அத்தியாயம் 27
கண் விழித்தாள் மாதுரி. தன் அறையில் இருந்தாள். யாரோ தூக்கிக்கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் போல! மெல்ல எழுந்துகொள்ள முயற்சித்தாள். தசை எல்லாம் வலித்தது. எழுந்துகொள்ள முடியாமல் தலை எல்லாம் சுற்றியது. வயிற்ரை வேறு புரட்ட, அப்படியே படுத்துக் கொண்டாள்.
ஏனோ தெரியவில்லை தனிஷ்காவின் நினைவு நெஞ்சில் பாரத்தை ஏற்றியது. மகளைப் பார்க்காமலே இறந்து விடுவோமோ என்ற பயம் இதயத்தை அழுத்த, தேம்பி தேம்பி அழுதாள்.
“பப்பா!! ஏன் என்னை விட்டுட்டு போனீங்க? நீங்க இருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? இந்த நாய்ங்க தான் என்கிட்டே நெருங்கி இருக்குமா? கொஞ்ச நாள் இங்க இருக்கிறதே என்னால தாங்க முடியல் பப்பா, இனி?” அடிவயிற்றைக் கவ்வியது.
அதே நேரம் இங்கே, குழந்தையும் தாயை தேடி தேடி இரண்டு நாளாக ஓயாமல் அழுது கொண்டே இருந்தாள். தண்ணீர் குடிக்க அடம்! உணவு உண்ண அடம்! அவளோட போராட முடியவில்லை நந்தாவால்.
மனநல மருத்துவமனை சென்று மகளைப் பார்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் முடியாமல் போக மருமகனை பார்க்க வந்திருந்தார் ராஜேஸ்வரி. கதறி அழும் பேத்தியை மடியில் உட்கார வைத்துக்கொண்டு சமாதனம் செய்ய முடியாமல் தவித்தவர், “நீங்க ஒரு தடவை சொல்லி பாருங்க மாப்பிளை. என் பொண்ணுகு அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. ஏதோ கோவத்துல கத்தி இருப்பா. அவ்ளோதான் மத்தபடி டாக்டர் சொல்ற மாதிரி பை…..” அந்த வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாமல் அழுதார்.
“நான் என்ன பண்ண முடியும் அத்தை! நான் ஒரு செகண்ட் வராம இருந்திருந்தா, இன்நேரம் என் பொண்ணு…..” நடிகர் திலகத்துக்கே டஃப் கொடுக்கும் அளவுக்குக் கதறி அழுதான் நந்தா.
“மத்தவங்க என்னவேனா சொல்லட்டும் நந்தா. நீங்க தானே அவளைப் புரிஞ்சு இருந்திருக்கணும். இத்தனை வருஷத்தில உங்களை ஒரு வார்த்தை எதிர்த்து பேசி இருப்பாளா? அப்படி இருக்கும்போது ரீசென்ட்டா அவ அதிகமா கோபபடுறானா என்ன காரணம்ன்னு அவளைக் கூப்பிட்டு உட்கார்ந்து பேசி இருக்கலாமே? அதைவிட்டுட்டு நீங்களும் சேர்ந்து…..” அதிருப்தியை வெளிபடுத்தினான் சித்தார்த்.
“தெரியாம பேசாதீங்க சித்தார்த். நான் எவ்வளவோ அவகிட்ட பேச ட்ரை பண்ணேன். அவ என்கூட ஒரு தடவை கூட உட்கார்ந்து பேசவே இல்லை. அன்னைக்குக் கூட, அவளைக் கண்ட்ரோல் பண்ண எவ்வளவோ ட்ரை பண்ணேன். இதோ பாருங்க, எப்படிக் கடிச்சு வச்சுருக்கான்னு..” கையில் வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட காயத்தைத் தூக்கி காட்டினான்.
