இந்த அறையில் தான், அவர்கள் தேடி வந்த பெண் இருக்கிறாள் என்பதை அவர்கள் அறிந்திருந்ததால், உடனே சுதாரித்துக்கொண்ட மிதுன், “நீ உள்ள போய் எனன் ஆச்சுன்னு பாரு. நான் போய் அவனைப் பிடிக்குறேன்.” சொல்லிவிட்டு, அவன் அங்கிருந்து சென்றுவிட, புயலென அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா.
அறைக்குள் செல்ல, இருட்டாக இருந்தது. உடனே டார்ச் வெளிச்சத்துடன் லைட்டை கண்டுபிடித்துப் போட, அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து போனாள்.
கட்டிலில் ‘அவள்’ படுத்திருக்க, ஆக்சிஜென் சிலிண்டர் வயர் அறுந்து கிடக்க, சுவாச காற்று கிடைக்காததால், அவளின் நெஞ்சு கூடு வேகமாக ஏறி ஏறி இறங்கியது.
அவளின் நிலையைப் பார்த்ததும், தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்த சஞ்சனா, முடியாது போக, யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று, அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவள் நல்ல நேரம், நர்ஸ் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்.
“நர்ஸ்!!” என்று சஞ்சனா கத்திய கத்தலில், அவர் நின்று திரும்பி பார்க்க, அதற்குள் அவர் பக்கத்தில் வந்துவிட்டவள், “ரூம் நம்பர் 36 பேஷண்ட்டுக்கு சீரியஸா இருக்கு. மூச்சு விட முடியாம கஷ்டபடுறாங்க.” என்று சொல்ல, அவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
வேகமாகச் சஞ்சனாவுடன் அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தவர், அவளின் நிலைமையைப் பார்த்துவிட்டு, “டாக்டர்!” என்ற அலறலுடன் வெளியே ஓடினார்.
அதன்பின் அந்த மருத்துவமனையையே விழித்துக்கொண்டது. எங்கிருந்தோ இரண்டு மூண்டு மருத்துவர்கள் அவள் இருக்கும் அறைக்கு வந்து சேர, அவளைக் காப்பாற்றும் வேலைகள் துரிதமாக ஆரம்பமானது.
இங்கே, அந்த ஆசாமியை துரத்திக்கொண்டு சென்ற மிதுன், அவன் படிகளில் இறங்குவதைப் பார்த்துவிட்டு, வேகமாக அவனைப் பின்தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அவனை நெருங்கிவிட்ட மிதுன், “ஏய்! நில்லு!” என்றபடி, அவன் சட்டையின் பின்பக்க காலரை இழுத்து பிடிக்க, அடுத்த நொடி மின்னல் வேகத்தில் திரும்பிய அந்த ஆசாமி, மிதுனின் மூக்கில் ஒரு குத்து விட, அந்த அடியில் மூளை வரை சுர்ரென்று ஒரு வலி உண்டாக, மிதுனின் பிடி தளர்ந்தது. இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மிதுனை தள்ளிவிட்டுவிட்டு, அவன் ஓடிவிட்டான்.
சில நொடிகள் தான் மிதுன் வலியில் தடுமாறி நின்றது, ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவன், வேகவேகமாகப் படிகளில் இறங்கி, மருத்துவமனை பின்பக்கம் இருந்த வண்டி நிறுத்தும் இடத்திற்கு வர, தூரத்தில் அவன் பைக்கில் செல்வது தெரிந்தது.
[the_ad id=”6605″]
“ச்சே!! தப்பிச்சிட்டான்.” சொல்லிவிட்டு திரும்பிய மிதுனின் கண்களில், அவன் விட்டுச் சென்ற அந்தப் பொருள் பட்டது.
மேலே, அவள் இருந்த அறையில், மருத்துவர்களின் உதவியினால், சிறிது நேரத்தில் அவளின் பல்ஸ் சரியாகி நிலைமை சீராக, அவள் காப்பாற்றப்பட்டாள்.
அதே நேரம், மிதுனும் அங்கு வந்து சேர்ந்தான்.
“அவனைப் பிடிக்க முடிஞ்சுதா?!” சஞ்சனா, கணவனின் காதை கடிக்க, அடுத்து அவன் சொன்ன செய்தியில், அவள் கண்கள் ஒளிர்ந்தது. ஆனால் அவனோ, “போலீஸ் கிட்ட சொல்ல வேண்டாம்.” என்று சொன்னதை ஏற்றுச் சம்மதமாகத் தலை அசைத்தாள்.
இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, “இவங்க தான் டாக்டர், பார்த்துட்டு சொன்னது!” நர்ஸ் சொல்ல, அவர்கள் இருவரையும் நெருங்கினார் தலைமை மருத்துவர்.
“நீங்க யாரு? டாக்டர் கோர்ட் போட்டு இருக்கீங்க, உங்களை இங்க பார்த்தது இல்லையே?!” தலைமை மருத்துவர் கேள்வியாக இருவரையும் பார்க்க, சஞ்சனாவை திரும்பி ஒரு பார்வை பார்த்த மிதுன், “நாங்க டாக்டர்ஸ் இல்லை. ப்ரெஸ்.” என்று தயக்கத்துடன் பதில் சொன்னான்.
மிதுன் ‘தாங்கள் பத்திரிக்கை துறை’ என்று சொன்னதும், அதிர்ந்து போனார் தலைமை மருத்துவர். ஏனெனில் அவள் காவல்துறை கண்காணிப்பில் அட்மிட் செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளி. அவள் இங்கு இருக்கும் விஷயம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கோபமடைந்தவர், மொபைலை எடுத்து உடனே சுதர்ஷனுக்கு ஃபோன் போட்டார்.
ஒரு கேஸ் விஷயமாக ஸ்டேஷனில் தன் அறையில் அமர்ந்து ஃபைலை புரட்டிக்கொண்டிருந்த சுதர்ஷன், மொபைல் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான். திரையில் ‘ஜி.எச் டீன்’ என்ற பெயர் ஒளிர, பதற்றத்துடன் ஃபோனை ஆன் செய்து பேசினான்.
“ஹலோ! டாக்டர்!”
“ஹலோ சுதர்ஷன் சர்?!”
“ஆமாம் நான் தான் பேசுறேன். என்ன விஷயம் டாக்டர்?”
அவன் கேட்டதும், படபடவென நடந்ததை அவர் சொல்ல,
“வாட்!!” என அதிர்ந்து போனான் சுதர்ஷன்.
“எப்படி நடந்துச்சுன்னு தெரியல acp சர். ஆனா இங்க ப்ரெஸ்ன்னு சொல்லிட்டு ரெண்டு பேர் வந்திருக்காங்க. அவங்களுக்கு எப்படி இந்த விஷயம் லீக் ஆச்சுன்னு தெரியல.”
“நீங்க அவங்க ரெண்டு போரையும் அங்கேயே இருக்கச் சொல்லுங்க. நான் இதோ வரேன். அவங்க ரெண்டு பேரும் எங்கையும் போகக் கூடாது. அது உங்க பொறுப்பு.” வேகவேகமாகக் கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, தன் தொப்பியை மாட்டிக்கொண்டு காவல் நிலையத்தில் இருந்து புயலெனப் புறப்பட்டான் சுதர்ஷன்.
மருத்துவர் அங்கேயே இருக்கச் சொல்லிவிட, வேறு வழியின்றி அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டனர் மிதுனும் சஞ்சனாவும். அவர்களைக் கண்காணிக்கவென, பக்கத்தில் இரண்டு வார்ட் பாய்ஸ்.
சிறிது நேரத்தில் ஜி.எச் வந்து சேர்ந்தான் சுதர்ஷன். பதற்றத்துடன் விறுவிறுவென்று மருத்துவர் சொன்ன தளத்திற்கு வந்தவனின் கண்களில் முதலில் விழுந்தது பெஞ்சில் அமர்ந்திருந்த மிதுனும், சஞ்சனாவும் தான். மிதுனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தாலும், அப்போதையைச் சூழ்நிலையில் அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு, அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
“வாங்க சர்!”
படுத்திருக்கும் அவளைப் பார்த்தான். சற்றே முகமெல்லாம் வேர்த்திருந்தது அவளுக்கு. நேற்று மாலை தான் ஆபரேஷன் நடந்து முடிந்திருந்தது. இன்று வரை அவள் கண் முழிக்கவில்லை. அதுக்கே அவன் சஞ்சலம் அடைய, மருத்துவர் தான், “கோமா மாதிரி எல்லாம் எதுவுமில்லை சர். அவங்க மூளை ஆக்டிவ்வா தான் இருக்கு. மயக்கம் தான். சிலர் கண்முழிக்க நாள் ஆகும்.” என்று சொல்லி இருந்தார்.
