எபிலாக் – 1.1
“இன்றைய முக்கியச் செய்திகள்!”
“முன்னாள் முதல்வர் கொலை வழக்கின் விசாரணையில் திடீர் திருப்பமாக, விபத்தில் இறந்து போன சென்னை ஆட்சியர் நந்தகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக நிருபிக்கும் வகையில் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.”
“சென்னை மனநல காப்பகத்தில் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையின் முடிவில், அங்குப் பணியாற்றும் மருத்துவர்கள் வசந்த், குமார், கௌஷிக், உள்ளிட்ட மூவருக்கும் பங்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் கௌஷிக் என்ற மருத்துவர், ஏற்கனவே விபத்தில் இறந்துவிட்டார் என்பது கூடுதல் செய்தி.”
செய்தி வாசிக்கப்பட, கேட்டுக் கொண்டிருந்த மாதுரிக்குப் புரிந்துபோனது இது குருவின் வேலை என்று. ஏனெனில் அவன்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தான், அவர்கள் பற்றிய உண்மை வெளியே தெரிய வேண்டும் என்று. அதே நேரம் சுதர்ஷன், மற்றும் மிதுன் ஜோடியும் கூடச் செய்தியைப் பார்த்துவிட்டு ஓர் அளவுக்குக் கணித்தனர். மொத்தத்தில் அனைவருக்குமே உண்மை வெளியே தெரிந்ததில் மனநிம்மதி தான்.
——————————————————-
அமெரிக்காவின் வாஷிங்க்டன் மாகானம். அங்குள்ள கனெக்டிகட் தெருவில் இருந்த காஃபீ ஷாப்பில், ஆளுயர கண்ணாடி வழியே போவோர் வருவோரை, வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா. அவளின் இரு உள்ளங்கையின் நடுவில் இருந்த கோப்பையில் ஆரி போன காஃபி, குடிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
தெருவை அவள் கண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாலும், அவளின் இதயம் வழக்கம் போலப் பழையை நினைவுகளில் மூழ்கி இருந்தது.
இந்தியாவில் இருந்தபொழுது, அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கவென முன்பே விண்ணப்பித்து இருந்தாள். நரசிம்மன் முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களில் மேற்படிப்புக்கான அட்மிஷன் கிடைக்க, நந்தாவிடம் சொல்லிக்கொண்டு இந்தியாவில் இருந்து கிளம்பி அமேரிக்கா வந்திருந்தாள். அங்கே தனிப் பங்களாவில் தங்கி பல்கலைகழகம் சென்று படித்துக்கொண்டு இருந்தாள்.
ஆரம்பத்தில் நாட்கள் நல்லபடியாகத் தான் சென்றுகொண்டு இருந்தது. ஆனால் அதன்பின் என்னென்னவோ நடந்து விட்டிருந்தது. தந்தை முதலமைச்சர் பதவியை இழந்தது, புதுக்கட்சி துடக்கம், தேர்தல் தோல்வி, முடிவாக முன்னால் முதல்வரின் கொலையில் அவரின் பங்கு என, எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற, அன்று இரவு தந்தைக்கு அழைத்தாள். ஆனால் அங்கே நரசிம்மன் குடிபோதையில் இருந்ததில் மகளின் அழைப்பை எடுக்கவில்லை.
அடுத்த நாள், தந்தை தற்கொலை செய்துவிட்டதாக வந்த செய்தி அவள் தலையில் இடியை இறக்கியது. அடித்துப்பிடித்துக்கொண்டு இந்தியா வந்தாள். அதற்குள் போஸ்ட்மார்டம் எல்லாம் செய்யப்பட்டிருக்க, தந்தையின் முகத்தை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. முகமே அடையாளம் தெரியாத அளவுக்குக் கருநீல நிறத்திற்கு மாறிப் போயிருந்தது. பார்த்ததும் அலறி விட்டாள். அதிக அளவு விஷம் உட்கொண்டதால் அப்படி ஆகிவிட்டது என்று தங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கூறினார்கள் மருத்துவர்கள்.
