அத்தியாயம் 25
நரசிம்மனின் வீடு. எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் நரசிம்மனும் நந்தாவும். மிகுந்த கோபத்தில் இருந்தார் நரசிம்மன்.
“என்னையே மிரட்டுறான் அந்தப் பரதேசி பய!” கோபத்தில் கர்ஜித்தார்.
“என்ன ஆச்சு மாமா?!”
“எல்லாம் அந்தச் சி.எம் நாயால தான்.” பதில் சொன்னவர் அன்று காலை நடந்ததைக் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை.
முதலமைச்சர் அழைத்ததின் பெயரில் அவரின் எதிரில் அமர்ந்திருந்தார் நரசிம்மன்.
“என்னையா? எனக்குத் தெரியாமே என்னனமோ காரியம் செய்றியாமே? தகவல் வந்துச்சு!” நக்கல் அவரின் குரலில்.
ஒரு நொடி திக்கென்று இருக்க, வேர்த முகத்தைத் துடைத்துக் கொண்டார் நரசிம்மன்.
“என்…என்ன ஐயா சொல்றீங்க?”
“யோவ்! தெரியாத மாதிரி நடிக்காதையா! நேத்து ஏதோ சரக்கு லாரி உன்னோட குடோனுக்குப் போச்சாமே?! ம்ம்!” கோபம் எட்டிப் பார்த்தது அவரின் குரலில்.
விஷயம் தெரிந்துவிட்டது என்பது நரசிம்மனுக்குப் புரிந்துபோனது. இருந்தும் சமாளித்தார்.
“அது…அது அரிசி மூட்டை லாரி ஐயா! உங்களுக்குத் தான் தெரியுமே, நம்மளுக்கு அரிசி மண்டி பிசினெஸ் இருக்கிறது…” பல்லை காட்டினர்.
“அரசி மண்டி இருக்கிறது நல்லாவே தெரியும்யா. ஆனா மண்டில அரிசிக்குப் பதிலா பணமூட்டையை ஸ்டாக் வைக்கிறதை இப்போ தான் பார்க்கிறேன்.”
“ஐயா?!!!” தந்தி அடித்தது நரசிம்மனின் பற்கள்.
“ஒரு படத்தில, கௌண்டமணி வச்சிருக்கிற இளநி கடையில இருந்து திருடி, செந்திலும், வடிவேலுவும் இளநி கடை வைப்பாங்களே! அந்த ஸீன் பார்த்து இருக்கியா நரசிம்மா?” அழுத்தமாகக் கேட்டார்.
“ஐயா!! என்னமோ திருடனை கூப்பிட்டு வச்சு விசாரிக்கிற மாதிரி விசாரிக்குறீங்க. இது சரி இல்லை சொல்லிட்டேன். மினிஸ்டரா நான் செஞ்சு கொடுக்கிற வேலைக்குத் தான் கூலி வாங்குறேன். உங்க மடியில கை வைக்கல.”
நரசிம்மன் சொல்லி முடிக்கவில்லை, அமர்ந்திருந்த சேரை தள்ளிக்கொண்டு விருட்டென்று எழுந்த முதல்வர், டேபிளிலில் இருந்த பேனா ஸ்டேன்டை எடுத்து நரசிம்மனுக்கு வெகு அருகில் விசிறி அடித்தார். அந்த மர ஸ்டேன்ட் சுவற்றில் பட்டு, சுக்குநூறாக உடைய, உள்ளே இருந்த பேனாக்கள் எல்லாம் அந்த அறையின் நாலாபுறமும் சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்தார் முதல்வரின் பி.ஏ.
“ஐயா!!” நடுக்கத்துடன் அவர் கேட்க, ‘வெளிய போ!’ என்பது போலச் சைகை செய்தார் முதல்வர். ஒரே ஓட்டமாக வெளியே வந்துவிட்டார்.
