அத்தியாயம் 5
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மிதுனையும், சஞ்சனாவையும் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சுதர்ஷன், பாக்கெட்டில் இருந்து தனது செல்ஃபோனை எடுத்தவன், இன்ஸ்பெக்டர் பரத்துக்கு அழைத்தான்.
“சொல்லுங்க சர்!”
“24×7 நியுஸ் சேனல்ல வேலை பார்க்கிற மிதுனையும் அவரோட வைஃபையும் கண்காணிக்க, நம்ம கான்ஸ்டபிள் லோகநாதனை நாளையில இருந்து போகச் சொல்லிடுங்க பரத்.”
“ஒகே சர்! ஏன் சர், ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல பரத். சும்மா தான்.”
“ஒகே சர்.” பரத் ஃபோனை வைத்ததும், ரோட்டை வெறித்துக் கொண்டிருந்த சுதர்ஷன், மருத்துவர் அழைக்கவும், அங்கிருந்து நகர்ந்தான்.
இங்கே மருத்துவமனையை விட்டு வெளியேறிய மிதுன், சிறுது தூரம் சென்றதும், ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தினான். நிறுத்தியவன், திரும்பி போலீஸ் வாகனம் தங்களைப் பின்தொடர்கிறதா என்று பார்த்து, இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டதும், தன் பாக்கெட்டில் இருந்து சற்று முன்பு அந்தக் கொலைகாரன் விட்டுச் சென்ற அந்தப் பொருளை வெளியே எடுத்தான்.
அது ஒரு விசிட்டிங் கார்ட்!
“டேய்! இதைத் தான் அந்த மர்டரர் விட்டுட்டு போனானா?!”. மிதுன் கொடுத்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு சஞ்சனா ஆர்வமாகக் கேட்க,
“ஆமாம் டி!”
“இதை அவன் தான் விட்டுட்டு போனான்னு உனக்கு எப்படிக் கன்ஃபர்மா தெரியும்? வேற யாராவது கூட விட்டுட்டுப் போயிருக்கலாம் இல்லையா?”
“இல்ல சஞ்சு. இது அவன் விட்டுட்டுப் போனது தான். இதுக்குக் காரணம் ரெண்டு விஷயம்.”
“ரெண்டு விஷயமா?!”
“ஆமாம்! ஒன்னு, இந்தக் கார்ட் கிடந்த இடத்தில ஒரு கல் கிடந்துச்சு. நாம வரும்போது அந்தக் கல்லுல தான் என் கால் இடிச்சுடுச்சு. இடிச்சப்போ அங்க எதுவும் கிடக்கல. அது எனக்குச் சியுரா தெரியும். ரெண்டாவது. அந்தக் கார்டோட மேல்பகுதியில பாரு, ரத்தக் கரை இருக்கு.”
மிதுன் சொன்னதும் அவசர அவசரமாகக் கார்டை பார்த்தாள் சஞ்சனா. அவன் சொன்னது போலவே, கார்டில் மேல் பகுதியில் ரத்தக் கரை படிந்திருந்தது.
“பார்த்தியா சஞ்சு?”
“ஆமாம் டா. ரத்தக் கரை இருக்கு!”
“அதுவும் சரியா பேரை மறைச்சிடுச்சு.”
“ஆமாம்!” வருத்தமாக அவள் சொல்ல,
“அவனை நான் பிடிக்க முயற்சி செஞ்சப்போ, அவன் என்னை அடிச்சான். அப்போ, அவன் கையில என்னோட ரத்தக்கறை படிஞ்சிருக்கு. அது தெரியாம, கையைத் துடைக்கப் பாக்கெட்டில இருந்து கர்ச்சீப்பை எடுத்தப்போ, அவன் கை பட்டு இந்தக் கார்ட் கீழ விழுந்திருக்கணும்.”
“ஹே! சூப்பர் டா! சரி, இப்போ அடுத்து என்ன பண்ணப் போறோம்?”
“கார்ட்ல போட்டு இருக்கிற அட்ரசை படி.”
