மாலை நேரம். கமிஷனர் அலுவகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் சுதர்ஷன். மொபைல் அடிக்கவும் எடுத்துப் பேசினான்.
“ஹலோ acp சர்!”
“சொல்லுங்க சித்தார்த்! எங்க இருக்கீங்க?!”
“சென்னை வந்துட்டோம் சர். மது எங்க இருக்கா?”
“நீங்க நேரா ஜி.எச் வந்திடுங்க சித்தார்த். நான் ஒரு அரை மணிநேரத்தில அங்க வந்துடறேன். ஜி.எச் எங்க இருக்குன்னு தெரியுமா?!”
“இப்போ தான் குஜராத்ல இருக்கேன் சர். ஆனா நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். நல்லா தெரியும் சர்.” சொல்லிவிட்டு அவன் வைத்துவிட, மாதுரியை நினைக்கையில், ஒரு ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது சுதர்ஷனிடம்.
அடுத்து ஜி.எச் டீனுக்கு அழைத்தவன், விவரத்தை கூறிவிட்டு, அவர்கள் வந்தால் அவள் அறைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கூறிவிட்டு வைத்தான்.
சுதர்ஷனிடம் பேசிவிட்டு வைத்த சித்தார்த், சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து ஜி.எச் வந்து சேர்ந்தான். வழி நெடிகிலும், மகளை நினைத்து அழுது புலம்பியபடி இருந்தார் மாதுரியின் அன்னை.
சுதர்ஷன் சொன்னது போலவே தலைமை மருத்துவர் இருக்கும் தளத்திற்குச் சென்றவன், அவரின் பியூனிடம் தன் விவரத்தை கூறிவிட்டுக் காத்திருக்க, அரை மணி நேரத்தில் வந்தார் தலைமை மருத்துவர்.
அவரைப் பார்த்ததும் சித்தார்த், தங்கையின் உடலநிலைப் பற்றி விசாரிக்க, அவள் நல்ல உடல்நிலையில் இருப்பது தெரியவந்தது. ஆனால் தங்கை இன்னும் கண் முழிக்கவில்லை என்பது அவனைக் கவலைக்கொள்ளச் செய்தது. அதற்குள், மருத்துவர் அவனை அழைக்கத் தாயை அழைத்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தான்.
இரண்டு பக்கமும் கான்ஸ்டபிள் நின்றிருந்த அந்த அறையின் அருகில் வந்தவர், “உங்க சிஸ்டர் உள்ள இருக்காங்க. போய்ப் பாருங்க. ஆனா ஓவர் எமோஷனல் ஆகி, அவங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. பார்த்துக்கோங்க.” என்றார் சித்தார்த்தின் அன்னையை ஒரு பார்வை பார்த்தபடி.
“நான் கவனமா இருக்கேன். தேங்க்ஸ் டாக்டர்.” அவருக்கு நன்றியை கூறிவிட்டு அறைக்குள் சென்றனர் தாயும் மகனும்.
பச்சை விரிப்பு விரிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிலில், வயர்கள் சூழ கண்மூடி படுத்திருந்தாள் மாதுரி. பக்கத்தில் ஏதேதோ மெஷின்கள், விசித்திர ஒலியை எழுப்பிக்கொண்டிருக்க, அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. அவள் மூச்சு விடும் சப்தம் மட்டுமே அப்பொழுது கேட்டுக் கொண்டிருந்தது.
மகள் எப்படி இருக்கிறாளோ?! அவளுக்கு என்ன ஆனதோ?! என்ற பதைப்பதைப்பில் உள்ளே நுழைந்த மாதுரியின் தாய், கட்டிலுக்கு அருகில் சென்று அவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனார். கூடவே சித்தார்த்தும் தான்.
“இல்ல!! இது என் பொண்ணு இல்லை…இது வேற யாரோ. டேய்! சித்தார்த், ஹே மேரே பேட்டி நஹி ஹை…இவ உன் தங்கச்சி இல்லை டா சித்து…இவ என் பொண்ணு மாதுரி இல்லை…” என்று கத்தியவாறு பின்னே சென்றவர், சுவற்றில் மோதி நின்றார்.
