அதுவரை எழுதி கொண்டிருந்த மாதுரியின் கை, அந்த நொடி தன் ஓட்டத்தை நிறுத்தி இருந்தது. நிமிர்ந்து அறையைப் பார்த்தாள். சுற்றி இருந்த அனைவரின் கண்களும் கலங்கி இருந்தது. ராஜேஸ்வரியோ, மகளையே பார்த்தப்படி அழுது கொண்டிருந்தார். வெகு நேரம் தாயையே பார்த்திருந்தவள், சித்தார்த்தையும், அவரையும் கொஞ்சம் வெளியே அழைத்துச் செல்லும்படி சுதர்ஷனிடம் சைகை செய்தாள். அடுத்து வரவிருக்கும் விஷயத்தை அவர் இதயம் தாங்காது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.
சுதர்ஷனோ திரும்பி சித்தார்த்தை பார்த்தான். அதே நேரம் ராஜேஸ்வரியோ திகிலடைந்த முகத்துடன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார். பெற்ற தாயிடம் ஒரு பெண் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறாள் என்றால்? வயிற்றில் புளியை கரைத்து அவருக்கு.
வேகமாக மகளின் அருகில் வந்தவர், “அம்மாடி! உனக்கு என்னடி நடந்துச்சு? ஏன் என்னை வெளிய போகச் சொல்ற? சொல்லுமா உனக்கு என்ன நடந்துச்சு? அம்மாக்கு பயமா இருக்கு பப்பு!” அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பதையும் மறந்து, மகளின் தோள்களைப் பற்றி உலுக்கினார். அவரின் கண்களில் மிரட்சி தெரிந்தது.
தாயை நிமிர்ந்து பார்த்த மாதுரி, ‘குரல் போனதுக்கே கதறி அழுதியே மா! இன்னும் என்னென்ன போச்சுன்னு தெரிஞ்சா, உயிரையே விட்டுடுவ மா!’ என்று நினைத்தபடி மனதுக்குள் அழுதாள். மகளின் கசங்கிய முகத்தைப் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார் ராஜேஸ்வரி. அழும் தாயின் கையைப் பிடித்து, ‘ப்ளீஸ் மா!’ என்றவள் சித்தார்த்தை அழைத்து இருவரையும் சிறிது நேரம் வெளியே இருக்கும்படி வற்புறுத்தினாள். வேதனையுடன் தங்கையை ஒரு பார்வை பார்த்தப்படி, அழும் தாயை அவர் மறுக்க மறுக்க வெளியே அழைத்துச் சென்றான் சித்தார்த். அவன் மனமோ நடந்ததைத் தடுக்க முடியாமல் போனதை நினைத்து ரத்த கண்ணீர் வடித்தது.
கோர்டில் பல அசிங்கங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறாள் மாதுரி. ஆனால் இன்று அதே அசிங்கம் தனக்கு நடந்திருப்பதைக் குடும்பத்தாரிடம் சொல்ல அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
தாய் வெளியே சென்றதும், கை நடுங்க அடுத்த வரியை எழுத ஆரம்பித்தாள்.
கண்முழித்துப் பார்த்தாள் மாதுரி. ஏதோ ஒரு இருட்டு அறையில் இருப்பது போலத் தெரிந்தது. ஒரு நிமிடம் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பியவளுக்கு, அடுத்த நொடி நடந்த எல்லாம் நினைவு வர, பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ சிறைச்சாலை போல நான்கு பக்க சுவரும், ஒரு பக்கம் கம்பி கதவும் இருந்தது. பென்சில், கரி, ரத்தம் உள்ளிட்டவற்றால் ஏதேதோ கிறுக்கப்பட்ட சுவர்கள், பெயிண்ட் உரிந்து தொங்கியபடி அலங்கோலமாகக் காட்சி அளித்தது. ஒருவித புழுங்கிய நாற்றம் அடிக்க, வயிற்ரை புரட்டிக்கொண்டு வந்தது.
பொதுவாக மனநல பிளர்வின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களை, ஒரு நீளமான ஹால் போன்ற அமைப்பில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் என ஒரே அறையில் அடைத்து வைத்திருப்பார்கள். ஆனால் ஆக்ரோஷமாக முற்றிய நிலையில் இருக்கும் மனநல நோயாளிகளைத் தனித்தனி அறையில் அடைத்து வைப்பார்கள்.
மாதுரியையும் தற்பொழுது அப்படிதான் தனி அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். எல்லாம் கௌஷிக்கின் வேலை! நல்ல மனநிலையில் இருந்த அவளை, ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகவும், அதைத் தன் காண்ணாலையே பார்த்ததாகவும் ஒரு பொய்யை சொல்லி, அவளை எப்படியோ தனி அறையில் அடைத்து வைக்கும்படி செய்துவிட்டான்.