“நம்பர் 22/78, சந்திர விலாஸ், முட்டுக்காடு, ECR.”
“இப்போ அங்க தான் போகப் போறோம்.”
“இப்போவா?! அதுவும் இந்த அர்த்த ராத்திரிலையா?” அதிர்ச்சியுடன் சஞ்சு கேட்க,
“ஆமாம்! இப்போ தான். அனேகமா, இந்த அட்ரெஸ்ல இருக்கிறவங்க தான் அவனைக் கொல்ல அனுப்பி இருக்கணும். அது உண்மைனா, இந்நேரம் அந்த ஆள் காரியத்தை முடிச்சிட்டு விஷயத்தைச் சொல்ல அங்க போவான்.”
“என் புருஷன், புத்திசாலி புருஷன்!” என்று பதில் சொன்னவள் கணவனுக்குத் திருஷ்டி கழிக்க,
“இப்போ மட்டும் திருத்தி கழி, இல்லனா மட்டும் கரிச்சுக் கொட்டு.” முகத்தைத் தூக்கினான் மிதுன்.
“அது வேற வாய், இது….” அவள் சொல்லி முடிப்பதற்குள், இடைபுகுந்த மிதுன், “நார வாயா?!” என்று சொல்லிவிட்டு சிரிக்க, அவன் முதுகில் அடித்தாள் சஞ்சனா.
“சரி! சரி! போதும் விளையாண்டது. அந்த ஆள் எஸ்கேப் ஆகிட போறான். சீக்கிரம் போய்ப் பிடிப்போம்.” சஞ்சனா சொன்னதும், வண்டியை ஸ்டார்ட் செய்து பறக்கவிட்டான் மிதுன்.
ட்ராபிக் இல்லாததால், பைக்கை வேகமாக ஒட்டிய மிதுன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இருக்கும் பார்க் டவுன் பகுதியில் இருந்து முட்டுக்காடு பகுதிக்கு அரை மணிநேரத்தில் வந்து சேர்ந்தான்.
கூகிள் மேப் உதவியுடன் அந்தப் பங்களா இருக்கும் பகுதிக்கு வந்தவன், அந்த வீட்டின் காம்பவுண்ட் வெளியே இருந்த அடர்ந்த மரத்தின் அடியில் பைக்கை நிறுத்தினான்.
நிறுத்திவிட்டு, காம்பவுண்ட் சுவற்றில் கைவைத்து லேசாக எட்டிப் பார்த்தான் மிதுன். நீச்சல் குளத்தைக் கொண்ட மிகப் பெரிய வில்லா அது. சுவற்றை ஒட்டி, நிறைய மரங்களும் செடிகளும் இருக்க, இவன் இங்கே எட்டி பார்ப்பது உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியவில்லை.
“யாராவது தெரியுறாங்களா?” கணவனின் ஜீன்சை பிடித்து இழுத்தப்படி சஞ்சனா கேட்க, எங்கே ஜீன்ஸ் அவிழ்ந்துவிடுமோ என்ற பதற்றத்தில் சட்டென்று கையைவிட்டுவிட்டு இறங்கினான் மிதுன். அதைப் பார்த்துச் சத்தமில்லாமல் சிரித்தாள் சஞ்சு.
அவளை முறைத்தவன், “உள்ள யாரையும் காணோம். நாம இப்படியே இந்த மரத்துக்கு அடியில ஒளிஞ்சு நிப்போம். எப்படியும் அவன் வீட்டை விட்டு வெளியே வருவான்.”
“அதுக்கு அப்புறம் என்ன பண்ண போறோம்?!”
“அவனைப் பாலோவ் பண்ணி, அவன் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். அவன் மட்டும் தனியா இருக்கிற மாதிரி தெரிஞ்சா, இப்போவே அவனை மடக்கி பிடிக்க வேண்டியது தான்.”