நரசிம்மன் ஊருக்கு கெட்டவராக இருந்தாலும், அவளுக்கு நல்ல அப்பா. தாயில்லாத அவளுக்குத் தந்தையும், தாயுமாக இருந்தவர். அப்படிப்பட்டவரின் இழப்பை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதறி அழுதாள்.
இந்நிலையில் தான் அடுத்தச் சில நாட்களில் நந்தாவின் மரணச் செய்தி அவளை நிலைகுலையைச் செய்தது. தூரத்தில் நின்று அவனின் இறுதிச் சடங்கை பார்த்துவிட்டு வீடு திரும்பியவள், தன் அறைக்குள் முடங்கினாள். நந்தாவின் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டுக் காப்பகத்தில் அனுமதிக்கபட்டிருந்த செய்தியும் அவளுக்குத் தெரியவந்தது. இன்று அவள் குணமாகிவிட்டாள் என்றாலும், தன்னால் தான் நந்தாவின் குடும்பம் சீரழிந்துவிட்டது என்ற எண்ணம் அவளை ஊசியாய்க் குத்தியது. உணவில்லாமல், தூக்கமில்லாமல் வெகு நாட்கள் அழுது கரைந்தாள்.
அதற்குள் அமெரிக்காவில் இருந்து அவளுக்கு அழைப்பு வர, தந்தையின் புகைப்படத்தின் முன் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அழுது வீங்கிய கண்களும், நெஞ்சில் பாரத்துடனும் அமெரிக்கா திரும்பினாள்.
தற்பொழுது அவள் அமெரிக்கத் திரும்பி மாதங்கள் கடந்துவிட்டது. ஆயினும் அவளால் துக்கத்தை மறக்க முடியவில்லை. ‘காதல் கண்ணை மறைத்துவிட்டதால், இன்னொரு பெண்ணின் கணவனுக்கு மனைவியாய் வாழ்ந்து, அவன் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பாவத்திற்குத் தான், தாய் இல்லாத தனக்கு, தந்தையும் இன்றி, இன்று கேட்க நாதியற்ற அனாதை ஆகி விட்டேனா?’ ஒவ்வொரு முறை தந்தையைப் பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அவளின் எண்ணவோட்டம் இதுதான்.
சொத்து இருந்து என்ன பிரயோஜனம், ‘சாப்பிட்டியா? தூங்குனியா?’ என்று கேட்க தந்தை இல்லையே. ‘பாப்பா’ அவரின் குரல் இப்பொழுதும் காதில் ஒலிக்க, தந்தையின் நினைவில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கத் தோன்றாமல் சாலையை வெறித்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது “ஐஷ்!” அவள் வகுப்புத் தோழி அழைக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “இன்னும் எத்தனை நாளுக்கு அழப்போற? நானும் வந்ததில இருந்து பார்க்கிறேன், எப்போவும் அழுகை தான்.” தோழி சொல்ல மொழுக்கென்று மீண்டும் கண்களில் கண்ணீர் வழிந்தது. அப்பெண்ணோ ஐஸ்வர்யாவின் அருகில் வந்து அமர்ந்து, தோழியைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவள், “இழப்பு ஏற்படத் தான் செய்யும். அதையெல்லாம் கடந்து வர பழகிக்கணும் ஐஷ்.” பொறுப்புள்ள தோழியாய் அறிவுரை வழங்கினாள். சிறுது நேரம் கழித்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா, தோழியுடன் எழுந்து சென்றாள்.
———————————————————-
இந்நிலையில், தீவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும், மெல்ல மெல்ல ஒவ்வொருவராகத் துடிதுடித்து இறந்துபோயினர். ‘நாங்க இங்கிருந்து கிளம்புறோம் மேம்!’ என்று மட்டும் மாதுரிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் குரு. அதிலேயே புரிந்துபோனது அவளுக்கு. ‘தேங்க்ஸ் குரு!’ என்று பதில் மெசேஜ் அனுப்பியவள், இறந்தவர்களுக்காக, மனிதம் என்ற அடிப்படையில் ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாள். அவ்வளவே! அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்தாள். முக்கியமாக நந்தாவுடனான பந்தம் என்ற வட்டத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டாள்.
