கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, காவல்துறையைக் கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார் முதல்வர். “என்ன ******** ப்ரொடெக்க்ஷன் கொடுக்கிறாணுங்க இந்தப் போலீஸ்காரனுங்க! தண்டத்துக்கு இருக்கானுங்க. ஒரு நிமிஷம் குலை நடுங்கி போச்சு……”
காரை அமைதியாக ஓட்டிக் கொண்டிருந்தான் டிரைவர். முதல்வர் அமைதியாகும் வரை காத்திருந்தான். சிறிது தூரம் சென்றதும் முதல்வர் அமைதியாகிட, அந்த விஷயத்தைச் சொன்னான் டிரைவர்.
“ஐயா! உங்க ஃபோனை விட்டுட்டு வந்துடீங்கன்னு கலக்டர் சர் உங்க ஃபோனை கொண்டு வந்து கொடுத்தாருங்க ஐயா! அந்தப் பைக்குள்ள இருக்குங்க ஐயா!” டிரைவர் சொல்ல,
“போனா?!” முழித்த முதல்வர், உடனே தன் சட்டைப்பையில் கைவிட்டு பார்த்தார். அவர் ஃபோன் அவரிடம் தான் இருந்தது.
“என் ஃபோன் என்கிட்டே தானே இருக்கு? பிறவு எப்படி?” சந்தேகத்துடன் சீட்டின் முன் இருந்த பைக்குள் கையைவிட்டு ஃபோனை வெளியே எடுத்தார். அச்சு அசல் அவரிடம் இருக்கும் அதே மாடல்.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபோன் அடித்தது. எடுத்துப் பேசினார். அந்தப்பக்கம் ரெக்கார்டர்ட் குரல் கேட்டது.
“என்னய்யா உருத்தெரியாம அழிப்பேன்னு சொன்ன, இப்போ நீ தாண்டா அழியப்போற!” கர்ஜனையான குரல்.
கேட்டதும் அது நரசிம்மனின் குரல் என்று புரிய, இந்த ஃபோனில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவர், “டேய்! வண்டிய நிறுத்து டா!” என்ற அலறலுடன் ஃபோனை தூக்கிப்போட போன நேரம், பயங்கரச் சத்தத்துடன், அவரின் கார் வெடித்துச் சிதறியது.
வெடித்துச் சிதறிய காரில் இருந்து கிளம்பிய தீ பிழம்பின் ஆக்ரோஷத்தில், முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு சென்று கொண்டிருந்த கார்கள், சூறாவளியில் சிக்கிய பொருள் போல, அசுர வேகத்தில் விசிறி அடிக்கப்பட்டது.
கண்ணிமைக்கும் நொடிக்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
“சற்று முன்பு கிடைத்த செய்தி! தமிழக முதல்வர் பயணம் செய்த கார், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உடல்கருகி உயிர் இழந்தார். உடன் பயணித்த ஓட்டுனரும் பலி எனத் தகல்வல்கள் தெரிவிக்கிறது.” தொலைக்காட்சி திரையில் அவசர செய்தி ஓட, தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நரசிம்மனின் முகத்தில் புன்னகை பெரிதானது.
ஒரு பக்கம் வெடிவிபத்து சம்பந்தமான விசாரணை நடைப்பெற, மறுப்பக்கம் முதல்வராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் நரசிம்மன்.
அங்கே நரசிம்மனின் வாழ்வில் அப்படி ஒரு மாற்றம் என்றால், இங்கே மாதுரியின் வாழ்கையில் வேறு விதமான மாற்றங்கள். ‘நானா இப்படி?!’ என்று அவளே ஆச்சரியப்படும் ஆளவுக்கு அவளின் நடத்தை தலைகீழாக மாறி இருந்தது.
எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல். எப்பொழுதும் வல்லென்று விழுவது. ஒரு நேரம் இப்படி என்றால், ஒரு நேரம் தந்தையின் நினைவில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடிக்கடி வந்து போனது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக ஆரம்பித்தாள்.