மிதுன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, ஏதோ வண்டி வரும் சத்தம் கேட்கவும், இருவரும் மரத்துக்கு அடியில் பதுங்கினர். தூரத்தில் வந்த ஒரு கார், வேறு ஏதோ ஒரு பங்களாவுக்குள் நுழைந்தது. அதைப் பார்த்த பின்பே இருவருக்கும் மூச்சே வந்தது.
அதன்பின் அந்தக் கொலைகாரன் வெளியே வருவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர் மிதுனும், சஞ்சனாவும்.
பங்களாவின் உள்ளே..!
தனக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்தவனிடம் பேசிக் கொண்டிருந்தான் நந்தா.
“போன காரியம் வெற்றி தானே?!
“பக்கா வெற்றி சர். யாரும் பாக்குறதுக்கு முன்னாடி, ரூமுக்கு போனேன். அந்தப் பொண்ணு தூங்கிட்டு இருந்துச்சு. நீங்க சொன்ன மாதிரியே, கத்தியை வச்சு, அது மூக்குக்குள்ள போயிட்டு இருந்த வயரை கட் செஞ்சுட்டேன். அடுத்தச் செகண்ட் அந்தப் பொண்ணோட உடம்பு துடிக்க ஆரம்பிச்சது. சத்தம் போடாம அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.”
“உன்னை யாரும் பார்க்கலையே?!”
“இல்ல சர்! யாரும் பார்க்கல. காரியத்தை முடிச்சதும் சத்தமில்லாம கிளம்பி வந்துட்டேன்.”
“சபாஷ்! சரியான காரியம் செஞ்ச!”
“நாம பேசிகிட்ட அமௌன்ட்டுடு….” அவன் இழுக்க, அந்த நேரம் நந்தாவின் அறைக்குள் இருந்து தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது.
“ஒரு நிமஷம் வெயிட் பண்ணு. இதோ வரேன்.” சொலிவிட்டு எழுந்து மாடியில் இருந்த அறைக்குச் சென்றான் நந்தா.
அறையில் கட்டிலின் பக்கத்தில் இருந்த சைட் டேபிளில் அடித்துக்கொண்டிருந்த தொலைபேசியின் ரீசிவரை எடுத்து காதுக்குக் கொடுத்த நந்தா,
“சொல்லு! உன் ஃபோன் காலை தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்.” எனக் குரலை தாழ்த்திக்கொண்டு கேட்க,
அந்தப் பக்கம், “அந்தப் பொண்ணு பிழைச்சுகிட்டா சர்.” மருத்துவமனையிலிருந்து நந்தாவின் ஆள் சொல்ல,
“வாட்!!” அதிர்ந்து போனான் இவன்.
“ஆமாம் சர்.”
“எப்படி?!”
“தெரியல சர், யாரோ பத்திரிக்கைகாரனும் அவனோட வைபும் நம்ம ஆள் ரூம் உள்ள இருந்து வெளியே போறதை பார்த்துட்டுச் சத்தம் போட்டு இருக்காங்க. உடனே சீஃப் டாக்டர் எல்லாரும் வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்து அந்தப் பொண்ணைக் காப்பாத்திட்டாங்க.”
“நம்ம ஆளை அந்த ப்ரெஸ்காரன் பார்த்துட்டானா?”
“ஆமாம் சர்! நம்ம ஆளை பிடிக்க அந்த ப்ரெஸ்காரன் ட்ரை செஞ்சு இருக்கான். ஆனா பிடிக்க முடியலையாம். அவனே சொன்னான்.”
“பாஸ்டர்ட்! என்கிட்டையே பொய் சொல்லி இருக்கான்.” கீழே இருந்தவனைத் திட்டிய நந்தா, “சரி, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்.” சொல்லிவிட்டு வைத்தவனின் கண்கள், சற்று தள்ளி இருந்த பீரோவை வெறித்தது.
தன் கையில் இருந்த செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அந்தக் கொலையாளி, சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். கையில் மது பாட்டிலுடன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் நந்தா.
