அத்தியாயம் 4
மனநல மருத்துவமனை தலைமை மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தான் சுதர்ஷன்.
“என்ன சொல்றீங்க சர்?! ஒரு ஃபிங்கர் பிரிண்ட் மேட்ச் ஆகலையா?!”
“ஆமாம் டாக்டர்.”
“நீங்க சொல்ற மாதிரி வெளியே இருந்து உள்ள ஆள் வர சேன்ஸ் இல்லை. அந்த அளவுக்கு இங்க கட்டுப்பாடுகள் அதிகம்.”
“அப்போ, இது யாரோட ஃபிங்கர் பிரிண்ட் டாக்டர்?”
சில நொடிகள் யோசித்த தலைமை மருத்துவர், உடனே தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தவர், “உடனே என்னோட ரூமுக்கு வாங்க.” என்று சொல்லிவிட்டு வைத்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அறைக்குள் நுழைந்தார், முதல் நாள் சுதர்ஷனின் விசாரணைக்குப் பதில் சொன்ன, அந்த மருத்துவர்.
சுதர்ஷனை கேள்வியாகப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவரை, “வாங்க டாக்டர்!” என்று வரவேற்ற தலைமை மருத்துவர், “ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எல்லாரும் தங்களோட ஃபிங்கர் பிரிண்ட் கொடுத்தாச்சு தானே?!” என்று கேட்டார்.
“எல்லாரும் கொடுத்தாச்சு டாக்டர்? ஏன் டாக்டர் எனி ப்ராப்ளம்?”
[the_ad id=”6605″]
“ஆமாம் டாக்டர். இன்சிடென்ட் நடந்த ரூம்ல இருந்து எடுத்த பிங்கர் ப்ரிண்ட்ஸ்ல ஒரு ஃபிங்கர் பிரிண்ட் மட்டும் நாம கொடுத்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸோட ஒத்துப் போகலை. அதான் கேட்டேன், எல்லாரும் அவவங்க ஃபிங்கர் பிரிண்ட் கொடுத்தாச்சான்னு?”
தலைமை மருத்துவர் அப்படிச் சொன்னதும், சில நொடிகள் யோசித்த அந்த மருத்துவர், சட்டென்று முகப் பிரகாசத்துடன், “சாரி டாக்டர், கௌஷிக் மட்டும் கொடுக்கல. அவன் அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வரல.”
இதைக் கேட்டு சுதர்ஷன் அதிர்ச்சியும் கோபமும் அடையை, “இந்த விஷயத்தை ஏன் முன்னாடியே சொல்லல டாக்டர்?”
“சாரி சர். அன்னைக்குப் பரபரப்புல சுத்தமா மறந்து போச்சு.”
அதிர்ப்தியுடன் தலை அசைத்த சுதர்ஷன், “அவர் ஏன் அன்னைக்கு வரல? இப்போ அவர் எங்க இருக்கார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டான்.
அந்த மருத்துவர் பதில் சொல்வதற்கு முன்னே, இடைமறித்த தலைமை மருத்துவர், “அவர் டாக்டர் கான்ஃபரென்ஸ் அட்டென்ட் பண்ண பெங்களுர் போயிருந்தாரு. நேத்து மார்னிங் தான் கிளம்பிப் போனாரு. ஹாஸ்பிட்டல் சார்ப்பா தான் அவரை அனுப்பி வச்சோம்.”
சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் அவன் புறப்பட்டுச் சென்றிருப்பது, சுதர்ஷனை யோசிக்க வைத்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “ஓஹ்! சரி அவர் எப்போ ரிடர்ன் வருவார் டாக்டர்?”
“இன்னைக்குக் கான்பரென்ஸ் முடிஞ்சிடும். நாளைக்குக் காலையில அவரோட ரிலேட்டிவ்க்கு மேரேஜ்ன்னு (??) பெர்மிஷன் கேட்டு இருந்தார். சோ, எப்படியும் ஒன்னு ரெண்டு நாள்ல வந்திடுவார்ன்னு நினைக்கிறன்.”
