தேர்தல், அது தொடர்பான வேலைகள் என ஆறு மாதங்களுக்கு மேல் பிசியாக இருந்த நந்தா, தேர்தலில் கள்ள ஓட்டுப் போடப்பட்டது சம்பந்தமான வழக்குக்காக அன்று நீதிமன்றம் வந்திருந்தான். ‘செய்றது அரசியல்வாதீங்க! ஆனா குத்தவாளி நானு! நடக்கட்டும், நடக்கட்டும்’ பெருமூச்சு நந்தாவிடம்.
வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தவன், எதிரில் மாதுரியை பார்த்தான்.
“என்னங்க? அதுக்குள்ள கோர்ட் வந்துட்டீங்க?!” அவளை ஆராய்ந்தபடி கேட்டான் நந்தா.
“கோர்ட் போலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. கேஸ் சிலது பெண்டிங்ல இருந்தது. பாவம் எனக்காக அவங்க எல்லாம் வெய்டிங். அதான், கேஸ் கட்டை தூக்கிட்டு வந்துட்டேன்.” கையில் இருந்த காகிதங்களைக் காட்டியபடி சிரித்தாள் மாதுரி.
பதிலுக்கு ஏதோ சொல்ல வந்தவன், சொல்லாமல் அமைதியாகிட, “என்ன?!” என்றாள் மாதுரி.
“இல்லை….ஒண்ணுமில்லை.” அவன் இதழ்கள் இவ்வாறு பதில் சொன்னாலும், கண்களில் ஒரு ஆர்வம் தெரிந்தது.
“பரவாயில்லை, எதுவா இருந்தாலும் சொல்லுங்க.”
“இந்த கருப்பு…..இந்த கருப்பு கோர்ட்ல அழகா இருக்கீங்க!” அவள் ஊக்கபடுத்தியத்தில், சட்டென்று சொல்லி விட்டான் நந்தா. சொன்னவன், மாதுரியின் முகம் பார்க்க, அவளோ, இவனின் முகத்தைத் தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“நான் எதுவும் அதிகப்படியா சொல்லி இருந்தா…” என்று அவன் முடிப்பதற்குள், “எல்லாரும் கம்பீரமா இருக்கீங்கன்னு சொல்லி கேட்டு இருக்கேன். நீங்க ஒருத்தர் தான், அழகா இருக்கீங்கன்னு சொல்றீங்க.” என்றாள் அவன் முகம் பார்த்து.
நந்தாவை நோக்கிய மாதுரியின் கன்னங்களில் லேசான வெட்கத்தின் சாயல்.
பின் குனிந்து தன்னை ஒரு பார்வை பார்த்தவள், வந்த சிரிப்பை அடக்கிகொண்டு, நந்தாவை பார்த்து, “இந்த கருப்பு கோர்ட்டுல அப்படி என்ன இருக்குன்னு அழகா இருக்கேன்னு சொல்றீங்க?” ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தப்படி கேட்டாள்.
மாதுரியின் முகத்தில் தெரிந்த வெட்கத்தைக் கண்டுகொண்ட நந்தா, அவளை நெருங்கி, ஒரு அடி எடுத்துவைத்து, “இருட்டுக்குள்ள பிரகாசமா ஒளி விடுற அகல்விளக்கு மாதிரி இருக்கீங்க.” என்று சொல்லிவிட்டு, அவள் முகம் பார்த்தவன், சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.
நந்தா சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அர்த்தத்தை உணர்ந்தவளோ, சட்டென்று நிமிர்ந்து தூரத்தில் சென்று கொண்டிருந்த நந்தாவை ஆர்வத்துடன் பார்த்தாள்.
அதே நேரம் அவனும், இவளை திரும்பி பார்த்தான். தான் சொன்னதின் அர்த்தத்தைக் கண்டுகொண்டு விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன், ‘எப்புடி’ என்பது போல இரு புருவத்தையும் ஏற்றி இறக்கி, அவளை நோக்கி வசீகரப் புன்னகையைச் சிந்திவிட்டு, திரும்பி நடக்கலானான்.
அந்த ஒற்றைப் புன்னகைக்கு இவ்வளவு மந்திர சக்தி உண்டா?! மந்திரித்துவிட்ட கோழி போல, ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் மாதுரி.
