அத்தியாயம் 6
தங்களுக்குக் கிடைத்த விசிட்டிங் கார்டில் இருக்கும் வீட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்கவென, அடையாரில் உள்ள சார் பதிவாளர் அலுவகத்திற்கு, தன் பைக்கில் மனைவி சஞ்சனாவுடன் புறப்பட்டுச் சென்றான் மிதுன்.
அதே நேரம், வேறு இருவர் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
ஒன்று, நந்தா மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட லாரி டிரைவர், தனது லாரியில் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
மற்றொருவர், சுதர்ஷன் ஏற்பாடு செய்த கான்ஸ்டபிள் லோகநாதன்.
இது எதையும் அறியாமல், சஞ்சனாவுடன் சிரித்துப் பேசியபடி பயணித்துக் கொண்டிருந்தான் மிதுன்.
தன்னை ஏவிவிட்டவனிடம் செல்ஃபோனில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர், சிக்னலை கவனிப்பதற்குள், சிவப்பு சிக்னல் விழுந்துவிட, மிதுனின் பைக்கோ, சிக்னலை கடந்து அந்தப் பக்கம் சென்றிருந்தது.
“ச்சே! மிஸ் ஆகிட்டான்.” எரிச்சலுடன் டிரைவர் கத்த,
“என்ன ஆச்சு?” அந்தப் பக்கம், நந்தாவின் ஆள் கேட்க,
“சிக்னல் போட்டான் சார். பார்ட்டி மிஸ் ஆகிடுச்சு.”
“ஏன் டா! அவ்ளோ பெரிய லாரியை வச்சுக்கிட்டு, பைக்க அடிச்சு தூக்க உன்னால முடியலையையா. சரியான…”
“சும்மா திட்டாத சார். அவன் வண்டி சின்னது. பூந்து பூந்து போய்டுவான். என் வண்டி அப்படியா?”
“நல்லா வாய் பேசு, கோட்டைவிட்டுட்டு…”
“சார், அப்படி எல்லாம் இந்தக் கபாலி என்னைக்கும் எடுத்த காரியத்தை முடிக்காம விட மாட்டான். பார்ட்டி சாகனும், அவ்ளோதான சார். அதெல்லாம் முடிச்சிடலாம். எப்படியும் அவன் திரும்ப வரத்தான் செய்யணும். அவனை வேற வழியில போய் மடக்கி நசுக்கிட்றேன். நீ கவலைபடாத சார்.”
“என்னத்தையோ பண்ணு. ஆனா அவங்க ரெண்டு பேரும் சாகனும். அப்போ தான் உனக்குக் காசு.”
பணம் என்றதும் உற்சாகம் அடைந்த லாரி டிரைவர், “சொல்ட்டல சார். காரியத்தை முடிச்சிட்டு உனக்கு ஃபோன் போட்றேன்.” சொல்லிவிட்டு கைபேசியை வைத்தவன், சிக்னல் விழுந்ததும், வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.
அந்த அதிகாலை பதினோரு மணி வெயிலில் எப்படியோ சார் பதிவாளர் அலுவலகம் வந்து சேர்ந்த மிதுன், காலையில் பேசிய அந்த ஆளுக்கு ஃபோன் போட்டான்.
“சர், நான் வெளிய தான் இருக்கேன்.”
“…”
“சரி சர். பார்கிங்ல வெயிட் பண்றேன். கொஞ்சம் சீக்கிரம் வாங்க சர்.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் மிதுன்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் கீழே வந்தார், அந்த அலுவகத்தில் வேலை செய்யும் ஓர் அதிகாரி.
“இந்தாப்பா நீ கேட்ட டீட்டைல்ஸ்.” சொல்லிவிட்டு சில காகிதங்களை அவர் நீட்ட, அதை வாங்கிவிட்டு அவர் கேட்ட பணத்தை நீட்டினான் மிதுன்.
[the_ad id=”6605″]
பணத்தை வாங்கியவர், சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கடகடவெனப் பணத்தை எண்ணினார். பேசியபடி பணம் சரியாக இருக்கவும், மிதுனை பார்த்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவர், “வேறு எதுவும் டீடைல்ஸ் வேணும்னா சொல்லுங்க தம்பி, எடுத்துக் கொடுக்கிறேன்.” என்று சொல்ல,
“இல்லை சர். இப்போதைக்கு இது போதும்.” பதில் சொன்னான் மிதுன்.
“உங்களுக்கு எப்போ எந்த உதவி வேணும்னாலும் என்னை வந்து பாருங்க.” சொல்லிவிட்டு அவர் சென்றுவிட,
“லஞ்சம் வாங்குறதும் தப்பு. கொடுக்கிறதும் தப்பு. அவர் ஒரு தப்பு செஞ்சுட்டாரு. நாம ஒரு தப்பு செஞ்சுட்டோம். தப்புக்குத் தப்பு சரியா போச்சு.” சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா.
