இதயத்துடிப்பை ஒரு நொடி நின்றுபோக வைக்கும் அச்சத்தம் கேட்ட அடுத்த நொடி, “சொல்லிடறேன்! எல்லா உண்மையையும் சொல்லிடறேன். நந்தகுமார் சர் தான் இவங்களைக் கொல்ல சொல்லி எங்களை அனுப்பினார்.” நரம்பு புடைக்க, உடல் நடுங்க, கண்களை மூடியபடி கத்தினான் பக்கத்தில் இருந்தவன்.
சில நொடிகள் பிறகு கண்களைத் திறந்தான். சுதர்ஷன் அவனையே பார்க்கவும், திரும்பி பக்கத்தில் இருந்தவனைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்கவில்லை. ஆனால் பயத்தில் மயங்கி இருந்தான்.
“மிதுன், உங்க கேமராவை எடுத்துட்டு வாங்க!” சொன்ன சுதர்ஷன், டைனிங் டேபிளில் இருந்து தண்ணீர் க்ளாசை எடுத்து, மயங்கி இருந்தவனின் முகத்தில் ‘பொளீச்’ என்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்தான். மூக்குக்குள் நுழைந்த தண்ணீர் மண்டை வரை சுர்ரென்று ஏற, மிரண்டு போய் எழுந்தவனுக்கு, சில நொடிகள் கழித்தே நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. ‘லொக்கு’ ‘லொக்கு’ என்று இரும்பிக்கொண்டு, சுற்றி இருந்தவர்களை மிரண்ட பார்வை பார்த்தான்.
அதற்குள் மிதுன் அவர்கள் இருவர் முன்னும் கேமராவை செட் செய்ய, சுதர்ஷன் கேட்ட கேள்விகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பதில் சொல்ல ஆரம்பித்தனர் கொலையாளிகள் இருவரும்.
“நரசிம்மன் ஐயாகிட்ட பத்து வருஷமா அடியாளா வேலை செய்றோம். அவர் என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டியது தான் எங்க வேலை. கொலை, கையைக் கால உடைக்கிறதுன்னு எல்லா வேலையயும் செஞ்சிருக்கோம். அதுக்கு மேல எந்த விவரமும் கேட்டுக்க மாட்டோம். சமீபமா கலக்டர் நந்தகுமார் சாருக்கும், ஐயாவுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுச்சு. நந்தகுமார் சர் என்ன சொன்னாலும் செய்யச்சொல்லி ஐயா எங்களுக்கு உத்தரவிட்டாரு. ஈசிஆர் பங்களால தான் தங்கி இருப்போம். நேத்து இதோ இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வந்துட்டு தப்பிச்சுப் போனதும், இவங்களை எல்லா இடத்துலையும் தேடினோம். ஆனா கிடைக்கல. அப்போ நந்தகுமார் சர் எங்களுக்கு இவங்க அட்ரெசை அனுப்பி, ஆளை முடிச்சிட்டு வர சொன்னாரு. நாங்களும் இங்க வந்து பார்த்தோம். அந்தப் பொண்ணு மட்டும் தனியா இருக்குன்னு தெரிஞ்சுது…….” நடந்ததை முழுவதும் கூறினார்.
மிதுன் தான் வாசலில் நிற்கிறான் என்று நினைத்துக்கொண்டு கதவை திறந்த சஞ்சனா, சற்று முன்பு தங்களைத் துரத்தியவர்கள் வாசலில் நிற்பதை பார்த்ததும், ஒரு நொடி அதிர்ந்து போனாள். அடுத்த நொடி சுதாரித்துக்கொண்டவள், ஒரு கையால் மிதுனுக்குப் போன் போட்டுக்கொண்டே, மற்றொரு கையால் கதவை மூட முயற்சிக்க, தன் காலை கதவுக்கும், நிலைப்படிக்கும் இடையில் விட்டு சஞ்சனாவின் முயற்சியைத் தடுத்தான் ஒருவன்.
இருந்தும் தன் முதுகை கதவுக்கு முட்டு கொடுத்தவாறு, மிதுனிடம் திக்கித் திக்கிப் பேசிய சஞ்சனா, கதவை தன் முழுப் பலம் கொண்டு அடைக்க முயற்சித்தாள். ஆனால் ஒருத்தியாக அவர்கள் இருவரை சமாளிக்க முடியவில்லை. சஞ்சனாவை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.