———————————————————-
வெகு தீவிரமாகத் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தான் மிதுன். அப்பொழுது அவன் அருகில் வந்தாள் சஞ்சனா.
“என்ன பார்த்துட்டு இருக்க டா?” என்றாள்
“சஞ்சு, அதோ அந்த நியுஸ் பாரேன். நாலு நாளா ஒரு நாயை காணோமாம். நாம அதை இன்வெஸ்டிகேஷன் செய்வோமா?” என்று தொலைக்காட்சி திரையில் கண்களை எடுக்காமல் கேட்க,
“ஹான்! மொதல்ல என் வயித்துல இருக்கிறது, ஒத்தை குழந்தையா இல்லை ரெட்டை குழந்தையான்னு இன்வெஸ்டிகேஷன் பண்ணு.” என்றாள் கோபமாக.
“அதெலாம் அப்புறம் பண்ணுவோம்….” பேசிக்கொண்டே போனவன், மனைவி சொன்னது புரிய, சட்டென்று அவள் பக்கம் திரும்பினான்.
“நிஜமாவா டி?” அவனால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.
“பூந்து விளையாண்டுட்டு, நிஜமான்னா கேட்கிற. உன்னை!!” சொல்லிவிட்டு கணவனை அடிக்கப் பொருளை தேடியவளை, அசையவிடாமல் இறுக அணைத்துக் கொண்டான் மிதுன்.
“வேகமா அசையாதடி! வயித்துக்குள்ள பாப்பா இருக்குள்ள!” குரலில் அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு.
“நிஜமாவாவா டி?!” மறுபடியும் அதே கேள்வி. இம்முறை ஒரு வித குதூகலத்துடன் இருந்தது அவன் குரல்.
“போடா!!” சொல்லிவிட்டு வெட்கத்துடன் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் சஞ்சனா.
“ஆஹா! உன் வெட்கத்தைப் பார்த்தா நிச்சயம் ரெட்டையா தான் இருக்கும் போலவே!” அவனுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.
பின் மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் செய்து பார்த்ததில் பாசிடிவ் என்று வர, கூடவே இன்பச் செய்தியாக ரெட்டை குழந்தை என்றும் சொன்னார்கள்.
அதன்பின் மனைவிக்கு வேண்டியதை அவள் கேட்கும் முன்னே வாங்கிக் கொடுத்தான்.
“இந்தா சஞ்சு, பிரியாணி!”
“இந்தா சஞ்சு பழம்..”
“இந்தச் சஞ்சு ஸ்வீட்…”
அது, இது என்று அவளுக்குப் பிடித்த அனைத்தையும் கொண்டு வந்து அடுக்க,
“டேய்! நான் என்ன தீணி பண்டாறமா இவ்ளோ வாங்கி இருக்க?”
“ஹலோ! உனக்கு யாரு கொடுத்தா? உள்ள இருக்கிற என் குட்டீஸ்க்கு வாங்கிட்டு வந்தேன். ரொம்பப் பண்ணாம ஒழுங்கா சாப்பிடு.”
“அப்போ எனக்கில்லை?!” பத்திரகாளியாய் மாற ஆரம்பித்தாள்.
“அது வந்து….அது வந்து…..” சொல்லிக்கொண்டே மெல்ல நகர்ந்தவன், “உனக்கில்லை, என் குட்டீஸ்க்கு.” என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
“டேய்!!!!!!!!!!!” கர்ஜித்தாள் சஞ்சனா.
சிரிப்பும், சந்தோஷமுமாக மாதங்கள் செல்ல, டெலிவரி நாளும் வந்தது. டெலிவரி என்னவோ சஞ்சனாவுக்குத் தான். ஆனால் ரியாக்க்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்தது மிதுன்.
“இங்க வலிக்குதா? அங்க வலிக்குதா? இப்படி வலிக்குதா? அப்படி வலிக்குதா?”
“ஊஃப்ப்! ஊஃப்ப்! ஊஃப்ப் ” நல்லா மூச்சை இழுத்துவிடு.
