அத்தியாயம் 7
திநகர் பனகல் பார்க் பகுதியில் இருந்த சின்னத் தெரு அது. பெரியதும் சின்னதுமாக வீடுகள், கிளினிக்குகள், டுஷன் சென்டர் எனப் பல கட்டிடங்கள் இருக்க, அதற்கு நடுவே இருந்தது, அந்தச் சின்ன அலுவகம்.
வாசலில் இருந்த கூர்க்கா சிகரெட் புகைத்துக்கொண்டிருக்க, அப்பொழுது அவன் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து ஒரு இளம் தம்பதியர் இறங்கினர். ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு கூர்க்கா அருகே வந்த அந்த இளைஞன்,
“மேடம் இருக்காங்களா?” என்க,
“இருக்காங்க.”
“அவங்களைப் பார்க்கணும்.”
“ஒரு நிமிஷம் இருங்க, கேட்டுட்டு வரேன்.” சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றுவிட, இளைஞனின் உடன் வந்த பெண், லேசாக விசும்பினாள். அவனோ திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.
அதற்குள் உள்ளே சென்ற கூர்க்கா வெளியே வர, தன் முகத்தைச் சரியாக வைத்துக் கொண்டான்.
“உங்களை உள்ள வரச் சொன்னாங்க.” என்று கூர்க்கா இவனைப் பார்த்துச் சொன்னதும், அந்தப் பெண்ணைத் திரும்பி பார்த்தான். அவன் பார்வையே சொன்னது, ‘கண்ணைத் துடைச்சுட்டு, வாய மூடிட்டு வா!’ என்று. உடனே தன்னைச் சரி செய்து கொண்டாள் அப்பெண்.
இருவரும் உள்ளே நுழைய, ரிசப்ஷன் ஏரியாவை தாண்டி இருந்த அந்த அறைக்குள் நுழைந்தனர் அவர்கள் இருவரும்.
அறை செஃல்ப் முழுவதும் சட்டப்புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்க, அதன் முன் தேக்கு மரத்தினாலான அந்தப் பெரிய எக்சிகியூட்டிவ் டேபிள் இருக்க, அதன் முன்னே, அந்தப் பெரிய லெதர் சேரில் அமர்ந்து, குனிந்து ஏதோ புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“வணக்கம் மேடம்!” அந்த இளைஞன், கைகூப்ப நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அவள், மாதுரி மேத்தா!
அவள் முன் இருந்த பித்தளை பெயர் பலகை சொன்னது மாதுரி மேத்தா ஒரு வக்கீல் என்று!
மாதுரி மேத்தா – B.A (LAW) LLB
நேர்த்தியாக உடுத்தி பின் செய்யப்பட்ட காவி நிற காட்டன் புடவை, ஒட்ட வாரி, தூக்கி இடப்பட்டிருந்த கொண்டை, தங்க நிற ப்ரேம் கொண்ட மூக்கு கண்ணாடி, அந்தப் பிரேமிற்குள் அழகாகக் குடி கொண்டிருந்த கூர்மையான கண்கள், என அத்துனை கம்பீரம் குடி கொண்டிருந்தது அவளிடம்.
தன்னைப் பார்த்து வணக்கம் சொன்ன இளைஞனுக்குப் பதில் வணக்கம் சொன்னவள், எதிரில் இருத்த இருக்கையில் அவனை அமரச் சொன்னாள்.
“சொல்லுங்க சர்? என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க?!” மென்மையான குரலில் அவள் கேட்க,
சற்றே தயங்கிய அந்த இளைஞன், பின் மெல்ல “என் பேரு அரவிந்த். டிவோர்ஸ் கேஸ் விஷயமா உங்களைப் பார்க்க வந்தேன் மேடம்.” என்று சொல்ல, பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பெண்ணிடம் இருந்து மீண்டும் விசும்பல் எழுந்தது.
அப்பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த இளைஞன் பக்கம் திரும்பிய மாதுரி,
[the_ad id=”6605″]
“இவங்க யாரு?!” என்றாள்.
“அவங்க தான் என்னோட வைஃப். பேரு சாருலதா.”
“ஓஹ்! சரி என்ன விஷயத்துக்காக டிவோர்ஸ் வாங்க நினைக்குறீங்க?!”
“கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுது மேடம். ஆனா இன்னும் இவளுக்குக் குழந்தை பிறக்கல.” சற்றே கோபமாக அவன் சொன்னான்.