“இப்போ தான் திடீர்ன்னு இப்படினா பரவாயில்ல. இதுக்கு முன்னாடியும் நிறையத் தடவை கடிச்சு வச்சுருக்கா! நீங்க கூட ரெண்டு மூணு தடவை பார்த்து இருப்பீங்க? கையை அறுத்துக்கிற வரைக்கும் போய்ட்டா. திடீர்ன்னு குழந்தையோட கழுத்தை அறுத்துட்டா……என் புள்ளையை எங்க தூக்கிட்டு ஓடுவேன் நான்…..” முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டான்.
ராஜேஸ்வரிக்கும், சித்தார்த்துக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நந்தா சொன்னதை எல்லாம் நம்பி அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆனால் மாதுரியை மனநல காப்பகத்தில் விட அவர்களுக்குத் துளியும் மனம் இல்லை. எல்லோரும் சொல்வது போலப் பைத்தியமாகவே இருந்தாலும் அவளைத் தங்களுடன் வைத்து பார்த்துக்கொள்ளவே ஆசைப்பட்டனர். அவளைப் பார்க்க துடித்தனர்.
[the_ad id=”6605″]
“நீங்க கலக்டர் தானே நந்தா. அவளைப் பார்க்கவாச்சும் எங்களை அலோவ் பண்ண சொல்லுங்க ப்ளீஸ். பப்புவை பார்க்காம எங்களால இருக்க முடியாது. அவளை எங்க கூடவே வச்சு ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம். உங்களுக்கு விருப்பம் இல்லனா உங்களையும் தொல்லை பண்ண மாட்டோம். ப்ளீஸ் நந்தா நீங்க கொஞ்ச எடுத்து சொல்லுங்க?” கெஞ்சினான் சித்தார்த். தங்கையை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவனிடம். அவளைத் தனியே கஷ்ட்டப்பட விட அவனுக்குத் துளியும் இஷ்டம் இல்லை.
அன்று பிறந்தநாள் விழாவில வைத்து என்னை மட்டம் தட்டியவன் இன்று தன்னிடம் கெஞ்சுவதை மனதுக்குள் ரசித்த நந்தா, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பேசினான். “கட்டின புருஷன் நான். எனக்கு மட்டும் என் பொண்டாட்டி மேல பாசம் இருக்காதா சித்தார்த்? அவளுக்கு இப்படி ஆகிடுச்சேன்னு நானே ரொம்ப வேதனையில இருக்கேன். நானுமே அவளைப் பார்க்க ட்ரை பண்ணேன். என்னையே உள்ள விட மாட்டேங்குறாங்க! கேட்டா ரொம்ப வயல்ன்ட்டா பிஹேவ் பண்ற பேஷண்ட்ஸ யாரையும் பார்க்க விட மாட்டோம். அது சேஃப் இல்லைன்னு டாக்டர் சொல்றார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?” தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
ராஜேஸ்வரியோ, ‘இதற்கு மேல் மாப்பிளையைக் கஷ்டபடுத வேண்டாம்.’ என்று சித்தார்த்துக்குக் கண்ஜாடை காட்டினார்.
“ட்ரீட்மெண்ட் எப்போ முடியுமாம் மாப்பிளை? என் பொண்ணுக்குச் சீக்கிரம் சரி ஆகிடும் தானே?” ஆவலுடன் கேட்டார்.
“ஆகிடும் அத்தை! சரியா ட்ரீட்மெண்ட் கொடுத்தா கூடிய சீக்கிரம் சரி ஆகிடுவான்னு டாக்டர் சொல்லி இருக்கார். நீங்க கவலைப்படாதீங்க அத்தை!” பாசம் ஒழுக பேசினான்.
“அப்போ ஒரே ஒரு தடவை அவளைப் பார்த்துட்டு போயிடுறோம். நீங்க கொஞ்சம் சொல்லுங்க மாப்பிள்ளை.”
“கேட்டுட்டு சொல்றேன் அத்தை.”