ஆனால் கௌஷிக் நேற்று மதியமே, உடல்நிலை சரி இல்லை என்று அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டான் என்பது யாருக்கும் தெரியாது.
“ம்ம், சரி அவர் வந்ததும், என்னை உடனடியா வந்து பார்க்கச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் சுதர்ஷன்.
நள்ளிரவு நேரம்! தன் வீட்டில், நகத்தைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் நந்தா. அவன் செட் செய்திருந்த ஆளிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. மொபைலை கையில் வைத்துக்கொண்டு அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று மொபைல் ரிங்க்டோனை வெளியிட, அவசரமாக அதை ஆன் செய்து காதில் வைத்தான்.
“கிளம்புட்டியா?! எங்க இருக்க?” நந்தா கேட்க,
“ஹாஸ்பிட்டல் பின்பக்கம் இருக்கேன் சர்.”
“சரி…சரி…யாரும் உன்னைப் பார்த்திடாம பார்த்துக்கோ.”
“சரி சர். ரூம் நம்பர் என்ன சொன்னீங்க?”
“ஐசியு வார்ட் ஃப்ளோர்ல, ரூம் நம்பர் முப்பத்தி ஆறு.”
“ஒகே சர்!” சொல்லிவிட்டு வைத்தவன், அடையாளத்தை மறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடியெல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு, யாரும் கவனிக்காதவண்ணம், பின்பக்கம் இருந்த படிகளில் மெல்ல ஏறினான்.
தாங்கள் திட்டமிட்டது போலவே, இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தங்கள் வீட்டில் இருந்து கிளம்பினர் சஞ்சனாவும். மிதுனும். மிதுன் பைக்கை ஓட்ட, அவனின் பின்னால் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.
அந்த நள்ளிரவு நேரம், ஒன்றிரண்டு வாகனங்களைத் தவிர ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது சாலை. குறிப்பிட்ட இடைவெளியில், வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி நின்றிருந்தது தெருவிளக்குகள். இரண்டு பக்கமும், கடைகள் எல்லாம் ஷட்டர் போட்டுச் சாத்தப்பட்டிருக்க, பிளாட்ஃபாரம் எல்லாம் கும்மிருட்டாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து, யூடியுப்பில் என்றோ பார்த்த ‘கோஸ்ட் ப்ரேன்க்’ வீடியோ எல்லாம் கண்முன் வந்து போனது மிதுனுக்கு. அதிலும் இப்படித் தான், நள்ளிரவு நேரத்தில், வெள்ளை நிற முழுநீள ஆடையும், முகத்தை மறைத்த நீண்ட கூந்தலுமாக, வேஷம் போட்ட ஒருவன், ரோட்டின் நடுவில் படுத்துக்கொள்ள, அந்த நேரம் அவ்வழியாகப் பயணிப்பவர்கள் ஆக்சிடென்ட் கேஸ் என்று நினைத்து அவன் அருகில் நெருங்கும்பொழுது, கத்தி பயமூட்டுவான். பார்த்த மிதுனுக்கே, குலை நடுங்கியது.
இதோ தூரத்தில், வெள்ளை நிறமாக ஏதோ தெரியவும், ஒரு நொடி திக்கென்று இருந்தது மிதுனுக்கு. அதன் அருகில் சென்றபின்பே தெரிந்தது, அது ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் என்று. அதன்பின்பே மூச்சு வந்தது. ‘ச்சேய்! நேரங்கெட்ட நேரத்தில இது ஒன்னு!’ தலையைச் சிலுப்பிக் கொண்டான்.
“உனக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்லையாடி?!” முகத்தில் வந்து மோதிய காற்றைச் சமாளித்துக்கொண்டு மிதுன் கேட்க, “ஏன்?! உனக்குப் பயமா இருக்கா?!” என்று பதில் கேள்வி கேட்டாள் சஞ்சனா.