[the_ad id=”6605″]
பி.ஏ சென்றதை பார்த்துவிட்டு நரசிம்மனின் பக்கம் திரும்பிய முதல்வர், “ரூல்ஸ் பேசுறது ம**** பு**** எல்லாம் என்கிட்டே வேண்டாம். கட்சியில உனக்குன்னு தனி ட்ரேக் அமைச்ச மாதிரி, இங்கயும் உன் வேலையைக் காட்டினன்னு வச்சுக்கோ, கட்சியில மட்டுமில்லை, இந்த உலகத்தில இருந்தும், உன்னை உருத்தெரியாம அழிச்சிடுவேன்! கட்சிக்கும், ஆட்சிக்கும் கட்டுப்பட்டு இருக்கிறதா இருந்தா இரு. இல்லனா ராஜினாமா செஞ்சுட்டு போயிட்டே இரு. மாரிமுத்துக்கு மினிஸ்டர் போஸ்டிங் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.” என்று அவரின் முகத்துக்கு நேராகக் கர்ஜித்தார்.
நரசிம்மனுக்கு ஈர குலையே நடுங்கி போனது. முதல்வரின் இந்த ரூபம் அவருக்குப் புதிது. இதுநாள் வரை இந்த அளவுக்குக் கோபத்தோடு அவரிடம் முதல்வர் பேசியதில்லை. சின்னச் சின்ன மரியாதை இல்லாத சொற்கள் அவர் வாயில் இருந்து வரும். ஆனால் இன்று? எச்சிலை விழுங்கி கொண்டார்.
கோபத்துடன் இருக்கையில் அமர்ந்த முதல்வர், “நாளைக்கு அந்த லாரி, கட்சி ஆஃபீசுக்கு வந்து சேரனும். இல்ல…….நடக்கிறதே வேற!” கடுமையாக எச்சரித்தார்.
நரசிம்மனின் தலை தானாக ‘சரி’ என ஆடியது. ஒன்றும் சொல்லாமல், உடல்நடுங்க அறையை விட்டு வெளியே வந்தார்.
இதோ இப்பொழுதும் முதல்வரின் வார்த்தைகளை நினைத்தவருக்கு, கோபம் தலைக்கேற, கையில் இருந்த க்ளாசை விசிறி அடித்தார்.
முதல்வரை கன்னாபின்னாவெனத் திட்டியவர், “எனக்கே ஆர்டர் போடுறான் பரதேசி பய! உருத்தெரியாம அழிச்சிடுவானாம், சொல்றான் ****** பய! அவனை உயிரோட விட்டா தானே!” கர்ஜித்தார்.
“மாமா!!” அதிர்ந்து போனான் நந்தா. ஏற்கனவே அவர்கள் இருவரும் போட்டு வைத்திருந்த திட்டம் தான் என்றாலும், அந்த நேரம் கொஞ்சம் திடிக்கிட வைத்தது.
“இல்ல மாப்பிள்ளை! நான் முடிவு செஞ்சுட்டேன்! இனி அவனை உயிரோட விடுறதா இல்லை.”
“உங்க கோபம் புரியுது மாமா! சரியான சந்தர்ப்பம் பார்த்து செய்ங்க. மாட்டிக்கக் கூடாது.”
“அதெல்லாம் மாட்ட மாட்டோம் மாப்பிளை. மதியமே ப்ளேன் போட்டு வச்சாச்சு. நாளைக்கு அவனைப் பரலோகம் அனுப்பப் போறேன்.”
“நாளைக்கா?!” அப்பட்டமான அதிர்ச்சி நந்தாவின் முகத்தில்.
“ஆமாம்!” என்றவர், தன் திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
நரசிம்மன் சொல்ல சொல்ல நந்தாவின் வயிற்றில் புளியை கரைத்தது.
அந்த நேரம், நரசிம்மன் ஏற்கனவே அழைதிருந்ததின் காரணமாக அங்கு வந்தான் கௌஷிக்.
“வா கௌஷிக்! நான் கேட்ட மாத்திரை கொண்டு வந்துட்டியா?” நந்தா ஆர்வமாகக் கேட்க, “கொண்டு வந்துட்டேன் சர்.” பதில் சொன்னவன், அவனிடம் சில மாத்திரை பட்டைகளைக் கொடுத்தான்.
“இங்க எங்கயும் கிடைக்கல சர். வெளிநாட்டு கள்ள மார்கெட்ல இருந்து வாங்கி இருக்கு.”
“நாம நினைச்ச ரிசல்ட் கிடைக்குமா?”
“பக்கா சர! வீரியம் அதிகம் இருக்கிற மாத்திரை. சீக்கிரமே ரிசல்ட் தெரியும்.”
“இதை எப்படிக் கொடுக்கணும்.”