“அப்போ பாப்பாவை எங்க கூடக் கொஞ்ச நாள் கூட்டிட்டு போறோம் மாப்பிளை. அவ அழறதை பார்க்க என்னால முடியல.”
“ம்ம்! கூய சீக்கிரம் கொண்டு வந்து விட்டுடுங்க அத்தை.” முடித்தவன் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
போகும் நந்தாவை முறைத்துப் பார்த்தான் சித்தார்த். ‘மனைவி பைத்தியம் ஆனதும் நைசா கழண்டுக்கப் பார்க்கிறான் போல!’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
அவனால் அந்த அளவுக்கு மட்டுமே யோசிக்க முடிந்தது. மாதுரி மனநல காப்பகத்துக்கு அனுப்பட்டதுக்கே நந்தா தான் காரணமாக இருப்பான் என்று அவன் துளியும் யோசிக்கவில்லை.
அங்கே மனநல காப்பகத்தில், மாதுரிக்கு ரணவேதனையாகத் தான் நாட்கள் நகர்ந்தது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கொடுக்கவேண்டிய ect (மின்சாரச் சிகிச்சை) மாதுரிக்கு மட்டும் நான்கைந்து முறை கொடுக்கப்பட்டது. உடல் தளர்ந்து போனாள். சாப்பிட பிடிக்காமல் தூங்க பிடிக்காமல் எந்நேரமும் குடும்பத்தாரின் நினைவும், நந்தாவின் மேல் ஆத்திரமும் என்ற மனநிலையிலேயே இருந்தாள்.
ஒரு சில செவிலியர்கள் கடமைக்கு என்று அவளுக்கு மாத்திரை கொடுப்பது, உணவு வழங்குவது என்று அவளுக்கான தங்கள் வேலைகளைச் செய்தாலும், ஒரு சில செவிலியர்கள், “உனக்கு என்னமா பிரச்சனை ஏன் இங்க வந்த? கவலைப்படாத சீக்கிரம் சரி ஆகிடும்!” என்று ஆறுதலாகப் பேசினர். அப்பொழுதெல்லாம் தாயின் நினைவில் கண்கள் கலங்கிவிடும் அவளுக்கு.
[the_ad id=”6605″]
அப்படி அன்பாகப் பேச வருபவர்களிடம் எல்லாம், நந்தாவை பற்றியும், கெள்ஷிக்கை பற்றியும் எல்லாவற்றையும் சொல்லுவாள் மாதுரி. ஆனால் கௌஷிக் அவர்களிடம் என்ன சொல்லி வைப்பானோ தெரியவில்லை, அடுத்த நாளில் இருந்து அவர்களைக் காணாது. அப்படியே வந்தாலும் தங்கள் வேலையை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.
வேளா வேளைக்கு உணவு, உடுத்த உடை, மூன்று வேலையும் மாத்திரை என்ற பெயரில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டாலும், கழிப்பறை, குளியலறை வசதிகள் எல்லாம் பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. அவர்களால் முடிந்த அளவுக்குச் சுத்தமாக வைத்திருந்தாலும், டைல்ஸ் பதித்த குளியலறைக்கும், பாசி படிந்த சிமின்ட் குளியலறைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கத்தான் செய்தது.
ஆரம்பத்தில் குளிக்காமலே நாட்களைக் கழித்த மாதுரிக்கு, அதன்பின் குளித்தாக வேண்டிய கட்டாயம். இல்லையேல் அவர்களே குளிக்க வைத்துவிடுவார்கள் போல. தானே குளித்துக் கொள்வதாக மாதுரி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவளைக் குளிக்க வைத்தனர் செவிலியர்கள். பார்பதற்கு நார்மலாகத் தெரியும் மாதுரி எப்பொழுது எப்படி மாறுவாள் என்ற பயம் அவர்களுக்கு. அப்படித்தான் ஒரு முறை அவளே குளிக்கட்டும் என்று இவர்கள் தள்ளி நிற்க, மாதுரியோ அவர்களை எப்படியோ ஏமாத்திவிட்டு அங்கிருந்து ஓட முயற்சிக்க, அன்று எப்படியோ அவளைப் பிடித்துவிட்ட செவிலியர்கள், அதன் பின் அவளைத் தாங்களே குளிக்க வைக்க ஆரம்பித்தனர். பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட மாதுரிக்கு அது மிகுந்த தர்மசங்கடத்தை உண்டாக்கியது.