காதல் என்னும் தீ பற்றிக் கொள்ள, வாரக்கணக்கான அறிமுகம் தேவையில்லை, மாதக்கணக்கான பேச்சு தேவையில்லை, வருஷக்கணக்கான உறவாடல் தேவையில்லை, ஒரே ஒரு செய்கை போதும். கண்ணிமைக்கும் நானோ நொடிக்குள், மின்சாரம் போலச் சுவிட்சில் இருந்து பல்புக்குப் பாஸ் ஆகிவிடும். (ஐயோ! என்னடா இது?! EEE ஸ்டூடன்ட் மாதிரி உளர்றேன்!)
அந்தச் சந்திப்பிற்குப் பிறகு நந்தா, மாதுரி இடையேயான, நட்பு என்னும் தண்டவாள ட்ரேக், ஷிஃப்ட் ஆகி, காதல் என்னும் ட்ரேக்கிற்குள் பயணிக்க ஆரம்பித்தது. (இது, மெக்கானிக்கல் ஸ்டூடன்ட் டயலாக் ஆச்சே!)
இருவரும் தொலைபேசியில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் நெருக்கமான பேச்சுக்கள் இல்லை. நல விசாரிப்புகள் மட்டுமே!
[the_ad id=”6605″]
அப்படித் தான் அன்றொரு நாள், என்றும் இல்லாத அதிசியமாக மாதுரியின் தொலைபேசிக்கு இரவில் அழைத்தான் நந்தா.
“என்ன விஷயம்? அதிசியமா நைட்ல கூப்பிட்டு இருக்கீங்க?!” என்ன சொல்லப் போகிறான் என்ற ஆர்வத்தோடு கேட்டாள்.
“வர்ற ஞாயித்துக்கிழமை, உங்களால ecr ரிசார்ட்டுக்கு வர முடியுமா?” தயக்கத்துடன் அவன் கேட்க,
“ஏன் திடீர்ன்னு?” என்றாள் கேள்வியாக.
“அன்னைக்கு ஒரு ஸ்பெசல் டே! அதான் ஒரு சின்னப் பார்ட்டி.”
“ஸ்பெஷல் டே வா?! உங்க பர்த்டே வா?!”
“முஹூம், அது இல்லை. அதைவிட ஸ்பெஷல் எனக்கு. இதுக்கு மேல நோ கெஸ்சஸ். வர்றீங்களான்னு சொல்லுங்க, ப்ளீஸ்!”
“அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேனே?!”
“ஓஹ்!” ஸ்ருதி இறங்கியது அவன் குரலில். “எப்போ சொல்வீங்க? நாளைக்குப் ஃபோன் பண்ணட்டுமா?!” ஆர்வமாகக் கேட்டான்.
“ம்ம்.!” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
“பாசிடிவ் பதில் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்.” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
மாதுரியோ, ‘என்னவாக இருக்கும்’ என்ற யோசனையுடனே தூங்கி போனாள்.
அந்த அரங்கமே, அமைதியாக இருந்தது. யார் முகத்திலும் துளியும் சந்தோசம் இல்லை. கவலையும், கடுப்பும் ஆங்காங்கே சிலரின் முகத்தில் தெரிந்தது. பின்னே, கேட்டதைக் கொட்டிக் கொண்டிருந்த ஆட்சி என்னும் அட்சயபாத்திரம் கைநழுவி விட்டதே! பின் எப்படி மகிழ்ச்சி அவர்களை நெருங்கும்.
“நம்ம ஆளுங்க நிறையப் பேர் டெபாசிட் இழந்துட்டாங்க.” கூட்டத்தில் இருந்து யாரோ குரல் கொடுக்க, “இப்படி மோசமா நாம தோத்தது இல்லை தலைவரே!” வேறு ஒருவரோ, இருக்கும் கோபத்தில் மேலும் எண்ணெய்யை ஊற்றினார்.
“யோவ்! நிறுத்துங்கய்யா! முடிஞ்சு போன பிறகு பேசிகிட்டு.” தலைவர் கத்த, அனைவரும் அமைதியாகினர்.
