அத்தியாயம் 9
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை வாசலில் வந்து காரை நிறுத்திய நந்தா, பின் சீட்டில் இருந்தவளை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே செல்ல, அவனின் கார் சைரன் சத்தத்தைக் கேட்டே, அவன் ஒரு முக்கிய அதிகாரி என்பதை ஊகித்த ஊழியர்கள், துரிதகதியில் செயல்பட்டனர்.
மாதுரிக்கு முதுலுதவி சிகிச்சை நடந்து கொண்டிருக்க, தலைமை மருத்துவரை பார்க்கச் சென்றான் நந்தா. நல்ல வேலை அவர் தன் அறையில் இருக்க, அவரைச் சந்தித்தவன், நடந்த விவரத்தை கூறினான்.
அவர் உடனே, கீழே வந்து மாதுரியை பரிசோதனை செய்துவிட்டு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். உடனடியாக அவளுக்கு அறுவை சிகிச்சை ஆரம்பமானது.
மாதுரி, அம்பரீஷின் மகள் என்பது நந்தாவிற்குத் தெரியும் என்பதால், திநகர் ஏரியா காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டவன், இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பரீஷிற்குத் தெரியப்படுத்த சொல்ல, அவர் கடையில் இல்லை என்று பதில் கிடைத்தது,
உடனே கடை மனேஜரிடம் இருந்து அவரின் வீட்டு டெலிஃபோன் நம்பரை வாங்கியவன், அவனே நேரடியாக மாதுரியின் அன்னையைத் தொடர்பு கொண்டான்.
“ஹலோ! நான் சென்னை கலெக்டர் பேசுறேன் மா!”
“சொல்லுங்க சர்.”
“உங்க பொண்ணு மாதுரிக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்.”
“ஐயோ?! அவளுக்கு என்ன ஆச்சு?”
“டாக்டர்ஸ் அவங்களைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க அப்பாவை காண்டாக்ட் பண்ணேன், ஆனா அவர் கடையில் இல்லை போல, அதான் உங்களுக்குப் பேசுறேன். நீங்க உடனடியா காஞ்சிபுரம் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு வரீங்களா? நான் அங்க தான் இருக்கேன்.”
[the_ad id=”6605″]
“இதோ சர். உடனே கிளம்பி வரேன்.” என்றவர் நந்தாவின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல், ஃபோனை வைத்துவிட்டு, டிரைவரை அழைத்துக்கொண்டு உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டார்.
கடை நல்ல வளர்ச்சி அடைந்ததும், திநகர் பகுதிக்கு அருகிலேயே வீடு வாங்கிக் குடும்பத்துடன், குடி வந்திருந்தார் அம்பரீஷ். சைதாபேட்டையில் தான் அந்த வீடு இருந்தது. தற்பொழுது அந்த வீட்டில் இருந்து கிளம்பினார், ராஜேஸ்வரி.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த அளவுக்கு ட்ராஃபிக் இல்லையென்றாலும், காஞ்சிபுரம் வந்து சேர, ஒன்றரை மணிநேரம் ஆனது.
நேரே மருத்துவமனைக்குள் விரைந்தவர், ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த தளத்திற்கு வந்தார். நந்தா மட்டும் வராண்டாவில் நின்றிருந்தான். நேரே அவன் அருகில் வந்தார்.
“சர்?!”
“சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். ஆனால் மாதுரியின் தாயை இதற்கு முன்பு அவன் பார்த்ததில்லை என்பதால், அந்தப் பெண்மணியைக் கேள்வியாகப் பார்த்தான்.
அவனின் குழப்பத்தைப் புரிந்துகொண்ட ராஜேஸ்வரி, “நான் மாதுரியோட அம்மா!” என்றார்.
சுதாரித்துக் கொண்டு அவருக்கு வணக்கம் வைத்தவன், “வாங்க மா. வர்ற வழியில நாலஞ்சு ரவுடிங்க உங்க பொண்ணைத் தாக்கி இருக்காங்க.”
“அச்சோ!”
“முதுகில் காயம் விழுந்துருக்கு. அதுக்கு ஆபரேஷன் நடந்திட்டு இருக்கு.”, நந்தா சொல்லச் சொல்ல, ராஜேஸ்வரியோ அழ ஆரம்பித்துவிட்டார். “அம்மா!! கடவுளே!! என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகக் கூடாது. கௌரி மாதா!!” கை கூப்பி வேண்டியவர், ஆபரேஷன் நடக்கும் அறைக்கு எதிரிரே, அப்படியே தரையில் அமார்ந்து விட்டார். சேரில் அமரும்படி நந்தா எவ்வளவோ சொல்லியும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. சரி என்று அவனும் விட்டுவிட்டான்.
