“அதுக்காக நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க முடியும்?”
அவன் அமைதியானான்.
“சும்மா சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காமல் ஒழுங்கா எழுந்து நடக்க முயற்சி பண்ணு. உன்னோட அப்பாவும், அண்ணாவும் இந்தக் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிறாங்க. இதுக்கு முன்னாடிதான் நீ எதையும் கண்டுக்கலை. இனியாவது பொறுப்பா இருக்கனும் மனோ.”
அவன் எதுவும் பேசவில்லை.
“சரி. அண்ணி. இப்ப நான் உங்களோட வெளியில் வந்துட்டா போதும்தானே?”
“ஆமாம்.”
“என்னோட மதுவையும் வரச்சொல்லுங்க.”
அவள் மதன்ராஜ் எங்கே என்று தேடினாள்.
“பெரியய்யா தான் மது தம்பியை அழைச்சுட்டுப் போனாங்கம்மா.” என்றார் சண்முகம்.
அவர்கள் இருவரும் மாடியில் இருந்த அறையில் இருந்தனர்.
அது சித்தரஞ்சன் மற்றும் மனோரஞ்சன் சிறுவர்களாக இருந்த போது பயன்படுத்திய அறை.
அவள் அறை வாசலில் நின்றாள்.
உள்ளே மதன்ராஜ் மரக்குதிரை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான்.
“மது. இங்கே எல்லாம் வரக்கூடாது. வெளியில் வா.”
அவள் கூப்பிட்ட உடனே மதன்ராஜ் வெளியில் வந்துவிட்டான்.
“ஏன்மா அவனைக் கூப்பிடறே? சின்னப்பிள்ளைதானே?”
அவர் பெருந்தன்மையாகக் கூறிவிடலாம்.
ஆனால் இங்கெல்லாம் அவர்கள் வந்தது தெரிந்தால் சகுந்தலா என்ன சொல்வாரோ? என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.
“பரவாயில்லை சார். இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கனும். அதுதான் அவனுக்கு நல்லது சார்.”
“நான்தாம்மா கூப்பிட்டுக்கிட்டு வந்தேன். இதெல்லாம் என் பசங்க சின்னப் பிள்ளைகளா இருக்கும்போது விளையாடியது. இப்ப இவனாவது விளையாடட்டுமே. இந்த மாதிரி சின்னப்பசங்க விளையாட எனக்குக் கொடுத்து வச்சிருக்கோ இல்லையோ? ஆனால் மதுவைப் பார்த்த உடனே கடவுளே அனுப்பி வச்ச மாதிரி தான் நினைக்கிறேன். இவன் வந்த நேரமாவது என் வீட்டில் பிள்ளைங்க விளையாட காலம் பிறக்கட்டுமே.”
ஏக்கம் மிகுந்திருந்தது அவர் குரலில்.
“ஏன் சார் இப்படி சொல்றீங்க? உங்களுக்கு இரண்டு பசங்க இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை?”
“என்ன கவலைம்மா எனக்கு? ஊரில் மத்தவங்க பேசற மாதிரியே பேசறியே? கல்யாணமே வேண்டாம்னு மறுக்கிற மூத்த மகன். திருமணம் ஆகியும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிற இளைய மகன். இப்ப யார் மூலமா இந்த குடும்பம் விருத்தியாகும்?”
“தயவு செய்து கவலைப்படாதீங்க சார். அவங்க இரண்டு பேருக்கும் என்ன வயசாச்சுன்னு இப்படி கவலைப்படறீங்க? நீங்க அவங்ககிட்ட உங்க ஆசையை சொல்லுங்க. உங்களுக்ககாகவாவது அவங்க யோசிப்பாங்க.”
