குஜராத்தின் சூரத் நகரில் புகழ் பெற்ற குடும்பம், ‘மேத்தா’ குடும்பம். பூட்டன் காலத்தில் இருந்து வைரம் மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் வழி வந்தவர் தான் பல்வந்த் மேத்தா, மாதுரியின் தாத்தா.
வியாபாரத்தைப் பெருக்கவெனத் தமிழ்நாட்டுக்கு வந்தார் பல்வந்த் மேத்தா. இங்கே வியாபாரம் நல்ல விதத்தில் போக, அண்ணனை அங்கே பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இங்கே சௌக்கார் பேட்டையில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
அவரின் மகன் தான், அம்பரீஷ் மேத்தா, மாதுரியின் அப்பா!
தந்தையின் அத்தனை வியாபார தந்திரங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டவர், தந்தையை மிஞ்சிவிடும் தனையனாக இருந்தார்.
பல்வந்த் மேத்தா காலத்தில், சௌக்கார் பேட்டையில், சின்னத் தங்க நகைக்கடையை மட்டுமே அவர்கள் நிர்வகிக்க, அம்பரீஷ், அதைப் பல மடங்காகப் பெருக்கினார்.
சென்னையின் வால்ஸ்ட்ரீட் என்று கருதப்படும், திநகர் ரங்கநாதன் தெருவில், தரை தளம், மற்றும் முதல் தளத்தில் தங்க நகைகளும், இரண்டாம் தளத்தில் வைர நகைகளும் என மூன்று தளங்களைக் கொண்ட நகைக்கடை ஒன்றும், ஆண்கள், பெண்கள், குழந்தை உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான ஆடைகளைக் கொண்ட ஐந்து மாடி துணிக்கடை ஒன்றும் என, இரண்டு கடைகளை உருவாக்கி இருந்தார் அம்பரீஷ்.
திநகர் வியாபார சாம்ப்ராஜியத்தின் சிங்கங்களாக இருக்கும் சிலரின், கடல் அளவு கடைகள் இல்லையென்றாலும், ஓர் அளவுக்கு நல்ல நிலையிலேயே இருந்தார் அம்பரீஷ்.
தங்கம், வைரம், துணிகள் எல்லாவற்றையும் அவற்றிற்குப் புகழ் பெற்ற குஜராத்தின் சூரத் நகரில் இருந்து இறக்குமதி செய்து, வியாபாரம் செய்தார். அவற்றின் தரம் நன்றாக இருக்க, நல்ல வியாபாரம் ஆனது. லாபமும் லட்சங்களில் வந்தது.
முதலில் நகைக்கடை மட்டுமே வைத்திருந்தார் அம்பரீஷ். அதன்பின்னே அக்கடையில் வந்த லாபத்தை வைத்து, துணிக்கடையும் ஆரம்பித்தார்.
அந்த நேரம், அவரின் துணிக்கடையில் வேலை செய்த தமிழ் பெண்ணான, ராஜேஸ்வரியின் பண்பும், அழகும், அம்பரீஷை கவர, அவரிடம் தன் காதலை சொல்லி சம்மதம் வாங்கி, இரு வீட்டு பெற்றோரின் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டார்.
அம்பரீஷ் மேத்தா, ராஜேஸ்வரி மேத்தா, தம்பதியரின் மூத்த மகன் தான், ‘சித்தார்த் மேத்தா’. உருவத்திலும், செயலிலும் அப்படியே தந்தையைக் கொண்டு பிறந்தவன். அவரிடம் இருக்கும் கம்பீரம், ஆளுமை எல்லாம் இவனிடமும் தவறாமல் இடம் பெற்றிருந்தது. அதே நேரம் தாயின் பண்பையும் பெற்றிருந்தான்.
அவனுக்குப் பிறகு, பெண் குழந்தை வேண்டும் என ராஜேஸ்வரி ஆசைப்பட, ஆனால் தொடர்ந்து இரண்டு முறையும் ஆண் குழந்தையைத் தான் கருத்தரித்தார். ஆனால் அதுவும் தங்கவில்லை. (Diazepam)
எங்கே தனக்குப் பெண் குழந்தை பிறக்காமல் போய்விடுமோ என அஞ்சி, கோவில் கோவிலாகச் சென்று விரதம் இருந்தவரின், ஐந்து வருட காத்திருப்புக்கு பிறகு பிறந்தவள் தான், நம் நாயகி ‘மாதுரி மேத்தா’.
சித்தார்த், தந்தையைக் கொண்டு பிறந்திருக்க, மதுரியியோ இருவரையும் கொண்டு பிறந்தவள்.
ராஜேஸ்வரியின் அழகும், பண்பும், அம்பரீஷின் கம்பீரமும், ஆளுமையும் அவளிடம் இருந்தது.