சாதாரணப் பேஷண்ட்ஸ்க்கு குளியல் அறையில் தடுப்பு இருந்தாலும், மாதுரிக்கு ஒதுக்கப்பட்ட குளியலறையில் கதவே இல்லை. கேட்டால், வயலன்ட் பேஷண்ட்! பாத்ரூம் பைப்பில் மண்டையை மோதி உடைத்துக் கொள்வார்கள், இல்லை அங்கிருக்கும் ஏதாவது பொருளை பயன்படுத்தித் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள். இப்படி யாரேனும் இறந்தால் யார் பொறுபேற்பது என்ற பதில் வரும்.
குளியலில் இப்படி ஒரு பிரச்சனை என்றால், கழிப்பறைக்கு அதற்கு மேல்! காவலுக்கு என்று எப்பொழுதும் வெளிய ஆள் இருக்க, முஹூம்! மிகவும் நொந்து போனாள் மாதுரி.
மனநிலை சரி இல்லாதவர்கள் என்றால் ஒன்றும் தெரியாது. ஆனால் இவள் தான் நல்ல நிலையில் இருக்கிறாளே! அங்கிருந்த ஒவ்வொரு நாளும் நரகமாகச் சென்றது. ஒன்றிரண்டு முறை குளிக்க வெளியே வரும்போது தப்பிக முயற்சி செய்ய அடிபின்னி எடுத்துவிட்டார்கள். “அம்மா!” என்ற வலியுடன் சுருண்டு விடுவாள். அந்த அளவுக்கு இருந்தது அவர்களின் அடி!
சாதாரணத் தினங்களில் இப்படி என்றால், மாதவிடாய் நாட்களில் அதைவிடக் கொடுமை. அன்றொரு நாள் இரவு உணவு முடித்துவிட்டு படுத்தவளுக்கு அடிவயிற்றைச் சுண்டி இழுப்பது போல வலித்தது. சாதரணமாக அவளுக்கு அதிகமாகன வலி இல்லாவிடினும், சமீபத்திய நாட்களில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், மின்சாரச் சிகிச்சை எல்லாம் சேர்ந்து அளவுக்கு அதிகமாக வலியை கொடுத்தது அவளுக்கு. இரவு முழுவதும், வலியில் அப்படியும் இப்படியும் உருண்டு பிரண்டு கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் அசதியில் உறங்கிவிட்டாள்.
அடுத்த நாள் காலை நல்ல உறக்கத்தில் இருந்தாள் மாதுரி. யாரோ கொம்பு வைத்து கம்பியை தட்டவும், மெல்ல கண் விழித்தாள். செவலியர் ஒருவர் வாசலில் நின்றிருந்தார். “எந்திருச்சுப் போய்க் குளி! பேட் எடுத்துட்டு வரேன்.” சொல்லிவிட்டு நகர்ந்தவர், “ஆய் மூத்திரத்தை எல்லாம் அல்லனும்னா இதுல இந்தக் கருமத்தை வேற சுத்தப்படுத்தணும்!” முனங்கியபடி சென்றார்.
அப்பொழுதுதான் மாதுரி தன்னைப் பார்த்தாள். ஆடையெல்லாம் ரத்தக்கறை படிந்து அலங்கோலமாகக் காட்சி அளிக்க, அவள் படுத்திருந்த இடம் முழுவதும் கரை படிந்திருந்தது. அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. இரவே குளித்து உடைமாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் உடல் அசதியில் அப்படியே தூங்கி போயிருந்தாள்.