[the_ad id=”6605″]
அதற்குள் அவரை நெருங்கியிந்த சித்தார்த், “மா, இது நம்ம பப்பு தான்.” என்று கண்ணீருடன் சொல்ல, அவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியவர், “அவ இருக்கிற நிலைமையைப் பாரு டா…அவளை இப்படியா நான் வளர்த்தேன். பாரு அங்க…” என்று கண்ணீரில் ஆரம்பித்து ஆக்ரோஷத்தில் முடித்தவர் மகனின் தாடையைப் பிடித்து வலுக்கட்டாயமாகக் கட்டிலை நோக்கி திருப்பினார். அவனுக்கோ, தங்கையின் நிலைமையைப் பார்க்க பார்க்க கண்ணீர் வடிந்தது.
“இவளா டா என் பொண்ணு?! இவளா என் பப்பு?! உனக்கு வேணா, உன் தங்கையை அடையாளம் தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு என் பொண்ணை நல்லா தெறியும் டா. பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்த எனக்குத் தான் அவளை நல்லாத் தெரியும்….தவம் இருந்து பெத்தேன் டா அவளை…ஒரே பொண்ணாச்சேன்னு என் தங்கத்துக்கு, வெண்ணையும், தயிரும் ஊட்டி ஊட்டி வளர்த்தேன். இதோ இந்தக் கையால தான் டா ஊட்டி வளர்த்தேன். கொலுகொழுன்னு பொம்மை மாதிரி இருப்பாளே டா என் தங்கம். கல்யாணத்துக்கு அப்புறம் கூட நல்லா தானே டா இருந்தா?! இப்போ இப்படி எழும்பும் தோலுமா இருக்காளே!! கண்கொண்டு பாக்க முடியலையே!! படுபாவி பசங்க இப்படி ஆக்கிட்டானுங்களே!! என் தங்கம் என்ன வேதனையெல்லாம் அனுபவிச்சாளோ!! சொல்ல நாதியில்லாம எப்படி எல்லாம் தவிச்சாளோ?! யாரையும் சொல்லி குத்தமில்லை, என்னைத் தான் சொல்லணும். யார் என்ன சொன்னாலும், என் பொண்ணை நான் நம்பி இருக்கணும். அவளை இங்க வந்து சேர்த்திருக்கக் கூடாது. பாவம் செஞ்சுட்டேன். பெத்த பொண்ணுக்கே நான் பாவம் செஞ்சுட்டேனே. நான் செஞ்ச பாவத்துக்கு இன்னைக்கு ஒரு பாவமும் அறியாத என் பொண்ணு அனுபவிச்சிருக்காளே…பெத்த வயிறு பத்தி எரியுதே!! என் பொண்ணை இனி எப்படி மீட்க போறேனோ?! அம்மா! கௌரி மாதா! பஹுச்சாரா மாதா!!” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியவர், அப்படியே சுவற்றில் சரிந்து தொப்பென்று தரையில் அமர்ந்து விட்டார்.
மகளை அருகில் சென்று பார்பதற்குக் கூட அவருக்குப் பயமாக இருந்தது. அந்த அளவுக்கு ஒடிந்து போயிருந்தார்.
தாயின் கதறலை கேட்க கேட்க, சித்தார்த்துக்குத் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. வழியும் கண்ணீரை துடைக்கக் கூடத் தெம்பில்லாமல் தங்கையைத் திரும்பி பார்த்தவனுக்கு, தந்தையின் நினைவு வந்தது. ‘இப்படி எல்லாம் ஆகும்னு தான், முன்னாடியே எங்களை எல்லாம் விட்டுட்டு போயிட்டீங்களா அப்பா?!’ அவன் மனம் மேல் லோகத்தில் இருக்கும் தந்தையிடம் ஆற்றாமையோடு கேள்வி கேட்டது.
அதற்குள் அங்கு வந்து சேர்ந்த சுதர்ஷன், சித்தார்த்தை பார்த்துவிட்டு அவனை வெளியே அழைத்து வந்தவன், அவனுக்கு ஆறுதல் கூறினான்.
