பொன்னையும், பவளத்தையும் உருக்கி கலந்தது போன்ற பொன்மஞ்சள் நிறத்தில் தகதகத்துக் கொண்டிருந்த தீயின் மேலே தளதளத்துக் கொண்டிருந்த உணவை சிறிய கரண்டியில் எடுத்து, உணவின் ருசியை நாசிக்கு முதலில் கொடுத்து பின் நாவிற்கு ருசிக்கக் கொடுத்தான் இளமாறன்.
“மிர்ச்சி கா சலான்” மிதமான காரத்துடன், வேர்க்கடலை, எள்ளின் சுவையோடு அவனின் நாவில் படர்ந்து, தொண்டையில் இறங்க, நாவின் சுவை மொட்டுகள் அனைத்தும் திருப்தியுடன் ருசிக்க அனிச்சையாய் அவன் கண்கள் மூட உதடுகள் ஈரமாய் பிரிந்து முறுவலித்தது.
அவன், “ரெடி” என்றதும், அவனுக்கு பின்னால் இருந்த மேடையில் வெண்கல நிறத்திலான பெரிய பெரிய மூன்று கிண்ணம் போன்ற பாத்திரங்களில் இறைச்சி பிரியாணி தயாராக இருக்க, அதன் தொடு உணவான ஹைதராபாதின் பிரபலமான பச்சை மிளகாயில் செய்யப்படும், “மிர்ச்சி கா சலான்” சிறிய கிண்ணங்களில் அளவாக நிரப்பப்பட்டன.
உணவு நிரம்பிய பாத்திரங்களை சுமந்திருந்த வட்டமான தட்டை கைகளில் ஏந்தி, “செஃப்?” என்று அவனின் அனுமதிக்காக முகம் பார்த்த தனது உதவியாளனிடம், தலையசைத்து, “எதுக்காக வெயிட் பண்ற ரா பாபு. சர்வீஸிக்கு அனுப்பு, க்விக். சூடு குறையப் போகுது” என்றவனின் குரலில் காரமும், சூடும் கூடுதலாக இருக்க, “ஆர்டர் 215. பிரியாணி ரெடி ஃபார் விஐபி கெஸ்ட் இன் சிலான்ட்ரோ.” அறிவித்தான் உதவியாளன். அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் பரபரப்பான தென் இந்திய உணவுக்கான சமையல் கூடம் முழுவதும் அந்தக் குரல் எதிரொலித்தது.
அதற்காகவே காத்திருந்த இருவர் உணவினை எடுத்துக் கொண்டு, சிலான்ட்ரோ என்றழைக்கப்படும் உணவுக் கூடத்தினை நோக்கி நகர, சமையல் கூடம் தன் பணியாக மீண்டும் பரபரப்பானது.
ஹைதராபாத்தின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது. அதன் சூ செஃப் (sous chef) இளமாறன் அங்கு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு உணவையும் மேற்பார்வையிட்டுக் கொண்டே மெதுவாக நகர்ந்தான்.
குளிர்சாதன வசதியுடன் கூடிய அந்த சமையல் கூடத்தில் நெருப்பின் சூடு மிதமாக இருந்தும் அவனைத் தொல்லை செய்தது. தன் செஃப் கோட்டின் முதல் பொத்தானை விடுவித்து, ஆழ மூச்சிழுத்தான். இரு கைகளிலும் மடித்து விடப்பட்டிருந்த பகுதியை இன்னும் கொஞ்சம் மேலேற்றிக் கொண்டே நடக்கையில், “இளா செஃப், கால் ஃபார் யூ” என்ற அறிவிப்பு அவன் நடையை நிறுத்தியது.
“பெர்சனல் கால் செஃப்” என்றதும், வேகமாக தலையசைத்து, அங்கிருந்த எக்சீக்யூடிவ் செஃபின் அறைக்குள் நுழைந்து, தொலைபேசியை கையில் எடுத்தான் அவன்.
“மாறா…” என்ற அழைப்பில் இறுகி நின்றான்.
“நான் வேலையா இருக்கேன். என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு கால் பண்ணியிருக்கீங்க? அதுவும் ஹோட்டலுக்கு?” எரிச்சலுடன் கேட்டான்.
“அம்மாகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா மாறா? நீ எப்பத்தான்..” அவரை கேள்வியை முடிக்க விடாமல், “என்ன விஷயம்?” சூடாக கேட்டான்.