ஒருமுறை அப்படித்தான், வழக்குச் சம்பந்தமாகக் கோர்டில் வாதம் செய்து கொண்டிருந்தவள், எதிர் கட்சி வக்கீல் அடிக்கடி அவளை இடைமறிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் டேபிள் மீதிருந்த கேஸ் கட்டை எடுத்து அவரின் முகத்தில் விசிறி அடித்தாள். கோர்டே அதிர்ந்து போக, நீதிபதியோ அவளைக் கண்டித்துவிட்டு அறையை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்.
மற்றொரு முறை சொத்துக்களை விற்பது சம்பந்தமாக நந்தாவிடம் கலந்தாலோசிக்க மாதுரியின் வீட்டிற்கு வந்தான் சித்தார்த். அன்றும் அப்படித்தான் மாதுரி சித்தார்த் பேச்சு எங்கையோ ஆரம்பித்து எங்கையோ வந்துவிட, பாத்திரங்களை விசிறி அடித்தவள், சித்தார்த் பணத்திற்கு ஆசைப்படுவதாக வார்த்தையை விட்டாள் மாதுரி. அடிப்பட்ட வலியுடன், அமைதியாக எழுந்து சென்றுவிட்டான் சித்தார்த்.
அதன்பின்பும் அவள் நடவடிக்கைகள் மோசமானது. ராஜேஸ்வரி இருக்கும் சமயத்திலேயே குழந்தையைப் போட்டு, மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டாள். இதனால் பயந்துபோன ராஜேஸ்வரி, குழந்தையைக் கொஞ்ச நாட்கள் தன்னுடன் வைத்துக்கொள்வதாகச் சொல்ல, ‘என் குழந்தையை என் கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறீங்க!’ என்று சத்தம் போட்டவள், யாரும் எதிர்பார்க்காத நேரம், டைனிங் டேபிள் மீதிருந்த கத்தியை எடுத்து கையை ஆழாமாக அறுத்துக் கொண்டாள்.
பின் மருத்துவமனை, பெட்ரெஸ்ட் என்று நாட்கள் கழிந்தது. அதன் பின் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரோ ஆராய்ந்து பார்த்துவிட்டு, மனஅழுத்தம் என்று சொல்லி சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
இதே மாதிரி பல சம்பவங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், காவலாளியுடன் எல்லாம் ஏற்பட, அவளுக்கே அவளை நினைத்து வெறுப்பாக இருந்தது.
‘எனக்கு என்ன ஆச்சு?’
‘ஏன் இந்த மாதிரி எல்லாம் பிகேவ் பண்றேன்.?’
‘அப்பா இறந்ததுனாலயா? இல்லை நந்தாவோட நடவடிக்கையாலையா?’
‘என்ன நினைச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு!’
மெல்ல மெல்ல அவளுக்குள் தாழ்வுமனப்பான்மையும், மனஅழுத்தமும் உருவாக ஆரம்பித்தது.
அப்பொழுது தான் ஒருநாள், அந்தச் சம்பவத்தைப் பார்த்தாள்.
அன்றும் வழக்கம் போலக் குடிக்கப் பாலை எடுத்துவந்து அறையில் வைத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றிருந்தாள் மாதுரி. மீண்டும் திரும்பி வந்து பார்க்க, நந்தா தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்துப் பாலில் போடுவதைப் பார்த்தாள். சட்டென்று மறைந்து நின்றுகொண்டு அவன் செய்வதைக் கவனித்தாள். அவனின் கைகளில் ஒரு நடுக்கமும், கண்களில் ஒரு பயமும் தெரிந்தது. மனைவி வருகிறாளா என்று அடிக்கடி அவன் பார்வை அறை வாசலை தொட்டு மீண்டது. சில நிமிடங்கள் கழித்து அவன் சென்றுவிட, வேகமாக அறைக்குள் சென்று டம்ப்ளரை எடுத்துப் பார்த்தாள். எதுவும் கலந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. அதன்பின்பு, மாதுரியின் சந்தேக வட்டத்துக்குள் முழுவதுமாக வந்தான் நந்தா. அன்றைய தினம் அந்தப் பாலை குடிக்காமல், கணவனுக்குத் தெரியாமல் கீழே ஊற்றிவிட்டாள்.