“உன் பேச்சைக் கேட்கறது எனக்கு எவ்வளவோ ஆறுதலா இருக்கும்மா? இப்பவே அதெல்லாம் நடந்துட்ட மாதிரி மகிழ்ச்சியா இருக்கு. அதுவரைக்கும் இந்தக் குட்டிப்பையன் இங்கே ஓடியாடி விளையாடட்டுமே. நீ தடுக்காதேம்மா.” கெஞ்சலாகக் கூறினார்.
அவளால் மறுக்க முடியவில்லை. அவளுக்கு மட்டும் இதெல்லாம் செய்ய வேண்டாம் என்று தடுக்க ஆசையா என்ன?
ஆனால் சகுந்தலா எப்படி எடுத்துக்கொள்வாரோ? என்ற யோசனைதான்.
“சரி சார். இப்ப மனோவை நான் தோட்டத்திற்குக் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அங்கே மதுவையும் அழைச்சுட்டு வரச்சொல்லி மனோ கூப்பிடவும்தான் நான் இங்கே வந்தேன்.”
“அப்படியாம்மா. நானும் மதுவும் வர்றோம். நீ மனோவை அழைச்சுட்டுப் போம்மா.”
“சரி சார்.” என்றவள் கிளம்பிவிட்டாள்.
செல்லும் வழியில் அவளுக்கு சகுந்தலாவைப் பற்றிய யோசனை.
அன்றைக்கு சகுந்தலா அப்படி நடந்து கொண்ட பிறகு அவரை நேருக்கு நேர் பார்க்கப் பிடிக்காமல் ஒதுங்கித்தான் போனாள் அபர்ணா.
மதன்ராஜைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
சகுந்தலா அவர்களிடம் அப்படி பேசியதை அறிந்து கொண்ட சித்தரஞ்சன் இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரத்தில் தன் தாயிடம் அதைப் பற்றிப் பேசியது எதார்த்தமாக அவள் காதில் விழுந்தது.
கிட்டத்தட்ட அவனும் தன் தந்தையைப் போன்றேதான் பேசினான்.
“ஏம்மா இப்படி பண்ணீங்க? அவன் சின்னப் பிள்ளைம்மா. அவனுக்கு என்ன தெரியும்? ஏன் அவன் உங்களுக்கு சமமா உட்கார்ந்து சாப்பிடக்கூடாதா?”
“நீயும் உங்கப்பா மாதிரியே மாறிட்டியா ரஞ்சன். இப்ப அந்தச் சின்னப்பயலை விட்டு நோட்டம் பார்ப்பாள் அவள். பிறகு அவளே அதை செய்வாள்.”
“இப்படி சாதி, சனம்னு பார்த்துத்தானேம்மா மனோவோட வாழ்க்கையில் விளையாண்டீங்க?”
“அது என்னவோ ஒரு முறை தவறாப்போச்சு?”
“அப்ப இன்னொரு முறை அதே தவறை செய்யப் போறீங்க? அப்படித்தானே? இப்ப சொல்றேன் கேட்டுக்குங்கம்மா. அன்னிக்கு மனோவுக்கு நடந்தது விபத்து இல்லை. தற்கொலை முயற்சி. இனியொரு முறை அவன் விருப்பத்தை அறியாமல் அப்படி நடந்தீங்கன்னா அவன் நம்மளுக்கு இல்லை.”
“என்ன மிரட்டிப்பார்க்கிறே? உனக்கும் ஏதாச்சும் அப்படி ஒரு ஐடியா இருக்கா? ஏன் நீயும்தானே அந்தப் பொண்ணைத் தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா சரிவராதுன்னு சொன்னே? இப்ப என்னை மட்டும் சொன்னால் எப்படி?”