அந்தப் பக்கம் சில வினாடி அமைதிக்குப் பின், “அம்மா மாடிப் படிக்கட்டுல விழுந்துட்டாங்க. லேசான அடி” என்று பதிலளிக்க தொடங்க, பொறுமையின்றி, “அம்மம்மாக்கு என்ன? இப்போ எப்படி இருக்காங்க? பெருசா அடிபடலை தானே? போனை அவங்ககிட்ட கொடுங்க. இல்ல, தாத்தாகிட்ட போனை கொடுங்க. நான் பேசணும்” என்று படபடத்தான்.
“ஏன் இப்படி கோபப்பட்டு, கத்துற மாறா? உன் அம்மம்மா எனக்கு அம்மா டா. நான் அவங்களை பார்க்க போக மாட்டேனா? என்ன கேள்வி கேட்கிற நீ? ம்ம்?”
“நீங்க பார்க்க போய் தான் இப்படி ஆச்சா? அம்மம்மாவால பேச முடியுமா? இல்லனா, தாத்தாகிட்ட கொடுங்க. எங்க அவர்?” அந்தக் கேள்வியில் மகன் இன்னும் சிறுகுழந்தையாக அவரின் மனக் கண்ணில் தோன்ற, கசப்புடன் புன்னகைத்து கொண்டார் சுகந்தி.
“பாட்டிக்கு கால்ல ரொம்ப சின்ன அடிதான். எக்ஸ்ரே எல்லாம் எடுத்தாச்சு. சின்னதா எலும்பு முறிஞ்சிருக்கு. வயசாகுது இல்லையா? போன்ஸ் வீக்கா இருக்கு. கணுக்கால்ல கட்டுப் போட்டிருக்கோம். அவங்க ஒரு ரெண்டு வாரம் ரெஸ்ட்டில் இருக்கணும். மத்தப்படி நீ பயப்பட எதுவும் இல்ல. நீ அடுத்த முறை அவங்களை பார்க்க வரும் போது, கேட் திறக்க ஓடி வருவாங்க பாரு”
“போனை தாத்தாகிட்ட கொடுங்க”
அவர் அத்தனை விளக்கம் கொடுத்த பின்னும் பிடிவாதமாய் சொன்னதையே சொன்ன மகனிடம் மேலே என்னப் பேசுவது என்று தெரியாமல், “இதோ, கொடுக்கிறேன். நீ நல்லா இருக்க தானே? டேக் கேர்” என்றார். அவரின் கட்டுப்பாட்டையும் மீறி குரல் தளுதளுத்தது.
“மாறா, அம்மம்மா நல்லா இருக்காடா ராஜா” என்ற தாத்தா சுவாமிநாதனின் குரலைக் கேட்டதும், அவன் இதயம் பாகாய் இளகியது.
“ம்ம். டாக்டர் சொன்னாங்க.”
அம்மாவை, டாக்டர் என்ற அடைமொழியுடன் பேரன் குறிப்பிட்டதும் சிறு துயர பெருமூச்சு பெரியவரிடம் இருந்து வெளிப்பட்டது.
“நீங்க சொல்லுங்க. அம்மம்மா எப்படி இருக்காங்க தாத்தா? நான் ஷிஃப்ட் முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பி வர்றேன். எனக்கு அவங்களைப் பார்க்கணும்”
“நீ கிளம்பி வர்ற அளவுக்கு ஒன்னுமாகல மாறா. போன மாசம் தானே அவளுக்கு காச்சல்னு பத்துநாள் படுத்தப்போ பார்க்க வந்துட்டு போன? இங்க உங்கம்மாவும், நானும் இருக்கோம். உன் அம்மம்மாவை பத்திரமா பார்த்துப்போம்” அவர் உத்திரவாதமாக சொல்ல, மௌனமாய் நின்றான்.
“இந்தா பாட்டிகிட்ட கொடுக்கறேன். நீயே பேசு”
“மாறா…” என்ற அழைப்பில் கண் மூடி சிறுவனாய், “ம்ம்” கொட்டினான்.
“மழை வர மாதிரி இருந்தது. மாடிலதான் நின்னுட்டு இருந்தேன். துணி எடுத்துட்டு வேகமாக கீழ இறங்கி வந்துட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா தரையில கிடக்கறேன். எப்படி விழுந்தேன்னே தெரியலை ராஜா.”
“உங்களை யாரு மாடிக்கு போக சொன்னா?” அதட்டினான்.
