“என்ன நாகராஜ்? லீவு எல்லாம் எப்படிப் போச்சு? புதுப் பொண்டாட்டிக் கூட ஒரே குஜாலா?” வராண்டாவில் தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து கேட்டான் மாணிக்கம்.
“அய்ய! நீ பண்ணாததையா நான் செஞ்சுட்டேன். போவியா அந்தபக்கம்!” பதில் சொன்ன நாகராஜுக்கு முப்பது வயதிற்குள் இருக்கும். பார்க்க நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான். கண்கள் இரண்டும் எப்பொழுதும் போதையில் மிதக்க, பற்களோ புகையிலை போட்டு கரை படிந்திருந்தது.
மாணிக்கம், நாகராஜ், இருவருமே மனநல காப்பகத்தில் கம்பவுண்டர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாகராஜ் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து பணிக்குத் திரும்புகின்றான். மருத்துவமனையிலேயே அவன் தான் பக்கா கிரிமினல். அவன் எனென்ன காரியம் செய்யப் போகிறான் என்பதைப் பொறுத்திருந்து பாப்போம்.
“உன்னை டாக்டர் நல்லசிவம் கூப்பிட்டாரு நாகராஜ்.”
கேட்டதும் கூர்மையானான் நாகராஜ். “என்ன விஷயமாம்?”
“எனக்குத் தெரியல! ரொம்ப நாளா உன்னைப் பத்தி கேட்டுகிட்டே இருந்தாரு. நான் தான் லீவுல போயிருக்கேன்னு சொன்னேன். சரி அவன் வந்ததும் சொல்லுன்னு என்கிட்டே சொன்னார்.”
“சரி. நான் பேசிக்கிறேன். அப்புறம் ஏதாவது புதுக் கேஸ் வந்துச்சா?”
“அதெல்லாம் நிறைய வருது. அதுல ஒன்னு இருக்கே! எம்மா! என்னா கத்து கத்துது! எந்நேரம் பார்த்தாலும் கம்பியை பிடிச்சு ஆட்டிகிட்டு, என்னை வெளிய வுடுங்க! என்னை வெளிய வுடுங்கன்னு காட்டு கத்து கத்திகிட்டு இருக்கு. பொம்பளையா அது! பஜாரி! ரொம்ப முத்துன கேஸ் போல. தனி வார்டுல வச்சுருக்காங்க.”
[the_ad id=”6605″]
“தனி வார்டுல வைக்கிற அளவுக்கு அம்மாம் பெரிய பஜாரியா?”
“அட! ஆமாங்கிறேன்! ஆள் பஜாரியா இருந்தாலும் பொண்ணு செம்ம ஃபிகரு! சும்மா ஃபிரிட்ஜ்ல வச்சு எடுத்த ஆப்பிள் கணக்கா பாக்கவே குளுகுளுன்னு இருக்கா. வடக்கத்தி போல, கிள்ளுனா ரத்தம் வரும். அம்மாம் கலரு. அந்தக் கண்ணு என்ன? அந்தக் கன்னம் என்ன? அந்த உதடு என்ன? அந்த…..” அவன் பாட்டுக்கு நாகரீகம் இல்லாமல் வர்ணித்துக் கொண்டே செல்ல,
“டேய்! டேய்! ரொம்ப உசுபேத்தாத டா! நானே இப்போதான் ஹனிமூனை முடிச்சிட்டு கடமைக்கேன்னு வேலைக்கு வந்திருக்கேன். நீ சொல்ல சொல்ல உடம்பு எல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.” ஏக்கத்துடன் சொன்னான் நாகராஜ்.
“வெறும் வர்ணிக்கத்தான் முடியும். ஏனா அவளைத் தான் லேடிஸ் வார்டுல வச்சு இருக்காங்களே! எப்பயாச்சும் சேன்ஸ் கிடைச்சா தான் உள்ள போக முடியும். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சு!” சலித்துக் கொண்டான்.
“ரொம்பச் சலிச்சுக்காத டா! நம்ம கைக்கு எட்டாம போய்டுமா? அதெல்லாம் ருசி பார்த்திடலாம்.”
“அப்படிங்கிற?!” கண்கள் மின்ன கேட்டான்.
