“வணக்கம்! உட்காருங்க. எனன் கேஸ்?” தீவிர முகத்துடன் மாதுரி அவரிடம் விசாரிக்க,
அவளின் தோற்றம் பார்த்து, ‘சின்னப் பொண்ணு மாதிரி இருக்கே! கல்யாணம் கூட ஆகலை போலவே?! இந்தப் பொண்ணுக்கா அவ்ளோ தைரியம்?!’ மனதுக்குள் நினைத்தவர், சந்தேகத்துடனே தன் குறையை அவளிடம் கூறினார்.
“கலெக்டர் கூட ஆக்க்ஷன் எடுக்கலையா?!” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“இல்லமா! ஒரு தடவை பார்த்து பேசினாரு. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாரு. ஆனா அதுக்கு அப்புறம் போய்க் கேட்டா, பார்க்க கூட இல்லை.” வருத்ததுடன் சொன்னார். அவரின் முகத்தில் தெரிந்த களைப்பு, எப்படியாவது இதை முடித்துக்காட்ட வேண்டும், என்று அவளை உத்வேகப்படுத்தியது.
அவரிடம் இருந்து, ஆதாரங்கள், FIR காப்பி, கலெக்டரிடம் கொடுத்த மனுவின் நகல் என என்னென இருந்ததோ, அத்தனையும் வாங்கிக் கொண்டாள்.
“நீங்களாச்சும் எப்படியாவது நியாயம் வாங்கித் தரணுமா!! எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு களைச்சு போச்சு. நீங்க செய்வீங்கன்னு எல்லாரும் சொல்லவும் தான் உங்களைத் தேடி வந்தேன். இனி யார்கிட்டையும் போய்ப் போராட, உடம்பில தெம்பும் இல்ல, பணமும் இல்லமா. என் பொண்ணு கல்யாணத்துக்கே அந்த இடத்தைத் தான் விக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ அதுக்குக் கூட வழியில்லாம போச்சு.” அவர் முகத்தில், விரக்தியின் உச்சம் அப்பட்டமாகத் தெரிந்தது.
தன் அப்பாவை போல இருந்த அவரின் கவலை மாதுரியையும் வருத்தம் கொள்ளச் செய்தது. “நான் பார்த்துகிறேன் சர். நீங்க கவலைப்படாம போங்க. நான் கூப்பிடும்போது மட்டும் கோர்ட்டுக்கு வரவேண்டி இருக்கும்.”
“ரொம்ப நன்றி மா!” கைகூப்பிச் சொன்னவரின் கண்களில் நம்பிக்கை ஒளி பிராகசமாகத் தெரிந்தது.
[the_ad id=”6605″]
அவரிடம் சொல்லிவிட்டு அனுப்பிவிட்ட மாதுரி, அடுத்து வந்த நாட்களில் முழுமூச்சாக இந்த வழக்கில் இறங்கினாள். நிலத்தடி நீரை எடுப்பவர்களின் விவரங்களையும், அவர்கள் சார்ந்த கேன் சப்ளை கம்பனி பற்றி விவரம் முழுவதையும் சேகரித்தாள். நில உரிமையாளர் கொடுத்த போட்டோ, வீடியோ, எல்லாம் இல்லாமல், தானே களத்திற்குச் சென்று யாருக்கும் தெரியாமல், வழக்குக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டினாள்.
எல்லாம் தயாராகக் கைக்குக் கிடைத்ததும், நிலத்தடி நீரை சட்டவிரோதமாகப் பிரித்தெடுப்பதற்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், சென்னை குடிநீர் வாரிய என்ஜினியர், ஆகியோரை வலியுறுத்தி உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 226ன் கீழ் மாண்டமஸ் ரிட் மனுவை தாக்கல் செய்தாள்.
அதே நேரம், தன் கட்சிக்காரர் அளித்த புகாருக்கு சரியான் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறை அதிகாரியை, பணியில் இருந்து சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் தன் மனுவில் சேர்த்திருந்தாள். அதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கோர்டில் சமர்பித்தாள்.
இந்த வழக்கு, அதிகாரிகள் வராததால் காலம் தாழ்த்திக்கொண்டே செல்ல, அதற்கும் தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தாள்.
ஒரு கட்டத்தில் நந்தா உட்படப் பிரதிவாதிகளைக் கோர்டில் ஆஜராகும்படி நீதிமன்றம் கடுமையாகச் சொல்லிவிட, அதுவரை யார் பேச்சையோ கேட்டு நீதிமன்றத்திற்கு வராமல் இருந்த நந்தா, வேறு வழியில்லாமல், அன்று நீதிமன்றத்தில் ஆஜாரானான். அப்பொழுது தான் முதல் முறையாக மாதுரியை கோர்டில் வைத்துப் பார்த்தான்.