தாயும், தந்தையும் வெவ்வேறு கலாச்சாரம், மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சித்தார்த், மாதுரி இருவருமே குஜராத்தி, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பேச, எழுத தெரிந்தவர்கள். பார்ப்பதற்கு இருவரும் வடஇந்தியர்களைப் போல இருந்தாலும், தமிழ் அவ்வளவு சுத்தமாகப் பேசுவார்கள். பிள்ளைகள் தாய் மொழியில் புலமை பெற்றிருப்பது அம்பரீஷிற்கு மிகவும் சந்தோஷம். பின்னே மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆயிற்றே!
சித்தார்த் லண்டன் சென்று எம்.பி,ஏ படித்து, தந்தையின் வியாபாரத்தைத் திறம்படக் கவனிக்க, அவனுக்குத் தான் சளைத்தவள் என்பது போல, தானும் பிசினெஸ் மானேஜ்மெண்ட்டை படித்த மாதுரி, கூடவே சட்டமும் படித்துப் பட்டம் வாங்கினாள். பின் பார்கவுன்சிலில் பதிவு செய்து, அதற்கான தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று ப்ராக்டிஸ் செய்யும், வக்கீல் தான், நம் நாயகி!
வக்கீல் படிப்புப் படித்திருந்தாலும், எந்தக் கோர்ட்டிலும் அவள் தற்பொழுது வழக்கறிஞராக வேலை பார்க்கவில்லை. அனுபவத்திற்காக, ஆரம்பகாலத்தில் ஒரு பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியராக வேலை பார்த்தாள். அதன்பின் அம்பரீஷ் அவளுக்கென்று தங்கள் கடைக்கு அருகிலேயே, பனகல் பார்க் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாங்கி, அலுவகமாக மாற்றிக் கொடுத்தார். மகள் படித்த படிப்பை நன்மைக்காகப் பயன்படுத்துவதில் அவருக்கும் பெருமையே!
காலை முதல் மாலை வரை சட்டம் படித்ததற்காக, வக்கீலாகத் தன் அலுவகத்தில் கடமையாற்றும் மாதுரி, மாலைக்குப் பிறகு தங்கள் துணிக்கடைக்கோ இல்லை நகை கடைக்கோ வருபவள் தந்தையுடன் வியாபாரம், கணக்கு வழக்குகளை ஒரு பிசினெஸ் மாணவியாகக் கவனிப்பாள். இரவு தந்தை கிளம்பும் பொழுது அவர்களுடனே வீட்டிற்கு வந்துவிடுவாள். இதுதான் அவளின் தினப்படி.
அன்றும் அப்படித்தான், கேசை முடித்துவிட்டு, கடைக்குக் கிளம்பிவிட்டாள். இருட்ட ஆரம்பித்திருந்த அந்த மாலை நேரத்தில், நெருக்கடியான ட்ராபிக் மத்தியில் கஷ்டப்பட்டுத் தன் வண்டியை ஓட்டி வந்தவள், அவர்களின் நகை கடைக்குப் பின்பக்கம் இருக்கும் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு, கடைக்குள் நுழைந்தவள், நேரே தந்தையின் அறைக்குச் சென்றாள்.
மகளைப் பார்த்ததும் முகம் நிறைந்த புன்னகையுடன், “பப்பு! ஆவோ! ஆவோ!” என்று அழைத்தார் அம்பரீஷ். தந்தையின் அருகில் சென்று அசீர்வதாம் வாங்கியவள், அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, வழக்கம் போல அண்ணனை தேடிச் சென்றாள்.
அம்பரீஷ் நகைக்கடையைப் பார்த்துக்கொள்ள, சித்தார்த் துணிக்கடை, நகைக்கடை இரண்டையும் கவனித்துக்கொள்வான். அதற்காக இரு கடைகளிலும் மாற்றி மாற்றி இருப்பான்.
அன்று அவன் நகைக்கடையில் இருக்க, அவனின் அறைக்குச் சென்றாள் மாதுரி. “ஹே பப்பு!! என்ன கேஸ் முடிஞ்சுதா?” சித்தார்த் சிரிப்புடன் கேட்க, “அதையேன் கேட்கிற பய்யா…” என்றவள் அலுவகத்தில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, “இந்தக் காலத்துலையும் இப்படி இருக்காங்களே பய்யா! அந்தப் பொண்ணு பாவம்.” என்று சொல்ல, அவனோ, “எல்லாப் பொண்ணுங்களும், என் தங்கச்சி மாதிரி போல்ட் கிடையாதே!” என்றான் பெருமையாக.