இதில் ‘கொலை முயற்சி வேறா?!’ மண்டை வெடித்தது அவனுக்கு.
“எப்படி நடந்துச்சு? உங்க ஸ்டாஃப் யாரும் பேஷண்ட் பக்கத்துல இல்லையா?” சற்றே கோபமாக அவன் கேட்க,
“நர்ஸ் ஒருத்தவங்க கூடவே தான் இருந்தாங்க. கொஞ்ச முன்னாடி தான், டி குடிக்கப் போயிருக்காங்க. அந்தக் கேப்ல…” குற்ற உணர்ச்சியுடன் அவர் பேச்சை நிறுத்திக்கொள்ள, சுதர்ஷன் மேற்கொண்டு ஒன்றும் சொல்ல வில்லை.
பின்னே, அவனும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். ஷிஃப்ட் மாற்றி ஷிஃப்ட் மாற்றி ஆட்கள் அவளைக் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். காவல்துறையைப் போலத் தானே மருத்துவத் துறையும், ஒரு நொடி கண்மூட நேரமில்லாத ஓயாத உழைப்பு. சற்றுப் புத்துணர்ச்சி செய்துகொள்ளத் தானே வேண்டும்.
“இப்போ ஆபத்து எதுவும் இல்லையே?!” கட்டிலில் படுத்திருப்பவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவன் கேட்க,
“இல்லை சர். ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர். வெளியே இருக்காங்களே அவங்க தான் முதல்ல பார்த்துட்டுச் சொன்னது. அவங்க சரியான நேரத்தில சொன்னதுனால தான், பேஷண்ட்டை காப்பாத்த முடிஞ்சுது. ஆனா அவங்க ப்ரெஸ்ன்னு சொன்னதும் தான், உங்களுக்குச் சொல்ல வேண்டியதா போச்சு.” மருத்துவர் பதில் சொல்ல, நின்று சில நிமிடங்கள் அவளின் முகத்தைப் பார்த்தவன், பின் வெளியே வந்தான்.
[the_ad id=”6605″]
அறையை விட்டு சுதர்ஷன் வெளியே வரவும், இருக்கையில் இருந்து எழுந்து கொண்டனர் மிதுனும், சஞ்சனாவும்.
“உங்கள்ள யார் முதல்ல பார்த்தது?!” சுதா கேட்கவும், “நாங்க ரெண்டு பேரும் தான் சர். என்றான் மிதுன்.
“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?!” மிதுனை பார்த்து அவன் கேள்வி கேட்க,
சற்று தயங்கிய மிதுன், தான் வேலை செய்யும் தொலைகாட்சியின் பெயரை சொல்லி, “அங்க ரிப்போர்ட்டரா இருக்கேன் சர். அன்னைக்கு இவங்களை நீங்க தூக்கிட்டு வந்தப்போ ப்ரெஸ் பீப்பிளால பிரச்சனை வந்துதே, அன்னைக்கு என்னைப் பார்த்தீங்க.” அன்றைய நாளின் நிகழ்வை இவன் விளக்க,
“எஸ்! எஸ்! அன்னைக்கு உங்களைப் பார்த்துத் தேங்க்ஸ் சொன்னேன்.”
“ஆமாம் சர்.”
“சரி இவங்க யாரு?” சஞ்சனாவை சுட்டிக்காட்டி அவன் கேட்க,
“என்னோட வைஃப் சர்.” என்றவனின் குரலில் கலக்கம் இருந்தது. எங்கே, சஞ்சனா எங்கே வேலை செய்கிறாள்? இங்கு என்ன செய்கிறாள்? என்று சுதர்ஷன் கேள்வி கேட்பானோ என்ற பயம். ஆனால் அவன் பயந்தது போல, சுதா மேற்கொண்டு அவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
“அது இருக்கட்டும். நீங்க எப்படி இங்க வந்தீங்க? இங்க என்ன நடந்துச்சு? வந்தவன் யாருன்னு அடையாளம் தெரியுமா?” அடுக்கடுக்காக அவன் கேள்விகளைக் கேட்க, சற்று முன்பு நடந்தவற்றைச் சொன்ன மிதுன், “நான் அவனைப் பிடிக்க ட்ரை பண்ணேன். என்னை அடிச்சிட்டு அவன் ஓடிட்டான் சர்.” என்றான் அதன்பின்பு நடந்தவற்றை மறைத்து.