“ஓஹ்!” என்று உச்சு கொட்டியவள், அந்தப் பெண் பக்கம் திரும்பி, “அவர் சொல்றது உண்மையா சாருலதா?!” என்று கேட்க, தலை குனிந்த நிலையில் அமர்ந்திருந்த அப்பெண், ‘ஆம்’ என்பது போலத் தலை ஆட்ட, அவள் கன்னத்தில் இருந்து சில சொட்டுக் கண்ணீர் துளிகள் அவள் மடியில் விழுந்து சிதறியது.
அதை நோட் செய்து கொண்டாள் மாதுரி.
“உங்களுக்குக் குழந்தை பிறக்கலன்னு உங்களை விட்டு பிரிய டிவோர்ஸ் கேக்குறார் உங்க ஹஸ்பண்ட். அதுல உங்களுக்குச் சம்மதமா?” அடுத்தக் கேள்வியை அவள் கேட்க, அப்பெண் பதில் சொல்வதற்குள் இடைபுகுந்தான் அரவிந்த்.
“அவ கிட்ட என்ன கேட்க வேண்டி இருக்கு மேடம். அதான் குழந்தை பிறக்கலன்னு ஒத்துக்கிட்டாளே. இதுக்கு மேல என்ன இருக்கு. குழந்தை பெத்துக்கொடுக்க வக்கில்லாதவளை, காலம் பூரா என் கூட வச்சுக்கிட்டு, எல்லார்கிட்டையும் நான் அசிங்கபடனுமா?”
கணவனின் இந்தச் சுடு சொல்லில், அவளின் அழுகை இன்னும் அதிகரித்தது.
உடனே அரவிந்தை திரும்பி பார்த்தாள் மாதுரி. அவள் பார்வையில் என்ன இருந்ததோ, அவளின் விழிகளில் தெரிந்த கோபத்தில், பேசிக்கொண்டே போனவன், சட்டென்று தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
அவனை ஒரு முறை முறைத்துவிட்டு, மீண்டும் அப்பெண் பக்கம் திரும்பிய மாதுரி, “சொல்லுங்க சாருலதா, இந்த டிவோர்ஸ்ல உங்களுக்குச் சம்மதமா?!” என்று கேட்க, சில நொடிகள் அமைதியாக இருந்த அப்பெண், பின் நிமிர்ந்து பார்த்து, “அவருக்கு என்னைப் பிடிக்காத போ, நான் என்ன செய்ய மேடம்? வேண்டா வெறுப்பா, அவர் கூட எப்படி இருப்பேன்?!” கண்ணீர் வழிய கூறினாள்.
சாருலதாவின் இதழ்கள் மட்டுமே அப்படிச் சொன்னது. ஆனால் அவள் விழிகளோ, ‘எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அவரை எப்படி நான் விட்டுப் பிரிய? அவரை எப்படி நான் இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்க? அவர் இன்னொரு பொண்ணோட குடும்பம் நடத்திறதை எப்படி நான் என் கண்ணால பார்ப்பேன்?’ எப்படி? எப்படி? என ஆயிரம் கேள்விகளைக் கேட்டது.
மூன்றாம் மனுஷியாக மாதுரியால் புரிந்துகொள்ள முடிந்த அவளின் ஏக்கத்தை, பயத்தை, தாலி கட்டி பத்து வருடம் குடும்பம் நடத்திய அவள் கணவனால் புரிந்துகொள்ள முடியாதது தான் வேதனை!
சாரு அப்படிச் சொன்னதும், அரவிந்த் பக்கம் திரும்பிய மாதுரி, “இவங்களை டிவோர்ஸ் செஞ்சுட்டு என்ன பண்ண போறீங்க?” என்றாள்.
“வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்.” அவன் விட்டேரியாகப் பதில் சொன்னான்.
“சப்போஸ் அவங்களுக்கும் குழந்தை பிறக்கலனா?!”
மாதுரியின் கேள்வியில், ‘என்ன இது?’ என்பது போலப் பார்த்த அவன், “அதெப்படி மேடம்? எல்லாரும் இவளை மாதிரி இருப்பாங்களா?”
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க சர்?”
முஹூம், அவனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
“அவங்களுக்கும் குழந்தை பிறக்கலனா, தப்பு உங்க மேலையும் இருக்குன்னு தானே அர்த்தம்.”
“மேடம்!!” கோபத்தில் அவன் கத்த,
“எதுக்குச் சர் கோபப்படுறீங்க? நான் சொல்றது உண்மை தானே!” லேசான கிண்டல் தெரிந்தது மாதுரியின் குரலில்.
