அத்தியாயம் 3
அவனின் கோபத்தைப் போலவே, அந்த அறை முழுவதும் அனலாகத் தகித்தது. கிடைத்த சந்தர்ப்பம் தோல்வியில முடிந்ததாலும், போட்டத் திட்டம் நிறைவேறாமல் போனதாலும் கிட்டதட்ட வெறியில் இருந்தான்.
அவன் பெயர் நந்தா!
நந்தா படத்தில் வரும் சூரியாவை போல ரொம்பவே கோபக்காரன். இப்பொழுதும் அவன் கோபமாகத் தான் இருந்தான்.
அவள் மட்டும் நினைவு திரும்பி, தான் செய்த செயலை கூறினாள் என்றால், அதன் விளைவுகள் மோசமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவன் நன்கு அறிவான்.
ஏற்கனவே அப்படி அவள் செய்யத் துணிந்தால் என்பதால் தான், அவளைக் கொல்ல இந்தத் தீ விபத்தை அரங்கேற்றினான். ஆனால் இதில் இருந்து அவள் ஒரு காயமும் இன்றித் தப்பி இருப்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல, காவல்துறை பாதுகாப்பில் அவள் சென்றது தான் இவனை மேலும் கடுப்பாக்கியது.
நினைக்க, நினைக்க நெஞ்சம் ஆறவில்லை. நெஞ்சில் கனன்ற நெருப்பானது, அவனையே முழுங்க முயற்சிக்க, அதன் வெப்பத்தைத் தாளாமல், கையில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்து அவ்வெப்பத்தைத் தணிக்க முயற்சித்தான். ஆனால், அவனால் முடியவில்லை. இயலாமை கோபத்தில் கையில் இருந்த கண்ணாடி க்ளாசை விசிறி அடித்தவன், அது சில்லு சில்லாக உடைவதை சிவப்பேறிய கண்களால் வெறித்தான்.
“இல்லை! அவளை இப்படியே விட முடியாது! போலீஸ் பாதுகாப்புல இருந்தாலும் சரி, அந்தப் பரமேஸ்வரன் பாதுக்கப்புல இருந்தாலும் சரி, அவளைக் கொல்லாம விடக் கூடாது…விடவும் முடியாது…விடவும் மாட்டேன்!” என்று கர்ஜித்தான்.
‘என்ன செய்யலாம்?! என்ன செய்யலாம்?!’ என்று அவன் மூளை தன்னைத் தானே தூசி தட்ட, இறுதியில் அந்த முடிவுக்கு வந்தான்.
உடனே தனது கைபேசியை எடுத்தவன், யாருக்கோ அழைத்தான்.
“ஹலோ!”
“…”
“உடனே கிளம்பி கெஸ்ட் ஹௌஸ்க்கு வா!”
“…”
“இப்போவே தான். உடனே கிளம்பி வா.” கர்ஜித்தவன், அழைப்பை துண்டித்துவிட்டு, மதுபானத்தைக் கையில் எடுத்தான்.
அடுத்த அரை மணிநேரத்தில், அவன் கெஸ்ட் ஹௌஸ் வாட்ச்மேன் கூப்பிட்டான்.
“சொல்லு ஷர்மா?!”
“…”
“அவன் மட்டும் வந்து இருக்கானா? இல்லை கூட யாராவது வந்து இருக்காங்களா?”
[the_ad id=”6605″]
“…”
“அப்போ சரி. அவனை உள்ள வரச் சொல்லு. அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம். நான் சொல்றவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத. யார் என்னைப் பார்க்க வந்தாலும் நாளைக்கு வரச் சொல்லு. சம்ஜே!”
“…”
“ம்ம்!”
சொல்லிவிட்டு அவன் ரிசீவரை வைக்க, வாசல் கதவு திறந்தது. திரும்பி பார்த்தான். ஆஜானுபாகுவான அந்த ஆள் உள்ளே நுழைந்தது கதவை அடைத்தான்.
வந்தவனைச் சோஃபாவில் அமர சொல்லிவிட்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தான் நந்தா.