“ச்சே! ச்சே! நான் ஏன் பயப்படப் போறேன்!” கெத்தாக அவன் சொல்ல, “அப்போ ஏன் டா, உன் உடம்பு நடுங்குது?!” சிரிப்பை மறைத்தபடி சஞ்சனா கேட்க, “அது பேய் பயம். வேற டிபார்ட்மெண்ட்.” என்றவனுக்கு, என்ன முயன்றும் பேய் பயத்தை மட்டும் மறைக்க முடியவில்லை. பின்னே! எந்தச் சூழ்நிலையையும் சமாளித்து விடுவான். ஆனால் பேய் என்றால் மட்டும், கொஞ்சம் நடுக்கம் உண்டு அவனுக்கு.
‘ஓஹ்! பயமில்லையா!’ என்று மனதுக்குள் நினைத்த சஞ்சு, “டேய்!! சைட்ல திரும்பி பாரேன், ஏதோ கருப்பா உருவம் தெரியுது..” என்று சொல்ல, மிரண்ட மிதுன், “எங்கடி?! எங்க?!” என்று பதற, அந்த நேரம் பார்த்து ரோட்டில் படுத்திருந்த நாய் ஒன்று, திடீரென்று ஊளையிட்டபடி மிதுனை நோக்கி சீறிக்கொண்டு வர, அலறிவிட்டான் அவன். ஒரு நொடி உயிர் போய் உயிர் வந்தது.
[the_ad id=”6605″]
சஞ்சுவோ, ‘கெக்கபுக்க’வென விழுந்து விழுந்து சிரிக்க, “அடியே!! இருக்கு டி உனக்கு!” என்று மிதுன் கோபத்துடன் சொல்லியும் சஞ்சனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதற்குள் மருத்துவமனை வந்துவிட, “கொஞ்சம் உன் சிரிப்பை அடக்கு! இல்லனா மார்ச்சுவரியில இருக்கிற பிணங்க எல்லாம் உன் சிரிப்பை கேட்டு எழுந்து ஓடிட போகுது.” என்று பதிலுக்கு அவளை வாரினான்.
சத்தம் எழுப்பாமல் மருத்துவமனையின் பின்பக்கம் வந்து மிதுன் வண்டியை நிறுத்த, மெல்ல இறங்கினாள் சஞ்சனா. ஒன்றிரண்டு தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், அந்த இடம் என்னவோ கும்மென இருட்டாக இருந்தது. சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை. அந்த இருட்டிலும், மரங்கள் சூழ, பிரம்மாண்டமாக வீற்றிருந்தது ஜி.எச் மருத்துவமனை. ஒன்றிரண்டு பேர் மாடி வராண்டாக்களில் நடந்து செல்லும் சத்தம் கேட்டது. மத்தபடி எங்கும் நிசப்தம்.
முன் ஏற்பாடாக, கொண்டு வந்திருந்த மருத்துவர்கள் அணியும் கோட்டை தன் பேகில் இருந்து எடுத்தாள் சஞ்சனா.
“இது எப்போ எடுத்துட்டு வந்த டி?! சொல்லவே இல்லை?!” மிதுன் ஆச்சரியமாகக் கேட்க, “காஷ்மீரருக்குப் போகும்போது எவனாவது ஸ்வெட்டர் இல்லாம போவானா? லூசா டா நீ?!” என்று பதில் சொல்ல,
‘பொண்டாட்டிக்காரி என்ன சொல்றா? ஒன்னும் புரியலையே!’ குழப்பமாக அவன் யோசிக்க, கணவனின் தலையில் வலிக்காமல் கொட்டிய சஞ்சு, ஹாஸ்பிட்டலுக்கு, இந்நேரத்தில விசிட்டரா போனா, அப்புறம் எல்லாரும் சேர்ந்து நம்மளை மொத்தி எடுத்துடுவாங்க. அதான் இந்த டாக்டர் வேஷம்.” சொல்லிவிட்டுக் கையில் இருந்த கோர்டில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்.