அவள் எழுந்துகொள்ளவும் வந்து சேர்ந்தார் வேறொரு செவிலிய பெண்மணி. அவர் கையில் அங்கு மனநல காப்பகத்திலேயே தயாரிக்கப்பட்ட காட்டன் பேட் இருந்தது. உயர்ரகச் சானிடரி பேட்களைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டவளுக்கு அது மிகவும் அசவுகரியத்தைக் கொடுத்தது. பொறுத்துக் கொண்டாள். சாதாரண நாட்களிலேயே பார்க்க முடியாத நிலையில் இருக்கும் குளியலறை, இன்று குமட்டிக்கொண்டு வந்தது மாதுரிக்கு. கண்களை இறுக மூடிகொண்டாள்.
பொதுவாக அரசாங்க மனநல காப்பகத்திற்குள், குணமடைந்து நல்ல மனநிலையில் இருக்கும் நோயாளிகளை வெளியே அனுப்பும் முன் அவர்களுக்குக் கைதொழில் கற்றுத் தரப்படும். அந்த வகையில், ஆண்களுக்குப் பிரெட், பன் உள்ளிட்ட பொருட்களைச் செய்யக் கற்றுத்தரும் பேக்கரி ஒன்று உள்ளேயே இருந்தது. பெண்களுக்கு, கூடை பின்னுதல், சோப் தயாரிப்பு, நேப்கின் தயாரிப்பு சொல்லித்தரும் கூடங்களும் இருந்தது.
அப்படி நோயாளிகளால் செய்யப்படும் பொருட்கள் அவர்கள் தேவைக்குப் போக, மீதி அரசாங்கம் மூலம் வெளி சந்தையில் விற்கப்பட, அதில் கிடைக்கும் பணத்தை, நோயாளிகளின் பெயரில் வங்கி கணக்கு ஓபன் செய்து அதில் போட்டுவிடுவார்கள். அந்தச் சிறு தொகை அவர்களுக்கு ஊக்கமாகவும், உதவியாகவும் இருக்கும். சிறு துளி பெரு வெள்ளம் ஆயிற்றே!
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதகமாகச் சென்றது.
இங்கே சித்தார்த்தோ பலமுறை தங்கையைப் பார்க்க முயன்று தோன்றுப் போனவன், ஒரு முறை தன் தங்கையைப் பார்த்தே ஆக வேண்டும் என்று பிசினெஸ் பக்கம் தெரிந்த ஆட்களைப் பிடித்துக் காவல்துறையில் புகார் அளித்து விட்டான். காவல்துறையினர் வந்து மருத்துவமனை டீனிடம் கேட்க, விஷயம் கௌஷிக் மூலம் நந்தாவின் காதுக்கு வந்தது.
எங்கே விஷயம் பெரிதாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு முறை மட்டும் அனுமதிக்குமாறு சொன்ன நந்தா, அப்பொழுது மாதுரியுடன் கௌஷிக்கை இருக்கச் சொன்னான். பின் நரசிம்மனை தொடர்புகொண்டு நந்தா விஷயத்தைச் சொல்ல, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்குப் போன் செய்து, மேற்கொண்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அவர். அதற்குப் பிறகு அவர்களும் ஊமை ஆயினர்.
[the_ad id=”6605″]
“ஏய்! எந்திரி உன்னைப் பார்க்க உங்க வீட்டில இருந்து ஆள் வந்திருக்காங்க!” செவிலியர் சொல்லவும், முதலில் நந்தாதான் தன்னைப் பார்க்க வந்திருப்பதாக நினைத்து பார்க்க மறுத்துச் சத்தம் போட்ட மாதுரி, ஒரு வயதான பெண்மணி வந்திருப்பதாகச் சொல்லப்படவும் தாய் தான் என்று உறுதி செய்துகொண்டு வேகவேகமாக எழுந்தாள். பாதுகாப்புக்காக அவள் கையில் சங்கிலி பூட்டப்பட்டது.
