள்.” சொல்லிவிட்டு, துப்பாக்கியின் முனையைத் தலையணைக்குள் அழுத்த புதைத்தான்.
பக்கத்தில் இருந்தவனுக்குக் கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. உடல் அப்பட்டமாக நடுங்க, பாத்ரூம் வந்துவிடும் போல இருந்தது.
“ஒன்னு!” எண்ணிக்கையைத் தொடங்கினான் சுதர்ஷன். எச்சிலை முழுங்கினான் அருகில் இருந்தவன்.
“இரண்டு!” தலையணை மூடப்பட்டவன் திமிறினான்.
“மூணு!” சுதர்ஷனையும், ட்ரிகரில் இருந்த அவனின் விரலையும் மாறி மாறி பார்த்தான் அருகில் இருந்தவன். கண்கள் மிரட்சியைக் காட்ட, அவன் முகத்தின் நெற்றியில் இருந்து ஆரம்பித்த வேர்வை துளிகள், கன்னம் வழியே கோடு போலக் கீழே இறங்கி, தாடையின் நுனியில் இருந்து சொட்டு சொட்டாகத் தரையில் விழுந்தது.
“நாலு!” துப்பாக்கியை லோட் செய்து கொண்டான் சுதர்ஷன்.
“ஐந்து!” சொல்லவிட்டு அருகில் இருந்தவனைத் திரும்பிப் பார்த்த சுதர்ஷன், அடுத்த நொடி ட்ரிகரை அழுத்தினான்.