“ஓஹ்! புத்திசாலி பொண்டாட்டி!” மெச்சிக்கொண்ட மிதுன், ‘அப்படியாச்சும் உன்னை யாராவது மொத்தி இருந்தா கண்குளிர பார்த்துச் சந்தோஷப்பட்டிருப்பேன்! ம்ம், சேன்ஸ் மிஸ் ஆகிடுச்சு!’ நினைத்துக்கொண்டே அவன் பெருமூச்சு விட, “உன் மைன்ட் வாயிஸ் எனக்குக் கேட்டுடுச்சு.” சொல்லிவிட்டு கணவனை முறைத்தாள் சஞ்சு.
“அதெப்படி டி, புருஷன்காரன் எது நினைச்சாலும் உங்களுக்குத் தெரியுது?!” அந்த நேரத்தில் அதி முக்கியமான சந்தேகத்தை அவன் கேட்க, “பொம்பளைங்க எதுக்கு நெத்தில பொட்டு வச்சுருக்காங்கன்னு நினைச்ச? அது தான் கடவுள் எங்களுக்குக் கொடுத்த வாயிஸ் ரிகார்ட் பட்டன். நீங்க எது நினைச்சாலும், பேசினாலும், ஆட்டோமேட்டிக்கா உங்க மைன்ட் வாயிசை அது ரிகார்ட் செஞ்சு, எங்களுக்குத் தெரியப்படுத்திடும்.” எங்கோ பார்த்த வாட்சப் மெசேஜை அவள் சொல்லிச் சிரிக்க, மிதுனோ, ‘மொதல்ல வீட்டுக்குப் போனதும், அவ பொட்டை எடுத்து ஒளிச்சு வைக்கணும்.’ படு சீரியசாக முடிவெடுத்துக் கொண்டான்.
இப்படியே பேசியபடி, பார்க்கிங்கில் இருந்து சற்று தள்ளி இருந்த மாடிப்படிகளை அடைந்தவர்கள், சத்தம் எழுப்பாமல் ஏற ஆரம்பித்தனர். ஏற்கனவே தோழி மூலம், ரூம் நம்பரை கேட்டு தெரிந்து வைத்திருந்த சஞ்சு, ஐசியு வார்ட் எங்கிருக்கிறது என்று தேடியபடி முன்னே செல்ல,
அவளைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மிதுன், “எல்லாத்தையும் கேட்டியே டி, அப்படியே அந்த வார்டு எந்த ப்ளோர்ல இருக்குன்னு கேட்டியா? கோட்டைபுரம் ஜமீன் பங்களா மாதிரி இருக்கிற இந்தப் பில்டிங்ல, ஐசியு வார்ட் எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடிக்கிறதுகுள்ள, விடிஞ்சிடும் போலவே! தெருவுகுள்ளையே சுத்திட்டு இருக்கோம், மெயின் ரோடு எங்க இருக்குன்னு தெரியலையே!” மனைவியின் காதில் கிசிகிசுத்தவன் அவளின் முறைப்பில், கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
தேடிக் கொண்டே, நான்காவது தளத்திற்கு வந்தவர்களைப் பார்த்துவிட்டார், டியுட்டியில் இருந்த நர்ஸ்.
“எக்ஸ்கியுஸ் மீ!” நர்ஸ் அழைக்கவும், சத்தம் கேட்டு வேர்த்துவழிய, அப்படியே நின்றுவிட்டனர் மிதுனும் சஞ்சனாவும். அவர்கள் முன் வந்து நின்ற செவிலியர், “யாரு நீங்க? உங்களை இங்க பார்த்தது இல்லையே? புதுசா டியுட்டியா?” என்று கேட்க, அவசர அவசரமாக ‘ஆம்’ எனத் தலையாட்டினர் இருவரும். எனினும் அவர்களைச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே சென்றார், அந்தச் செவிலியர்.