“அப்படித்தான். சரி! சரி! டீன் மேடம் வராங்க. நீ கிளம்பு!” அடிக்குரலில் சொன்னவன், எதிரில் வந்த தலைமை மருத்துவருக்கு ஒரு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அன்று இரவு, காலை மாணிக்கம் சொன்ன டாக்டர் நல்லசிவம் அறைக்கு வந்தான் நாகராஜ். நல்லசிவம், நாற்பதுகளில் இறுதியில் இருந்தார். முன்தலை வழுக்கையில் காலியாகி இருக்க, தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி அவர் முகத்தில் பாதியை மறைத்திருந்தது.
“நாகராஜு! வா! வா! உன்னைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.”
“என்னா சார்? பார்டி எதுவும் கிடைச்சிருக்கா?”
“ஆமாம்! அதுக்காகத் தான் உன்னைத் தேடிட்டு இருக்கேன்.”
நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.
“நம்ம தாம்பரம் லே பார்டி, ஏதோ மருந்து டெஸ்ட் பண்றதுக்கு நாலு எலி வேணும்னு கேட்டிருக்கார்.”
“ஆண் எலியா? பெண் எலியா சர்?”
“ஆண் எலி தான். நீ என்ன பண்ணு, இதோ இந்த அட்ரெசுக்கு போய் அவங்க கொடுக்கிற மருந்தை வாங்கிட்டு வா. நாளைக்குக் காலையில் இந்த லிஸ்ட்ல் இருக்கிற பேஷண்ட்சை அந்த ரூமுக்கு கூட்டிட்டு வந்துடு.”
“சரி சார்! அமௌண்டு எவ்வளவு சார்?” அவன் பல்லைகாட்ட,
“அதெல்லாம் இன்னும் பேசல. ஆனா நீ கவலைப்படாத உனக்கு அஞ்சு பெர்சென்ட் வந்திடும்.” சிடுசிடுவெனப் பதில் சொன்னார் நல்லசிவம்.
“சரி சார்.” விடைப்பெற்றுக்கொண்டு மருத்துவரின் அறையில் இருந்து வெளியே வந்த நாகராஜ், “பணத்தைப் பத்தி கேட்டுட்டா போதும், உடனே விரட்டி விட்டுடுவான். சரியான கேடி டாக்டரா இருப்பன் போல.” தனக்குள் பேசியபடி அவர் கொடுத்த முகவரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்த இரவு வேளை. மின்சார ரயிலை பிடித்து, முகவரியில் இருந்த இடத்திற்கு வந்தான். தூரத்தில் பாலத்துக்கு அடியில் அந்தக் கும்மிருட்டில், ஒரு கருப்பு வேன் நின்றிருந்தது. அதன் அருகில் சென்றான்.
நாகராஜை பார்த்ததும், வேன் கதவு தானாகத் திறந்துகொள்ள, உள்ளே ஏறி அமர்ந்து கொண்டான்.”
“என்ன உன்னை ரொம்ப நாளா ஆளை காணோம்?” கருப்பு கண்ணாடி அணிந்த ஒருவன் கேட்க,
“கண்ணாலம் சார்!” நெளிந்தான் நாகராஜ்.
[the_ad id=”6605″]
பதிலுக்குச் சிரித்த அவன், “ஒரு நாளைக்கு நாலு பொண்ணுங்களைத் தொடுற உனக்குக் கல்யாணமா?!”
“அது வெறும் என்ஜாய்மென்ட் சார். கண்ணாலம் பணத்துக்குச் சார். கவர்மென்ட் உத்தியோகம் மாப்பிளை! சும்மா விடுவாங்களா? நான் நீனுனு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு கொடுத்தானுங்க. பணத்தோட பொண்ணும் கிடைச்சா எவன் விடுவான் சார்?” பல்லை காட்டினான்.
“சரியான கேடி தான்! சரி! சரி! இந்தா மருந்து. பத்திரமா டாக்டர்கிட்ட சேர்த்துடு.”
அந்தச் சீல்ட் பாட்டிலை வாங்கிய நாகராஜ், “என்னாத்துக்கு சார் இந்த மருந்து?” என்றான் கேள்வியாக.