“ஒரு அர்ஜென்ட் ஆபிஸ் கால்.” புன்னகையுடன் சொன்ன நந்தா, கையில் இருந்த பாட்டிலை டேபிள் மீது வைத்துவிட்டு, ஹாலின் ஓரத்தில் இருந்த ஷெல்பில் இருந்து கண்ணாடி க்ளாஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.
அந்த உயர்ரக மதுபான பாட்டிலை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த கொலையாளியை, கோபத்துடன் முறைத்துப் பார்த்த நந்தா, அவன் தன்னை நிமிர்ந்து பார்க்கவும், கோபத்தை மறைத்துக்கொண்டு, சிரித்தவன் தான் கொண்டு வந்த மதுவை க்ளாசில் ஊற்றி, அதை எடுத்து அவனுக்குக் கொடுத்தான்.
“சார்ர்….” குடிக்கும் ஆசை இருந்தும், நந்தாவிற்காக அவன் தயங்க,
“ம்ம், பரவால குடி!” அவன் கையில் க்ளாசை திணித்தான் நந்தா. ஆசையுடன் வாங்கியவன், கடகடவெனக் குடிக்க, “மெதுவா குடி. ஃபாரீன் பிரான்ட். ரசித்துக் குடிக்கனும். அப்போதான் டேஸ்டா இருக்கும்.” அக்கறையுடன் சொன்னான் நந்தா. பதிலுக்கு அசடு வழிய சிரித்தான் அவன்.
இப்படியே மூன்று க்ளாஸ் உள்ளே போக, “நீங்க குடிக்கலையா சர்?!” லேசாகத் தலைக்கு ஏறிய போதையுடன் அவன் கேட்க, “நீ வர்றதுக்கு முன்னாடி தான் நான் குடிச்சேன். பரவால்ல, நீ குடி.” நந்தா பதில் சொல்ல, “டாங்க்ஸ் சார்!” அசடு வழிந்தான் அவன்.
அவன்பாட்டுக்குக் குடித்துக்கொண்டிருக்க, “இப்போ கையில என்கிட்ட நீ கேட்ட அமௌன்ட் இல்லை. வேலை பிசில ஏடிஎம்ல இருந்து எடுக்க மறந்துட்டேன். நீ என்ன பண்ற, நாளைக்குக் காலையில ஒரு பதினோரு மணிக்கு இங்க வந்துடு. உனக்குப் பேசின அமௌண்டை கேஷா கொடுத்திடறேன்.”
“பரவாயில்லை சர். நீ நாளைக்கே கொடு. இம்மாம் உசத்தியான சரக்கை ப்ரீயா கொடுத்திருக்க. இதுவே நிறைய விலை இருக்கும் போலையே!” கண்கள் சொக்க அவன் கூறினான்.
மனதுக்குள் சிரித்துக் கொண்டான் நந்தா!
அடுத்தப் பத்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினான் அந்தக் கொலையாளி.
மரத்துக்கு அடியில், குச்சியைப் பிச்சுப்போட்டபடி, வெகு நேரம் காத்திருந்த மிதுன், கேட் திறக்கும் சத்தம் கேட்டு, சஞ்சனாவுடன் இன்னும் சற்று உள்ளே பதுங்கினான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, மருத்துவமனையில் பார்த்த அவன் வெளியே வந்தான்.
“இவனா அந்த ஆளு?!” கிசுகிசுப்பாகச் சஞ்சு கேட்க, ‘ஆமாம்’ எனத் தலை ஆட்டினான் மிதுன்.
சற்று நேரத்தில் அந்த ஆள் பைக்கில் கிளம்பி செல்லவும், சத்தம் போடாமல் தங்களது பைக்கில் அவனைப் பின் தொடர்ந்தனர் மிதுன் தம்பதியர்.
போகும் மிதுனை, தன் வீட்டு மாடியில் இருந்து முறைத்துப் பார்த்தான் நந்தா. வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், பின் மொபைல் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
“நான் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன். அவங்க ரெண்டு போரையும் முடிச்சிடு!”
“…”
“யாருக்கும் தெரியக்கூடாது. ஆக்சிடென்ட் மாதிரி செட் செஞ்சிடு.”