“யோவ்! நரசிம்மா! என்னய்யா இப்படி டெபாசிட் கூட வாங்காம கேவலமா தோத்துப் போயிருக்க. உன் தொகுதி, நம்ம கட்சியோட கோட்டை யா. இதுவரைக்கு ஒருத்தனும் அந்தத் தொகுதியை பிடிச்சது இல்லை. உனக்கு மட்டுமே கட்சி, நூறு கோடி செலவு செஞ்சிருக்குக்கு. இப்போ அதுக்கு என்ன பதில் சொல்லப் போற?”
“தலைவரே!!” தலையைச் சொரிந்தார் நரசிம்மன்.
“என்ன?! பணத்தை எல்லாம் வாங்கிட்டு, ஏப்பம் விட்டுட்டியா?!” பட்டென்று கேட்டுவிட்டார் கட்சி தலைவர்.
“என்ன தலைவரே!! இப்படிச் சொல்றீங்க?! நான் எதுக்குக் கட்சி பணத்தை எடுக்கப் போறேன். நானே மேற்கொண்டு என் சொந்த காசு, அம்பது கோடி செலவு செஞ்சிருக்கேன். வோட்டுக்கு ஆயிரம் ரூவாயன்னு, வீட்டுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் செலவு செஞ்சிருக்கேன்.” ஆற்றாமையுடன் கூறினார் நரசிம்மன்.
“அம்பது கோடியா?! அது மட்டும் எங்க இருந்து வந்துச்சு?! என்னமோ, நாத்து நட்டு, அறுவடை செஞ்சு, தெரு தெருவா வித்து, வேர்வை சிந்தி உழைச்ச மாதிரி, என் காசுன்னு சொல்ற? இவளோ செலவு செஞ்சு என்னயா பிரயோஜனம், டெபாசிட் கூட வாங்க முடியலயே உன்னால…” நக்கல் குரலில் கேட்டார் தலைவர்.
தலைவருக்கு, எப்பொழுதும் நரசிம்மனைப் பிடிக்காது. ஏனெனில் அவர் தலைவருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, இந்த நரசிம்மன் தான், புதுக் கோஷ்டியை உருவாக்கி அவரைத் தலைவர் ஆக விடாமல் தடுத்தது. ஆனால் இப்பொழுது தனித் தனிக் கோஷ்டி எல்லாம் மறைந்து எல்லோரும் ஒன்றாக இருந்தாலும், அவருக்குள் நரசிம்மன் மீதான வன்மம் இருந்துகொண்டே தான் இருந்தது.
[the_ad id=”6605″]
“அதுதான் தெரியல தலைவரே!” உள்ளுக்குள் தலைவர் மேல் கோபம் இருந்தாலும், அமைதியாகப் பதில் சொன்னார் நரசிம்மன்.
“இந்தப் பேச்செல்லாம் இப்போ வேண்டாம் நரசிம்மா. இன்னும் ஒரு வாரத்தில, கட்சி ஆபீஸ்ல நூறு கோடி பணத்தைக் கட்சி வளர்ச்சி நிதின்னு கட்டிட்ற. இல்லனா அடுத்த எலெக்க்ஷன்ல உனக்குச் சீட் கிடையாது.” அதிரடியாக உத்தரவிட்ட தலைவர், நரசிம்மனின் கெஞ்சல்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அடுத்த ஆளை காய்ச்ச சென்றுவிட்டார்.
மொத்தத்தில் டெபாசிட் இழந்த யாரும் தப்பிக்க முடியவில்லை. அனைவரையும் வறுத்தெடுத்து விட்டார், கட்சி தலைவரான முன்னால் முதல்வர்.
கட்சி மீட்டிங்கை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தார் நரசிம்மன். அவர் வாயில் இருந்து வந்த பச்சை பச்சையான வார்த்தைகளின் வீரியத்தில், காருக்கு மாட்டும் காது இருந்தால், நரசிம்மனின் வேட்டியை உருவி தன் காதை மூடிக்கொள்ளும்.
“நேத்து வந்த ******* பைய அவன். என்னையே கேள்வி கேக்குறான். பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடின்னு ரெண்டு பொண்டாட்டிங்களுக்கும் சொத்து சேர்த்து வச்சிருக்கானே, அது மட்டுமென்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? அரசு கஜானால இருந்தும், கட்சி பணத்தில இருந்து சுருட்டுனது தானே! **** ****. நாங்க வெயில்ல வேர்த்துவிருவிருக்கப் பிரச்சாரம் செய்வோமாம். இந்தப் பரதேசி பைய, ஏசில உக்காந்துகிட்டுக் கேள்வி கேப்பானாம்.”