“அந்தப் பொண்ணோட குணம் தெரிஞ்சு சொன்னேன்மா. ஆனால் மனோவுக்குக் கொஞ்சம் டயம் கொடுத்திருக்கலாம். அதை விட்டுட்டு நீங்களும், உங்க தம்பியும் அவசரப்பட்டு உங்க பிள்ளைங்களோட வாழ்க்கையில் விளையாடிட்டீங்க. அம்மா இப்ப சொல்றதுதான் கேட்டுக்குங்க. இந்த வீட்டில் ஒரு சின்னக் குழந்தையோட காலடி படறதுக்குக் கொடுத்து வச்சிருக்கோ இல்லையோ? எனக்குத் தெரியாது. அந்த சிறுவனாவது ஓடியாடி விளையாடட்டும். அது உங்க கையில்தான் இருக்கு.” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை.
அவன் எதற்குத் திருமணத்திற்கு மறுக்கிறான் என்று தெரியவில்லை.
ஆனால் ஒரு வாரிசு உருவாக வேண்டுமே என்ற கவலை தேவேந்திரனுக்கு.
அந்த வாரிசு தங்கள் சாதி சனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சகுந்தலாவுக்கு.
மனோரஞ்சனை அபர்ணா தோட்டத்திற்கு அழைத்து வந்தாள்.
பின்னேயே தேவேந்திரனுடன் மதன்ராஜ் பெரிய பந்து ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான்.
“மது. இங்கே வா. நாம இரண்டு பேரும் பந்து விளையாடலாம்.” என்றான் மனோரஞ்சன்.
மதன்ராஜ் திரும்பி அபர்ணாவைப் பார்த்தான். அவளும் சம்மதமென தலையசைக்கவே மதன்ராஜ் மனோரஞ்சன் பக்கம் சென்றான்.
தேவேந்திரன் மெச்சுதலுடன் அவளைப் பார்த்தார்.
“நல்ல பழக்க வழக்கம்மா பிள்ளைக்கு. ரொம்ப அமைதியான புள்ளை. இப்படி ஒரு புள்ளை இந்த வீட்டில் விளையாடக் கொடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே?” என்றார் பெருமூச்சுடன்.
“எனக்குப் பெண் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம்மா. அது என்னவோ என்னோட மனைவிக்குப் பிரியமில்லை. மனோவுக்குப் பிறகு ஒரு குழந்தை உண்டானது. அது பெண் குழந்தையாயிருக்கும்னு ஜாதகத்தில் சொன்ன உடனே என் மனைவி அந்தக் கருவை கலைச்சிட்டா. என்னால் அதைத் தாங்கிக்க முடியலை. என் பிள்ளைங்களுக்கு திருமண வாழ்க்கை சரியா அமையலேன்ன உடனே எனக்கு அந்தக் கருவில் உள்ள குழந்தையோட சாபம்தானோன்னு தோணுது.” என்றார் மனக்கலக்கத்துடன்.
அதை அபர்ணாவினால் ஜீரணிக்கவே முடியவில்லை.
பெண் குழந்தைகளைக் கொல்வது என்ற விசயம் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருவதுதான்.
அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சீர் செய்ய வசதி இல்லாதவர்கள்.
இப்போது சட்டென்று அவளுக்கு ராஜலெட்சுமி அம்மாவின் ஞாபகம் வந்தது.
“இரண்டு கட்டைத் தடியன்களைப் பெத்துவிட்டேன்.” என்று அடிக்கடி புலம்புவார்.
“எனக்குப் பெண் குழந்தைகள்னா அப்படி ஆசைடா அம்மு. ஆனால் அவர் நவீன் பிறந்த உடனே அதற்கு மேல் எனக்கு உடல்நிலை ஒத்துவராதுன்னு அவரே குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேசன் செய்துக்கிட்டாரு. நாம பெத்தாதான் மகளா? நமக்கு வர்ற மருமகளை மகளா நினைச்சுக்கோ. இல்லைன்னா ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு ஒரேடியா சொல்லிட்டாரு.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அடிக்கடி புலம்புவார்.
“என்னம்மா? நான் சொன்னதைக் கேட்டதும் வாயடைச்சுப் போயிட்டியா?”