அதற்குள் நந்தாவிற்கு அலுவகத்தில் இருந்து அழைப்பு வர, “இதோ வரேன்.” என்று சொல்லிவிட்டு வைத்தவன், ராஜேஸ்வரியிடம் வந்து, “ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன். டாக்டர் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன். அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க. சர் வந்ததும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. சாய்ந்திரம் வந்து பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சென்றவன், போகும் முன், அங்கிருந்த மருத்துவரிடமும், நர்சிடமும் ராஜேஸ்வரிக்கு தேவையானதை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டே சென்றான்.
மாதுரியின் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, காயம்பட்ட இடத்தில் தையல் எல்லாம் போட்டு ஆபரேஷன் முடிய, சில மணி நேரம் ஆனது. அதே நேரம் அம்பரீஷும், சித்தார்த்தும் மருத்துவமனை வந்து சேர, அவரிடம் வந்த மருத்துவர், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகச் சொன்னவர், மாதுரியை கவனித்துக் கொள்ளும் வழிமுறைகளைச் சொல்லிவிட்டு சென்றார்.
கணவரை கண்டதும் ராஜேஸ்வரி கதறி அழ, சித்தார்த்தோ கோபத்தில் இருந்தான்.
“என்ன தைரியம் இருந்தா! என் தங்கச்சி மேல கையை வச்சிருப்பானுங்க *****…” உறுமினான்.
ஆனால் அம்பரீஷ் தான், அவனை அப்போதைக்குத் தடுத்து நிறுத்தினார்.
“மொதல்ல, பப்பு சரியாகி வரட்டும் சித்து. அப்புறம் அவனுங்களைப் பார்த்துக்கலாம்.” அவர் கண்களில் தெரிந்த ரௌத்திரம், சித்தார்த்தை அமைதியடையச் செய்தது. ‘நான் விட்டாலும் அப்பா விட மாட்டார்.’ நினைத்துக் கொண்டான்.
அன்று மாலையே மாதுரியை தேடி வந்துவிட்டான் நந்தா. ராஜேஸ்வரி சொல்லவும் தான், நந்தா தான் தன் மகளைக் காப்பாற்றினான் என்பதைத் தெரிந்து கொண்ட அம்பரீஷ், நந்தாவிற்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“இருக்கட்டும் சர். பரவால்லை!” மிகவும் பவ்வியமாகப் பதில் அளித்தான்.
“நான் இப்போவே கம்ப்ளெயின்ட் கொடுக்கிறேன் தம்பி. என் பேட்டியை கொல்ல ட்ரை பண்ணவங்க யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்.” ஆர்வமாகச் சொன்னார் அம்பரீஷ்.
“அதைப் பத்தி போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சொல்லிட்டேன் சர். அவங்க இன்வெஸ்டிகேஷன் பண்ண பிறகு தான் தெரியும்.”
“நீங்க அவங்களை நேர்ல பார்த்தீங்களா தம்பி?”
“இல்ல சர். நான் வர்றதுக்குள்ள அவங்க ஓடிட்டாங்க.”
அதற்கு மேல் அவனிடம் கேள்வி கேட்பதற்குள், மருத்துவர் அழைத்திட நந்தாவிடம் மீண்டும் தன் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார் அம்பரீஷ்.
மாதுரிக்கு அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்ததாக அவளின் தாய் சொன்னதும் தான் நந்தாவிற்கு நிம்மதியாக இருந்தது. மாதுரி தூங்கி கொண்டிருந்ததால், ரஜேஸ்வரியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.
மாதுரி ஓர் அளவுக்குத் தேறி வர, ஒரு வாரமானது. அதன் பின் மருத்துவரின் அனுமதியுடன், அவள் சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.
இதன்பின்பே அம்பரீஷிற்கு மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது. ஏற்கனவே சென்னை கமிஷனரிடம் மகள் தாக்கப்பட்டது பற்றிப் பேசி இருந்தார். அது சம்பந்தமாக அவர் அவ்வபொழுது கமிஷனர் அலுவகம் சென்று வர, கடையைச் சித்தார்த் பார்த்துக் கொண்டான்.