கண்களில் மிரட்சியுடன் அவர்களைப் பார்த்த சஞ்சனா, “மரியாதையா வெளிய போங்க டா!” என்று கத்த, ஆத்திரம் அடைந்த ஒருவன், சஞ்சனாவின் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என்று அறையை, கையில் இருந்த தொலைப்பேசி சிதறிப்போய் விழ, தூரப்போய் விழுந்தாள் சஞ்சனா. அதே நேரம் மற்றொருவன் கதவை அடைத்துச் சாத்தினான்.
நடந்ததை அவன் சொல்லி முடிக்க, ஆத்திரத்தோடு அவனை அடிக்கப் பாய்ந்தான் மிதுன்.
“மிதுன்! விடுங்க! அவங்களை நான் பார்த்துக்கிறேன்.” சொல்லியபடி அவனைத் தடுத்தான் சுதர்ஷன்.
“இவனைச் சும்மா விட மாட்டேன் சர். என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை அடிச்சு இருப்பான்! அதுவும் என் பொண்டாட்டியை! ரோட்டில ஒரு பொண்ணை அடிச்சாலே அவனுங்களைப் புலந்து எடுத்துடுவேன். இவனுங்களை…..” கத்தியபடி எகிறியவனைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து சமாதானம் செய்தான் சுதர்ஷன்.
“ரிலாக்ஸ் மிதுன். இப்போ போலீஸ் வந்திடுவாங்க.”
அதன்பின்பே அமைதியானான் மிதுன்.
[the_ad id=”6605″]
பின் கொலையாளிகள் பக்கம் திரும்பிய சுதர்ஷன், “இதுவரைக்கும் நீங்க செஞ்ச தப்பை ஒன்னு விடாம சொல்லுங்க. ம்ம்!” என்று மிரட்ட, அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூறினர். அவர்கள் சொன்ன அனைத்தையும் தனது கேமராவில் ரிகார்ட் செய்து கொண்டான் மிதுன்.
நரசிம்மன், நந்தாவுக்கு எதிரான சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
அந்த நேரம் வாசலில் சலசலப்புச் சத்தம் கேட்க, சுதர்ஷன் வெளியே சென்று பார்த்தான்.
பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் வாசலில் நிற்க, கீழே போலீஸ் ஜீப் வந்து நின்றது.
எல்லோரின் முகத்திலும் சந்தேகத்தின் சாயல் தெரிய, “திருடனுங்க வந்திருக்கிறதா எங்களுக்கு ஃபோன் வந்துச்சு. அதான் போலீஸ் வந்திருக்கு.” எல்லோரையும் பார்த்து பொதுவாகச் சொன்னவன், அடுத்தகட்ட வேலைகளில் தன் கவனத்தைத் திருப்பினான்.
அடுத்தச் சில மணி நேரத்தில், கொலைகாரர்கள் இருவரையும் காவல்துறை ஜீப்பில் ஏற்றிவிட்டுக் கிளம்பப் போன சுதர்ஷனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான் மிதுன்.
“அடுத்து என்ன சர் பண்ண போறீங்க?”
“பையர் ஆக்சிடென்ட்ல மாதுரியை காப்பாத்தினதில தான் இந்தக் கேஸ் ஆரம்பிச்சுது. அந்தத் தீ விபத்து யாரோட வேலைன்னு இப்போ ஓர் அளவுக்குக் கெஸ்ஸிங் இருக்கு. ஆனா இந்த எவிடென்ஸ் எல்லாம் மாதுரி எப்படிக் கண்டு பிடிச்சாங்க? அவங்க ப்ரெண்ட் கிட்ட எவிடென்ஸ் கொடுத்துட்டு போன பிறகு என்ன நடந்துச்சு? அவங்க எப்படி மனநல மருத்துவமனைக்குப் போனாங்க? தீ விபத்து நடந்த முந்தின ராத்திரி என்ன நடந்துச்சு, இதுக்கு எல்லாம் விடை கண்டுபிடிச்சா தான் இந்தக் கேஸ் முடியும். இதற்கான பதில் மாதுரியால மட்டும் தான் சொல்ல முடியும். அவங்களை இன்வெஸ்டிகேஷன் செய்றது தான் என்னோட அடுத்த வேலை!”