“என்ன சர் விஷயம்? எதுக்கு என்னை உடனே வரச் சொன்னீங்க? விஷயம் இல்லாம என்னை வரச் சொல்ல மாட்டீங்களே?!”
“ம்ம். விஷயம் இருக்கு. ஒரு கொலை செய்யணும்.” சர்வ சாதரணமாக அவன் சொல்ல,
“கொலையா?!” என்று அதிர்ந்தான் வந்தவன்.
“கொலையே தான்!” என்றவன் அவளைப் பற்றிய விவரத்தை கூறிவிட்டு, “இப்போ அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கா. போலீஸ் ரகசியமா பார்த்துட்டு இருக்காங்க.”
“போலீஸ் காவல் எதுவும்…?!”
“இப்போதைக்குப் போலீஸ் ப்ரொட்டெக்கஷன் போடல. ஆனா கூடிய சீக்கிரம் போடலாம். அதுக்குள்ள அவளைக் கொல்லனும். இல்லனா கஷ்டம்.” கவலை அவன் முகத்தில் தெரிய,
“கவலைப்படாதீங்க சர். முடிச்சிடலாம்.” நம்பிக்கையூட்டினான் வந்தவன்.
“ஜாக்கிரதை! விஷயம் சொதப்பிடக் கூடாது. ஏற்கனவே ஒருத்தன் சொதப்பிட்டான்.”
“நிச்சயம் சொதப்பாது சர். முடிச்சிட்டு உங்களுக்குச் சொல்றேன்.”
“ம்ம்…நீயே நேரடியா செஞ்சு முடி! வேற யாரையும் இதுல இறக்காத. விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.”
“சரி சர்.” அவன் எழுந்துகொள்ள,
கைகாட்டி நிறுத்தியவன், “காரியம் முடிஞ்சதும், ஃபோன் எதுவும் பண்ண வேண்டாம். நேரா இங்க வந்திடு. உனக்கான அமௌண்டை கொடுக்கிறேன்.”
பல்லை இழித்தப்படி சரியெனத் தலை ஆட்டிகிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
போகும் அவனை வெறித்தப்படி அமர்ந்திருந்தான் நந்தா.
‘கொல்லுறதுக்கு ஆள் செட் செஞ்சுட்ட சரி. ஆனா அந்த எவிடென்சை என்ன பண்ணப் போற? எப்படித் தேட போற?’ அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டு பயமூட்ட, ஒரு வித பதற்றம் அவனைச் சூழ்ந்தது.
“நாய்! நான் ஒன்னு திட்டம் போட்டு வச்சிருந்தா, எனக்கே தெரியாம இவ ஒரு திட்டம் போட்டு, அதை ரகசியமா செஞ்சு முடிச்சிருக்கு!” அவளைக் கரித்துக் கொட்டியவனுக்குப் பயமும், கோபமும் சேர்ந்து, சற்று முன்பு குடித்த மதுவை காட்டிலும் அதிகமாக அவன் வயிற்றை எரிக்க, கோபத்தோடு சோஃபாவில் இருந்து எழுந்தவன், சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டு புகைத்தபடி அங்கும் இங்கும் நடக்கலானான். அவன் கோபத்தின் அளவைப் போலவே அவனின் நடையும் அழுத்தமாக இருந்தது.