அம்பரீஷின் வைர கடையில் தான், தரம் மற்றும் டிசைன்ஸ் நன்றாக இருக்கிறதென்று கமிஷனரின் மனைவி அடிக்கடி நகை வாங்குவார். அதனால் அவர்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தின் காரணமாக, அம்பரீஷிடம் தன் சந்தேகத்தைச் சொல்லி இருந்தார் கமிஷனர்.
“ரீசென்ட்டா, உங்க பொண்ணு எம்.எல்.ஏ நரசிம்மன் ரிலேடிவ்க்கு எதிரா கேஸ் போட்டு, ஸ்டே வாங்கி இருக்கா. கம்பெனி அவரோடது. ஆனா பினாமி பேர்ல நடத்திட்டு இருக்கார் போல. இப்போ கம்பனி நின்னுபோனதில அவருக்குக் கோபம் இருக்கிறதா பேசிக்கிறாங்க.”
[the_ad id=”6605″]
“ஆஃப்டரால் ஒரு எம்.எல்.ஏக்கு அவ்ளோ தைரியமா? **** **** என் பொண்ணை யாருன்னு நினைச்சிட்டு இருக்கான். அவனையெல்லாம் நாலு தட்டு தட்டி வச்சா தான் சரியா இருக்கும்.” அம்பரீஷின் இந்தக் கோபத்தைப் பார்த்து பதறிய கமிஷனர்,
“அம்பரீஷ் ஜி, அவன் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. இப்போ அவன் மேல கையை வச்சா, பிரச்சனை பெருசாகும். ஆறு மாசம் பொறுத்துக்கோங்க. எலெக்க்ஷன் வருது. இந்தத் தடவை நிச்சயம் எதிர் கட்சி தான் ஜெயக்கும்ன்னு, உளவு துறை சொல்லி இருக்கு. அதுக்கு அப்புறம் அவன் செல்லா காசாகிடுவான். அப்போ உங்க கோபத்தைத் தீர்த்துக்கோங்க.”
அதன் பின்பே அம்பரீஷ் சற்று ஆசுவாசம் அடைந்தார். ஆனால் அவர் மனதில் இருந்த ஆக்ரோஷம் அப்படியே தான் இருந்தது, சதர்ப்பத்தை எதிர்பார்த்து.
இதற்கிடையில் ஒரு மாதம் கடந்திருக்க, தன் வேலைகளுக்கு நடுவே மாதுரியை பார்க்க வந்தான் நந்தா. மருத்துவமனையில் ராஜேஷ்வரி மட்டுமே இருந்தார். அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, மாதுரியை தேடி அவள் அறைக்கு வந்தான். நல்லவேளை அவள் முழித்திருந்தாள்.
“இப்போ எப்படி இருக்கு?!”
“ம்ம், பரவாயில்லை.”
“யார் அவங்க?”
“தெரியல. யாராவது கேஸ்ல தோத்தவனுங்களா இருக்கும்.” சொல்லிவிட்டு சிரித்தாள்.
“நீங்க எதுக்கு இந்த மாதிரி கேஸ் எல்லாம் எடுக்குறீங்க? இப்போ பாருங்க, கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா…..இவ்ளோ ரிஸ்க் ஜாப் உங்களுக்குத் தேவையா?
“இதுக்குக் காரணம் நீங்க தான்.”
“நானா?!”
“ஆமா, பின்ன….நீங்க மட்டும் அந்த அண்டர்கிரவுண்ட் வாட்டர் பிரச்சனையில நடவடிக்க எடுத்திருந்தா, அவர் என்னைத் தேடி வந்திருக்க மாட்டார்.”
“நான் நடவடிக்கை எடுத்திருந்தா, அந்த அரசியல்வாதீங்க சும்மா இருந்திருப்பாங்களா?”
‘இருக்க மாட்டாங்க தான். உங்களை வேற இடத்துக்கு மாத்துவாங்க. அவ்ளோதானே?! டிஸ்மிஸா செஞ்சிட முடியும்!”
‘அது நடக்கக்கூடாதுன்னு தானே, நான் கூனு கும்புடு போட்டுட்டு இருக்கேன்.’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் வெளியே, “அதைப் பத்தி எனக்குப் பிரச்சனை இல்லைங்க. மத்திய அரசை தவிர யாராலையும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நான் மட்டும் அவங்க கிட்ட போராடி என்ன பண்ண? ஒன்னும் நடக்கப் போறதில்லை. அவங்களுக்குத் தேவைனா என்னை மாத்திட்டு வேற யாரையாவது வச்சு செஞ்சுப்பாங்க. பேரு தான் பெத்த கலெக்டர்! ஆஃப்டரால் ஒரு எம்.எல்.ஏ கூட எங்களை ஏறி மிதிச்சுட்டு போறானுங்க. நாய் பொழப்பு!” அலுத்துக் கொண்டான்.