அறையின் அமைப்பை பார்த்த மாதுரி, ஒரு வேளை நம்மைக் கடத்தி வந்து, அடைத்து வைத்திருக்கிறானா இந்த நந்தா? என்று நினைத்தவள், வேகமாக எழுந்து வந்து கம்பியை பிடித்து உலுக்கியபடி, “கதவை திறங்க? நந்தா என்னை வெளியே விடு டா! டேய்! மரியாதையா என்னை வெளியே விடு!” என்று கத்த ஆரம்பித்தாள்.
வெகு நேரம் கத்தியபிறகே அங்கு வந்தாள் ஒரு பெண். செவிலியர் உடையில் இருந்தாள். “ஏய்! சும்மா கத்தாத! அமைதியா போய் உக்காரு!” என்று எரிச்சலுடன் கத்தியவர் போகிறபோக்கில், “இருக்கிற பைத்தியங்கத் தொல்லை தாங்க முடியல. இதுல புதுசா இது ஒன்னு!” என்று புலம்பியபடி சென்றாள்.
[the_ad id=”6605″]
மாதுரிக்கு அவர் சொன்னது புரியவே ஒரு நொடி ஆனது. அடுத்த நொடி அதிர்ந்து போனாள். “இது மெண்டல் ஹாஸ்பிட்டலா? நான் எப்படி இங்க? அந்த நந்தாதான் சேர்த்து விட்டுட்டானா? நல்லா இருக்கிற என்னை எப்படி இங்க சேர்த்தாங்க? டாக்டர் எங்க இருப்பாங்க?” மடமடவென அவன் மனதில் கேள்வி பிறந்தது.
அதேநேரம் ஒரு வித பயமும் அவளைச் சூழ்ந்தது. பல கட்டுரைகளில் படித்து இருக்கிறாள். ஒரு முறை மனநல மருத்துவமனைக்குள் சென்றுவிட்டாள் வெளியே வருவது கஷ்டம் என்றும், அதுவும் பெண்கள் என்றால் சாவு வரை உள்ளேயே தான் வாழ்க்கை என்றும்.
பொதுவாக இந்தச் சமூகத்தில், பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒரு பெண் மனநல மருத்துவமனைக்குள் அட்மிட் செய்யப்பட்டுப் பிற்காலத்தில் குணமானாலும், அவளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவள் குடும்பத்தாருக்கு கூட இருக்காது. அப்படித்தான் பல பெண்கள், தங்களை ஏற்றுக்கொள்ள ஆள் இல்லாமல், கடைசி வரை மனநல காப்பகத்திலையே வாழ்வை கழிக்கின்றனர். ஆண்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. குணமானதும், வெளியே சென்று தங்கள் வாழ்வை புதுபித்துக் கொள்கின்றனர்.
மனநல காப்பகம் பற்றிய ஒரு காணொளியில், இந்த விவரத்தை பார்த்து இருக்கிறாள் மாதுரி.
இப்பொழுது அந்த நினைவு வர, மெல்ல மெல்ல பயம் அவளைச் சூழ்ந்தது.
“நர்ஸ்! நர்ஸ்!” என்று சற்று முன்பு வராண்டாவில் நடந்து சென்ற செவிலியரை சத்தமாக அழைத்தாள். முஹூம்! அவர் திரும்பி கூடப் பார்க்கவில்லை.
எங்கே தன் வாழ்க்கை இந்த நான்கு சுவருக்குள் முடிந்துவிடுமோ என்ற பீதி அவளைச் சூழ, கம்பியை பிடித்து வேகமாக உலுக்கினாள். “நர்ஸ்! என்னை வெளியே விடுங்க! நான் பைத்தியம் இல்லை! ப்ளீஸ்! தயவு செஞ்சு என்னை வெளியே விடுங்க! உங்களைக் கெஞ்சி கேக்குறேன்! எனக்குச் சின்னப் பொண்ணு இருக்கா! அவ நான் இல்லாம இருக்க மாட்டா! ப்ளீஸ் நர்ஸ்!” ஆக்ரோஷமாகக் கத்தியவள், பின் அப்படியே மடங்கி அமர்ந்தாள். கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
‘யாராவது வந்து என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்களேன்!’ மனதுக்குள் கதறினாள்.
மாதுரி அட்மிட் ஆகியிருந்த அன்று இரவு உணவு கொடுக்கும் சாக்கில் அவளைப் பார்க்க வந்தான் கௌஷிக். அவனைப் பார்த்ததும் ஆத்திரத்தில் அவன் மேல் பாய்ந்த மாதுரி, அவன் சட்டையைக் கொத்தாக பற்றிக் கம்பியை நோக்கி இழுத்தாள். “மரியாதையை என்னை வெளியே விட்டுடு! நானா வெளியே வந்தேன், உன்னோட கேரியரை இல்லாம ஆக்கிடுவேன். வெளியே விடுடா!” என்று கத்தினாள்.