[the_ad id=”6605″]
“ஏன் சர், ஒரு பையனும் பொண்ணும் தாம்பத்தியத்தில ஈடுபட்டா தான் குழந்தை பிறக்கும். செக்ஸ்ன்றது என்ன சமையலா, உப்பு இல்லை, காரம் இல்லைன்னு பொண்டாட்டியை மட்டும் குறை சொல்றதுக்கு. அதுல நீங்களும் இன்வால்வ்ட் தானே, அப்போ குழந்தை பிறக்காததுக்கு நீங்க கூடத் தானே காரணமா இருக்கலாம்?”
மாதுரி இப்படி அதிரடியாகச் சொல்ல, தலையைக் குனிந்து கொண்டான் அரவிந்த்.
ஒரு பொண்ணுக்குக் கல்யாணம்ன்றது வாழ்க்கையையே புரட்டி போடக்கூடிய ஒரு விஷயம். இனிஷியல்ல இருந்து, வீட்டு அட்ரெஸ் வரை கம்ப்ளீட் சேஞ் ஆகிடும். அனா உங்களுக்கு அதுல ஒரு பெர்சென்ட் கூடக் கிடையாது. அப்படி இருந்தும், ஏதோ ஒரு நம்பிக்கையில நீங்க அவங்களை நல்லா வச்சுப்பீங்கன்னு தானே, உங்களை நம்பி வராங்க. வாழ்கை பூரா வச்சு காப்பாத்த வேண்டிய நீங்களே இப்படி அவங்களை நட்டாத்துல விட்டுட்டு போனா, அவங்க லைஃப் இதுக்கு அப்புறம் என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தீங்களா?”
“டிவோர்ஸ் செஞ்சுட்டு, வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுப்பேன்னு ஈசியா சொல்றீங்களே, அது மாதிரி உங்க வைஃப்னால சொல்ல முடியுமான்னு நினைச்சுப் பார்த்தீங்களா? அப்போ அவங்க எக்கேடு கெட்டு போனாலும், அதைப் பத்தி கவலை படாம என் வழியை நான் பார்த்துட்டு போய்டுவேன்னு சொல்றீங்க, அப்படித் தானே?! அந்த அளவுக்கு நீங்க செல்ஃபிஷா? இதோ இப்போ ஈசியா டிவோர்ஸ் கேட்குறீங்களே, பத்து வருஷத்துக்கு முன்னாடி, அக்னியை சுத்தி கல்யாணம் செஞ்ச அன்னைக்கு, நாளபின்ன உன்னை எனக்குப் பிடிக்காம போச்சுனா, உன்னைப் பாதியில விட்டுட்டு போய்டுவேன்னு அவங்க கிட்ட சொன்னீங்களா?”
“இயற்கை முறையில முடிஞ்சா பெத்துகோங்க சர், இல்லனா ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்க. அப்படியும் முடியலையா, தெருவுக்கு ஒரு அநாதை அஷ்ரமமும், நிமிஷத்துக்கு ஒரு அநாதை குழந்தையும் உருவாகுது. அதுல ஒரு குழந்தையை அடாப்ட் செஞ்சு வளருங்க. அதுக்காக இன்னொரு கல்யாணம் செய்வீங்களா? பொண்டாட்டி என்ன ATM மெஷினா, கார்ட் போட்டு ஒண்ணுல பணம் வரலைன்னதும் இன்னொரு ATM தேடிப் போக?!”
“எந்தக் காலத்துல இருக்கீங்க அரவிந்த் நீங்க எல்லாம்? பொண்டாட்டி மூலமா பிறந்தா தான் குழந்தையா, ஏன் அநாதை குழந்தைங்க எல்லாம் குழந்தைங்களா தெரியலையா உங்க கண்ணனுக்கு, பேய் பிசாசா தெரியுதா? அடாப்ட் செய்றதுல இன்னொரு அட்வாண்டேஜ் இருக்கு சர், தெரியுமா உங்களுக்கு? உங்க ரத்ததில உருவான குழந்தைக்குக் கூடச் சில சமயம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி கண்ணு, மூக்கு, கலர் எல்லாம் இருக்காது. ஆனா தத்து எடுக்கும்போது அப்படி இல்லை. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, கண்ணு, மூக்கு, கலர் எல்லாம் பார்த்து எடுத்துக்கலாம், கடையில பொருள் வாங்குற மாதிரி.” கோபத்தில் ஆரம்பித்து நக்கலுடன் அவள் முடிக்க, ஆரம்பத்தில் அவள் குரலில் இருந்த மென்மை தன்மை முற்றிலும் மாறி இப்பொழுது அவள் குரலில் ஒரு கடுமை தன்மையும், ஆளுமையும் இருந்தது.