“…”
“சரி. நான் வச்சுடறேன்.” சொல்லிவிட்டு வைத்தவன், தனது மொபைலில் இருந்த புகைப்படத்தை முறைத்துப் பார்த்தான்.
அது, சற்று முன்பு மிதுனும் சஞ்சனாவும், அவன் பங்களாவை கடக்கும்போது நந்தா தனது மொபைலில் எடுத்தது. அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாததாலும். நந்தா எடுக்கும் நேரம் சரியாக அவர்கள் தெருவிளக்கை கடந்து சென்றதாலும், அவர்களின் முகம் தெளிவாகவே விழுந்திருந்தது.
இதற்குத் தான் அரசாங்கம் தலைகவசம் அணிய சொல்கிறது போல!
தலைகவசம் அணிவோம்! உயிரை காப்போம்! (நோ சிப்பு! சீரியஸ்!)
முன்னே செல்பவனின் கருத்தை கவராமல், மிதுன் அவனைப் பைக்கில் பின்தொடர, அடையாரின் அருகில் இருக்கும் அந்தக் குடிசை பகுதிக்குள் சென்றது அவனின் பைக்.
குடிசை பகுதி என்பதால், தெருவிளக்கு இல்லாமல், தெரு இருட்டாக இருக்க, மிதுனும் தனது பைக்கின் லைட்டை அணைத்தவன், என்ஜின் சத்தத்தைக் குறைப்பதற்காக வண்டியை மெதுவாக ஓட்டினான்.
ஒருவழியாக அந்தத் தெருவுக்குள் இருந்த அந்த ஓடு போட்ட வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான் அவன். அவன் வண்டியின் ஸ்பீடை குறைத்ததுமே, மிதுன் தன் வண்டியை பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் ஓரம் கட்டிவிட்டான்.
வண்டியை நிறுத்திவிட்டு மறைந்துகொண்ட இருவரும் அவன் குடிசைக்குள் செல்வதைப் பார்த்துவிட்டு, தெருவுக்குள் இறங்கி நடந்தனர்.
ஐந்து நிமிடத்தில் அவன் வீட்டின் முன்பு சென்று நின்றவர்கள், சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெதுவாகத் திண்ணையில் ஏறி நின்று, ஜன்னல் வழியே உள்ளே பார்த்தனர்.
அடுத்த நொடி இருவரும் அதிர்ந்து இரண்டடி பின்னே வந்தனர்.
உள்ளே தரையில், வாயில் ரத்தம் வழிய கீழே விழுந்து கிடந்தான் அந்தக் கொலைகாரன். அவன் கருவிழிகளோ ஜன்னல் கம்பிகளைப் பிடித்தப்படி நின்றிருந்த மிதுனையும் சஞ்சனாவையும் வெறித்தது.
“என்ன மிதுன் இது?!”
சற்று முன்பு கண்ட காட்சியில், திகிலடைந்திருந்த சஞ்சனா, நெஞ்சை பிடித்துக்கொண்டு மூச்சு வாங்க கேட்க,
“போலீஸ்ல இவன் மாட்டிக்கக் கூடாதுன்னு விஷத்தை கொடுத்திருக்காங்க.” சரியாகக் கணித்தான் மிதுன்.
ஆம்! மருத்துவமனையில் இருந்த தன் ஆள் மூலம், விஷயத்தைத் தெரிந்துகொண்ட நந்தா, அந்தக் கொலைகாரனை கொல்வதற்காக, தனது பீரோவில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து, அதை மது பாட்டிலில் கலந்திருந்தான். அந்த மதுவைத் தான், கிளம்பும் முன் நந்தா அவனுக்குக் குடிக்கக் கொடுத்தது. நந்தா கலந்தது ஸ்பீட் பாய்ஸன் என்பதால், சிறிது நேரத்தில் அவனைக் கொன்றுவிட்டது.