“சர்! உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, நாங்களும் உங்க விசாரணை அப்போ கூட இருக்கலாமா? நிச்சயமா உங்க பெர்மிஷன் இல்லாம டிவிக்கு இந்த நியுஸ் போகாது.” மிதுன் தீர்கமாகச் சொல்ல,
சில நொடி யோசனைக்குப் பிறகு சரி என்று சம்மதித்த சுதர்ஷன். இருவரையும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் சாதனா. வாசலில் நின்றிருந்தான் நந்தா. அவனைப் பார்த்து அதிர்ந்து போனவள் பயத்தில் அப்படியே பின்னே செல்ல, தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவளைச் சுட்டான். “அம்மா!” என்ற அலறலோடு தரையில் சரிந்தாள். அவள் உடலை தாண்டி வீட்டிற்குள் சென்றான்.
படுக்கை அறைக்குச் சென்றவன், பீரோவை திறந்து, துணிகளை எல்லாம் விசிறி அடித்துச் சில பல நிமிடங்கள் தேடியவன், இறுதியாகப் பீரோவின் கீழே இருந்த அந்தக் கவரை எடுத்தான். உள்ளே இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தான். அவன் முகம் பிரகாசமானது.
பின் அறையை விட்டு வெளியே வந்தவனின் காலை கப்பென்று பிடித்தாள் சாதனா. உயிர் இன்னும் இருந்தது. அவளை ஒரு உதறு உதறிய நந்தா, அவளின் நெற்றியில் சுட, உயிர் இல்லாத சடலமாகத் தொப்பென்று விழுந்தாள்.
அடுத்த நொடி, “சாதனா!!” என்ற அலறலுடன் தூக்கத்தில் இருந்து எழுந்தாள் மாதுரி. ஆனால் அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அதை உணர்ந்தவள், திரும்பிப் பார்த்தாள். சித்தார்த் அவள் அருகில் தலை சாய்த்துப் படுத்திருந்தான். கொஞ்சம் தள்ளி இருந்த கட்டிலில் ராஜேஸ்வரி படுத்திருந்தார். அதன்பின்பே தான் எங்கு இருக்கிறோம் என்பது புரிய, இதுவரை கண்டது கனவு என்று புரிந்தது.
இதுநாள் வரை, மனநல மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகள், அதன்பின்பு அங்கிருந்து தப்பிக்க முயன்ற பரபரப்பு, பின் எப்படியோ உயிர் பிழைத்து வந்தது, குரல் போனது என்று இவைகளின் தாக்கத்தில் மூழ்கி இருந்தவள், இதோ இந்த நொடி அந்தச் சுழலில் இருந்து வெளியே வந்தாள்.
தான் அனுபவித்த ரணங்கள் எல்லாம் எதனால், எதற்காக என்பது அவளது மூளையில் உரைக்க, சாதனாவிடம் கொடுத்திருந்த லெட்டர் அவளின் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் சற்று முன்பு கண்ட கனவின் தாக்கம் அவளைப் பயம்கொள்ளச் செய்தது.
கனவில் கண்ட காட்சியில் அவள் முகம் வேர்த்து வழிந்திருக்க, கை, கால் எல்லாம் நடுங்கி கொண்டிருந்தது. கனவு தான் என்றாலும், நந்தா இருக்கும்வரை தான் கண்ட காட்சிகள் நிஜத்தில் நடக்கவும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த அவள் மனம் சாதனாவைக் காப்பாற்றச் சொல்லி அவளைத் தூண்ட, அருகில் அமர்ந்திருந்த அண்ணனை உலுக்கினாள்.
“ஆஆஆ!! ஆஆஆஅ!!” உயிர் எழுத்தைத் தவிர அவள் இதழ்கள் வேறு மொழி பேசவில்லை.
[the_ad id=”6605″]
யாரோ உலுக்கவும், பதற்றத்துடன் எழுந்து அமர்ந்த சித்தார்த்துக்கு, தங்கையின் முகத்தில் தெரிந்த பீதி அவனையும் தொற்றிக் கொண்டது.
“என்னம்மா? என்ன ஆச்சு?”
“ஆஅ..அனா…..ஆஅ…அனா…” சாதனா என்ற சொல்லை உச்சரிக்க முயன்றாள்.
தங்கை சொல்வது புரியாமல் குழம்பினான் சித்தார்த்.
