அத்தியாயம் 24
ஜி.எச் மருத்துவமனை. காரை விட்டு இறங்கிய சுதர்ஷன், உடன் அழைத்து வந்திருந்த கான்ஸ்டபிள் இருவருடன், வேகமாகப் படிகளில் ஏறி மாதுரி இருந்த தளத்திற்கு வந்தான். வாசலிலியே காத்திருந்தான் சித்தார்த். “சாரி என்ன பண்றதுன்னு தெரியாம உங்களுக்கு ஃபோன் போட்டுட்டேன்.” குற்ற உனர்வுடன் கூறினான்.
“பரவால சித்தார்த்த. நீங்க செஞ்சது தான் சரி. இப்போ உங்க சிஸ்டர் என்ன பண்றாங்க?”
“சாதனா வருகைக்குத் தான் காத்திட்டு இருக்கா.”
“சரி. நான் போய்ச் சீஃப் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்.” என்றவன் கான்ஸ்டபிள் பக்கம் திரும்பி, “நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க!” என்று சொல்லிவிட்டுத் தலைமை மருத்துவரை பார்க்க அவரின் அறைக்குச் சென்றான்.
மாதுரியிடம் வாக்குமூலம் வாங்க வேண்டியை அவசியத்தையும், சூழ்நிலையையும் தலைமை மருத்துவரிடம் எடுத்துக் கூறினான் சுதர்ஷன். வெகு நேர யோசனைக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்ட தலைமை மருத்துவர், மாதுரியின் உடல்நிலையைப் பாதிக்காதவாறு விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவரிடம் தன் நன்றியை கூறிவிட்டு, மாதுரியின் உடல்நிலை பற்றியும் கேட்டான்.
“ஆபத்து அதுவும் இல்லை சர். ஸ்டேபிள் கண்டிஷன்ல தான் இருக்காங்க. இன்னும் ரெண்டு இல்லனா மூணு வாரத்தில டிஸ்ஜார்ஜ் செஞ்சிடலாம்.”
“தேங்க் யு டாக்டர்!” சொல்லிவிட்டு, மாதுரியின் அறையை நோக்கிச் சென்றான்.
சித்தார்த்துடன் அறைக்குள் சென்றவனை, “வாங்க தம்பி!” என்று வரவேற்றார் ராஜேஷ்வரி.
அவருக்குப் புன்னகையைப் பதிலாகக் கூறிவிட்டு, திரும்பி கட்டிலைப் பார்த்தான். கண்மூடி படுத்திருந்தாள் மாதுரி. தலையில் கட்டு இன்னும் பிரிக்கப்படவில்லை.
“மாதுரி!” சித்தார்த் அழைக்க, வேகவேகமாக எழுந்தாள். சுதர்ஷனுக்குத் தான் அவளின் அவசரத்தைப் பார்த்து பதறியது. ‘உடல்நிலை சரி இல்லாத இந்த நேரத்தில், ஏன் இப்படி?’ நினைத்துக்கொண்டான்.
எழுந்து அமர்ந்த மாதுரி, சுதர்ஷனின் மேல் ஒரு அந்நிய பார்வை வீசிவிட்டு, வாசலை பார்த்தவள், ‘எங்க அண்ணா, சாதனா?’ என்று சைகையில் சித்தார்த்திடம் கேட்டாள்.
“இதுக்காகத் தான அவங்களைத் தேடுறீங்க?” சித்தார்த் பதில் சொல்வதற்கு முன், பதில் கேள்வி கேட்டான் சுதர்ஷன். அவன் கையில் மாதுரி ஒளித்து வைத்திருந்த ஆதாரங்கள் அடங்கிய சிப்லாக் பேக்.
அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் முழித்தவள், சுதர்ஷனின் கையில் இருக்கும் பையைப் பறிப்பதற்காக, சட்டென்று கட்டிலில் இருந்து இறங்க, தலை சுற்றியது அவளுக்கு. தடுமாறி விழப்போனவளின் கையைத் தாங்கி பிடித்து அவளைச் சரியாக நிற்க செய்தான் சுதர்ஷன்.