“கவலைப்படாதீங்க சித்தார்த். வேற எதுவும் சீரியசா ஆகாம, உங்க சிஸ்டர் தப்பிச்சிட்டாங்க. அவங்க ஹெல்த் நல்ல கண்டிஷன்ல இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. கூடிய சீக்கிரம் உங்க சிஸ்டர் எழுந்து நடமாடுவாங்க.” அவனைத் தட்டிக்கொடுத்தப்படி சுதர்ஷன் சொல்ல,
“இல்ல சர், அவளைப் பார்க்கவே முடியல. ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு, ரொம்ப ஒடிஞ்சு போயிருக்கா. இப்படி ஒரு நிலைமையில அவளை நான் பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை. அவ எனக்குத் தங்கைன்றதை விட, ஒரு பொண்ணு மாதிரி சர். அந்த அளவுக்கு அவ மேல என் உயிரையே வச்சிருந்தேன். இன்னைக்கு, இப்படி ஒரு நிலமையில….” மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைத்தது சித்தார்த்துக்கு.
அவனை அணைத்துக் கொண்டான் சுதர்ஷன்.
உள்ளே அறையில், கட்டிலை பார்த்தபடி தரையில் அமர்ந்து வெகு நேரம் அழுது கொண்டிருந்த மாதுரியின் தாய், மெல்ல எழுந்து மகள் அருகில் சென்றார்.
பச்சை கவுன் உடுத்தப்பட்டு விழி மூடி இருந்தாள் மாதுரி. குழிவிழுந்த கண்கள், எலும்பு துருத்திக் கொண்டிருந்த கன்னம், தன் சிவந்த நிறத்தை இழந்து காய்ந்து போய்க் கருப்பாகக் காட்சி அளித்த இதழ்கள், அடர்த்திக் குறைந்து பாதியாய் மாறிப் போயிருந்த தலைமுடி, காதில், கழுத்தில் ஒரு பொட்டு நகை இல்லை, மொத்தத்தில் ஆளே நிறம் குன்றி, கருத்து, உருக்குலைந்து போயிருந்தாள்.
மகளின் முகத்தைப் பார்க்க பார்க்க, நின்று போயிருந்த கண்ணீர் மீண்டும் சுரந்து அவரின் கண்ணம் வழியே சூடாக வழிந்து, சொட்டு சொட்டாகக் கட்டிலில் விழுந்தது. அவளைச் சுமந்த வயிறு கனத்தது.
வெகு நேரம் மகளின் முகத்தைப் பார்த்திருந்தவருக்கு, அவரையும் அறியாமல், முன்பிருந்த மகளின் அழகான முகம் கண்முன் வந்து போனது.
செக்க சிவந்த நிறம், ரோஸ் நிற இதழ்கள், சற்றே உப்பி இருக்கும் கன்னங்கள், மையிட்டால், நடிகையர் கண்களையே மிஞ்சிடும் அளவுக்குக் கூர்மையான கண்கள், இவ்வளவு அடர்த்தியா என்று பார்க்கும் அனைவரும் பொறாமை படும் அவளுக்குக் கருகருவென வளர்ந்து அடர்திருந்த கேசம், எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அழகு மாதுரி.
[the_ad id=”6605″]
முன்பு இருந்த மகளின் முகத்தையும், இப்பொழுது இருக்கும் மகளின் முகத்தையும், ஒப்பிட்டு பார்த்தவரின் கண்கள், மகளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தது.
நெஞ்சுக்கூடு தெரியும் அளவுக்கு மெலிந்து போயிருந்த தேகம், குச்சியா, இல்லை மனித கைகளா என்று ஒரு நொடி சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஒல்லியாக இருந்த கை, கால்கள், வயுறு எங்கே என்று தேட வேண்டும் போல, அந்த அளவுக்கு உள்ளே போயிருந்தது அவளின் வயிற்று பகுதி.
பார்வையாலே மகளின் நிலைமையை ஆராய்ந்தவருக்கு, மனம் அறுத்தது.
கண்ணீர் வழியை, மகளின் தலையை மெதுவாக வருடியவரின் கை, அப்படியே கீழிறங்கி அவளின் கையை வலிக்காதவாறு தடவிக்கொடுத்தது. முஹூம்! முன்பு உணர்ந்த மகளின் கை போல இல்லை. சதை முற்றிலும் வத்திப் போயிருந்தத கைகள்.