பிரதிவாதிகள் அனைவரும் வந்துவிட, அன்று விசாரணை சூடு பிடித்தது. மாதுரி இப்படி விடாபிடியாக இருப்பாள் என்று அறிந்திராத எம்.எல்.ஏ கோஷ்டி, போலி ஆவணங்களைச் சமர்பிக்க, அதில் உள்ள ஓட்டைகளை நொடிபொழுதில் கண்டுபிடித்த மாதுரி, அதையெல்லாம் தவிடுபொடியாக்க, கோர்டே அவளின் வாத திறமையை ரசித்துப் பார்த்தது. ஏற்கனவே ரெண்டு மூன்று முறை, அரசையே தோற்கடித்தவள் ஆயிற்றே!
அதன்பின்போ, கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுக்கிறோம், அதற்குக் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வக்கீல், வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்க, ஏற்கனவே வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்ட காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி, இனிமேல் எங்கே இருந்து எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புவது, என்று எதிர் தரப்பு வக்கீலின் வாதத்தைத் துவம்சம் செய்த மாதுரியின் பேச்சு திறமையையும், அரசையே எதிர்கும் தைரியத்தையும் அந்தக் கோர்ட் மட்டும் ரசிக்கவில்லை, சென்னை ஆட்சியர் நந்தகுமாரும் ரசித்தான்.
பின்னே, பதவியைக் காப்பற்றிக்கொள்ள யார் யாருக்கோ தான் பயந்து கொண்டிருக்கையில், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு அரசியல் கோஷ்டியை எதிர்ப்பது என்பது சுலபமான காரியமா? அவளின் ஒவ்வொரு பாய்ண்டும், நந்தாவை சபாஷ் போட வைத்தது.
இறுதியில், நிலத்தடி நீரை உறிஞ்ச தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம், நந்தகுமாரை உடனே நடவடிக்க எடுக்கச் சொன்னது. கூடவே அந்த இன்ஸ்பெக்டரை, மூன்று மாதம் சஸ்பென்ட் செய்யச் சொல்லி, சென்னை காவல்துறைக்கு நீதிமன்றம் சார்பாக உத்தரவிடப்பட்டது.
கோர்ட்டை விட்டு அனைவரும் வெளியே வர, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நல்ல தீர்ப்பில், மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த இடத்தின் உரிமையாளர், மாதுரியின் அருகில் வந்து தன் நன்றிகளைத் தெரிவித்தார். கூடவே, அவளுக்குண்டான பீஸை அவர் கொடுக்க முயற்சிக்க, அதை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டாள்.
நடந்த இக்காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் நந்தா. ஏனோ தெரியவில்லை மாதுரியை அவனுக்குப் பிடிக்க ஆரம்பித்தது.
அதே நேரம் மாதுரியும், யாரோ அவன் தான் கலெக்டர் என்று சுட்டிக்காட்ட, நந்தாவை திரும்பி பார்த்தாள்.
மாதுரி தன்னைப் பார்க்கவும், சிநேகமாகப் புன்னகைதான் நந்தா. ஆனால் அவள் பதிலுக்கு எதுவும் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். ஆனால் அதில் கோபம் கொள்ளாமல், போகும் அவளை ரசித்துப் பார்த்தான் இவன்.
அடுத்து அவர்கள் சந்தித்துக் கொண்டது, மாதுரியை யாரோ கொலை செய்ய வந்த பொழுது.
[the_ad id=”6605″]
அன்று ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரத்தில் இருக்கும் தோழியின் திருமணத்தில் கலந்துவிட்டு, தன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தாள் மாதுரி. இரண்டு பக்கமும் வயல்வெளிகள் நிறைந்த அந்த நெடுஞ்சாலையில் நண்பகல் வேளையில் பயணித்துக் கொண்டிருந்தவளை பின்தொடர்ந்தது ஒரு கார்.
முதலில், அது யாரோ என்று தான் நினைத்தாள் மாதுரி. ஆனால், வெகு நேரம் அவர்கள் தன்னைப் பின்தொடரவும் லேசாகச் சந்தேகம் எழுந்தது அவளுக்கு. உடனே தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள். அத்தோடு சித்தார்த்தை போனில் தொடர்புகொண்டாள். ஆனால் அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப்படவில்லை. உடனே தந்தைக்கு அழைத்தாள். முஹூம், அதுவும் நாட் ரீச்சபில் என்று வந்தது.