அதற்குள் அவளின் அருகில் வந்துவிட்டனர் ராஜேஸ்வரியும், சித்தார்த்தும். சித்தார்த்தோ, “பப்பு! அவர் தான் உன் கேசை ஹேண்டில் பண்ற ஆஃபீசர். பேரு சுதர்ஷன். ACP.” என்று சொல்ல,
ஆனால் அண்ணன் சொன்ன எதுவும் மாதுரியின் காதில் விழவில்லை. சுதர்ஷன் கையில் இருக்கும் பையையும், அவனையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தாள்.
அவளின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட சுதர்ஷன் பேச ஆரம்பித்தான்.
“மெண்டல் ஹாஸ்ப்பிட்டல தீ விபத்து நடந்த அன்னைக்கு, இந்த ஏரியா acpன்ற முறையில சம்பவம் நடந்த இடத்துக்கு நான் வந்தேன். அந்தத் தீ விபத்துல இருபது பேர் இறந்து போய்ட்டாங்க. மீதி இருந்தவங்களை ஹாஸ்ப்பிட்டல சேர்த்துட்டு, மொத்தம் எத்தனை பேர் வார்டுல இருந்தாங்கன்னு டாக்டர்ஸ் கிட்ட விசாரிச்சப்போ மொத்தம் முப்பத்தி அஞ்சு பேர்ன்னு சொன்னாங்க. ஆனா முப்பத்திநாலு பேர் தான் அதுவரை எங்க கணக்குல வந்தாங்க. சோ யாரோ ஒருத்தர் மிஸ்ஸிங்ன்னு தேடுறப்போ தான் உங்க வார்டுக்கு பின்னாடி உங்களைப் பார்த்தேன். மயக்கதில இருந்தீங்க. மண்டையில அடி பட்டிருந்துச்சு. அப்புறம் உங்களை இங்க சேர்த்தோம். எல்லாரும் வார்டுகுள்ள இருந்தப்போ, நீங்க மட்டும் வெளிய இருந்தது எங்களுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிச்சு. அதனால உங்க அடையாளத்தை வெளிப்படுத்தாம, உங்களுக்கு ரகசியமா ட்ரீட்மெண்ட் கொடுக்கச் சொல்லிட்டு, அது சம்பந்தமான விசாரணை நடந்துட்டு இருந்தப்போவே, உங்களை யாரோ கொலை செய்ய முயற்சி செஞ்சாங்க.” சொல்லிவிட்டு மாதுரியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் முதலில் அதிர்ச்சி தோன்றினாலும், பின் ‘இதை எதிர்பார்த்தேன்’ என்ற பாவனைத் தெரிந்தது.
அதைப் பார்த்துவிட்டு, மேலும் தொடர்ந்தான் சுதர்ஷன்.
“அந்த நேரம் தான் உங்க அம்மாவும், அண்ணனும் இங்க வந்து சேர்ந்தாங்க.”
தாயையும், அண்ணனையும் திரும்பி பார்த்தாள் மாதுரி. அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ‘விஷயத்தைக் கேள்விப்பட்டு எத்தனை வேதனைப்பட்டு இருப்பார்கள்!’ மனதுக்குள் நினைத்து வருந்தினாள்.
“உங்க அண்ணா மூலமா தான் உங்க குடும்பத்தைப் பத்தியும், நீங்க ஒரு லாயர், உங்க கணவர் தான் கலக்டர் நந்தகுமார்ன்னும் தெரிய வந்துச்சு.”
‘குடும்பம்’ என்றதும் மாதுரிக்கு தந்தையின் நியாபகம் வர, அதுவரை தேங்கி இருந்த கண்ணீர், மடமடவென வழிய தொடங்கியது. சூடான அந்த உப்பு நீரை துடைக்கத் தோன்றாமல், மங்கலான பார்வையுடன் தாயைப் பார்த்தாள். அவரோ புடவை முந்தானையில் வாயை பொத்தியபடி விசும்பிக் கொண்டிருந்தார். அப்படியே அண்ணனையும் பார்த்தாள். சித்தார்த்த கண்களும் கலங்கி இருந்தது.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சில நொடிகள் இடைவெளி விட்ட சுதர்ஷன், மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்.
“உங்களைக் கொலை செய்ய முயற்சி செஞ்சது யாருன்னு தேடுற முயற்சியில தான், மிதுன், அவங்க வைஃப் சஞ்சனா இந்தக் கேஸ் குள்ள வந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ப்ரெஸ்ல வொர்க் பண்றாங்க. (usa2goquickstore.com) நாங்க உங்களுக்கு ரகசியமா ட்ரீட்மென்ட் கொடுக்கிறதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு, உங்களைப் பார்க்க வந்த இடத்தில தான், கொலைகாரனை அவங்க பார்க்க நேர்ந்துது. அப்புறம் அவன் விட்டுட்டுப் போன தடையத்தை வச்சு, உங்களைக் கொலை செய்ய முயற்சி செஞ்சவனைத் தேட ஆரம்பிச்சாங்க.”