அப்படியே பார்த்திருந்தவர், மகளின் உள்ளங்கையை எடுத்து தன் கைக்குள் பொத்திக் கொண்டார். கையைப் பிடிப்பது போலவே இல்லை. மிகவும் லேசாக இருந்தது. குழந்தையின் கை கூட இதைவிடக் கனமாக இருக்கும் போல. அவளின் கை நகங்களோ, தன் வெள்ளை நிறத்தை இழந்து, துரு பிடித்திருந்தது.
மகள் கண்விழிக்காத வகையில் அவளின் உள்ளங்கையில் மிருதுவாக இதழ் பதித்தவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அழுகையை இதழ் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டவர், முட்டிக்காலிட்டு, மகளின் கையில் தன் முகத்தைப் புதைத்துச் சத்தமில்லாமல் அழுது கரைந்தார்.
அவரின் அழுகை அந்த ஆண்டவனை அசைத்துப் பார்த்ததோ இல்லையோ, அவர் பெற்ற மகளை அசைத்துப் பார்த்தது.
மாதுரியின் கருவிழிகள் அங்கும் இங்கும் மெல்ல அசைந்தது!
சில நிமிடங்களில் தன்னைச் சமன் செய்து கொண்ட சித்தார்த், “சாரி!” என்றபடி சுதர்ஷனிடம் இருந்து விலகினான். பின்னே! ஒரு உயர் காவல்துறை அதிகாரியின் தோளில் சாய்ந்து அழுவதா! பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?! அவனின் பதவிக்கு அது சரியானது இல்லையே?!
“இட்ஸ் ஒகே சித்தார்த்!” என்று பதில் சொன்ன சுதர்ஷன், நடந்த தீ விபத்து பற்றியும் மாதுரி காப்பாற்றப்பட்ட விதத்தையும் கூறியவன், “உங்க சிஸ்டரை கொல்ல முயற்சி நடந்திருக்கும்ன்றது காவல்துறையோட சந்தேகம்.” என்று சொல்ல, “வாட்!!” என்று அதிர்ந்தான் சித்தார்த்.
“ம்ம், ஆமாம் சித்தார்த். கொலை முயற்சி உண்மையா இருக்கும்பட்சத்தில கொலைகாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியது போலீசோட கடமை. அதுக்கு உங்க சிஸ்டரை பத்தி எல்லா உண்மையும் எங்களுக்குத் தெரியனும். ஆனா, உங்க சிஸ்டர் பேர் மட்டும் தான் இப்போதைக்கு எங்களுக்குத் தெரிஞ்ச ஒன்னு. மத்த விவரத்தை நீங்க தான் சொல்லணும்.” என்றுவிட்டு அவனைப் பார்க்க,
“நிச்சயமா சொல்றேன் சர். எனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட சொல்றேன்.” கண்களை அழுத்தத் துடைத்துக்கொண்டு சொன்னான் அவன்.
[the_ad id=”6605″]
அதன்பின், ஒரு நர்சிடம் சொல்லி மாதுரியின் தாயை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சித்தார்த்தை அழைத்துக்கொண்டு உணவருந்தும் இடத்திற்குச் சென்றான் சுதர்ஷன்.
“ம்ம், சொல்லுங்க சித்தார்த்!” உணவருந்தும் டேபிளில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்த பின் சுதர்ஷன் இவ்வாறு கேட்க, சொல்ல ஆரம்பித்தான் சித்தார்த்.
“என் தங்கையோட பேர், மாதுரி மேத்தா. இப்போ சென்னையோட கலெக்டரா இருக்காரே நந்தகுமார், அவர் தான் என் தங்கையோட எக்ஸ் ஹஸ்பெண்ட்.”
சித்தார்த் சொல்ல, அதிர்ந்து போனான் சுதர்ஷன்.
இங்கே இவன் அதிர்ச்சியாக, அங்கே தனது வீட்டில் இதே விவரத்தை நண்பன் விஷால் மூலம் கேட்ட மிதுனும் அதிர்ந்து போனான்.
“கலெக்டர் வைஃபா இவங்க?!!” கண்கள் விரிய கேட்டான் மிதுன்.