“இப்போ என்ன செய்றது?!” திரும்பி வீட்டை பார்த்த சஞ்சு, கணவனின் கையைப் பற்றியபடி கேட்க, யோசனையில் ஆழ்ந்தான் மிதுன்.
பின், “சத்தம் போடாம, இங்க இருந்து கிளம்பிடுவோம்.” என்றான் தீர்கமாக.
“போலீஸ்ல சொல்ல வேண்டாமா?!” குழப்பமாகக் கேட்டாள் சஞ்சு.
“வேண்டாம் சஞ்சு. இவனைப் பத்தி வெளிய சொல்றது ரெண்டு வகையில நமக்கு டேஞ்சர். ஒன்னு போலீஸ். ஹாஸ்பிட்டல்ல வச்சு நம்ம ரெண்டு பேரும் இனி இந்த விஷயத்தில தலையிட கூடாதுன்னு, கொஞ்ச முன்னாடி தானே acp சர் சொன்னாரு. இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா, நம்மளைத் தான் திட்டுவார். ரெண்டாவது, இவனை ஏவிவிட்ட அந்த ECR வீட்டுக்காரன். நாம இவனைப் பத்தி போலீஸ்ல சொல்லி, அது மூலமா நாம ரெண்டு பேரும் இந்த விஷயத்தில தலையிட்டு இருக்கிறது அவனுக்குத் தெரிஞ்சுது அவ்ளோதான். இவ்ளோ பெரிய ரௌடியையே ஈசியா கொன்றுக்கானா, நம்ம எல்லாம் அவனுக்குச் சர்வ சாதாரணம்.” படு சீரியசாகப் பதில் சொன்னான் மிதுன்.
“நீ சொல்றதும் சரி தான் டா…சரி வா, நாம உடனே இங்க இருந்து கிளம்புவோம்.” சஞ்சு அவசரப்படுத்த, திரும்பி வீட்டை ஒரு பார்வை பார்த்தபடியே தன் பைக்கை நோக்கி நடந்தான் மிதுன்.
ஆனால் அவனுக்குத் தெரியாது, சுதர்ஷன், நந்தா இருவருமே அவனுக்குக் குறி வைத்துவிட்டார்கள் என்று!
அடுத்த நாள், தன் அறையில் அமர்ந்திருந்தான் சுதர்ஷன். இன்ஸ்பெக்டர் பரத்தை கூப்பிட்டவன், மருத்துவமனையில் இருந்து மாதுரியின் அண்ணன், சித்தார்த்தின் செல்ஃபோன் எண்ணை கேட்டு வாங்கச் சொன்னான்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் பரத் எண்ணை வாங்கி வந்து கொடுக்க, தனது மொபைலில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தான் சுதர்ஷன். இரண்டாவது தடவை அழைப்பு ஏற்கப்பட,
“ஹலோ! சித்தார்த்?!”
“ஆமாம். நீங்க?!”
“நான் ACP சுதர்ஷன் பேசுறேன். உங்க சிஸ்டர் கேசை நான் தான் பார்த்துட்டு இருக்கேன்.”
“வணக்கம் சர்.”
“வணக்கம் சித்தார்த். நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு இன்ஃபர்மேஷன் சொல்லி ரெண்டு நாள் ஆச்சு. இன்னும் நீங்க வரல.”
“இங்க ஆந்திரால வாராங்கள் பக்கத்துல ஏதோ கலவரம்ன்னு ட்ரைன் நிறுத்திட்டாங்க சர். இதோ அதோன்னு இப்போ வரை ஆக்கிட்டாங்க. பஸ் பிடிச்சு தான் வரணும் சர்.”
“சரி, இப்போ எங்க இருக்கீங்க?”
“பஸ் ஸ்டேன்ட்ல தான் நின்னுட்டு இருக்கேன் சர்.”