“இந்த நேரத்தில தான், உங்க ஃப்ரெண்ட் சாதனா உங்களைப் பார்க்க வந்தாங்க. உங்க கணவர் நந்தகுமார் ஏதோ ஃபைலை கேட்டு அவங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. நீங்க லெட்டரை கொடுத்துட்டுப் போகும்போது, சொன்னது அவங்களுக்கு நியாபகம் வந்ததும் பயந்துபோய் உங்களைத் தேடி இங்க வந்தாங்க.”
இப்பொழுது மாதுரி முகத்தில் பயம் தோன்றியது. அடுத்து என்ன நடந்தது என்ற ஆவலுடன் சுதர்ஷனின் முகத்தைப் பார்த்தாள்.
“அவங்க வந்து, ஒரு கவர் நீங்க கொடுத்துட்டுப் போனதா சொல்லி, கொடுத்தாங்க. அதுக்குள்ள தான் நீங்க போலிஸ்க்கு எழுதின லெட்டர் இருந்தது. அதைப் படிச்சப் பிறகு தான் ரகசியமா மறைச்சு வச்சு இருந்த பெண்ட்றைவ் பத்தி தெரியவந்துச்சு. அதை எடுக்கப் போனேன். ஆனா எங்களுக்கு முன்னாடியே யாரோ எடுத்துட்டு போயிருந்தாங்க. ஆனா அதுக்கு அப்புறம் தான் உங்களோட ப்ளேனிங் தெரிய வந்துச்சு. கிட்சன் செல்ஃப்ல நீங்க ஒளிச்சு வச்சிருந்த ஒரிஜினல் எவிடென்ஸ் தான் இது.” சொல்லிவிட்டுக் கையில் இருந்த கவரை அவளிடம் கொடுத்தான்.
வாங்கியவள், பரபரப்புடன் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றுவிடாமால் அனைத்தும் அப்படியே இருந்தது.
“உங்க கணவரும், அவரோட ஃப்ரெண்ட் டாகடர் கௌஷிக்கும் தான் உங்க பின்னாடி நடக்கிற எல்லாச் சதிக்கும் காரணும்னு எங்களுக்கு ஒரு சந்தேகம்.”
சுதர்ஷன் இவ்வாறு சொல்ல, இருவரின் பெயரைக் கேட்டதும், மாதுரியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. கையில் இருந்த பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவாறு நடுக்கத்தைக் குறைக்க முயற்சித்தாள்.
அதற்குள் ராஜேஸ்வரி மகள் அருகில் வந்து அவளை அணைத்துக்கொள்ள, சில நொடிகள் தாயின் அரவணைப்பில், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், பின் ‘ஒன்றும் இல்லை!’ என்பது போலத் தாயிடம் சைகை செய்தாள்.
அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தனர் மிதுனும், சஞ்சனாவும்.
அவர்கள் இருவரையும் மாதுரியிடம் அறிமுகம் செய்தான் சுதர்ஷன். “இவங்க இல்லனா, உங்க கேஸ்ல நிறைய விஷயம் கண்டிபிக்க முடிஞ்சு இருக்காது. நேரடியாவும், மறைமுகமாவும் நிறைய ஹெல்ப் செஞ்சு இருக்காங்க.” புன்னகையுடம் சொன்னான்.
“என்ன சர்! போலீஸும் பத்திரிகையும் ஒன்னுகுல ஒன்னு. இதெயெல்லாம் பெருசா சொல்லிகிட்டு.” மிதுன் சொல்ல, அங்கே சின்னதாய் ஒரு சிரிப்பலை.
மிதுன், சஞ்சனா இருவரையும் நோக்கி கை கூப்பிய மாதுரி, ‘தேங்க்ஸ்’ என்று இதழ்களை அசைத்தாள்.