“இது என்னோட கோட்டை மாதுரி! இங்க நான் வச்சது தான் சட்டம். ட்ரீட்மெண்ட்ன்ற பேர்ல உன்னை முழுப் பைத்தியமா ஆக்கபோறேன். உன்னால ஒன்னும் பண்ண முடியாது.” அடிக்குரலில் சொன்னவன், அடுத்த நொடி, லொக்கு லொக்கு என்று இருமியபடி, “நர்ஸ்! யாராவது வந்து காப்பாத்துங்க! யாரவது ஓடி வாங்க!” என்று நடிக்க, திபுதிபுவென்று ஓடி வந்தனர் ஆண் செவிலியர்கள்.
அவர்களைப் பார்த்ததும் கௌஷிக் மேல் இருந்த ஆத்திரத்தில், அவன் கழுத்தில் இருக்கும் தன் பிடியை இறுக்கினாள் மாதுரி. அதற்குள் அங்கு வந்து சேர்ந்த செவிலியர்கள், மாதுரியின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டுக் கௌஷிக்கை பிரித்து எடுத்தனர்.
போகும்போது திரும்பி தன்னைப் பார்த்து நக்கல் சிரிப்புச் சிரித்த கௌஷிக்கை பார்த்து கொலை வெறியான மாதுரி, “வெளிய வந்தேன், உங்க ரெண்டு பேரையும் கொல்லாம விட மாட்டேன் டா!” என்று கம்பியை உலுக்கியபடி கர்ஜித்தாள்.
கத்தி கத்தி தொண்டை வற்றிப் போய், இரண்டு நாட்கள் உறக்கம் இல்லாமல் கழிய, அன்று காலை எப்படியோ அசதியில் உறங்கி போயிருந்த மாதுரி. திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல இருக்க, சட்டென்று கண்விழித்துப் பார்த்தாள். பச்சை உடை மாற்றப்பட்ட தன்னை இரண்டு ஆண் செவிலியர்கள் தூக்கி வீல் சேரில் உட்கார வைக்க முயன்று கொண்டிருப்பது தெரிந்தது.
“ஏய்! என்னை எங்க தூக்கிட்டு போறீங்க? விடுங்க டா என்னை!” என்று துள்ளியபடி கத்தினாள். ஆனால் அவள் கத்தியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளைச் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து, அத்தோடு சேர்த்து கட்டினர். அதன்பின் அவள் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.
மிரண்ட பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள் மாதுரி. அந்த நீள அறையின் ஒரு பாதியில் ஏதோதோ உபகரணங்கள் பொருத்தப்படக் கட்டில் ஒன்று இருக்க, மறு பாதியில் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருந்தது.
[the_ad id=”6605″]
‘என்ன செய்யப் போறாங்க?!’ என்று அவள் யோசிப்பதற்குள், அவளைத் தூக்கி கட்டிலில் படுக்கவைத்து, கை மற்றும் கால்களை இரும்பு பட்டை கொண்டு லாக் செய்தனர். பின் அந்தச் செவிலியர்கள் சென்றுவிட, சில நிமிடங்களில் கௌஷிக் மற்றும் வேறு ஒரு மருத்துவர் அறைக்குள் நுழைந்தனர்.
அவரைப் பார்த்ததும், “டாக்டர்! நான் பைத்தியம் இல்லை! நார்மலா தான் இருக்கேன். நீங்களாச்சும் என்னை வெளிய போக விடுங்க டாக்டர். ப்ளீஸ்! என் பொண்ணு எனக்காகக் காத்திட்டு இருப்பா! டாகடர் நான் சொல்றது நிஜம். ஐயம் நார்மல்!” என்று கத்த ஆரம்பித்தாள்.
அவரோ, “கவலைப்படாத மா! உனக்கு ஒன்னும் இல்லை. கூடிய சீக்கிரம் சரிபடுத்தி உன்னை வெளிய அனுப்புறோம்.” என்று இனிமையாகப் பேசியவர், அவள் அருகில் வந்து, ஒரு பட்டையை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து லாக் செய்ய, நடக்கவிருக்கும் விஷயம் புரிந்து, கட்டிலில் துள்ள ஆரம்பித்தாள் மாதுரி. “டாக்டர் எனக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் வேண்டாம். நான் நல்லா தான் இருக்கேன். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ் டாக்டர்!” கட்டை அவிழ்க்க முயன்றபடி அவள் கத்த, மருத்துவரோ, கட்டிலில் அருகில் இருந்த உபகரனங்களில் ஏதேதோ பட்டன்களை அழுத்த, அடுத்த நொடி, தலையில் இருந்த பட்டை வழியே சுர்ரென்று மின்சாரம் பாய்ந்தது அவள் உடலில்.
கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு நீடித்த அந்த மினி வோல்டேஜ் மின்சாரத்தால், தசை எல்லாம் இழுத்துக்கொள்வது போல இருக்க, கைகால் எல்லாம் மரக்கட்டை போல விறைத்துப்போனது. கண் கருவிழிகள் மேல் நோக்கி சென்றது.
ஒரு நிமிடத்தின் முடிவில், உடல் முழுவதும் தளர தற்காலிக மயக்கத்திற்குச் சென்றாள் மாதுரி.
அதன்பின் ஆரம்பித்தது அவளுக்கு நரக வாழ்க்கை!