அடுத்த நாள் நந்தா கிளம்பி சென்றதும், அவனின் பொருட்கள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவள் கையில் அந்த மாத்திரை பட்டை சிக்கியது. அவனின் அலுவக அறையில் பூட்டி வைக்கபட்டிருந்த பீரோ ஒன்றில் ஃபைல்களுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தான்.
உடனே இணையத்தில் அந்த மாத்திரையின் பெயரை போட்டு தேட, திடிக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அது வெளிநாட்டுக் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படும் மனஅழுத்தத்தை உருவாக்கும் மாத்திரை. அதை அதிகப்படியாக உட்கொள்ள நேர்ந்தால், மனபிளர்வு ஏற்ப்படும் வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த மாத்திரையால் பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கையையும் பக்கம் பக்கமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. முழுவதையும் படித்துப் பார்த்தவள், அரண்டு போனாள். முற்றிலும் சுயநினைவை இழந்து, பைத்தியம் ஆக்ககூடிய மாத்திரைகள் அவை!
கணவனை நினைத்து கொலை வெறி உண்டானது. ஆனால் அவளின் வக்கீல் மூளை கோபப்பட வேண்டிய தருணம் இது இல்லை என்று எச்சரிக்கை செய்ய, பொறுமை காத்தாள்.
நந்தா இன்னும் என்னென்ன செய்து வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. அவளும் சமீபகாலமாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள், யார்யாரோ வீட்டிற்கு வருகிறார்கள், அளவுக்கு அதிகமான பணம் புழக்கம், பார்டி என்று ஆளே மாறித்தான் போயிருந்தான். ஒரு அரசாங்க அதிகாரி மாதிரியா இருக்கிறான்? முன்பு கண்ணில் படாதவை எல்லாம் இப்பொழுது அவள் கண்களை உறுத்த, கணவனை வேவு பார்ப்பது என்று முடிவெடுத்தாள்.
வக்கீல் என்பதால் அவளுக்கு டெக்னிக்கல் சைடில் நிறையப் பேரை தெரிந்து இருந்தது. அவர்களில் நெருக்கான ஒருவரின் மூலம், மொபைல் செயலி ஒன்றை விலைகொடுத்து வாங்கினாள். நந்தாவுக்குத் தெரியாமல் அதை அவன் மொபைலில் இன்ஸ்டால் செய்தாள். அது ஒரு ஹிட்டன் செயலி என்பதால், மொபைலுக்குள் இருப்பதே தெரியாது. சம்பந்தப்பட்ட நபர் ஃபோனை அணைத்து வைத்திருந்தாலும், அவர்களின் கேமரா முதற்கொண்டு அனைத்தையும் உலகத்தில் எந்த மூலையில் இருந்து கொண்டும் இயக்க வைக்கலாம். அந்த அளவுக்குப் பலம் பொருந்திய செயலி அது.
அதன்பின் நந்தாவின் மொபைலில் வரும் இன்கமிங், அவுட்கோயிங் கால்ஸ், டெக்ஸ்ட் மெசேஜஸ், வாட்சப்ப் சேட்கள் என அனைத்தையும் தன் லேப்டாப் மூலம் பார்க்க ஆரம்பித்தாள். நந்தாவின் ஒரு கெட்ட பழக்கம், எதையும் ரிகார்ட் செய்து வைத்துக்கொள்வது. தற்பொழுது இந்தப் பழக்கம் அவனுக்கே எதிராகச் செயல்பட ஆரம்பித்தது.
ஐஸ்வர்யா முதல் முதல்வர் கொலை வரை அனைத்தும் தெரியவர, ‘தன் கணவன் இந்த அளவுக்குக் கிரிமினலா?’ என்று நினைத்து அதிர்ந்து போனாள் மாதுரி.