“ஐயோ! என்ன மேம்! எங்களுக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.” என்றவள் மாதுரியின் கையை இறக்கிவிட்டு, “ஆக்சுவலி, உங்களைத் தான் நாங்க பாராட்டனும். எப்படி எல்லாம் யோசிச்சு ப்ளேன் செஞ்சு, எவிடென்ஸ ஒளிச்சு வச்சு இருக்கீங்க. செம்ம மேம்! வக்கீல்ன்னு ப்ரூஃப் செஞ்சுட்டீங்க!” என்று சொல்ல, அவளைப் பார்த்து புன்னகைத்தாள் மாதுரி.
“உங்க எவிடென்ஸ் எல்லாத்தையும் பார்த்தோம். நிறைய விஷயம் திடிக்கிட வச்சுது. அதுல இருக்கிற சில விஷயங்களை எல்லாம் பார்த்தா, தீ விபத்து எதேர்சையா நடந்த மாதிரி தெரியல. உங்களுக்குன்னே நடத்தப்பட்ட தனிப்பட்ட சதின்னு புரியுது. கல்யாணம் ஆனவரை என்ன நடந்துச்சுன்னு உங்க அண்ணா சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் என்ன நடந்துது? இந்த ஆதாரம் எல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது? நீங்க எப்படி மெண்டல் ஹாஸ்பிட்டல் வந்தீங்க? எப்படித் தீ விபத்து நடந்துச்சு? இதுக்கான பதில் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா?” சுதர்ஷன் கேட்க,
மறுபடியும் மாதுரியின் முகத்தில் ஒருவித பயமும், பதற்றமும் வந்து ஒட்டிக் கொண்டது. அவள் பார்வையே சொன்னது, சுதர்ஷன் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என்று. நாந்தாவில் ஆரம்பித்து, கௌஷிக் வரை எத்தனையோ நம்பிக்கை துரோகிகளைப் பார்த்த அவளால், நந்தா இருக்கும் அதே அரசாங்க துறையான காவல்துறையில் இருக்கும் சுதர்ஷனை அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை.
அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவனையே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.
மாதுரியின் பார்வையின் அர்த்தத்தைச் சட்டென்று புரிந்து கொண்டான் சுதர்ஷன். “நீங்க என்னை நம்பலாம் மாதுரி. இந்தக் கேஸ்ல குற்றவாளிங்களைச் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துறது தான் என்னோட குறிக்கோள். அவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி. கலக்டரான உங்க கணவருக்கு எதிரா கேஸ் ஃபைல் பண்ணனும்னா, ஸ்ட்ராங்கான ஒரு சாட்சி வேணும். அவ்வளவு ஈசியா கலக்டரை கோர்ட்டுக்கு முன்னாடி நிறுத்த முடியாது. இந்தக் கேசை பொறுத்தவரை விக்டமான உங்க வாக்குமூலம் ரொம்பவே முக்கியம். ஒரு வக்கீலா இது உங்களுக்கு நல்லாவே தெரியும் மாதுரி.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
சில நொடிகள் அப்படியே இருந்தவள், பின் ‘சொல்கிறேன்’ என்பது போலத் தலை அசைத்தாள்.
உடனே வெளியே காத்திருந்த கான்ஸ்டபிள் இருவரையும் உள்ளே அழைத்தான் சுதர்ஷன். ஒருவர் கையில் கேமரா வைத்திருக்க, இன்னொருவர் கையில் எழுதும் பேடும், பேனாவும் இருந்தது.
அவரிடம் இருந்து பேடையும் பேனாவையும் வாங்கி மாதுரியிடம் கொடுத்தான்.
இரண்டையும் வாங்கிய மாதுரி, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுத ஆரம்பித்தாள்.
கான்ஸ்டபிள் கையில் இருந்த கேமரா, அவளையும் அவள் கையில் இருந்த பேடையும் தனக்குள் பதியத் தொடங்கியது.
திருமணத்திற்குப் பின் நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாக எழுதியவள், நந்தாவுடனான சண்டையில் இருந்து முழுவதும் எழுத ஆரம்பித்தாள்.
அவளின் எழுத்துக்கள் மூலம் அறையில் இருந்த அனைவரும், மாதுரியின் கதைக்குள் பயணிக்க, நாமும் கதைக்குள் பயணமாவோம்!
x—————————————-x
அன்று ஹோட்டலில் நந்தாவை ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து அவனிடம் சண்டைப் போட்ட மாதுரியிடம், அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு நந்தா போனாலும், மாதுரிக்கு அவனின் மேல் நம்பிக்கை வரவில்லை.