அறை கம்பிகளை இறுக பிடித்தபடி, வராண்டாவின் கடைகோடியில் தாய் வருகிறார்களா என்று ஆவலுடன் எட்டிப் பார்த்தாள். வெகு நேரம் கழித்து, சேலை ஒன்று தெரிந்தது. அது ராஜேஸ்வரி வைத்திருக்கும் சேலை நிறம். இப்பொழுதே கண்கள் கலங்க ஆரம்பித்தது. கடைகோடியில் அவர் உருவம் தெரியவுமே, முதல் நாள் பள்ளி செல்லும் சிறு குழந்தை போலக் கதறி அழ ஆரம்பித்து விட்டாள் மாதுரி.
“அம்மா! அம்மா!!” சத்தம் அந்த வராண்டா முழுவதும் எதிரொலித்தது. மகளின் குரல் கேட்டதும் ஓட்டமும் நடையுமாக, ஓடி வந்தார் ராஜேஸ்வரி. அவர் பின்னால் சித்தார்த். அவன் கையில் மாதுரியின் குழந்தை தனிக்க்ஷா!
“பப்பு! அம்மாடி ராசாத்தி!” கம்பிகளுக்குள் கையை விட்டு, மகளை அணைத்துக் கொண்டார். தன் மகள் ஒரு பிள்ளைக்குத் தாய் என்பதையே மறந்து, காணாமல் போன குழந்தையைப் போல மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார்.
“அம்மா! அம்மா! என்னை இங்க இருந்து எப்படியாச்சும் கூட்டிட்டு போய்டு மா! ப்ளீஸ் மா! என்னால இங்க இருக்க முடியல மா!” மீண்டும் மீண்டும் அதையே சொல்லியபடி கதறி அழுதாள் மகள். தங்கையின் கண்ணீரை பார்க்க சகியாது, சித்தார்த்துக்குமே கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அங்கே போவோர் வருவோர் எல்லோருமே அக்கட்சியைப் பார்த்துக் கண் கலங்கினர்.
வெகு நேரம் அழுது கரைந்த ராஜேஸ்வரி, மகளின் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரை துடைத்து விட்டார். “அழாதடா என் செல்லம். அம்மா உன்னை எப்படியாச்சும் இங்க இருந்து கூட்டிட்டு போறேன். நீ கவலைப்படாத டா. நீ அழுதா அம்மாவாள தாங்க முடியாது என் பப்பு!” என்றவர் மகளைத் தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு, “ஐயோ! என் பொண்ணு இப்படி மெலிஞ்சு ஓய்ஞ்சு போயிட்டாளே! கடவுளே! என் பொண்ணுக்கா இந்த நிலைமை!” கொழுகொழு அமைப்பில் இருந்து லேசாக மெலிந்திருந்த மகளைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
அப்பொழுது மாதுரி அழுவதைப் பார்த்து தானும் வீரிட்டு அழுதாள் தனிஷ்கா. அப்பொழுதுதான் அண்ணனின் தோளில் இருக்கும் மகளைக் கவனித்தாள் மாதுரி. ஒரு கையில் தாயை அணைத்துக் கொண்டு மறு கையால் குழந்தையை நோக்கி கை நீட்டினாள். அவள் அருகில் வந்தான் சித்தார்த்.
இத்தனை நாள் தவித்த தவிப்பிற்குத் தற்பொழுது மகளைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில், அவேசகமாக மகளை அணைக்க முயற்சித்தாள். சட்டென்று குழந்தையின் நெற்றி கம்பியில் இடித்துவிட, அவர்களுடன் நின்றிருந்த செவிலியர் ஒருவர் கொம்பை கொண்டு மாதுரியின் அறை கம்பியில் தட்டினர். “ஏய்! அமைதியா இரு!”