இவனையா காதலித்தோம்? இவனுடனா இத்தனை காலம் வாழ்ந்தோம்? வெறுத்துப்போனது அவளுக்கு. கூடவே அழுகையும் வந்தது. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்!
போரில் நேருக்கு நேர் சண்டை போட்டு குத்துப்பட்டு இறப்பதை விட, உள்ளத்தால் நெருங்கிய ஒருவர் செய்யும் நம்பிக்கை துரோகம், நம்மைத் துண்டுதுண்டாகக் கூறு போட்டுவிடும். அதன் வலி, மிகவும் பெரிது.
அப்படி ஒரு வலியை தான் தற்பொழுது மாதுரி உணர்ந்தாள். அதிலும் அவனைக் காதலித்து அல்லவா மணந்திருக்கிறாள்! எப்படி அவனால் தனக்குத் துரோகம் செய்ய முடிந்தது? நினைக்க நினைக்கக் கழிவிறக்கம் உண்டானது. அதுநாள் வரை சாப்பிட்ட மாத்திரையின் விளைவுகளும் சேர்ந்துகொள்ள மனதளவில் மிகவும் ஒடிந்து போனாள்.
ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஐஸ்வர்யாவுடனான அந்தரங்க உரையாடல்கள் எல்லாவற்றையும் கேட்டவளுக்கு, அழுகை எல்லாம் கோபமாக மாறி, வெறி ஏறியது.
‘சத்தியமா இந்த மாதிரி ஒரு கிரிமினல், வெளிய சுகந்திரமா சுத்தக்கூடாது. இவனெல்லாம் கம்பி எண்ணுனாதான் அடங்குவான்.’ நினைத்தவள் நந்தாவுக்கு எதிராக மேலும் ஆதாரங்களைத் திரட்ட முடிவு செய்தாள். ‘போன்லையே இவ்வளவு ரிகார்ட்ஸ் வச்சுருக்கிறவன் நிச்சயம் லேப்டாப்ல நிறைய வச்சு இருப்பான். எல்லாத்தையும் சேகரிக்கனும். அவன் இருக்கும் பதவிக்கு, நிறைய ஆதாரம் தேவைப்படும்.’ தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.
ஃபோனில் இருப்பதை முடிந்தமட்டும் ஆடியோ, வீடியோவாகச் சேகரித்து வைத்துக்கொண்டவள், நந்தா அலுவகம் சென்றிருந்த நேரம், அவன் லேப்டாப்பை எடுத்து ஓபன் செய்தாள். பாஸ்வோர்ட் கேட்டது. முன்பிருந்த பாஸ்வோர்டை போட்டுப் பார்த்தாள். தவறு என்று வந்தது. ‘மாத்திட்டான் போல!’ நினைத்துக் கொண்டாள். பின் அவனின் மொபைலில் தேடிப்பார்த்தாள். இல்லை. அடுத்து அவனின் டைரி, பீரோ எல்லா இடத்திலும் தேட, அவனின் பெர்சனல் டைரியில் கடைசிப் பக்கத்தில், ஒரு ஓரத்தில் எழுதி வைத்திருந்தான். மடமடவென அதை லேப்டாப்பில் போட்டாள். ஓபன் ஆனது.
திறந்து ஒவ்வொரு போல்டராக ஓபன் செய்தாள். வக்கீலாகப் பல வழக்குகளைப் பார்த்த அவளையே அதிர செய்யும் அளவுக்கு இருந்தது அதில் இருந்த விஷயங்கள்.
ஐஸ்வர்யா உடனான போட்டோக்கள், வீடியோக்கள் ஒரு பக்கம் என்றால், நரசிம்மனுடன் பேசிய விஷயம் ஒரு பக்கம் இருந்தது.
அம்பரீஷை கொல்ல சதி செய்தது, முதல்வரை கொல்ல திட்டம் போட்டது என்று அனைத்தையும், ‘பெண் கேமரா’ மூலம் ரிகார்ட் செய்து வைத்திருந்தான்.