அடுத்த நாளே, நந்தாவின் நெருங்கிய நட்பு வட்டத்திலும், அலுவக வட்டத்திலும் விசாரித்துப் பார்த்தாள். ஆனால் எந்த உபயோகமான விவரமும் அவளுக்குக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் அன்று தந்தையின் இறுதி சடங்கில் பார்த்தவனை இரண்டாவது முறையாக ஒரு கடையில் வைத்துப் பார்த்தாள். இம்முறை அவனை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள், கவனமாக அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
கடையில் பொருள் வாங்கிவிட்டு ஏதோ தெருவுக்குள் சென்றவன், அத்தெருவில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
அவன் பின்னாலையே போன மாதுரி, அவன் வீட்டிற்குள் சென்று மறைந்ததும், அவன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்.
சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. அவன் நின்றிருந்தான். மாதுரியை பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு நொடி அதிர்ச்சி வந்து போனது. பின் சமாளித்துக்கொண்டு, “யார் வேணும் உங்களுக்கு?!” என்றான் ஒன்றும் தெரியாதது போல.
“என்னை உங்களுக்குத் தெரியாதா? இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்குறீங்களா?!” பட்டென்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் இருக்க, “உங்களுக்கும் அப்பாக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க கடைக்கு வந்துட்டு போனதை cctvல பார்த்தேன்.”
சில நொடிகளுக்குப் பிறகு, “உள்ள வாங்க மேம்!” என்றவன், வழிவிட்டு நகர, வீட்டிற்குள் சென்றாள்.
வீட்டை சுற்றி பார்வையைச் செலுத்தினாள். சிறியை வீடு. வீட்டில் அவன் மட்டும் தான் வசிக்கிறான் போல. வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
மாதுரியின் பார்வையைப் பார்த்துவிட்டு, “நான் மட்டும் தான் மேம். பேமலின்னு யாரும் கிடையாது.” என்றான்.
அவனைத் திரும்பி பார்த்தாள். “அப்பாக்கும் உங்களுக்கும்….? அன்னைக்கு உங்களை இறுதி சடங்கிலப் பார்த்தேன்.” சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள். வெகு நேரம் கழித்தே பதில் சொன்னான்.
“என் பேரு குரு. நான் ஒரு அநாதை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டப்போ தான் ஒருத்தர் மூலமா, உங்க அப்பாகிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் எல்லாச் செலவும் அவரே பார்த்துக்கிட்டார். அவரால வளர்ந்த நான் அவருக்கே வேலை செய்ய ஆரம்பிச்சேன். சாருக்கு யாராவது பிரச்சனை பண்ணா அவங்களைத் தட்டுறது தான் என்னோட வேலை. எங்களைப் பத்தி சாரை தவிர யாருக்கும் தெரியாது. வேலைனா மட்டும் தான் வெளிய வருவோம். கிட்டத்தட்ட ஷேடோ மாதிரி. அப்போ தான் ஒரு நாள் உங்களை யாரோ வெட்டிட்டு போனாங்க. சாருக்கு விஷயம் தெரிஞ்சு ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க. யார் உங்களை வெட்டுனதுன்னு தீவிரமா விசாரிச்சோம். அப்போ எம்.எல்.ஏவா இருந்த நரசிம்மன் தான், அதுக்குக் காரணம்ன்னு தெரிஞ்சுது. உடனே சர் அவனைக் கடத்திட்டு வர சொல்லி எங்ககிட்ட சொன்னார். நாங்களும் சரியா ப்ளேன் போட்டு அவனைக் கடத்தி குடோனுக்குத் தூக்கிட்டு வந்தோம். சர் வந்து பார்த்துட்டு, சாப்பாடு எதுவும் கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டார். ஒரு வாரம் கழிச்சு அந்த நரசிம்மனை கொல்ல வந்தவரு, அவனை ஒன்னும் செய்யாம மிரட்டி அனுப்பிட்டாரு. நாங்க எவ்வளவோ சொன்னோம், அரசியல்வாதி எல்லாம் நல்ல பாம்பு மாதிரி, சீன்டினவங்களைக் கொத்தாம விடாதுன்னு. சர் கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டார். அதுக்கு அப்புறம் எலெக்க்ஷன்ல ஜெயச்சு அவன் மந்திரி ஆகிட்டான். அப்போவும் எங்களுக்குப் பயம், அவன் சாரை ஏதாவது செஞ்சிடுவானோன்னு. அதே மாதிரி நடந்திடுச்சு…..” முடித்தவனின் குரல் கமறியது. கலங்கிய கண்களை அந்தப்பக்கம் திருப்பித் துடைத்துக் கொண்டான்.