“என் கையை நல்லா பிடிச்சுக்கோ. அப்படிதான் புஷ் பண்ணு. இன்னும் வேகமா….பத்தல….இன்னும் வேகமாக….முஹூம்! பத்தல…..” அவன் செய்த அக்கபோரில், டெலிவரி அறையில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்டான்.
“சிஸ்டர்! குழந்தை பிறந்ததும், 9876xxxxxx இந்த நம்பருக்கு வாட்சப் மெசேஜ் செய்ங்க. நான் போய் ஒரு காஃபீ குடிச்சிட்டு வரேன். முடியல…” ஹாயாகச் சொல்லிவிட்டு நடந்தவனை, ‘ஹான்!’ எனப் பார்த்தார் செவிலியர்.
சொன்னபடியே மெசேஜ் செய்தார் செவிலியர். கையில் ஒரு கூல்ட்ரிங்கை உறுஞ்சிக்கொண்டே “ஷப்பா என்ன வேர்வை!!” சைகை செய்துகொண்டே அறைக்குள் நுழைந்தவன் மனைவியைப் பார்த்துப் பிரகாஷ்ராஜ் போல, “ஹாய் செல்லம்! கூல்ட்ரிங் வேணுமா?” என்று கைகாட்ட, அவனைப் பார்த்தும் சஞ்சனா, “அடேய்! கஷ்டப்பட்டது நான். ஜூசு உனக்கா?” அங்கிருந்தே கத்தினாள். இதற்கு எல்லாம் மேலாக, தொட்டிலில் ரெட்டை ஆண் குழந்தை இருப்பதைப் பார்த்துவிட்டு, “அச்சோ பேபிமா? நான் கேட்டது பொண்ணு. இதுல இருக்கிறது பையன்! டெலிவரி அட்ரெஸ் மாறிடுச்சு! டாக்டரை கூப்பிடு!” என்று சொல்லிவிட்டு திரும்ப, வாசலில் அரிவாளுடன் நின்றிருந்தனர் டாக்டரும், நர்சும். அடுத்தக் காட்சி, வராண்டாவில் தலை தெறிக்க மிதுன் ஓட, அவன் பின் ஒரு கூட்டமே ஆயுதங்களுடன் துரத்திக்கொண்டு வந்தது.
இங்கே இப்படி ஒரு அக்கப்போர் நடந்துகொண்டிருக்க, அங்கே மாதுரி, சுதர்ஷன் வாழ்வில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதைப் போய் எட்டிப் பார்ப்போம்.
மாதுரியின் இல்லம்!
அதிகாலை எழுந்து குளித்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு மாடியில் இருந்து கீழே வந்தாள் மாதுரி. வழக்கம்போல ஹால் சோஃபாவில் அமர்ந்து சித்தார்த்துடன் பேசிக்கொண்டு இருந்தான் சுதர்ஷன்.
மாதுரியின் கையில் இருந்த தனிஷ்காவை பார்த்ததும், மாதுரியின் மேல் பார்வையைச் செலுத்திவிட்டு, “பப்பு குட்டி எழுந்தாச்சா” என்று குழந்தையைப் பார்த்து கேட்க, குழந்தை அவனிடம் தாவியது. அந்தமானில் இருந்து வந்த இத்தனை மாதத்தில், குழந்தை அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. ஏனோ குழந்தை நந்தாவை முற்றிலும் மறந்து போயிருந்தாள்.
மாதுரியிடம் இருந்து குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டவன் ஏதேதோ கதைப் பேசி, அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தான். இது கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் காட்சி.
தன் வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்ட சுதர்ஷன். தற்பொழுது ஒரு பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கிறான். அவன் வேலை செய்யும் வங்கிக்கு, மாதுரியின் வீட்டை தாண்டித் தான் போக வேண்டும் என்பதால், தினமும் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு போவான். அச்சு அசல் மாதுரியின் சாயலில் இருக்கும் குழந்தையை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. கூடவே குழந்தையின் தாயையும் தான்!