மாதுரி பேசி முடிக்க, சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அரவிந்த், “சாரி மேடம்!” என்று அவளின் காலில் விழப்போக, தன் இருக்கையில் இருந்து எழுந்துகொண்ட மாதுரி, தள்ளி நின்றுகொண்டு அவனைத் தடுத்தவள், “என்ன அரவிந்த் இதெல்லாம்? சாரி எனக்குச் சொல்லாதீங்க, அதோ, எங்க எனக்குப் பிடிச்சவரை இழந்துடுவோமோன்னு பரிதவிசிட்டுக் கண்ணீர் விட்டுட்டு இருக்கிற உங்க வைஃப் கிட்ட சொல்லுங்க. அதுவே நீங்க எனக்குச் சொன்ன மாதிரி.” சாருலதாவை கைநீட்டி மாதுரி சொல்ல,
திரும்பி மனைவியைப் பார்த்தான் அரவிந்த். அவள் கண்களில் தெரிந்த ஏக்கம், அவனைக் கொன்று போட்டது. ‘தப்பு செஞ்சுட்டேனே!’ என அவன் மனம் அவனை அறுத்தது.
இருவரும் அவரவர் இடத்தில நின்று கொண்டே, ஒருவரை பார்த்து ஒருவர் கண்ணீர் விட, “அட! என்ன அரவிந்த், தள்ளி நின்னுட்டு சாரி கேட்குறீங்க. அவங்க கிட்ட போய், கட்டிபிடிச்சு, கிஸ் செஞ்சு சாரி கேளுங்க. அப்போதான் உங்க சாரியை நான் அக்செப்ட் பண்ணுவேன்.” என்றவள் தனது கைப்பேசியை எடுத்துக்கொண்டு, “நீங்க க்ரைமேன்ஸ் பண்ணுங்க. நான் போய்ப் போன் பேசிட்டு வரேன்.” என்று சொல்ல இருவரும் அவளைக் குழப்பமாகப் பார்த்தனர்.
“ஹி!! ஹி!! ரொமாண்டிக்கா பண்றது ரொமான்ஸ், அழுதுட்டே பண்றது க்ரைமேன்ஸ். அதைத் தான் சொன்னேன்.” என்று புன்னகைத்தவள், சொன்னபடி அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு, தனது மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே வந்தவள், அண்ணனுக்குக் கால் செய்தாள். அந்தப் பக்கம் சித்தார்த் எடுத்தான்.
“ஹலோ! பப்பு?!”
“பய்யா! என்ன பண்றீங்க?”
“கடையில இருக்கேன். நீ எப்போ கிளம்புற?”
“கிளம்புற நேரம் ஒரு கேஸ். அதை இப்போ தான் முடிச்சேன்.”
“அதான கேட்டேன், நீ என்னைக்குக் கோர்ட்ல கேசை முடிச்சு இருக்க! எல்லாத்தையும் உன் ஆபிஸ்லையே முடிச்சிடுற. அப்புறம் எங்க வருமானம் வர்றது? அப்பா ஆசைப்பட்ட மாதிரி நீ சுப்ரீம்கோர்ட் போய் எங்க வாதட்றது!” போலியான வருத்ததுடன் சித்தார்த் சொல்ல,
“இந்த நடிப்பு தானே என்கிட்ட வேண்டாங்கிறது!” சொல்லிவிட்டு சிரித்தாள் மாதுரி.
“ஹா…ஹா…கண்டுபிடிச்சிட்டியா?!”
“பின்ன, நான் என்ன சம்பாதிக்கவா லா படிச்சேன். சில டாக்டர்ஸ் வருமானம் பார்க்காம பத்து ருபாய், இருபது ரூவாய், வாங்கிட்டு வைத்தியம் பார்க்கிற மாதிரி, நானும் அவங்களால முடிஞ்சதை வாங்கிட்டு ஏதோ என்னால முடிஞ்சதை செய்றேன்.”
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா பப்பு! அவங்க கொடுக்கிற பணத்தைக் கூட, அனாதை அஷ்ரமத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும் கொடுத்திட்ற.”
“ஏதோ என்னால முடிஞ்சது பய்யா. இதுக்குக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும். நம்ம அப்பா நம்மளை நல்ல நிலைமையில வச்சுருக்கிறதுனால தான், என்னால தானம் செய்ய முடியுது.”