“டெய்லி நைட் பால்ல கலந்து கொடுதுங்க சர். டேஸ்ட் வித்தியாசமே தெரியாது. ஒரு மாசத்துக்குள்ள மெதுவா ரிசல்ட் தெரிய ஆரம்பிக்கும். முதல்ல டிப்ரஷன் மாதிரி ஸ்டார்ட் ஆகும். எதுக்கெடுத்தாலும் கோபம் வரும், எரிச்சல் வரும். வீனா சண்டை போடுவாங்க. போகப் போகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவாங்க, தனியா பேசுவாங்க…இப்படி அவங்களோட மெண்டல் ஸ்டெபிலிட்டியை பாதிக்க ஆரம்பிக்கும். ஒரிஜினல் பைத்தியம் மாதிரி எல்லாம் ஆக மாட்டாங்க. ஆனா நடந்துக்கிற விதம் அவங்களை மாதிரி இருக்கும். நாம ஈசியா அவங்களைப் பைத்தியம்ன்னு முத்திரை குத்திடலாம்.” விளக்கமாகச் சொன்னான் கௌஷிக்.
“எப்போ இருந்து இதைக் கொடுக்க ஆரம்பிக்கப் போறீங்க மாப்பிள்ளை?”
“இன்னையில இருந்தே மாமா! மாதுரி செய்றது எதுவும் எனக்குச் சரியாப்படல. அப்பாவை கொன்னவங்க யாருன்னு கண்டுபிடிக்கிறேன்ன்னு ஏதேதோ செஞ்சுட்டு இருக்கா! அது நமக்கு ஆபத்து. அதான் அவளை எவ்வளவு சீக்கிரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது.” மாத்திரையைக் கையில் வைத்துக்கொண்டு தீவிரமாகச் சொன்னான் நந்தா.
“புத்திசாலி மாப்பிளை!” பாராட்டினார் நரசிம்மன்.
பின் சில நிமிடங்கள் கழித்து, “சரி மாமா நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு கீழே வந்தவனை எதிர்கொண்டாள் ஐஸ்வர்யா. எங்கையோ வெளியே போய்விட்டு வந்து கொண்டிருந்தாள். தோட்டத்தில் வைத்து நந்தாவை பார்த்ததும், அவனை நிறுத்தி கேள்வி கேட்டாள்.
“என்ன நீங்க? இப்போ எல்லாம் அடிக்கடி அப்பாவை பார்க்க வரீங்க? ஆனா என்னைப் பார்க்காம சீக்கிரம் கிளம்புறீங்க?” குற்றப்பத்திரிகை வாசித்தாள்.
“அது ஒன்னும் இல்ல ஐஷு! வொர்க் லோட் அதிகம் ஆகிடுச்சு. அடிக்கடி ஏதாவது வொர்க் வந்துட்டே இருக்கு.” பதில் சொன்னவன், “சரி நான் கிளம்புறேன்!” என்றுவிட்டு விறுவிறுவென வாசலை நோக்கிச் செல்ல, போகும் அவனை வெறித்தபடி நின்றிருந்தாள் ஐஸ்வர்யா.
[the_ad id=”6605″]
நரசிம்மனிடம் சொல்லியபடி அன்று இரவே, மாதுரிக்குத் தெரியாமல் வழக்கமாக அவள் குடிக்கும் பாலில் மாத்திரையைக் கலந்துவிட்டான் நந்தா. அது தெரியாமல் பாலை குடித்துவிட்டாள் மாதுரி. அன்றில் இருந்து தினமும் பாலில் இருந்த மாத்திரை அவளுக்கே தெரியாமல் அவள் உடலுக்குள் கலக்க ஆரம்பித்தது.
“முதல்வர் வாழ்க! தங்கத் தலைவன் வாழ்க! தர்ம பிரபு கர்ணன் வாழ்க!” கரகோஷம் விண்ணைப் பிளக்க, அனைவருக்கும் புன்னகையைப் பதிலாக அளித்தப்படி, தொண்டர்கள் போடும் மாலையை வாங்கிக் கொண்டார் தமிழக முதல்வர்.
அந்தப் பிரபல தனியார் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததின் பேரில் வருகை தந்திருந்தார் அவர்.