“அதை எல்லாம் நினைச்சுக் கவலைப்படாதீங்க சார். இப்ப இருக்கிறதை மகிழ்ச்சியா அனுபவியுங்க. காலம் நமக்கு நல்லதைத் தரும்னு நம்புங்க.”
“அந்த நம்பிக்கை தான்மா என்னை நடமாட வச்சிருக்கு.”
தேவேந்திரன் தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்திருந்தார்.
அவள் அவர் முகத்தைப் பார்த்தவாறு கீழே அமர்ந்திருந்தாள்.
அருகில் சக்கர நாற்காலியில் மனோரஞ்சன் அமர்ந்திருக்க, மதன்ராஜ் அவனிடம் அந்த பந்தை தூக்கிப் போட்டு விளையாண்டான்.
அதைக் கவனித்த தேவேந்திரன் முகத்தில் ஒரு நிம்மதி.
“இப்படி இந்தப் பையனைப் பார்த்தே ரொம்ப நாளாயிடுச்சும்மா. ஜாதகத்தில் ஏதோ பிரச்சினைன்னு இவனோட அம்மாவோட கட்டாயத்தில் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்தே பிள்ளை முகத்தில் சிரிப்பே இல்லைம்மா. இப்பத்தான் கொஞ்சம் சிரிப்பு வருது.”
“இனி இப்படித்தான் சார் பார்ப்பீங்க.”
“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்மா.”
அப்போது அங்கே சித்தரஞ்சன் வந்தான்.
“என்னப்பா எல்லாரும் இங்கே உட்கார்ந்துட்டீங்க?”
“ஆமாப்பா. மனோவை கொஞ்சம் காத்தாட இருக்க சொன்னால் அவனுடன் நாங்களும் இருக்கனுமாம். அதான் இங்கே உட்கார்ந்துட்டோம்.”
“எல்லாரும் இங்கேயே இருக்கவும் வந்துட்டேன்மா.” என்ற சண்முகத்தின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
விசுவாசமானவர். குடும்ப நலனில் அக்கறை கொண்டவர் என்பது இப்போது அவரைப் பார்க்கும்போதே தெரிந்தது.
“பெரியய்யா. இது உங்களுக்கு.”
“நான்தான் காபி டீ எல்லாம் குடிக்க மாட்டேனேப்பா.”
“இல்ல. இது சத்து மாவுக் கஞ்சி. உங்களுக்கு சத்துமாவுக் கஞ்சி கொடுக்கச் சொல்லி அபர்ணாம்மா சொன்னாங்க.”
“ஏன்மா?”
“இல்ல சார். நீங்க காபி டீ குடிக்கிறது இல்லை. அட்லீஸ்ட் இந்த கஞ்சியையாவது குடிங்க. காலையில் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயித்தில்தான் வாக்கிங் போறீங்கன்னு இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும். அதனால் காலையிலும், சாயங்காலமும் கண்டிப்பா நீங்க இந்தக் கஞ்சியைக் குடிங்க.”
“ஒரே இனிப்பா இருக்கும்மா.”
“நாளையில் இருந்து அரை இனிப்பா குடிக்கலாம். இல்லன்னா உப்பு போட்டுக் கூட குடிக்கலாம்.”
அவர் அந்தக் கஞ்சியைக் குடிக்க சண்முகம் முகம் மலர்ந்தார்.
முதலாளி வெறும் வயித்தோடு போகிறார் என்பது அவருக்கு கவலை அளித்துக்கொண்டிருந்தது.
ஆனால் ஒரு வேலைக்காரனாக அவரால் அதை நினைத்துக் கவலைப்படத்தான் முடிந்தது.
“வேறு ஏதாவது குடிக்கத் தரவா?” என்று ஓரிருமுறை கேட்டுப் பார்த்தார் சண்முகம். ஆனால் தேவேந்திரன் வேண்டாம் என்று மறுக்கவே அதற்கு மேல் அவரால் கட்டாயப்படுத்த முடியவில்லை.