அதற்குள் அம்பரீஷ் அவனை அழைக்க, தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் சித்தார்த்.
அண்ணன் விட்டுச் சென்ற கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாதுரி, எதேர்ச்சையாக நிமிர்ந்து கணினி திரையில் ஓடிக் கொண்டிருந்த சீசீடிவி காட்சிகளைப் பார்த்தாள். அப்பொழுது அந்தக் காட்சி அவள் கண்ணில் பட்டது.
அவர்கள் கடையில் வேலை செய்யும் மோகன் என்பவன், வாடிக்கையாளர்கள் பார்பதற்காக டிஸ்ப்ளே டேபிள் மீது எடுத்து வைத்திருந்த வைர கம்மல் கேஸ்களைத் திருப்பிச் செல்ஃபில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். கடைசியாக ஒரு கேசை வைக்கும்பொழுது, அதில் இருந்து ஒரு சிறிய செட் கம்மலை வெளியே எடுத்தான், பின் சுற்றும் முற்றும் பார்த்தவன், யாருக்கும் தெரியாமல் அதை நாக்கின் அடியில் வைத்து மறைத்துக் கொண்டான்.
கணினி திரையில் இக்காட்சியைப் பார்த்ததும், சட்டென்று கையில் இருந்த பேனாவை வைத்துவிட்டு எழுந்த மாதுரி, அறையைப் பூட்டிவிட்டு விறுவிறுவென்று, கம்மல் பகுதிக்குள் நுழைந்தாள்.
மாதுரியை கண்டதும் அவள் அருகில் வந்த மேனேஜர், அவள் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்துவிட்டு, “என்ன மேடம்? எதாவது பிரச்சனையா?!” என்று கேட்க, “போய் அப்பாவை கூட்டிட்டு வாங்க.” என்று அவருக்குக் கட்டளையைப் பிறப்பித்தவள், விறுவிறுவென்று மோகன் முன் சென்று நின்றாள்.
அவளைப் பார்த்ததும், குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுக்க, மோகனுக்கு உடல் உதறல் எடுத்தது. இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றான்.
“டேஸ்ட் எப்படி இருக்கு?!” மாதுரி சம்பந்தம் இல்லாமல் கேட்க, குழப்பமாக முழித்தான் அவன்.
“உங்களைத் தான் மோகன், அந்த வைரத்தோட டேஸ்ட் எப்படி இருக்குன்னு கேட்டேன்!” இந்த முறை அவள் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.
“மே…மேடம்…?!” கம்மலை வாயின் ஒரு பக்கமாக ஒதுக்கிக்கொண்டு ஒருவாறு திக்கித் திணறிப் பேசினான் அவன்.
அவனை நின்று முறைத்தவள், “நான் சொல்றது புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்குறீங்களா?” அவள் அழுத்தமாகச் சொல்ல, மீண்டும் அவனிடம் மவுனம்.
“உங்க வாயில் ஒளிச்சு வச்சுருக்கீங்களே வைர கம்மல், அதை வெளியே எடுங்க….குவிக்!” கர்ஜித்தாள் மாதுரி.
அவளின் கோபத்தில் திடிகிட்ட மோகன், சட்டென்று வாயில் இருந்து கம்மலை எடுத்தவன், தயக்கத்துடன் அதை டேபிள் மீது வைத்தான்.
கையும் களவுமாகப் பிடிபட்டதில் மோகனுக்குக் கைகால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாது என்று தான் அந்தப்பக்கம் திரும்பி அவன் எடுத்தது. இருந்தும் எப்படித் தெரிந்தது அவளுக்கு என்று யோசனை அவன் மண்டையில் ஓடியது.
மோகன் வீட்டுப்பக்கம் இருந்த சேட் ஒருவன், நகையைக் கொண்டு வந்தால் பணம் தருவதாகச் சொல்லி இருக்க, அதற்கு ஆசைப்பட்டுத் திருடி இருந்தான் அவன்.
பொதுவாக அம்பரீஷின் கடையில், இரவு கடையைச் சாத்தும் முன்பு ஊழியர்களைச் செக் செய்துவிட்டே அனுப்புவார்கள். ஆனால் அவர்களின் செக்கிங், சட்டை, பேன்ட் பாக்கெட், உணவு பை என்று மேலோட்டமாக இருக்கும். இந்த அளவுக்குத் தலைமுடி, வாய், என ஊடுருவி எல்லாம் பார்க்க மாட்டார்கள். அதைத் தான் அவன் பயன்படுத்த நினைத்தான்.
“இது தான் நீங்க வேலை செய்ற லட்சணமா மோகன்?!” கோபத்துடன் மாதுரி கேட்டுக் கொண்டிருக்க, மோகன் வாயில் இருந்து கம்மலை எடுக்கும்பொழுதே அங்கு வந்துவிட்டனர், அம்பரீஷும், சித்தார்த்தும்.