மற்ற முக்கிய விருந்தினர் அனைவரும் ஏற்கனவே வந்திருக்க, இறுதியாக வந்த அவரை, வரவேற்றார் பல்கலைகழக நிறுவனர். “வெல்கம் சர்!” பூங்கொத்தை நீட்டியபடி, நிறுவனர் பணிவுடன் சொல்ல, அதை வாங்கித் தன் பி.ஏவிடம் கொடுத்துவிட்டு, அவருடன் அரங்கிற்குள் சென்றார்.
பல்கலைகழகம் ஆரம்பித்து ஐம்பது வருடம் ஆவதால், மாநில முதல்வர், நகரக் கலக்டர், போலீஸ் கமிஷனர், என முக்கியப் புள்ளிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்க, அனைவரும் வருகை தந்திருந்தனர். விதவிதமான பூக்களால அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிரமாண்ட மேடையில் போடப்பட்டிருந்த வெல்வெட் குஷன் இருக்கையில், கல்வியிலாளர்கள், பல்கலைகழக ட்ரஸ்ட் ஆட்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என வரிசையாக அமர்ந்திருக்க, கலக்டர் என்ற முறையில், மேடையில் அமர்ந்திருந்தான் நந்தா. முதல்வரின் இருக்கைக்கு வலப்பக்கம் காவல்துறை டிஐஜியும் இடப்பக்கம் நந்தாவும் அமரவைக்கப்பட்டிருந்தனர். மேடைக்குக் கீழே விதவிதமான அங்கிங்கள் அணிந்த மாணவர்கள், அந்த மிகபெரிய அரங்கை மனித தலைகளாக நிரப்பி இருந்தனர்.
நந்தாவின் கைகள் அவ்வபோது பாக்கெட்டை தொட்டுப்பார்க்க, அவன் விழிகளோ சுற்றும் முற்றும் சுழன்று கொண்டிருந்தது. அவன் முகம் முழுவதும் பயம் அப்பிக்கிடந்தது. கைகால் எல்லாம் உதறல் எடுக்க, அடிக்கடி கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
அந்த நேரம் முதல்வர் வரும் சத்தம் கேட்டது. அனைவரும் எழ, அவனும் எழுந்து நின்றான்.
மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தப்படி சென்று தன் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர்.
சில நிமிடங்களில் நிகழ்ச்சி ஆரம்பமானது. வரவேற்புரை, கல்லூரி பற்றிய வரலாறு, என மேடை பேச்சுக்கள் முடிந்து, பட்டமளிப்பு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களாக வந்து முதல்வரிடம் பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கிச் சென்றனர். விழா முடிய வெகு நேரம் ஆனது. அதன்பின் முடிவுரை வாசிக்கப்பட, இறுதியில் தன் உரையை முடித்துக்கொண்டு கிளம்பிய முதல்வரை, திடீரென்று ஒரு மாணவர் படை முற்றுகையிட்டது.
ஒரு வாரத்திற்கு முன்பு ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவர்கள் சிலர் மர்மமான முறையில் இறந்திருந்ததால், அது தொடர்பாகப் பல்கலைகழக நிர்வாகத்தின் பேரில் முதல்வரிடம் புகார் அளிக்க வந்திருந்தது அம்மாணவர் படை.
“சர்! செத்துப்போன பசங்களைப் பத்தி கேள்வி கேட்டா, அட்மின் சைட்ல இருந்து சரியா பதில் சொல்ல மாட்டேங்குறாங்க!”
“சர்! இந்த இறப்புல எங்களுக்குச் சந்தேகம் இருக்கு. நீங்கத்தான் விசாரிச்சு, சரியான நடவடிக்கை எடுக்கணும்.”
மாணவர்கள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டு இருக்க, “நிச்சயம் உங்க புகாரை நான் என்னனு பார்க்கிறேன். ஒன்னும் கவலைப்படாதீங்க…..” அவர்களைச் சமாதனம் செய்தார் முதல்வர். காவல்துறை ஆட்கள் அவரின் பாதுகாப்புக்கு அவரைச் சுற்றி நின்று கொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட நந்தா, அலுவகத்தில் இருந்து ஃபோன் அழைப்பு வந்திருப்பதாகக் காட்டிக்கொண்டு கூட்டத்தில் இருந்து நழுவியவன், யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றிலும் பார்வையைச் சுழற்றிக்கொண்டே முதல்வரின் கார் இருக்கும் இடத்திற்கு வந்தான். நல்லவேளை கார் டிரைவரை காணவில்லை. தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு மொபைலை எடுத்தான். பார்ப்பதற்கு விலை உயர்ந்த மொபைல் போலக் காட்சி அளித்தது. மெதுவாகக் கார் கதவை திறந்தான்.