அன்று இரவு, அவனும் நரசிம்மனும் முதல்வரை கொல்ல திட்டம் போட்டதை, துல்லியமான் காட்சிகளாகப் பார்த்தவள், அதிர்ந்து தான் போனாள்
அரசியல்வாதிகள் நாளைக்கு எப்படியும் அந்தர்பல்ட்டி அடிப்பார்கள் என்பது தெரிந்து, ஒரு பாதுகாப்புக்கு என்று, ஒரு சிறு துரும்பைக் கூட விடாமல் அனைத்தையும் ஆவணம் செய்து வைத்திருந்தான் நந்தா. பார்க்க பார்க்க குலை நடுங்கி போனது மாதுரிக்கு.
தந்தையைக் கொன்று இருக்கிறான்!
தன்னைப் பைத்தியம் ஆக்க முயற்சி செய்து இருக்கிறான்!
முதல்வரை கொலை செய்யக் கருவியாகச் செயல்பட்டு இருந்திருக்கிறான்!
இவற்றுக்கு எல்லாம் மேலாக, நரசிம்மனுக்கே தெரியாமல் அவன் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் இப்பொழுது, நந்தாவின் லேப்டாப்பில் பதுங்கி இருக்கிறது.
துரோகத்துகே துரோகம் செய்து வைத்திருந்தான் நந்தகுமார்!
அனைத்தையும் பார்த்து, மாதுரி மிரண்டு போனது ஒரு நொடி தான். அடுத்த நொடி அனைத்தையும் தன் லேப்டாப்பில் சேமித்து வைத்துக்கொண்டாள். பின் அதை இரண்டு பெண்ட்ரைவில் ட்ரேன்ச்ஃபர் செய்து கொண்டாள்.
அடுத்த நாள், நந்தா அலுவகம் கிளம்பியதும், அவனின் வங்கி கணக்குகளின் வரவு செலவை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டாள். எப்பொழுதும் நந்தாவுக்கு வேலை இருக்கும் என்பதால், மாதுரி தான் வழக்கமாக அவனின் கணக்கு சம்பந்தமான வேலைகளைச் செய்வாள். பேங்கில் வேலை செய்பவர்களுக்கும் அது தெரியும் என்பதால், நந்தாவின் கணக்கை ஆக்செஸ் செய்வதில் அவளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை.
சேகரித்தவற்றில் தேவையானவற்றைப் பிரிண்ட்அவுட் எடுத்தவள், வீட்டிற்கு வந்ததும் அதை எல்லாம் ஒரு சிப்லாக் ஃபைலில் போட்டு, கிட்சனில் ஒளித்து வைத்தாள். பின், படங்கள், பாடல்கள் அடங்கிய டம்மி பெண்ட்ரைவை பீரோவில் வைத்துவிட்டு, மடமடவென ஒரு லெட்டரை எழுதினாள்.
ஏனெனில் அவளுக்கு நந்தாவின் மேல் சந்தேகம் இருந்தது. தந்தையைக் கொன்றவனுக்கு நம்மைக் கொல்ல வெகு நேரம் ஆகாது. ஆகையால் இவற்றை எல்லாம் இன்னொரு இடத்தில ஒரு காப்பி வைத்துக்கொள்வது நல்லது என்று.
அதேமாதிரி எப்படியோ சாதனாவை அவன் கண்டுபிடித்து அவள் கையில் இருக்கும் லெட்டர் மூலம் தான் சேகரித்தவை அவன் கைக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, சாதானாவுக்கு எழுதிய லெட்டரில், டம்மி பென்றைவ் இருக்கும் இடத்தை எழுதினாள்.
பின் அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு, கிளம்பி தோழி சாதனா வீட்டிற்குச் சென்றாள். சாதனாவிடம் அந்தக் கவரை கொடுத்தவள், “நான் வந்து கேக்குற வரைக்கும், இது யார் கைக்கும் கிடைக்ககூடாது! ஜாக்கிரதை!” என்று சொல்லிவிட்டு வந்தாள்.
ஆனால் வீட்டில் அவளுக்காகக் கோபமாகக் காத்திருந்தான் நந்தா!