நகை வாங்கிக் கொண்டிருந்த சிலரும், நடக்கும் காட்சியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
பெரியவரை பார்த்ததும், விறுவிறுவென்று கௌண்டரில் இருந்து வெளியே வந்த மோகன், “சாரி சார்! ஏதோ கஷ்டத்துக்குத் திருடிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க சர்!” என்று அவர் காலை பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
சித்தார்த்தோ, “என்ன நடந்துச்சு பப்பு?!” என்று பதற்றத்துடன் கேட்க, சற்று முன்பு தான் பார்த்ததையும், இப்பொழுது இங்கு நடந்ததையும் கூறினாள் மாதுரி.
தங்கை சொன்னதும் கோபம் கொண்ட சித்தார்த், “ப்ளேன் செஞ்சு திருடிட்டு, இப்போ தெரியாத மாதிரி மன்னிப்பு கேட்குறீங்க மோகன்! இதுதான் நீங்க வேலை செய்ற இடத்துக்கும், சம்பளம் கொடுக்கிற முதலாளிக்கும் காட்டுற விசுவாசமா? உங்களை நம்பி தானே வேலைக்குச் சேர்க்கிறோம். இப்படியா செய்வீங்க?” என்று கத்த,
“சாரி சர், வீட்டில கஷ்டம். அவசரமா பணம் தேவைப்பட்டுச்சு. அதான் இப்படிச் செஞ்சுட்டேன்.” பதிலுக்கு அழ ஆரம்பித்துவிட்டான் மோகன்.
அப்பொழுது குறுக்கிட்ட மாதுரி, “நீங்க வேலை செஞ்சது போதும். சம்பள பாக்கியை வாங்கிட்டு கிளம்புங்க.” என்றாள் தடாலடியாக.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன மோகன், “மேடம்! தயவு செஞ்சு இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க. இனிமே சத்தியமா திருட மாட்டேன். ப்ளீஸ் மேடம்.” என்று கதற,
“இந்த ஒரு தடவை உங்களை மன்னிச்சு விட்டா, அடுத்தத் தடவை திருடும்பொழுது இன்னும் கவனமா திருடுவீங்க, அப்படித் தானே?! அதான் இப்பவே பார்த்தேனே! கஷ்டத்துக்குத் திருடின மாதிரியா திருடுனீங்க? ஏதோ ப்ளேன் போட்டு திருடின மாதிரி தானே திருடுனீங்க. கஷ்டத்துக்குத் தப்பு செய்றவனுக்கு, அந்தத் தப்பை செய்யும்பொழுது, கைகால் எல்லாம் உதறல் எடுக்கும், முகமெல்லாம் வேர்த்து ஊத்தும். ஆனா உங்க முகத்தைப் பாருங்க! எங்கையாவது செஞ்ச தப்புக்கான பயமோ, வருத்தமோ தெரியுதான்னு. அதான் கேமரால பார்த்தேனே, திருடும்போது உங்க முகத்தில பயத்தை விட, எச்சரிக்கை தான் அதிகம் தெரிஞ்சதை!” படபடவெனச் சொன்னவள்,
தந்தையின் பக்கம் திரும்பி, “இவருக்குச் செட்டில் செஞ்சு அனுப்பிடுங்க பப்பா!” என்று சொல்லிவிட்டு நகரப் போனவள், நின்று திரும்பி, “அந்தக் கம்மலை அழிச்சிடுங்க.” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பாராமல் புயலென அங்கிருந்து சென்றாள்.
மாதுரி, ஒரு வக்கீலாக எந்த அளவுக்கு இறக்க குணம் கொண்டவளோ, அதே அளவுக்குக் கடின தன்மை கொண்டவள் ஒரு வியாபாரியாக!
மகள் சொல்லிவிட்டு செல்ல, அம்பரீஷ் மோகனை நினைத்து தயங்கி நின்றார். என்ன இருந்தாலும் புள்ளை குட்டி உள்ளவன் ஆச்சே!
ஆனால் சித்தார்த்தோ, “பப்பு எந்த அளவுக்குச் சாஃப்டோ, அதே அளவுக்கு ஹார்டும் கூட. சாஃப்ட்டா இருக்க வேண்டிய இடதில் சாஃப்ட்டா இருப்பா. ஹார்டா இருக்க வேண்டிய இடத்தில ஹார்டா இருப்பா. அவ என்னைக்கும் தப்பா முடிவு எடுக்க மாட்டா பாபுஜி!” அழுத்தமாகச் சொன்னான், போகும் தங்கையைப் பார்த்தப்படி.