பக்கத்தில் உட்கார்ந்திருந்த அல்லக்கை, நரசிம்மனுக்குத் தெரியாமல் இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு, வெளியே தெரியாதபடி, துண்டை வைத்து போர்த்தி இருந்தான்.
“சரி விடுண்ண! அவருக்கு உங்க மேல காண்டு, உங்களுக்கு அவர் மேல காண்டு!” எதேர்சையாகச் சொன்னவர், நரசிம்மன் திரும்பி முறைக்கவும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார்.
“அவ்வளவு பணம் செலவு செஞ்சும், எப்படி டா ஒரு பையனும் ஓட்டு போடல?!” அப்பயணத்தின் பத்தாவது முறையாகக் கேள்வி கேட்டார் நரசிம்மன்.
“இப்போ எல்லாம், மக்கள் உஷாராகிட்டாங்க அண்ணே! எல்லாப் பக்கமும் காசை வாங்கிட்டு, பிடிச்சவங்களுக்கு ஓட்டை போட்டுட்டு போய்டுறாங்க.”
“என்னமோ டா! எனக்கு இருக்கிற கோபத்துக்கு வோட்டு போடாதவனுங்க மட்டும் கையில சிக்குனானுங்க, அரிவாளை வச்சு, எல்லார் தலையையும் கொத்தா சீவிடுவேன். அந்த அளவுக்கு வெறி வருது.”
“எப்படி அண்ணே, நூறு கோடியை கட்டப் போறீங்க? அந்தாள் வேற கறாரா சொல்லிட்டான்.”
“அவன் சொல்லிட்டா, நான் கட்டிடுவேனா! போடா அந்தப்பக்கம், கேன பையன் மாதிரி பேசிகிட்டு. நான் மட்டும் தோக்கல. பாதிக் கட்சிக்கு மேல தோத்துடுச்சு. இது தான் எனக்குச் சாதகமே. தோத்தவனுங்க எல்லாத்தையும் கோஷ்டி சேர்த்து, கட்சி தலைமைக்கு எதிரா திருப்பப் போறேன். அடுத்து என்னோட டார்கெட், தலைவர் பதவியைப் பிடிக்கிறது தான். என்னய்யா டா, கிண்டலடிக்கிற! இனி இருக்கு உனக்கு ஆப்பு! என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியல….”
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தத் திருப்பத்தில் இருந்து வந்த லாரி ஒன்று, வேகமாக அவரின் அம்பாசிடர் காரை இடித்துத் தள்ள, அந்த நெடுஞ்சாலையில், கன்னாபின்னாவென உருள ஆரம்பித்தது நரசிம்மனின் கார்.
தன் தொலைபேசி அடிக்கவும், எடுத்து பேசினார் அவர்.
“சொல்லு, காரியம் என்ன ஆச்சு?”
“முடிச்சிட்டேன் சாப்!”
“கார்….?!”
“ரோட்டுக்கு அந்தப் பக்க புதர்ல கிடக்கு சாப்.”
[the_ad id=”6605″]
“சரி. நீ இடத்தைக் காலி பண்ணிடு. மேற்கொண்டு நான் பார்த்துக்கிறேன்.” சொல்லிவிட்டு தொலைபேசியை அணைத்தவர், வேறு யாருக்கோ ஃபோன் போட்டார்.
“ஹலோ!”
“சொல்லுங்க சர்! உங்கஃ போன் காலுக்குத் தான் வெயிட் செஞ்சுட்டு இருந்தேன்.”
“வேலை முடிஞ்சுது. நான் சொன்னபடி நீ செஞ்சுடு.”
“ஒகே சர்.”
“அங்க வந்துட்டு ஃபோன் பண்ணு. ஜாக்கிரதை!”
“ஒகே சர். நீங்க கவலைபடாதீங்க. காரியத்தை முடிச்சிட்டு நான் உங்களைக் காண்டாக்ட் பண்றேன்.”
“ம்ம்.” பதில் சொன்னவரின் கண்கள், வஞ்சத்தில் மின்னியது.
அவர், யாரோ?!