அதிர்ப்தியுடன் தலையில் அடித்துக் கொண்டவள், சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றினாள். பக்கத்தில் ஒரு பேப்பர் இருந்தது. அதை எடுத்தவள், சித்தார்த்திடம் திரும்பி, ‘பேனா வேண்டும்’ என்று சைகை செய்தாள். சட்டென்று புரிந்து கொண்டவன், பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தான்.
மடமடவெனக் காகிதத்தில் ஏதோ எழுதினாள். பின் அதை அண்ணனிடம் காட்டினாள்.
தங்கை எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்தான் சித்தார்த்.
சாதனாவின் தொலைபேசி எண்ணை எழுதி இருந்தவள், அவளுக்கு அழைத்துத் தன் பெயரைச் சொல்லி பார்க்க வரும்படி சொல்லச் சொல்லி எழுதி இருந்தாள்.
சாதனா என்ற பெயரை பார்த்ததுமே, நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வர, சாதனாவை அழைக்கலாமா? வேண்டாமா? என்று தயங்கினான் சித்தார்த். ஆனால் மாதுரியோ அவனைப் போட்டு உலுக்கினாள். ‘ஃபோன் போட்டு அவளை வரச் சொல்லு’ என்று மீண்டும் மீண்டும் சைகை செய்தாள்.
‘சரி’ என்று அவளிடம் தலை அசைத்தவன், ஃபோனை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தான்.
இரவு முழுவதும் வெளியே சுற்றியதில் சற்றே கண் அயர்ந்திருந்தான் சுதர்ஷன். ஃபோன் அடிக்க, அவசரமாக எழுந்தான். ஒருவேளை மிதுன் வீட்டில் ஏதோ பிரச்சனையோ என்ற எண்ணத்தில், ஃபோனை எடுத்துப் பார்க்க, சித்தார்த்தின் எண் திரையில் தோன்றியது.
அவசரமாக ஆன் செய்து பேசினான்.
“ஹலோ சர்?”
“சொல்லுங்க சித்தார்த்?”
“மாதுரி, உடனே சாதனாவை பார்க்கணும்னு சொல்றா? எனக்கு என்ன பண்ணன்னு தெரியல. அதான் உங்களுக்கு ஃபோன் போட்டேன்.” படபடவென அவன் சொல்ல,
“அவங்க எதுக்காகச் சாதனாவை கூப்பிடறாங்கன்னு எனக்குத் தெரியும் சித்தார்த். அதை எடுத்துகிட்டு நானே வரணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள அவங்களே கேட்டுட்டாங்க. கவலைப்படாதீங்க. உங்க சிஸ்டர் கேட்டா, சாதனாகிட்ட பேசிட்டேன். இதோ வராங்கன்னு சொல்லி வைங்க. ஒரு மணிநேரத்தில் நான் அங்க வந்துடறேன்.”
[the_ad id=”6605″]
“ஒகே சர்.”
சித்தார்த் பேசிவிட்டு வைக்கவும், மிதுனுக்கு அழைத்தான் சுதர்ஷன்.
“ஹலோ சர்?”
“மிதுன்!”
“சொல்லுங்க சர். நான் தான் பேசுறேன்.”
“எழுந்துட்டீங்களா?!”
“ம்ம்! இப்போதான் சர்!”
“அப்போ சீக்கிரம் ரெடியாகி ஜி.எச் வாங்க?”
“எதுக்குச் சர்? ஏதாவது பிரச்சனையா?”
“பிரச்சனை இல்லை. விசாரணை!”
“புரியல சர்!”
“மாதுரி கதையோட கடைசிப் பாகத்தைத் தெரிஞ்சிக்கனும்னா, உடனே கிளம்பி ஜி.எச் வாங்க மிதுன்!” சொல்லிவிட்டு வைத்தான் சுதர்ஷன்.
நந்தா சம்பந்தமாக, மாதுரி கண்டுபிடித்த அந்த மிகப் பெரிய விஷயம் என்ன?
அவள் எப்படி மனநல மருத்துவமனைக்குள் வந்தாள்?
அங்கு அவள் எதிர்கொண்ட ரணங்கள் என்னென்ன?
தனக்காகப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் (தீ விபத்தில்) இருந்து எப்படித் தப்பித்து, சுதர்ஷனின் கையில் சிக்கினாள்?
விடைகள்……!