அந்த நேரம் அவன் நண்பன் கௌஷிக் வந்தான். அவனைப் பார்த்ததும் அவன் செய்த முட்டாள் தனமான காரியத்தை நினைத்துக் கோபம் வர, “ஏன் டா! இப்படிச் செஞ்ச? ஒன்னு அவளை முழுசா கொன்னுருக்கணும். இல்லை கடத்திட்டு வந்திருக்கணும். ரெண்டும் இல்லாம…உன்னை!!” கத்தியப்படி அவனை நோக்கிச் செல்ல,
பயத்தில் இரண்டடி பின்னால் சென்ற கௌஷிக், “டேய்! நான் என்ன பண்ணுவேன்! அவளை எவ்வளவோ அடிச்சுப் பார்த்துட்டேன். வாயில இருந்து ஒரு வார்த்தைக் கூட வெளிய வரல. சரி கடத்திட்டு வரலாம்ன்னு நினைச்சு மண்டையில அடிச்சா, ஒரே அடில சுருண்டு விழுந்துட்டா. அவ்வளவு பெரிய ஏரியால எப்படி அவளைத் தூக்கிட்டு வெளிய வர முடியும்? நீயே சொல்லு? இருட்டான ஏரியாவா இருந்தாலும், எல்லா இடத்துலையும் லைட்ஸ் உண்டு. எந்த நேரமும் எவனாவது ரௌண்ட்ஸ் வந்துட்டே இருப்பானுங்க. ஒருத்தன் இல்லாட்டியும் இன்னொருத்தன் கண்ணுல சிக்கி இருப்பேன். அதான் கொன்னுடறது பெட்டெர்ன்னு….” சொல்லாமல் அவன் முடிக்க, பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை நந்தா. ஏதோ யோசனையில் இருந்தான்.
“நந்தா?! அதான் உனக்குப் போலிஸ்ல ஆளுங்க இருக்காங்களே. எவிடென்ஸ் எடுத்துட்டு யாராவது வந்தாலும், பார்த்துக்கலாம்.” மெதுவாக நண்பன் சொல்ல, திரும்பி பார்த்தான் நந்தா.
“நான் இருக்கிற பொஷிஷனுக்கு என்னால எதுவெனா செய்ய முடியும் தான், ஆனாலும்….” சிறு இடைவெளி விட்டவன், “இந்தக் காலத்தில யாரையும் நம்ப முடியாது. முன்னாடி ஹெல் பண்ற மாதிரி செஞ்சுட்டு, பின்னாடி மேல் இடத்தில போட்டு கொடுத்துடுவானுங்க. எதுவா இருந்தாலும், நாம தான் இறங்கி செய்யணும்.” சொன்னவனுக்குத் தீவிரமானது முகம்.
சில நிமிட யோசனைக்குப் பிறகு, “யாராவது ரிபோர்ட் செஞ்சாலும், எப்படியும் கேஸ், கமிஷனர் ஆபிஸ்க்கு வரும். அங்க நமக்குத் தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான். அவனை வச்சுப் பார்த்துக்கலாம். இப்போ, முத வேலையா, அவளோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் யார் யாருன்னு தேடிப் பிடிக்கணும். அவங்கள்ள யாராவது ஒருத்தர் கிட்ட தான் அந்த எவிடென்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறன்.” வேகவேகமாகத் திட்டம் போட்டான் நந்தா.
நந்தா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌஷிக், “அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ அவ ஹாஸ்பிட்டல்ல இருக்காளே, அவளை என்ன செய்ய?” என்று கேட்க,
‘கோட்டை விட்டுட்டுக் கேள்வியா கேக்குற’ என்ற ரீதியில் பதிலுக்கு முறைத்த நந்தா, “அதெல்லாம் ஆள் செட் செஞ்சுட்டேன்.” என்றான்.
“கொல்லவா?!” கௌஷிக் அதிர்ச்சி அடைய.
“ஆமாம்!”
“எப்படி டா? டாக்டர்ஸ், நர்ஸ்ன்னு எப்போவும் ஆள் இருந்துட்டே இருக்குமே?!”
“அவங்க தானே இருப்பாங்க. போலீஸ் இல்லையே!” நக்கலாக அவன் பதிலளிக்க, புரியாமல் முழித்தான் கௌஷிக்.
நண்பனின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து சிரித்த நந்தா, “ஆள் செட் செஞ்சுருக்கேன். கொலை பண்றதுல எக்ஸ்பெர்ட் அவன். குறி எங்க இருந்தாலும், தட்டி தூக்கிடுவான். ஒன் மேன் ஆர்மி! ப்ரொபெஷனல் கில்லர்.” காரியம் முடிந்துவிடும் கர்வம் அவன் முகத்தில்.