அப்பொழுது, “எனன் சர்?!” என்று சத்தம் கேட்க, தூக்கிவாரிப்போட திரும்பினான். முதல்வரின் கார் டிரைவர் நின்றிருந்தார். அவனைப் பார்த்ததும் இதயத்துடிப்பு ஏடாகூடமாக எகுற, என்ன சொல்வது என்று தெரியாமல் தந்தி அடித்தது அவனது உதடுகள்.
“போ….போனை ஐயா…மே…மேடையில மறந்து வச்சுட்டு வந்துட்டார்.” ஒருவழியாகச் சொல்லி முடித்தான்.
“ஓஹ்! உள்ள வச்சுடுங்க சர்.” டிரைவர் பதில் சொல்லிவிட்டு நகர, சட்டென்று குனிந்து கார் சீட்டின் முன் இருக்கும் பையில் ஃபோனை போட்டுவிட்டு மடமடவென அங்கிருந்து நகர்ந்தான் நந்தா. கைகால் எல்லாம் உதறல் எடுத்தது. சற்று நேரம் நின்று தன்னைச் சமன் செய்து கொண்டவன் ஒன்றும் தெரியாதது போலக் கூட்டத்தின் பின்னால் வந்து நின்று கொண்டான்.
“நிச்சயமா உங்க கோரிக்கையை என்னன்னு பார்க்கிறேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. அவசரமா கிளம்பனும்.” என்று சொல்லிவிட்டுக் காவல்துறை உதவியுடன் மாணவர்களின் பிடியில் இருந்து நகர்ந்து வந்தார் முதல்வர்.
“என்ன ப்ரொடெக்க்ஷன் கொடுத்து இருக்கீங்க? வந்தவன்ல எவனாது பாம்ப் வச்சிருந்தா, என்ன செஞ்சுருப்பீங்க?” தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த டிஐஜியிடம் கர்ஜித்தார்.
[the_ad id=”6605″]
“எல்லாப் பசங்களையும் செக் செஞ்சுட்டு தான் உள்ள விட்டோம் சர்.”
“மன்னாங்ககட்டி!” அடிக்குரலில் கத்தியவர், “அது என்ன பிரச்சனைன்னு பாருங்க. இனி அது என் காதுக்கு வரக்கூடாது.” கட்டளையாகச் சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சென்று காருக்குள் அமர, முன்பக்கம் இரண்டு காவல் வாகனம், பின்பக்கம் இரண்டு காவல் வாகனம், அவர்களைத் தொடர்ந்து போலீஸ் ஜீப் எனப் பந்தோபஸ்துடன், கூட்டத்தின் நடுவில் ஊர்ந்து, மெயின் ரோட்டில் ஏறி ஜெட் வேகம் எடுத்தது முதல்வரின் கார்.
முதல்வரின் கார் சென்றதை பார்த்ததும், தன் மொபைலை எடுத்து நரசிம்மனுக்கு ஃபோன் போட்டான் நந்தா.
“முடிச்சிட்டேன் மாமா!”
“உங்களை யாரும் பார்த்திடலையே?!”
“ஃபோனை காருக்குள்ள வைக்கும்போது, டிரைவர் பார்த்து கேட்டான்.”
“ஐயோ! அப்புறம்?”
“சர் ஃபோனை மறந்து வச்சுட்டாருன்னு ஒரு பொய்யை சொன்னேன். நம்பிட்டான்.”
“வேற எதுவும் கேக்கலையே?”
“இல்லை. நீங்க வேகமா அடுத்த வேலையைப் பாருங்க. யாரோ வர்றாங்க.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.
அந்தப்பக்கம் நரசிம்மன், அடுத்து உடனே யாருக்கோ ஃபோன் போட்டார்.
“சரிங்க ஐயா. இனி நான் பார்த்துக்கிறேன்.”
“ம்ம்! சீக்கிரம் காரியத்தை முடி. தெரிஞ்சிட போகுது.”
“நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். காரியம் முடிஞ்சதும் உங்களுக்கே செய்தி வரும்.” சொல்லிவிட்டு அந்தப்பக்கம் ஃபோன் வைக்கப்பட்டது.