அவர் சென்ற அடுத்த நொடி, ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்ற மிதுனும் சஞ்சுவும், ஐந்தாவது தளத்திற்கு வந்து சேர, அப்பொழுது சட்டென்று தன் நடையை நிறுத்திவிட்டு எதையோ கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் சஞ்சனா.
“என்ன சஞ்சு? எதுக்கு நின்னுட்ட? யாராவது வர்ற மாதிரி இருக்கா?!” மிதுன் கேட்க, “இல்ல. யாரோ பேசுற சத்தம் கேட்குது.” என்று பதில் சொன்னவள் தன் காதை இன்னும் கூர்மையாக்கினாள். இப்பொழுது மிதுனுக்குமே அந்தக் குரல் கேட்டது. இருவரும் சுவற்றில் சாய்ந்தபடி அந்தப் பேச்சுக் குரலை கவனிக்க ஆரம்பித்தனர்.
“ஆமாம் சர்! அந்த ப்ளோர்ல தான் இருக்கேன். சீக்கிரம் முப்பத்தி ஆறாம் நம்பர் ரூமுக்கு போய்டுவேன்.”
“…”
“ஒன்னும் பிரச்சனை இல்லை சர். காரியத்தை முடிச்சதும் சொல்றேன்.”
“…”
“ம்ம், ஒகே சர்.”
கிசுகிசுப்பாக யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட மிதுன் தம்பதியர், காரியம் என்ன என்பதைக் கணித்து அதிர்ந்தவர்கள், வேக நடையுடன் திருப்பத்தில் திரும்பி பார்க்க, வராண்டாவில் யாரையும் காணவில்லை.
“என்ன மிதுன், யாரையும் காணோம்?!”
“தெரியல, சரி வா வராண்டா கடைசி வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வருவோம்,” சொல்லிவிட்டு மனைவியுடன் வேகவேகமாக அந்த வராண்டா முழுவதும் இருந்த அறைகள் ஒவ்வொன்றின் நம்பரையும் பார்த்துக்கொண்டே வந்தான் மிதுன்.
முஹூம்! முப்பத்தியாறாம் எண் கொண்ட அறை இந்தப் பகுதியில் இல்லை. வராண்டாவின் கடைக்கோடியில், மற்றொரு திருப்பம் இருக்க, வேகமாக அங்கே சென்று திரும்பி பார்க்க, அதன் கடைக்கோடியில் யாரோ திரும்புவது தெரிந்தது.
போகும் அவன் தான் சற்று முன்பு பேசிய குரலுக்குச் சொந்தக்காரன் என்று புரிந்து கொண்ட மிதுன் தம்பதியர், அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
[the_ad id=”6605″]
அவர்கள் நேரம் மறுபடியும் அவனைத் தவறவிட்டனர். அவனைப் பின் தொடர்வது சரி வராது என்று முடிவு செய்துகொண்டு, தாங்களே எப்படியோ அவசர சிகிச்சை பிரிவு இருக்கும் தளத்தில் வந்து சேர்ந்தவர்கள், எதிரில் வந்து கொண்டிருந்த நர்சிடம் முப்பத்தி ஆறு எண் கொண்ட அறை எங்கே என்று கேட்க, “நேர போய் லெப்ட்ல திரும்புங்க, லாஸ்ட் ரூம்.” அவர் சொல்லிவிட்டுச் சென்றதும், நிலைமையின் விபரீதம் அறிந்து, தங்களது நடையைத் துரிதப்படுத்தினர்.
அதோ தூரத்தில் 36 எண் போட்ட அறை தெரிந்தது. இவர்கள் வேகமாக அறையை நெருங்குவதற்கு முன்பு, யாரோ ஒருவன் உள்ளே இருந்து, பதற்றத்துடன் வெளியேறியதை பார்த்தனர்.