“அப்பா மட்டும் காரணமில்லை பப்பு. உன் நல்ல மனசும் தான் காரணம். பணத்துக்காக இல்லாட்டியும், பேர், புகழ் வாங்கணும்ன்றதுக்காகக் கூடச் சிலர், சின்னக் கேசை ஊதி ஊதி பெருசாக்கி, வருஷக்கணக்கிலக் கோர்ட் படி ஏற வைக்கிறாங்க. அனா நீ, வெட்டுகுத்தோட வர்ற கேசைக் கூட, லட்டு ஊட்டிடு திரும்பப் போற கேஸா மாத்திட்ற…” பெருமையுடன் கூறினான் சித்தார்த்.
“ஹா…ஹா…இப்போ கூட அப்படி ஒரு கேஸ் தான் வந்துச்சு. நல்லபடியா முடிச்சுட்டேன். அங்க வந்து சொல்றேன்.”
“என்ன கேஸ் பப்பு?!” ஆர்வம் தாங்காமல் அவன் கேட்க, “டிவோர்ஸ் கேஸ்.” என்றாள் மாதுரி.
“ஆஹா! அப்போ ரெண்டு பேரும் இந்நேரம் கட்டிபிடிச்சிட்டு நிப்பாங்களே?!” தெரிந்தே அவன் கேட்க,
“பய்யா கட்டிபிடிச்சிட்டு மட்டுமில்ல, பிரெஞ்ஷ் டைப்ல கிஸ்சும் அடிச்சிட்டு இருக்காங்க.” வேண்டும் என்றே அண்ணனை வம்பிழுத்தாள் தங்கை.
“ஹா…ஹா…என்கிட்டையே விளையாடுறியா பப்பு?! அவங்க அழுதுட்டு நிக்கும்போதே, நீ ஃபோனை எடுத்துட்டு வெளியே வந்திருப்பியே. இதோ இப்போக்கூட அவங்களுக்கு ப்ரைவசி கொடுக்ககிற சாக்குல தானே என்கிட்டே பேசிட்டி இருக்க.” தங்கையைப் பற்றி நன்கு அறிந்த சித்தார்த்த கூறினான்.
“போச்சே!” பதிலுக்குச் சிரித்தாள் மாதுரி.
அதற்குள் அரவிந்தும், சாருலதாவும் வெளியே வர, “அவங்க வராங்க பய்யா! அவங்களை அனுப்பிட்டு, நானும் கிளம்பி கடைக்கு வந்துடறேன்.”
“சரி டா பப்பு! பாத்து பத்திரமா வா.”
[the_ad id=”6605″]
“டிகே பய்யா!” பேசிவிட்டு ஃபோனை வைத்தவள், அரவிந்த் பக்கம் திரும்பினாள்.
“ரொம்பத் தேங்கஸ் மேடம். இவ்ளோ நல்லவளை நான் இழக்க இருந்தேன்.” மனைவியைப் பார்த்தபடி அரவிந்த் சொல்ல, “தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம் அரவிந்த். அவங்களை அழ வைக்காம, வாழ்ந்து காட்டுங்க. அது போதும்.”
“நிச்சயம் மேடம்!” சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல, மாதுரியின் அருகில் வந்த சாருலதா, “ரொம்பத் தேங்க்ஸ் மேடம். என் லைஃபை காப்பாத்தி கொடுத்துட்டீங்க.” என்று சொல்லிவிட்டு, அவள் காலில் விழப்போக, அவளைத் தடுத்த மாதுரி, “எனக்குத் தேங்க்ஸ் சொல்லாதீங்க சாருலதா. உங்களோட தன்னம்பிக்கையை வளர்த்துக்கோங்க. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதை ஃபேஸ் பண்ணனும். அந்தத் தைரியம் உங்களுக்கு நிச்சயம் வேணும்.”
“நிச்சயம் மேடம். அவர் டிவோர்ஸ் சொன்னதும் கொஞ்சம் மனசொடிஞ்சு போயிட்டேன்.” அவளின் கண்கள் கலங்கியது.
“என்னால புரிஞ்சிக்க முடியுது சாருலதா. இனிமே கவலை வேண்டாம். ஹாப்பியா இருங்க. சீக்கிரம் குழந்தை பிறந்த சந்தோஷமான செய்தியை எனக்குச் சொல்லணும்.”
மாதுரி சொன்னதும் வெட்கப்பட்ட சாருலதா, “நிச்சயம் மேடம். உங்களுக்குத் தான் மொதல்ல சொல்லுவேன். சரி மேடம் நான் கிளம்புறேன்.”
“சரி சாருலதா.”
அப்பெண் சென்றதும், கூர்காவிடம் அலுவகத்தைப் பூட்டிவிட்டுக் கிளம்பச் சொல்லிவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு, திநகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ‘மேத்தா ஜுவ்வலரி’ கடையை நோக்கி சென்றாள் மாதுரி மேத்தா.