கடைக்குக் கிளம்புவதற்காக உணவு மேசையில் உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த மாதுரி, அங்கிருந்தபடியே ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சுதர்ஷனை பார்த்தாள். அவன் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, பாந்தமாகப் பொருந்தி இருந்தாள். சட்டென்று பார்க்கும் யாருமே தந்தை மகள் என்றுதான் நினைப்பர். அந்த அளவுக்கு அன்னியோன்யம் அவர்களுக்குள். சுதர்ஷன் ஏதோ சொல்ல, குழந்தை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தாள். கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
குழந்தையின் மேல் இருந்த மாதுரியின் பார்வை அப்படியே சுதர்ஷனின் மேல் திரும்பியது. அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் அன்று அவனைக் கேட்ட ஒரு கேள்விக்காக, தன் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்று சொற்ப மாத சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். ACP, DCP, JCP, COMMISSIONER என்று அவன் விரும்பிய பல உயரங்களைத் தொட இருந்தவன், இன்று சாதாரண ஒரு வங்கி ஊழியன்.
சுதர்ஷனை பார்க்க பார்க்க, அவளையும் அறியாமல் நந்தாவையும் அவனையும் ஒப்பிட்டது மாதுரியின் மனம்.
தான் சொன்ன ஒற்றை வார்த்தைக்காகப் பதவியைத் தூக்கி எறிந்த சுதர்ஷன் எங்கே!
பதவிக்காகத் தன்னையே தூக்கி எரிய நினைத்த நந்தா எங்கே!
அவளும் இந்தச் சில மாதங்களாகச் சுதர்ஷனை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். நேர்மையானவன், அன்பானவன், வேலையைத் தவிர வேறு எப்பொழுதும் அதிர்ந்து பேசாதவன். முக்கியமாகக் குடும்ப அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். ஆகையால் தான், விதவை தமக்கையையும், அவரின் மகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிறான்.
ஒருமுறை சுதர்ஷனின் அக்கா மாலதியும், அவரின் மகள் பவித்ராவும், தனிஷ்காவின் பிறந்தநாளின் பொழுது வந்திருந்தனர். அப்பொழுது பவித்ரா சுதர்ஷனை பற்றித்தான் ஓயாது பேசினாள். ‘மாமாக்கு நானா உயிரு! என்னை ஒரு நாளும் அடிச்சது இல்லை! நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவாங்க! அம்மா அழுதா மாமாக்கு பிடிக்காது!’ இப்படிக் கதைகதையாகச் சொன்னாள். கூடவே, அவளுக்குத் தனிஷ்காவை மிகவும் பிடித்துவிட்டதாகச் சொன்னவள், ‘பாப்பாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?’ என்றுவேறு கேட்டு வைத்தாள். இன்று நினைத்தாலும் சிரிப்பு வந்தது. அதே நேரம் சுதர்ஷனின் மேல் மரியாதையும் வளர்கிறது. மொத்தத்தில் சுதர்ஷனை அவளுக்குப் பிடித்திருந்தது, ஒரு நல்ல மனிதனாக!
“மாதுரி!” சித்தார்த் அழைக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பியவள் அப்பொழுதுதான் கவனித்தாள், சுதர்ஷன் குழந்தையைக் கவனிக்கும் சாக்கில் தன்னையே பார்ப்பதை. சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
மாதுரி அந்தப்பக்கம் திரும்பியதும் தானும் நினைவுக்குத் திரும்பிய சுதர்ஷனுக்கு அப்பொழுதுதான் வேலைக்குச் செல்ல நேரமாவது உரைத்தது. ‘நேரம் ஆகுறது கூடவா தெரியாம அவளையே பார்த்துட்டு இருப்ப!’ தன்னையே கடிந்து கொண்டவன், தன் வெட்கத்தை மறைத்து முகத்தைச் சாதரணமாக வைத்துக்கொண்டு, “நான் கிளம்புறேன் சித்தார்த்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் மாதுரியை ஒரு பார்வை பார்த்தான். ‘மவனே! இப்போ கிளம்பப் போறியா இல்லையா?’ மனம் அவனைத் தாக்க தயாராக, மடமவெனச் சோஃபாவில் இருந்து எழுந்தவன், குழந்தையைச் சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு எழுந்துச் செல்ல, அவன் பின்னாலையே ஓடி வந்தாள் தனிஷ்கா. வழக்கம்போலப் பைக்கில் தன்னை இரண்டு ரவுண்ட் கூட்டி செல்லுமாறு கேட்டு, கால்களைத் தரையில் உதைத்து சிணுங்க ஆரம்பித்துவிட்டாள்.