“இதோ, பக்கத்தில நிக்கற என்னைக் கட்டின பெருசுதான். எங்க நம்ம சொன்ன பேச்சு கேட்குது. நீ வந்து நாலு மிரட்டு போடு. அப்போதான் கேட்பார்”
“ம்ம். வர்றேன். நாளைக்கு காலையில அங்க இருப்பேன்.” அவன் உறுதியாக சொல்ல, “மாறா..” என்ற கஸ்தூரி, பேரனை மெல்ல சமாதானப்படுத்தியிருந்தார்.
“ஓகே. நான் வரல. ஆனா, நீங்க பார்த்து, கவனமா இருங்க. சரியா அம்மம்மா?” பத்தாவது முறையாக அதைச் சொல்லி விடை பெற்றான். அந்தப் பக்கம் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பும் தொலைபேசியை கையில் பிடித்தபடி அப்படியே நின்றிருந்தவனின் மனம் இயலாமையால் அப்பளமாய் நொறுங்கியிருந்தது.
அன்றைய நாள் முழுவதும் அவன் கவனம் எண்ணெயில் இட்ட கடுகாய் சிதறிக் கொண்டேயிருந்தது.
மாலை வீடு திரும்பி, குளித்து, தனக்கான தேநீருடன் பால்கனி சென்று நின்றான். நகரம் அதன் போக்கில் விரைவாக நகர்ந்து கொண்டிருக்க, போக்குவரத்தை, மனிதர்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தான்.
சிறு வயதில் இருந்தே அம்மம்மா, தாத்தாவிடம் வளர்ந்தவன் அவன். அவன் உலகமும், உறவும் அவர்கள் மட்டுமே. தன்னை தாங்கிப் பிடித்து தூக்கி விட்டவர்களுக்கு தளர்ந்த நேரம், தான் தோள் கொடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்திக் கொள்ள மட்டுமே அவனால் முடிந்தது.
அவன் பார்க்கும் வேலை, அவன் பதவி, அதன் உயரம், அவர்களுக்கு பெருமிதம். அதை அவர்களுக்காக விட்டுவிட்டு சென்றால் மனம் வருந்துவார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாக தெரியும். பால்கனி கம்பியை ஒரு கையில் பிடித்தபடி மறுகையில் இருந்த தேநீரை உதட்டுக்கு உயர்த்தினான். அந்நேரம் அவனது அலைபேசி ஒலியெழுப்பியது.
அலைபேசியில் நண்பனின் பெயரை பார்த்ததும் உடனே அழைப்பை ஏற்றான் இளமாறன்.
“ஹாய் சரத், எப்படி இருக்க?” மென்னகையுடன் நலம் விசாரித்தான்.
“மாறா, அவ்ளோதான் டா. முடிஞ்சது. இட்ஸ் ஓவர். என்னால இதுக்கு மேல இந்தத் தொழிலை கட்டிட்டு அழ முடியாது டா. ஐ அம் சாரி. எனக்கு வேற வழி தெரியலை. வெரி சாரி டா. ஐ க்விட் (I quit) மாறா. ஐ க்விட்.”
துக்கம் எப்போதும் ஒன்றோடு முடிவதில்லை போலும். நண்பனின் குரலும், மன்னிப்பும், அதில் இருந்த பரிதவிப்பும், இரைஞ்சுதலும், தோற்றுப் போன துக்கமும் அவன் தொண்டையை அடைத்தது. மெல்ல குனிந்து தேநீர் கோப்பையை தரையில் வைத்து, அதைப் பின் தொடர்ந்து தரையில் சரிந்து அமர்ந்தான் இளமாறன்.
“என்னால உனக்கு ரொம்ப பெரிய லாஸ். ப்ச், நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் டா. ஆனா..”
“அதை விடு சரத். நீ சொல்லு. அடுத்து என்னப் பண்ணப் போற?”
“ஷெரட்டன் குரூப்ல இருந்து ஒரு ஆஃபர் வந்திருக்கு. நல்ல பேக்கேஜ். சரின்னு சொல்லலாம்னு இருக்கேன்டா.”
“கங்கிராட்ஸ் சரத். எனக்கு ஒரு மூனு, நாலு மாசம் டைம் கொடுடா. நான் வந்துடுறேன். பிளீஸ்”
“எஸ். எஸ். கண்டிப்பா. நீ வர்ற வரைக்கும் நான் இங்க பார்த்துக்கறேன். ஆமா, நீ என்னப் பண்ண போற மாறா? எப்படி சமாளிக்க போற?”
“ஐ டோண்ட் நோ” அந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, அடுத்தென்ன என்ற எல்லாக் கேள்விக்கும் பதில் தெரியாது ஸ்தம்பித்து நின்றவனின் கண்கள் இலக்கில்லாமல் வான் வெளியில் உலாவியது.