எல்லாவற்றையும் கேட்டபடி அமைதியாக இருந்தாள் மாதுரி. அவன் சொல்வது உண்மை தான். IAS ஆக இருந்தாலும் சரி, IPS ஆக இருந்தாலும் சரி, அனைவரும் அரசியல்வாதீகள் காலுக்கு அடியில் தான். அதுவும் ஆளுங்கட்சியாக இருந்துவிட்டால், இவர்களின் பொழப்பு, நாய் பொழப்பு தான். இதில் இவனை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆகப் போகிறது!
“நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! இவ்ளோ தெளிவா தமிழ் பேசுறீங்க, எப்படி?” டாப்பிக்கை மாற்றினான்.
“தாத்தா காலத்தில இருந்தே இங்க தான் இருக்கோம்.”
“சௌக்கார்பேட்ல நிறையப் பேரை பார்த்திருக்கேன். தலைமுறை தலைமுறையா இங்க இருப்பாங்க. ஆனாலும் அவங்க தமிழ் தெளிவா இருக்காது. ஆனா உங்க தமிழ் நல்லா இருக்கு!”
“ஹா….ஹா…அம்மா தமிழ்நாடு தான்.”
“தமிழ்நாடா?! பார்த்தா அப்படித் தெரியலையே?! நல்ல கலரா இருக்காங்க?!”
[the_ad id=”6605″]
“ஏன்! தமிழ்நாட்டு பொண்ணுங்க கலரா இருக்க மாட்டாங்களா?!”
“அப்படின்னு இல்லை…”
“பின்ன?! ஒருவேளை நான் பொய் சொல்றேன்னு நினைக்குறீங்களா? வேணும்னா அம்மாகிட்ட நேரடியா கேளுங்களேன். கூப்பிடட்டுமா?!’
“ஐயோ! வேணாம்!”
சிரித்தவள், “இப்போயாச்சும் நம்புங்க, தமிழ்நாட்டுல தான் நிறைய அழகான பொண்ணுங்க இருக்காங்க.”
“அதென்னவோ உண்மை தான்.” சொன்னவனின் பார்வை, மாதுரியை ரசித்துப் பார்த்தது.
அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
இப்படியே நாட்கள் ஓட, அடுத்தச் சில மாதங்களில் மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றாள் மாதுரி. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கைந்து முறை அவளை வந்து பார்த்துவிட்டுச் சென்றான் நந்தா. இந்தச் சந்திப்புகளால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு வளர்ந்திருந்தது. அவர்களின் சந்திப்பு, மருத்துவமனைகளிலும் கிசுகிசுக்கப்பட, அது அப்படியே வெளியேவும் பரவ ஆரம்பித்தது.
மேலும் சில மாதங்கள் கடந்திருக்க, கமிஷ்னர் சொன்னது போலவே தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. கட்சி வெற்றி பெற்றாலும் சரி, நரசிம்மன் மட்டும் வெற்றி பெறக் கூடாது என்று முடிவு செய்த அம்பரீஷ், அவர் போட்டியிடும் தொகுதியில், பணத்தைச் செலவழித்து அவனைத் தோல்வியுற செய்யும் முயற்சியில் இறங்கினார்.
நடப்பு ஆண்டில், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மக்களை அதிருப்தி அடையைச் செய்திருக்க, வழக்கம் போல எதிர்கட்சிக்கு வோட்டு போட்டனர் பெரும்பான்மையான வாக்காளர்கள். ஆளுங்கட்சி, இல்லையென்றால் எதிர்க்கட்சி, இதைவிட்டால் வேற என்ன தெரியும், நம் வாக்காளர் பெருமக்களுக்கு!
கமிஷ்னர் சொல்லி இருந்தது போலவே, எதிர்க்கட்சி அத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியில் குறைந்த அளவில் ஆட்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அம்பரீஷ் திட்டம் போட்டது போல, அந்த நரசிம்மன் தோல்வி அடைந்திருந்தார். அதில் அம்பரீஷிற்கு மிகுந்த மகிழ்ச்சி.
“இப்போ சிக்குனா டா, என் கையில!” தனக்குள் கர்ஜித்துக் கொண்டார்.