இதுவும் தினமும் நடக்கும் ஒன்று தான். தனிஷ்காவுக்குக் காரில் பயணிப்பதை விட, திறந்தவெளி காற்றை அனுபவித்துக்கொண்டு பைக்கில் செல்வது மிகவும் பிடிக்கும். அந்தப் பழக்கம் ஏற்பட்டதே சுதர்ஷனால் தான்.
முதல்நாள் ஆசையாகக் கேட்டாள் என்று குழந்தையைப் பைக்கின் முன்பக்கம் உட்கார வைத்து தெருவை சுற்றி வர, அப்படியே ஒட்டிக்கொண்டது அவளுக்கு இப்பழக்கம். இப்பொழுது தினமும் சுதர்ஷன் வரும் நேரமெல்லாம் அடம்பிடிக ஆரம்பித்துவிட்டாள். அவனும் குழந்தை அழுவது பிடிக்காமல் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.
இதோ இன்றும் வாசலில் நின்று அழத் தயாராக இருந்தவளிடம், “பப்பு! ஒரே ஒரு ரவுண்ட் தான் சரியா. அதுக்கு மேல கிடையாது.” சுதர்ஷன் டீல் பேச, “பாமிஸ் பப்பா ஒதே ஒது ரவுண்டு” மழலை மொழியில் பேசினாள்.
பப்பா – தான் தன் தந்தையை அழைத்த அதே அழைப்பு!
பப்பு – தன் தந்தை தன்னை அழைக்கும் அதே செல்ல பெயர்.
இது இரண்டுமே தற்செயலாக நடந்தவை!
தந்தை மகள் சம்பாஷனையைச் சற்று தள்ளி நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் மாதுரி.
ஆரம்பத்தில் குழந்தை சுதர்ஷனை ‘பப்பா’ என்று அழைக்கவும், அப்படிக் கூப்பிடக் கூடாது என்று மாதுரி மகளைக் கண்டிக்க, குழந்தையோ, ‘முடியாது, அப்படித் தான் கூப்பிடுவேன்.’ என்று அடம்பிடிக்க அங்கே ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் சூழல். சுதர்ஷன் தான் இடைபுகுந்து, “பின்ன என்ன சொல்லி கூப்பிட சொல்றீங்க? அங்கிளா?” என்றவன் குழந்தையிடம், “பப்பு! அங்கிள் சொல்லு.” என்று சொல்ல, அவளும் எதற்கோ கேட்கிறான் போல என்று நினைத்துக்கொண்டு ‘அங்கிள்’ என்று கத்த, முகத்தைக் கர்ணகொடூரமாகச் சுழித்த சுதர்ஷன், “சத்தியமா நல்லா இல்லைங்க!” என்றான் மறையாது. மற்றவர்கள் பக்கென்று சிரித்துவிட்டனர். மாதுரிக்குமே சிரிப்பு வந்தது. “பார்த்தீங்களா உங்களுக்கே சிரிப்பா இருக்கு. குழந்தை தானேங்க அவளுக்கு எப்படிக் கூப்பிட தோணுதோ கூப்பிடட்டும்.” என்று சொன்னான். அதன்பின் மாதுரி ஒன்றும் சொல்வதில்லை.
இதோ இன்றும், ஹாலில் இருந்த அனைவர் காதிலும், சுதர்ஷன், தனிஷ்கா சம்பாஷணை விழுந்தது. சித்தார்த்தும், ராஜேஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். இருவருக்குமே, சுதர்ஷன் தங்கள் வீட்டு மருமகனாக வரவேண்டும் என்று ஆசை தான். ஆனால் அது மாதுரியின் கையில் அல்லவா இருக்கிறது. அப்பா மகளின் உரையாடலை ஆசையுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
விடாமல் கெஞ்சி கொண்டிருந்தவளிடம், “ஒரே ஓரு ரவுண்ட் இதுக்கு மேல கிடையாது” சொல்லிவிட்டு குழந்தையை அவன் தூக்கிக்கொள்ள, “இன்னைக்கு எதோ முக்கியமான வேலை இருக்கிறதா சொன்னீங்களே!” கடிகாரத்தைக் காண்பித்துச் சைகை செய்தாள் மாதுரி.