“ஓஹ்!” யோசனையில் ஆழ்ந்த சுதா பின், “உங்களுக்கு எப்படி இந்தச் சீக்ரெட் ட்ரீட்மெண்ட் பத்தி தெரியும்?” அடுத்தக் கேள்வி அவனிடம் இருந்து வர, பதில் சொல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தனர் இருவரும்.
அவர்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த சுதாவிற்கு, பின் என்ன தோன்றியதோ, “இனி உங்களை இந்தப் பக்கம் பார்க்கக் கூடாது. இதுக்கு அப்புறம் அவனை எங்கையாவது பார்த்தீங்கன்னா எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும். அத்தோட, இந்த இன்சிடென்ட் சம்பந்தமா ஏதாவது விசாரணைனா, கூப்பிட்டதும் ஸ்டேஷன் வரணும்.” என்று வரிசையாகக் கட்டளையைப் பிறப்பிக்க, ‘சரி’ எனத் தலையாட்டினர் இருவரும்.
அடுத்து மிதுனையும், சஞ்சனாவையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு, கமிஷனருக்கு நடந்தவற்றை ஃபோனில் கூறினான்.
கேட்டு அவரும் அதிர்ந்து போனார். “அவங்க ஒரு மெண்டலி அன்ஸ்டேபில் பேஷண்ட். அவங்களை எதுக்காகக் கொல்ல ட்ரை பண்ணனும்?”
“அது தான் எனக்கும் யோசனையா இருக்கு சர். ஆரம்பத்தில இருந்தே இவங்க கேஸ்ல ஏதோ பிரச்சனை இருக்கு.”
“எஸ்!”
“சர், வித் யூர் பெர்மிஷன், பேஷண்ட் பாதுகாப்புக்கு ரெண்டு கான்ஸ்டபிள் போடணும். அது தான் சேஃப்.”
[the_ad id=”6605″]
“போட்டுடுங்க சுதர்ஷன்.”
“தேங்க் யு சர்!”
“அவங்க ரிலேட்டிவ் வந்துட்டாங்களா?”
“இதுவரைக்கும் வந்திருக்கிற ரிலேடிவ்ஸ் வச்சு, ஓர் அளவுக்கு ஆட்களை அடையாளம் கண்டுபிடிச்சிட்டு இருக்கோம் சர். இன்னும் கொஞ்சம் பேர் வரணும். எப்படியும் நாளைக்குள்ள முடிஞ்சிடும் சர்.”
“ஒகே சுதர்ஷன். சீக்கிரம் அவங்களைப் பத்தின பேக்ரௌண்ட் கண்டுபிடிங்க. ரெஜிஸ்டர வச்சு பேர் தான் கண்டுபிடிக்க முடிஞ்சது. மத்தபடி வேற டீடைல்ஸ் ஒன்னும் கண்டுபிடிக்கல இன்னும்.”
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் சுதர்ஷன்.
பேசிவிட்டு கமிஷனர் வைத்துவிட, நேற்று மனநல மருத்துவமனையில், அவள் வார்டில் பொறுப்பில் இருந்த மருத்துவரின் உதவியுடன் அவளை அடையாளம் கண்டு, பேரை கண்டுபிடித்த தருணம் இப்பொழுது நினைவுக்கு வந்தது.
அவள் பெயர் ‘மாதுரி’
அட்மிட் செய்திருந்தவரின் பெயர், ‘சித்தார்த்’ தற்பொழுது குஜராத்தில் இருக்கிறார். அவருக்கு விவரம் சொல்லிவிட்டதாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் அவர் வந்து சேரவில்லை. ‘நாளை விடிந்ததும் அவரைத் தொடர்புகொண்டு கேட்க வேண்டும்.’ மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டவனின் கண்கள், கீழே பார்க்கிங்கை பார்த்தது.
அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து பார்த்தால், மருத்துவமனை பின்பக்கம் தெரியும்.
கீழே பார்கிங்கில், மிதுன் தனது பைக்கை கிக் செய்து ஸ்டார்ட் செய்ய, சஞ்சனா பின்பக்கம் ஏறி அமர்ந்துகொள்ள, பைக் மருத்துவமனைக் காம்பவுண்ட்டை விட்டு புயலென வெளியேறிது.
போகும் இருவரையும், சுதர்ஷனின் பார்வை கூர்ந்து கவனித்தது.