“நீங்க கொஞ்சம் தள்ளி வாங்கம்மா! உங்க பொண்ணு வந்ததில இருந்து ரொம்ப அட்டகாசம் செய்றா! எங்களாலலையே கண்ட்ரோல் பண்ண முடியல!” எரிந்து விழுந்தார்.
அக்காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை ராஜேஸ்வரியால். கஷ்டமாகி போனது.
கண்ணனுக்கு எட்டிய குழந்தை கைக்குக் கிடைக்காமல் போக, “அம்மா! பாப்பாவை ஒரு தடவை கிட்ட கொண்டு வா மா! தொட்டுப் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் மா!” பெற்ற மகளைப் பார்க்க கெஞ்சும் மகளின் நிலை பொறுக்காமல், சித்தார்த்திடம் இருந்து குழந்தையை வாங்கி மகளிடம் நீட்டினார் ராஜேஸ்வரி. மறுத்து பேசிய செவிலியரை நன்றாகத் திட்டிவிட்டார்.
கம்பிகளுக்கு ஊடே முகத்தைப் பிதிக்கி எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே எம்பி, மகளின் கன்னத்தில் இதழ் பதித்த மாதுரிக்கு மகளை நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை! ஆனால் முடியவில்லை. மகளின் அழுகை பொறுக்கமாட்டாமல் தாயிடமே கொடுத்துவிட்டாள்.
அந்நேரம் அங்கு வந்தான் கௌஷிக். அவனைப் பார்த்ததும், நடந்தவை எல்லாம் நினைவில் வர, வெறி ஏறியது மாதுரிக்கு. கம்பியை பிடித்து உலுக்கியபடி ஆக்ரோஷமாகக் கத்த ஆரம்பித்து விட்டாள்.
“அம்மா! இவனும் நந்தாவும் சேர்ந்து என்னை இங்க வந்து அடைச்சிட்டாங்க. நான் பைத்தியம் இல்லமா! நீயாச்சும் என்னை நம்புமா! நந்தா என்னை ஏமாத்திட்டான். நந்தா என்ன எல்லாம் செஞ்சுருக்கான் தெரியுமா……” அவள் மேற்கொண்டு சொல்வதற்குள், இடைபுகுந்த கௌஷிக், “தினமும் இப்படித்தான் எதையாவது உளறிகிட்டே இருக்காங்க. இவங்களை யாருன்னே எனக்குத் தெரியாது. ஆனாலும் என்னைப் பார்த்து இப்படித்தான் எதையாவது சொல்லி கத்திட்டே இருப்பாங்க.” என்றவன் “நர்ஸ் விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சிடுச்சு. இவங்களை இங்க இருந்து கூட்டிட்டு போங்க!” என்றான் பல்லை கடித்தபடி.
போக மறுத்த ராஜேஸ்வரியையும், சித்தார்த்தையும் எப்படியோ அங்கிருந்து அனுப்பி வைத்தனர் செவிலியர்கள்.
வெளியே வந்த சித்தார்த்துக்கு, நந்தாவின் மேல் சந்தேகம் ஏற்பட, தெரிந்தவர்கள் மூலம் அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என்று எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதன்பின் தனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் மாதுரியை வெளியே கொண்டு வர போராடினான் சித்தார்த். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
“வயலென்ட்டா பிஹேவ் பண்றவங்களை எப்படி வெளிய விட முடியும்? நீங்க ஈசிய சொல்லிடுவீங்க? நாளைக்கு அவங்களால பிரச்சனை வந்தா யார் பதில் சொல்றது?” டீன் இவ்வாறு சொல்லிவிட, சித்தார்த்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அந்த நேரத்தில் அவனுக்குத் தொழில் வேறு சில பிரச்சனைகள் ஏற்பட அவன் கவனம் அதில் மூழ்கியது.
இந்நிலையில் தான் இங்கே மாதுரிக்கு வேறு பிரச்சினை கிளம்பியது.