“ஓஹ்!” என்று பதில் சொன்னவன், தன்னால் ஏதாவது செய்ய முடியுமா, என்று யோசித்தான். முஹூம்! தமிழகக் காவல்துறையாக இருந்துகொண்டு வேறொரு மாநிலத்திற்குள் நுழைவதே கஷ்டம். அதுவும் ஆந்திரா, கர்நாடாக்கா போன்ற மாநிலங்களுக்குச் செல்வது ரொம்பவே கஷ்டம், அவனின் உயர் அதிகாரிகளும் அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில்….
“சரி சித்தார்த். பார்த்து வாங்க. ஏதாவது ப்ராப்ளம்னா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க.”
“ஒகே சர்!”
“சரி வைக்கிறேன்.” சொல்லிவிட்டு, வைத்தவன், தனது வேலையில் மூழ்கினான்.
அலாரம் அடிக்க, சோம்பலுடன் எழுந்தான் மிதுன். அவனை இறுக கட்டிப்பிடித்தபடி தூங்கி கொண்டிருந்த சஞ்சனா, “கொஞ்ச நேரம் தூங்கு டா. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. நைட் வேற தூங்க விடல.” என்று சிணுங்கலுடன் கத்திவிட,
“அடிப்பாவி! கத்தாதடி. பக்கத்து வீட்டுக்காரங்க கேட்டா அசிங்கமா நினைக்கப் போறாங்க.” சொல்லிவிட்டு, மனைவியின் முதுகில் மிதுன் ஒரு போடு போட, அப்பொழுதுதான் தான் சொன்னதின் அர்த்தம் புரிய, அசடு வழிந்தாள் சஞ்சனா.
“சரி! சரி! சீக்கிரம் கிளம்பு.”
“எங்க டா?!”
“அந்த வீட்டோட ஓனர் யார்ன்னு கண்டுபிடிக்கணும்.”
“நீ, அந்தக் கேசை கண்டினியு பண்ணப்போறியா?!” சற்றே அதிர்ச்சியுடன் அவள் கேட்க,
“அடியே!! அவங்க பின்னால ஏதோ மர்மம் இருக்கு, மாங்காய் இருக்குன்னு சொல்லி என்னை உசுபேத்தி விட்டுட்டு, இப்போ என்ன பின்வாங்குற?!” கோபமானான் மிதுன்.
“ஹீ!!” என்று அசடு வழிந்த மனைவியைத் தலையணையால் அடித்தவன், எழுந்து குளிக்கச் செல்ல,
“அப்போ இன்னைக்கு நீ ஆபீஸ் போகலையா?!” பதிலுக்குக் கேட்டாள் சஞ்சனா.
“ஹனிமூன் போறோம்ன்னு சொல்லி, லீவ் சொல்லிட்டேன்.”
“ஹனிமூனா?!” அதிர்ச்சியான சஞ்சு, “நீயும் நானும் பிரிஞ்சு இருக்கோம்ன்னு ஊருக்கே தெரியும். அப்புறம் யார் கூட டா ஹனிமூனுன்னு சொன்ன?” கலவரத்துடன் கேட்க,
“வேற யாரு, என் ஆபீஸ்ல ஒருத்தி எப்போ பாரு, என்னைச் சைட் அடிச்சு உசுர வாங்குறாளே அந்த நிம்மி கூடத் தான். லிவ்வின் டுகெதர் மாதிரி, இது லிவ்வின் ஹனிமூன். பிடிச்சா கண்டினியு பண்ணலாம். வேண்டாம்னா பிரிஞ்சிடலாம். புதுக் கான்செப்ட்.” அவன் சிரஈபுடன் சொல்ல,
கணவன் தன்னை வெறுப்பேத்துவது புரிய, எழுந்து அடிக்க ஓடினாள் சஞ்சு. ஆனால் பாவம் இறுதியில் மூக்குடைந்து நின்றாள். பின்னே இவள் வருவதற்குள் தான் மிதுன், பாத்ரூம் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டானே!
சிரிப்பும், சண்டையுமாக, ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இருவரும், மிதுனின் பைக்கில் கிளம்பிச் சென்றனர்.
சென்னையின் பிசி ரோட்டில் அவர்கள் பயணிக்க, அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது ஒரு தண்ணீர் லாரி!