அவளை முறைத்த மிதுன், “அவர் செஞ்ச தப்புக்கு அவர் ஒரு ஏழு வருஷம் ஜெயில் போவாரு. நம்ம பங்குக்கு நாம ஒரு ஏழு வருஷம் போவோம். ரெண்டுத்துக்கும் சரியா போச்சு. எப்படிக் கணக்கு சரியா இருக்கா? புரியல, கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா இருக்கும்.” என்று சொல்ல,
“ரெண்டு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை!” என்று கமல் பாணியில் பதில் சொன்னாள் சஞ்சு.
“யாரு அந்த ரெண்டு பேரு?!” தெரிந்தே தன் சந்தேகத்தைக் கேட்டான் மிதுன்.
“வேற யாரு, நீயும், நானும் தான்.” அவள் கெத்தாகச் சொல்ல,
“போலிஸ்கார், வந்து இந்தப் பொண்ணைப் பிடிச்சிட்டு போங்க போலீஸ்கார்.” என்று சொல்லிவிட்டு மனைவியை விட்டுவிட்டு மிதுன் ஓட, “அய்யோ! நான் இல்லை…” என்று அலறியபடி கணவனைத் தொடர்ந்து ஓடினாள் சஞ்சனா.
மிதுனும், சஞ்சனாவும் சிரிப்புடன் ஓடுவதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் கான்ஸ்டபிள் லோகநாதன்.
சற்று முன்பு, அலுவகத்தில் இருந்து ஒரு ஆள் வந்து ஏதோ காகிதத்தைக் கொடுக்க, அதை மிதுன் வாங்கிகொண்டு பணத்தைக் கொடுத்ததை அவரும் பார்த்திருந்தார்.
உடனே தனது கைப்பேசியை எடுத்தவர், சுதர்ஷனுக்கு ஃபோன் போட்டார்.
“சொல்லுங்க லோகநாதன்!”
“சர், அந்தப் பையன், இங்க அடையார்ல இருக்கிற சப்ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்து யார்கிட்டையோ பணம் கொடுத்து ஏதோ டாக்குமென்ட்ஸ வாங்கிட்டுப் போறான் சர்.”
“அப்படியா?!”
“இப்போ என்ன பண்ணட்டும் சர்? அவனை ஃபாலோவ் செஞ்சு போகட்டுமா, இல்லை அது என்ன டாக்குமென்ட்ன்னு விசாரிக்கட்டுமா?”
அவர் அப்படிக் கேட்டதும், சில நொடிகள் யோசித்த சுதர்ஷன், பின், “இப்போ நீங்க மொதல்ல, அது என்ன டாக்குமென்டுன்னு விசாரிங்க லோகநாதன். யார் என்னனு அவர் கேட்டா, என் பேரை சொல்லுங்க. அதே மாதிரி அந்தப் பையன் திரும்ப வந்து கேட்டாலும் நாம விசரிச்சதைப் பத்தி அவர் மூச் காட்டக் கூடாது. அதையும் தெளிவா சொல்லிடுங்க.”
“சரி சர்.”
லோகநாதன் ஃபோனை வைத்ததும், ‘மிதுன் என்ன டாக்குமென்ட் வாங்கி இருப்பான்?! அதுவும் சப்ரெஜிஸ்டர் ஆபீஸ்ல?!’ என்று தீவிரமாக யோசித்தான் சுதர்ஷன்.
அங்கே சப் ரெஜிஸ்டர் அலுவகத்தில் சுதர்ஷன் சொன்னது போலவே, அலுவகத்திற்குள் சென்ற லோகநாதன், சற்று முன்பு பார்த்த அந்த ஊழியரை கண்டுபிடித்து விவரத்தை கேட்க, அவரோ கோபப்பட, சுதர்ஷன் சொன்னது போலவே கூறினார் லோகநாதன்.
பயந்துபோன அந்த ஊழியர், மிதுன் வாங்கிச் சென்ற டாக்குமெண்ட்ஸின் மற்றொரு பிரதியை எடுத்துக்கொடுக்க, “இந்த விவரம் அந்தப் பையனுக்குத் தெரியக்கூடாது. தெரிஞ்சுது, லஞ்சம் வாங்கினன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்.” என்று லோகனதான் சொல்ல, அந்த ஊழியர் கப்சிப் என்றானார். பின் அந்த டாக்குமெண்டைசை எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் நோக்கி சென்றார் லோகனதான்.