‘என்னவோ போ டா! என்னை விட்டா சரி தான்!’ மனதுக்குள் நினைத்தபடி நந்தாவின் முகத்தைக் கௌஷிக் பார்த்துக்கொண்டே இருக்க,
“என்ன டா? என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?”, நந்தாவின் இந்தத் திடீர் கேள்வியில், சட்டென்று தன்னைச் சமன் செய்து கொண்டவன் ‘ஒன்றும் இல்லை’ என்பது போலத் தலை அசைக்க, டேபிள் மீதிருந்த மதுவை ஒரு க்ளாஸில் ஊற்றி, அந்த க்ளாசை எடுத்து நண்பனுக்குக் கொடுத்துவிட்டு, தானும் ஒரு க்ளாசில் ஊற்றியவன், “ச்சியர்ஸ்!!” என்றுவிட்டு ரசித்துக் குடித்தான், நந்தா!
அவள் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து நண்பன் செய்யும் செயல்களையும், அதற்காக அவன் எந்த எல்லைக்கும் போவான் என்பதையும் உணர்ந்த கௌஷிக்கிற்கு, வயிற்றில் கிலி உண்டானது. பயத்தில் எச்சிலை முழுங்கினான்.
“சார்!” சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சுதர்ஷன். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.
“சொல்லுங்க பரத்?!”
“உங்களைப் பார்க்க, ஃபாரென்ஷிக் டிபார்ட்மெண்ட்ல இருந்து பிரகாஷ் வந்திருக்கார்.”
“அவரை உள்ள வரச் சொல்லுங்க பரத்.”
“எஸ் சர்!” சல்யுட் வைத்துவிட்டு, பரத் சென்றுவிட, அடுத்த இரண்டு நிமிடத்தில் அறைக்குள் வந்தான் பிரகாஷ்.
“குட் மார்னிங் சர்!”
“குட் மார்னிங் பிரகாஷ்! உட்காருங்க.”
“தேங்க் யு சர்!” சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்த பிரகாஷ், “ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ரிசல்ட் வந்துடுச்சு சர்.” என்று சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த ஃபைலை சுதர்ஷனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தான் அவன்.
“நமக்குக் கிடைச்ச ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் எல்லாம், நீங்க கொடுத்த ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப்ஸ் எல்லாரோடவும் ஒத்து போகுது சர்.”
“இஸ் இட்!”
“எஸ் சர். ஆனா ஒரு ஃபிங்கர் பிரிண்ட் மட்டும் யார் கூடவும் மேட்ச் ஆகல.”
“அப்படியா?!” அதிர்ச்சி அடைந்தான் சுதர்ஷன்.
[the_ad id=”6605″]
அவனின் போலீஸ் மூளை யோசித்து. ‘அந்தக் கேட் சாவி நிச்சயம் அங்க வேலை பார்க்கிற ஸ்டாஃப்ஸ் யாராவது ஒருத்தர் பொறுப்புல தான் இருக்கும். அவங்களை மீறி யாரும் அந்தக் கதவைத் திறக்க முடியாது. கல்லை வச்சுப் பூட்டை உடைச்சதுக்கான அறிகுறியும் எதுவும் அங்க இல்லை. அப்படி இருக்கச்ச வெளியாள் யாரும் உள்ள வந்திருக்க வாய்ப்பில்லை. அப்போ இது யாரோட ஃபிங்கர் பிரிண்ட்?’
ஏற்கனவே அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தவறான நோக்கத்திற்காக, உள்ளே வேலை பார்க்கும் யாரோ ஒருவர் தான், அவளை அந்த நடுசாமத்தில் அறைக்குள் இருந்து வெளியே கடத்தியிருக்க வேண்டும் என்று.
அவ்வளவு பெரிய மருத்துவமனையில் எல்லோரையும் விசாரிக்க முடியாது என்பதால் தான், அறை கதவில் கிடைத்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் வைத்து, அதன் மூலம் சிலரை வடிகட்டி, அவர்களிடம் தனியே விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அப்படி இருக்கையில் இது என்ன புதுக் குழப்பம்?
பின் ஒரு முடிவுக்கு வந்தவன், பிரகாஷை அனுப்பிவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.