அவளுக்குத் தெரியும் அவர்கள் இருவரும், நகைக்கடைக்குச் சரக்கு வாங்குவது சம்பந்தமாக, யாரையோ பார்க்க சென்றுள்ளனர் என்று. இருந்தும் முயற்சித்துப் பார்த்தாள்.
தற்பொழுது அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, தாய்க்கு அழைக்கலாமா என்று யோசித்தாள். வேண்டாம் அவர்களைப் பயப்பட வைக்க வேண்டாம் என்று விட்டுவிட்டாள். காரின் வேகத்தை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகரித்து, வேகமாகச் சென்னையின் மெயின் ரோட்டை பிடிக்கத் திட்டமிட்டாள்.
ஆனால் அதற்குள் பின்னாடி வந்து கொண்டிருந்த கார், அவள் முன் வந்து பிரேக் போட்டு நிற்க, அவர்களைக் கடந்து சென்றுவிட வேண்டும் என்ற அவளின் முயற்சி பலிக்கவில்லை. அவர்களின் கார் மீதி மோதி நின்றது மாதுரியின் கார்.
அதற்குள் முன்னாள் நின்றிருந்த காரில் இருந்து முகமூடி அணிந்த இரண்டு, மூன்று பேர் இறங்கி வர, படபடவெனக் கார் கண்ணாடியை ஏற்றிவிட முயற்சித்தாள். அவளின் முயற்சி பலிக்கவில்லை. அதற்குள் அவள் காரை நெருங்கிவிட்டிருந்த ஒருவன், அவளின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தான்.
அவனின் பலத்துக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், வெளியே தள்ளப்பட்ட மாதுரி, அவன் கைகளில் சிக்கினாள். அவர்கள் அனைவரின் கைகளிலும், ஆளுயர அரிவாள்கள் இடம்பெற்றிருந்தது.
[the_ad id=”6605”]
இருந்தும் அதைக் கண்டு பயப்படாமல், தன்னைப் பிடிதிருந்தவனின் காலை தன் ஹீல்ஸ் கொண்டு மிதித்தவள், அவன் பிடி தளரவும் ஓட முயற்சிக்க, அதற்குள் இன்னொருவன், அவளின் முதுகில் தன் கையில் இருந்த அருவாளை கொண்டு வெட்டினான்.
அடுத்த நொடி, முதுகில் ஆழமான அரிவாள் வெட்டு விழுந்ததில், ரத்த நாளங்கள் வெட்டப்பட்ட, உடம்பில் ஓடிகொண்டிருந்த ரத்தம் குபுக்கென்று வெளியேறி, அவள் ஜாக்கெட்டை நனைத்தது. “பப்பா!!” என்று வலியில் துடித்தவளுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கில் கண்களை இருட்டிக்கொண்டு வர, நடு ரோட்டில் தொப்பென்று மயங்கி விழுந்தாள்.
இவையெல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருந்தது. அந்த நண்பகல் வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாததால், யாரும் இதைக் கவனிக்கவில்லை.
மற்றவர்கள் தங்கள் காரில் எரிவிட, ஒருவன் மட்டும், மல்லாந்து விழுந்திருந்த மாதுரியின் முகத்தில் வெட்டப்போக, அந்த நேரத்தில் தூரத்தில் சைரன் ஒலி கேட்டது.
“டேய்! யாரோ போலீஸ் வராங்க போல. ஓடியா!” என்று கூட்டாளி கத்தவும், இடத்தைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டது அந்தக் கும்பல்.
அலுவல் விஷயமாகக் காஞ்சிபுரம் சென்றுவிட்டுச் சென்னை திரும்பி கொண்டிருந்த நந்தா, தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுதே, யாரோ சிலர் ஒரு பெண்ணைத் தாக்குவதைப் பார்த்துவிட்டான். உடனே டிரைவரை வேகமாக ஓட்டச்சொல்லி, அப்பெண் அருகே வர, காரில் இருந்து கீழே இறங்கி பார்த்தபின்பு தான் தெரிந்தது அது மாதுரி என்று.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாதுரியை பார்த்ததும், அவனையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனே குனிந்து அவளைத் தூக்கிகொண்டவன், தன் அரசாங்க காரில் அவளைக் கிடத்திவிட்டு, காவல்துறைக்கு அழைத்து விவரத்தை கூறி சம்பவ இடத்திற்கு வர சொன்னான். பின் தன் டிரைவரை போலீஸ் வரும்வரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, தன் காரை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.