அங்கே மிதுனோ, சஞ்சனாவுடன் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
மிதுனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த லாரி டிரைவர், ஒரு திருப்பத்தில் நின்றிருக்க, சிறுது நேரத்தில் அவனைக் கடந்து சென்றான் மிதுன். உடனே தனது லாரியை ஸ்டார்ட் செய்து மிதுனை பின்தொடர்ந்தான் லாரி டிரைவர்.
கொஞ்சம் கொஞ்சமாக லாரிக்கும், மிதுனின் பைக்கிற்குமான இடைவெளி குறைந்துகொண்டே வர, இதோ பைக்கை நெருங்கிவிட்டது லாரி.
அதே நேரம், சஞ்சனாவுடன் சிரித்துப் பேசியபடி பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த மிதுன், அப்பொழுதுதான் சைட் மிரரில் அதைக் கவனித்தான்.
ஏதோ ஒரு லாரி, அவன் பைக்கை உரசுவது போலக் கிட்டே வந்தது. ‘என்ன இது?!’ என்று அவன் யோசிப்பதற்குள், அந்த லாரியின் முன்பக்கம் பைக்கின் பின்பக்கத்தை இடிக்க முற்பட, திக்கென்றானது அவனுக்கு. உடனே சுதரித்தவன், பைக்கை லாரியின் பாதையில் இருந்து விலக்குவதற்காக, பக்கவாட்டை நோக்கி ஒடித்துத் திருப்பினான். அவன் மனமோ, பின்னால் அமர்ந்திருக்கும் மனைவிக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று மன்றாடியது.
வந்த வேகத்தில், மிதுன் பைக்கை ஒடித்துத் திருப்ப, ‘க்ரீச்ச்’ என்ற சத்தம், அந்த இடத்தையே அலற வைத்தது. சத்தம் கேட்டு ப்ளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்தனர்.
மக்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டதால், மிதுனை கடந்துவிட்ட லாரி, திரும்பி வராமல், அப்படியே வேகமெடுத்து அந்த இடத்தைக் காலி செய்தது.
ஒடித்த வேகத்தில் மிதுனின் பைக் அவன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பின் பக்கவாட்டில் சரிய, வந்த வேகத்திற்குச் சற்றுத் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது அவனின் வாகனம். முடிவில், சாலையின் தடுப்பில் மோதி நின்றது.
மிதுனின் நல்ல நேரம், அந்த நண்பகல் வேளையில், அவ்வளவாக வண்டிகள் அவனின் பின்னால் வரவில்லை. தூரத்தில் வந்து கொண்டிருந்த சில வாகனங்களின் ஓட்டுனர்களும், சத்தம் கேட்டு, சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திவிட்டனர். இல்லையென்றால், அவற்றில் ஏதாவது ஒரு வாகனம் மிதுனின் பைக்கின் மீதி ஏறி இறங்கி இருக்கும்.
ஒரு சில நிமிடங்களில் இவையெல்லாம் நடந்து முடிந்திருந்தது. தேய்ந்த வேகத்தில், கை, கால்களில் ஆழமான சிராய்ப்புகளும், மோதிய வேகத்தில் நெற்றியில் ரத்தக்காயமுமாக எழுந்து அமர்ந்த மிதுன், தன்னைக் கவனிக்காது, மனைவியை எழுப்பி அமர வைத்தவன், பதற்றத்துடன், “சஞ்சு! உனக்கு ஒகே வா?! ரொம்ப அடி எதுவும்?” என்றபடி, அவளின் காயங்களை ஆராய்ந்தான்.
“இல்ல மிதுன். லேசான அடி தான். நீ பயப்படாத.” என்று அவள் சொல்லியும், மிதுனின் மனம் சமாதனம் அடையவில்லை.
அதற்குள் கணவனின் காயத்தைப் பார்த்து சஞ்சு பதற, “ஒண்ணுமில்லை டா. வலிக்கல. மருந்து போட்டா சரி ஆகிடும்.” என்றவனிடம், “என்ன ஆச்சு?!” ஏன் வண்டி ஸ்கிட் ஆச்சு?!” என்று கேட்டாள் சஞ்சு.
“தெரியல. அதோ அந்த லாரி, நம்மளை மோதப் பார்த்துச்சு. அதான் பைக்கை திருப்புனேன்.” தூரத்தில் சென்று கொண்டிருந்த லாரியை சுட்டிக்காட்டி அவன் சொல்ல, திரும்பி பார்த்தாள் சஞ்சனா.
அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட சிலர், “பார்த்து தம்பி. எதுவும் ரொம்ப அடிகிடி பட்டுடுச்சா? பக்கத்தில ஆஸ்பத்திரி எதுவும் போகனுமா?!” என்று கேட்க, “இல்லை சர். லேசான அடிதான். பரவால. தேங்க்ஸ்” என்றான் மிதுன். “லாரி ஓட்டுறானா இல்லை ப்ளேனை ஓட்டுறானா? இப்படி வேகமா போறான்! வர வர இந்த லாரிகாரனுங்க தொல்லை தாங்க முடியல.” என்று அந்த லாரிக்காரனை திட்டியபடி, மிதுனுக்கும் சஞ்சனாவுக்கும் தண்ணீர் கொடுத்து உதவினர் அவர்கள்.
பின், வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த கிளினிக் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு, வீட்டிற்குத் திரும்பினர் மிதுன் தம்பதியர்.
கையில் இருந்த, காகிததங்களைப் பார்த்தான் மிதுன். சற்று முன்பு சார் பதிவாளர் அலுவகத்தில் வாங்கியது.
அந்த வீட்டின், பட்டா எண், சதுரடி அடி உள்ளிட்ட விவரங்களுக்கு மத்தியில், வீட்டின் உரிமையாளர் என்ற இடத்தில், ‘அருணாச்சலம்’ என்று அச்சிடப்பட்டிருந்தது. கூடவே அவரின் புகைப்படம் அடங்கிய அடையாள ஆடையின் நகல்.
‘யார் இந்த அருணாச்சலம்?!’ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.
வீட்டிற்கு வந்ததுமே, தோழன் ஒருவன் மூலம், அருணாச்சலத்தின் புகைபடத்தை அனுப்பி விவரம் கேட்டிருந்தான் மிதுன். அவனும் விசாரித்துவிட்டு, “ரொம்ப டீடைல்ஸ் கிடைக்கல டா. ஆனா இவருக்குச் சென்னை கிடையாது. வெளியூர்காரர். நீ சொல்ற பங்களாவை வச்சுக்கிற அளவுக்கு, பெரிய பணக்காரர் கிடையாது. அநேகமா இவர் அந்த வீட்டோட பினியாமியா இருக்கணும்.” என்று சொல்லி குழப்பிவிட, அடுத்து என்ன செய்வது என்று குழம்பினான் மிதுன்.
அப்பொழுது மிதுனின் அருகில் வந்த சஞ்சனா, “நாம ஏதோ தப்பான வழியில போயிட்டு இருக்கிற மாதிரி தெரியுது டா.” என்க,
அப்படிச் சொன்ன மனைவியை நிமிர்ந்து பார்த்தான் மிதுன். அவனின் முகத்தில் தெரிந்த கேள்விக்குறியை பார்த்துவிட்டு, “ஒருத்தரை யார் கொலை செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கனும்னா, அவங்களோட எதிரி யார்யார்ன்னு தெரியனும். ஒருத்தரோட எதிரி யாருன்னு தெரியணும்னா, மொதல்ல அவங்களைப் பத்தி, விவரம் தெரியனும்.” என்று அவள் சொல்ல,
சஞ்சு சொன்னதை மனதுக்குள் அசைப்போட்ட மிதுனின் முகம், அடுத்த நொடி பிராகசமானது.
“அப்போ, மொதல்ல அவங்களைப் பத்தி விசாரிக்கணும்!” கண்கள் மின்ன கூறியவன், மனைவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு, “வாழ்கையில, முதல் முறையா உருப்படியான ஐடியா சொல்லி இருக்கடி.” என்று கூறிவிட்டு செல்ல, அவனை முறைத்தாள் சஞ்சனா.
மிதுன் அடுத்து செய்த காரியம், தன் தோழனும், துப்பறிவாளனுமான, விஷாலை தொடர்புகொண்டான்.
[the_ad id=”6605″]
“டேய் மச்சி! என்ன டா ஆளையே காணோம்?!” விஷால் கேட்க,
“மச்சி! இப்போ பேச நேரமில்லை. நான் உனக்கு ஒருத்தரோட போட்டோ அனுப்புறேன். என்ன செய்வியோ ஏது செய்வியோ, எனக்குத் தெரியாது. அவங்களைப் பத்தின ஃபுல் டீடைல்ஸ் இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எனக்குக் கிடைக்கணும். அதுக்கு முன்னாடி கிடைச்சாலும் ஒகே!” கடகடவெனச் சொன்னவன், நேற்று இரவு மருத்துவமனையில் வைத்து எடுத்திருந்த மாதுரியின் புகைப்படத்தை நண்பனுக்கு அனுப்பினான்.
விஷாலோ, “கதையில இப்போ தான் என்ட்ரி கொடுக்கிறேன். ஒரு டயலாக் பேச விடுறியா டா நீ! சைட் ஆக்டர வளர விட மாட்டனுங்களே இந்த ஹீரோங்க எல்லாம்!” அங்கலாய்புடன் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் விஷால்.