தந்தையின் நினைவில் மாதுரிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள். அதே நேரம் அவனின் விசுவாசத்தைப் பார்த்து மனம் பூரித்தது. ‘அப்பா! இவ்வளவு நல்லவங்களைச் சம்பாதிச்சு இருக்காரே!’ என்று நினைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவ, பின் பேச ஆரம்பித்தான் அவன்.
“அவர் கடைசி நேரத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான் நாங்க எல்லாம் அவங்வங்க வேலையைப் பார்த்துட்டு இருக்கோம். ஆனா நீங்க எப்படி இங்க…?” அவன் சொல்லாமல் பாதியில் நிறுத்த,
“அப்பா கொலை சம்பந்தமா விசாரிச்சிட்டு இருந்தப்போ தான், உங்களை இறுதி சடங்குல பார்த்த நியாபகம் வந்துச்சு. உங்களைப் பத்தி விசாரிச்சேன். நீங்க கடைக்கு வந்துட்டுப் போனது தெரிய வந்துச்சு. உங்க போட்டோவை வச்சுக்கிட்டு தேடிட்டு இருந்தேன். அப்போ தான் ஒரு நாள் உங்களைச் சிக்னல்ல வச்சுப் பார்த்தேன். ஹோட்டல் ஹாட் சூப்புக்கு நீங்க போகப் போறதா சொல்லிட்டு இருந்தீங்க. உங்களை ஃபாலோவ் செஞ்சு வந்தேன். ஆனா நீங்க வரல.” சொல்லிவிட்டு நிறுத்தியவளுக்கு அன்று கணவனை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்ததும், அதைத் தொடர்ந்து நடந்த சண்டையும் நினைவுக்கு வந்தது.
பின் தன்னைச் சமாளித்துக் கொண்டவள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“அதுக்கு அப்புறம் இன்னைக்கு உங்களை மெயின் ரோட்டில இருந்த கடையில வச்சுப் பார்த்தேன். அப்படியே உங்களை ஃபாலோவ் செஞ்சு வந்துட்டேன்.” சொல்லி முடித்தாள்.
“இதுல தேடுறதுக்கு ஒண்ணுமில்லை மேம். அந்த நரசிம்மன் தான் இந்த வேலையைச் செஞ்சுருப்பான். நீங்க மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்க மேம்! அவனைத் துண்டு துண்டா வெட்டி புதைச்சிடுறோம்.” ஆக்ரோஷமாகச் சொன்னான்.
“வேண்டாம் குரு. யாருக்கும் தெரியாம அவனைக் கொல்றதை விட, சட்டத்துக்கு முன்னாடி அவனை நிறுத்தி அவன் முகத்திரையை உரிச்சா தான் சரியா இருக்கும்.” உறுதியாகச் சொன்னாள்.
அதிர்ப்தியை காட்டியது குருவின் முகம். ‘அவனை எல்லாம் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தினா தண்டனை கிடைச்சுடுமா?’ என்ற ஆற்றாமை. இருந்தாலும் அமைதியாக இருந்தான்.
“உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க மேம்! நான் ரெடியா இருப்பேன்.” அவன் கூற,
“தேங்க்ஸ்!” என்றாள் மாதுரி. அவள் கிளம்பும் நேரம் “மேம்!” என்று அழைத்தான். திரும்பி பார்த்தாள். “உங்க….உங்க ஹஸ்பண்ட், நரசிம்மன் வீட்டுக்கு அடிக்கடி போறதா எனக்கு இன்ஃபர்மேஷன் வந்துச்சு. நீங்க கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க மேம்!” தயங்கி தயங்கி சொன்னான்.
மாதுரி எதுவும் பதில் சொல்லவில்லை. அவளுக்கும் ஓர் அளவுக்குத் தெரிந்து இருந்தது. “ம்ம்!” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
போகும் மாதுரியையே பார்த்தப்படி நின்றிருந்தான் குரு. இனம் புரியாத சஞ்சலம் அவன் மனதை வாட்டியது.
இந்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.