சுதர்ஷனோ, “குழந்தைக்கு முன்னாடி எதுவும் முக்கியம் இல்லைங்க. அவங்க என்ன, மலையவா புரட்டி எடுத்துட்டு வரச் சொல்றாங்க, இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயம் தானே! செய்றதால ஒன்னும் குறைஞ்சிட மாட்டோம்.” பத்து பிள்ளை பெற்றவன் மாதிரி பேசினான்.
சொல்லிவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவன் கிளம்பிவிட, எப்பொழுதும் அவனே வந்து வீட்டிற்குள் விட்டுவிட்டு செல்வான். இன்று அவனுக்கு முக்கியமான வேலை இருப்பதால் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து குழந்தையைத் திருப்பி வாங்குவதற்காகப் பங்களா வாசலில் வந்து நின்று கொண்டாள் மாதுரி.
கைகளை விரித்துக் காற்றை உள்ளிழுத்து “ஹே!” என்று கத்தியபடி பைக்கின் முன்பக்கம் அமர்ந்திருந்த தனிஷ்காவின் தலையில், நாடியை வைத்து அழுத்தியவாறு ஏதோ பேசியபடி தன்னைக் கடந்து சென்றவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள் மாதுரி. அவளையும் அறியாமல் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
இரண்டு ரவுண்டையும் முடித்துக்கொண்டு வந்து நின்றான் சுதர்ஷன். அக்குளுக்கு அடியில் கைகொடுத்து குழந்தையை அவன் பைக்கில் இருந்து தூக்க, அவன் அருகில் வந்து குழந்தையை வாங்கினாள் மாதுரி. அப்பொழுது அவன் கைமேல் இவள் கைவைத்து குழந்தையை வாங்கும்படி ஆகிவிட, அவள் உடல் விரைத்துக் கை நடுங்கியது. அதைச் சுதர்ஷனும் உணர்ந்தான்.
குழந்தையைக் கொடுக்கும் சாக்கில், பைக் அருகில் நின்றிருந்த அவளின் செவி அருகில் குனிந்து, “பழையன கழிதலும் புதியன புகுதலும் நம்ம வாழ்க்கைக்கு மட்டும் நல்லதில்லை, மனசுக்கு நல்லது மாதுரி. கஷ்டம்ன்றது பாம்பு சட்டை மாதிரி, வாழ்க்கையில முன்ன நடக்க நடக்க, அப்பப்போ அங்கங்க கழட்டி போட்டுட்டு வந்திடனும். எனக்குத் தெரியும் அதுல இருந்து மீண்டு வர்றது சுலபம் இல்லைன்னு, ஆனா கட்டாயம் நீங்க மீண்டு வரணும், பாப்பாவுக்காகவாவது. ஏனா அவ வளர ஆரம்பிச்சுட்டா. வாழ்க்கை போற பாதையிலேயே பின்னாடி போங்க மாதுரி, நிச்சயம் எங்கையாவது இளைப்பாற மரம் ஒன்னு இருக்கும்.” பூடகமாக ஏதோ சொன்னவன், யோசனையில் ஆர்ந்திருந்த அவளின் முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு, பின் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
‘வாழ்க்கை போற பாதையிலேயே பின்னாடி போங்க மாதுரி, நிச்சயம் எங்கையாவது இளைப்பாற மரம் ஒன்னு இருக்கும்.’ – நடந்தவைகளில் இருந்து மீண்டு, மன அமைதி பெற நிழல் தேடி அலையும் அவளின் நிழல் அவன்!
உடல் சார்ந்த ஈர்ப்பு காதல் இல்லை, மனம் சார்ந்த ஈர்ப்பு தான் உண்மையான காதல்!
சுதர்ஷனுக்கான அவள் காதல், அவளின் மனதின் ஓரத்தில் சத்தமில்லாமல் முளைத்தது.