“என்ன இருந்தாலும் தாய்ப்பால் கொடுத்து, தாயோட அரவணைப்பில் குழந்தை வளர்ற மாதிரி இருக்குமா? ஏதோ கெட்ட காலம். அந்தப் பொண்ணு இப்படி போய் ஒருத்தன்கிட்ட மாட்டிக்கனும்னு இருந்துருக்கு.”
அவர்களின் முகத்தில் வேதனை பிரதிபலித்தது.
சென்று கொண்டிருந்த அபர்ணாவிற்கு இவை எல்லாம் காதில் விழுந்தன.
லலிதா செய்த காரியத்திற்கு அவள் மீது கோபப்படாமல் இருந்தது அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
மனோரஞ்சன் அவளை மன்னித்ததும் மற்றவர்களும் லலிதா மீது கோபப்படவில்லை.
ஆனால் சகுந்தலா தான் அவர்களைத் திட்டினார்.
“அந்தக் கழுதை நம்ம குடும்ப மானத்தைக் கப்பலேத்திட்டுப் போனாள். அவளைப் பார்க்க ஏன் நீ போனே?” என்று அவர் கோபப்பட்டாலும் மற்றவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
இவை எல்லாவற்றிற்கும் அபர்ணாதான் காரணம் என்று சகுந்தலா எண்ணினார்.
அவள் வந்த பிறகுதான் மூத்த மகனின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கின்றன என்று கணித்தார்.
அவர்களைக் கண்காணித்த வரையில் அவர் சந்தேகப்படுவது போன்று எதுவும் தெரியவில்லை. ஒருவேளை தான்தான் தவறாக எண்ணுகிறோமோ? என்று தன்னைத்தானே சந்தேகித்தார்.
இப்போதும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக தோட்டத்தில் இருப்பதைக் கண்டவருக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது.
தன்னுடைய கணவர் அவளுக்கு அதிக இடம் கொடுப்பதாகத் தோன்றியது.
ஆனால் மூத்த மகன் வந்ததும் அபர்ணா அங்கிருந்து கிளம்பியது கண்டு அவர் திருப்தியுற்றார்.
‘ம். அந்தப் பயம் இருக்கட்டும். இதுகளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும். அப்பத்தான் சரியா வருங்க.’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.
நேரமாவதை உணர்ந்து அவர்கள் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட சகுந்தலா வீட்டிற்குள் வந்துவிட்டார்.
மனோரஞ்சனை சித்தரஞ்சன் அழைத்து வர, அவர்களுக்கு முன்பே வீட்டிற்குள் ஓடிவந்த மதன்ராஜ் விளையாடுவதற்காக எடுத்த பந்தை அதே அறையில் வைப்பதற்காக மேலே ஓடினான்.
அதைக் கண்ட சகுந்தலா வெகுண்டார்.
அவர்கள் வந்த அன்றே மாடிக்குச் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.
அவரும் மதன்ராஜின் பின்னேயே ஏற அவன் விளையாட்டு அறைக்குள் சென்று பந்தை விட்டுவிட்டு வெளியில் வந்தான்.
“ஏய். இங்கே என்ன பண்றே? இங்கே ஏன் வந்தே?” என்று கோபத்துடன் நின்றார் சகுந்தலா.
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு அவரைக் கண்டாலே ஒதுங்கிச் சென்ற மதன்ராஜ், இப்போது அவரை எதிர்பாராமல் பார்த்ததும் பயந்து போனான்.
அவர் என்ன கேட்டார் என்றெல்லாம் பார்க்காமல் உடனே வேகமாக ஓடினான்.
“ஏய் நில்லு.” என்று பின்னேயே சகுந்தலா கூப்பிடவும் மாடிப்படிகளில் வேகமாக ஓடியவன் தடுமாறி விழுந்தான்.
விழுந்த வேகத்தில் ‘அம்மா’ என்ற அலறலுடன் மயங்கிப் போனான்.