“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது. ஒரு வைரஸ் கிருமிக்கு எதிரா மருந்து கண்டுபிடிச்சு இருக்கோம். அது சரியா வேலை செய்யுதா? அந்தக் கிருமியை அழிக்குதான்னு செக் செஞ்சு பாக்குறோம்.”
“கிருமியை உடம்புக்குள்ள வுட்டாச்சா சார்?’
“ம்ம்! அதெல்லாம் நீ லீவுல போறதுக்கு முன்னாடியே!”
“ஓஹ்! அப்போ அன்னைக்கு ஒரு தபா இத்தே மாதிரி ஒரு பாட்டிலை கொடுத்து வுட்டீங்களே அத்தா சார்?’
“ஆமாம்! சரி நீ கிளம்பு! யாராவது வந்திட போறாங்க!”
[the_ad id=”6605”]
“சரி சார்!” சொலிவிட்டுக் காரில் இருந்து இறங்கியவன், பாட்டிலை பத்திரமாகப் பைக்குள் வைத்துவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யாரும் இல்லை என்றதும் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை, ஆண்கள் வார்டில் இருந்த அந்த நான்கு மனநல நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் அந்த அறைக்குச் சென்றான். அவர்கள் பார்ப்பதற்கு நல்ல திடகாத்திரமாகத் தெரிந்தார்கள்.
நாகராஜ் நேற்று இரவு வந்து கொடுத்துவிட்டு சென்ற மருந்தில் இருந்து சிறிய அளவை ஊசியில் ஏற்றிக்கொண்ட நல்லசிவம், நோயாளிகள் நால்வரின் உடம்பிலும் மருந்தை ஏற்றினார்.
“ஏன் சார்? இப்படித் திருட்டு தனமா ஊசி போடுறீங்களே? உடம்புக்கு நோவு எதுவும் ஆகி காட்டிக் கொடுத்திடாதா?”
கையுரையைக் கழட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், “அதெல்லாம் ரொம்ப அஃபெக்ட் பண்ணாது. லேசா வாந்தி, மயக்கம், பேதி தான் இருக்கும். அப்படியே ஒத்துக்கலனா மண்டையைப் போட வேண்டியது தான்.” சர்வ சாதரணமாகக் கூறினார்.
“அசால்ட்டா சொல்ற சார்!”
“டேய்! என்னடா, இதுக்கு முன்னாடி எத்தனை போயிருக்கு. எவன் கண்டுகிட்டான். பைத்தியம்ன்னு ஒருத்தன் உள்ள வந்துட்டானா, அவனுக்கு என்ன ஆனாலும் வெளிய தெரியாது. அதுவரைக்கும் நமக்குப் பிசினெஸ்.”
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, அங்கிருந்து நகரப் போன நேரம், “சார்! பொண்டாடிக்காரி புடவை வேணும்ன்னு நச்சரிசிட்டே இருக்கா! கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா…” தலையைச் சொரிந்தான் நாகராஜ்.
“காரியம் கிடைச்சிட கூடாது. பணம் பணம்ன்னு நச்சரிப்பியே!” எரிச்சலுடன் சொன்ன நல்லசிவம், பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ருபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டான் நாகராஜ்.
“தினமும் இவனுங்களை மறக்காம கூட்டிட்டு வந்துடு.” போகும்போது மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.
இரவு டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான் நாகராஜ். “போகும்போது, டாஸ்மாக்ல நல்ல சரக்கா வாங்கிகிட்டு போகணும்.” பாக்கெட்டை தொட்டுப் பார்த்துவிட்டுக் கூறினான். அப்பொழுது திடீரென்று அவனை மறித்தது அந்த விலை உயர்ந்த கார்.
“யாரு டா இது?” அவன் ஆச்சரியமாகப் பார்க்க, காரின் ஜன்னல் திறந்தது.
“மெண்டல் ஹாஸ்பிடல்ல வேலை பாக்குற, நாகராஜ் தானே நீ?” காருக்குள் இருந்தவன் கேட்டான்.
“ஆமாம்!” சற்றே நடுக்கத்துடன் பதில் சொன்னான்.
“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். காருக்குள்ள ஏறு!” ஆணையாகக் குரல் வர, பயந்தபடி காருக்குள் ஏறினான்.
நாகராஜை ஏற்றிக்கொண்டு சீறிப் பாய்ந்தது அந்தக் கார்!