ரோஜா ஒவ்வொரு பக்கங்களாக புரட்ட, அனைத்திலும் இளமாறனே நிறைந்திருந்தான். ஆனால், தனித்திருந்தான்.
குழந்தையில் இருந்து சிறுவன் வரையிலான அவனது இளவயது புகைப்படங்கள் அனைத்திலும் தனியாக நின்றிருந்தவனை பார்க்கையில் அவளுக்கு மனதை என்னவோ செய்தது.
அவனைப் பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரியும். ஆனாலும், இந்த உணர்வு. இப்படி நேரடியாக கண் முன்னர் அவனது கடந்த காலத்தை பார்க்கையில் அவளே அநாதரவாக அவனை விட்டுவிட்டது போல அவளை அலைக்கழித்தது.
அவளையும் அறியாமல் அவளது விருப்பமின்றி, அவளது சிறு வயது புகைப்படங்கள் நினைவு வந்தது.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் வண்ணமயமானவை.
சிரிப்பு, முறைப்பு, அழுகை, சிணுங்கல் என அவள் பல்வேறு முகபாவங்கள் காட்டி நிற்கும் பல புகைப்படங்களிலும் பாசம் மட்டுமே பிரதானமாக இருக்கும். இப்போது பார்க்கையிலும் அனிச்சையாய் புன்னகைக்க தோன்றும்.
அப்பாவின் தோளில் சிரித்தபடி, அம்மாவின் மடியில் அழுதபடி, பெற்றோர் இருவருக்கும் இடையில் அமர்ந்து முறைத்தப்படி, பெற்றோர் அவளை அணைத்து முத்தமிட்டு என எத்தனைப் புகைப்படங்கள்.
நித்யாவும், அவளுமாக ஒரே வண்ண பட்டு கவுனில் அரிசி பல் தெரிய சிரிக்கும் படம், தாய் மாமா மடியில் அமர்ந்து காது குத்தும் படம், அதில் ரோஜா அழுதிருக்க, அவளுக்கு பின்னால் நின்று நித்யா உதடு பிதுக்கி அழத் தயாராக நிற்கும் படம் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தவை. பிரியத்தின் ஒரு பகுதியானவை.
அவர்கள் வளர, வளர புகைப்படங்களின் அளவும் வளர்ந்து கொண்டே தான் சென்றது.
புகைப்படம் என்பது வெறும் நிழலுருவம் அல்லவே. நினைவுகளின் பொக்கிஷங்கள் அவை. காலத்தை கைகளில் சேமித்து வைக்கும் யுக்தி. காலம் கடந்தாலும் காப்பாற்றி வைக்க முடிந்த காலத் துணுக்கு. அது சுமந்திருக்கும் எண்ணற்ற பசுமையான நினைவுகள்.
சித்ரா மகள்களின் ஒவ்வொரு படத்தையும் மிகவும் பத்திரப்படுத்தி, பாதுகாத்து வருகிறார்.
முன்னர் அந்த படங்கள் தான் அவர்கள் வீட்டு சுவரை அலங்கரித்திருக்கும். தற்போது ரோஜாவும், நித்ய கல்யாணியும் அங்கே வளர்ந்து மலர்ந்திருக்கிறார்கள், அவ்வளவு தான். மற்றபடி பெரிதான மாற்றமில்லை.
ஆனால், இங்கு இளமாறனின் வளர்ச்சியை மட்டுமே புகைப்படமாக்கியது போலிருந்தது.
இருபது பக்கங்களுக்கு மேல் அவளால் பார்க்கவே முடியவில்லை.
ஆனால், மூடி வைக்கவும் முடியாமல் மனம் முரண்ட அடுத்தப் பக்கத்தை புரட்டினாள்.
“ரோஜா, காஃபி குடிக்காம வந்துட்ட பாரு” என்றபடி கஸ்தூரி வர, கையில் இருந்ததை மூடி மேஜை மேல் வைத்து விட்டு அதைக் கையில் வாங்கினாள் ரோஜா.
“ரோஜா” அறை வாசலில் நின்றபடி அழைத்தான் இளமாறன்.
அவள் எழுந்து அவனிடம் செல்ல, “நானும், தாத்தாவும் கொஞ்சம் வெளில போறோம். நீ வர்றியா?” என்று கேட்டான்.
ரோஜா பதில் சொல்லும் முன்னர் முந்திக் கொண்டு, “நீங்க போய்ட்டு வாங்க மாறா. ரோஜா என் கூட இருக்கட்டும்” என்றார் கஸ்தூரி. அவள் சம்மதமாக தலையசைக்க இளமாறன் வெளியில் சென்றான்.
“உங்க தாத்தா நாலு நாளா என் கூடவே உட்கார்ந்து கால் மூட்டு வலிக்குது சொன்னார் மா. அதான் வாக்கிங் போனா நல்லா இருக்கும்னு மாறனை கூட்டிட்டு போக சொன்னேன்” என்ற கஸ்தூரி,
“ரெண்டு தெரு தள்ளி கோவில் இருக்கு. அங்க போய் உனக்கு பூ வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேன்” என்றார்.
“சரிங்க பாட்டி” என்ற ரோஜாவுக்கு கஸ்தூரியின் காரணம் புரிந்தது. அவள் ஏற்கனவே தலை நிறைய பூ சூடியிருக்க, ஆண்களை வெளியில் அனுப்பியது அவளிடம் பேசுவதற்கு தனிமை வேண்டி கிடைத்த சாக்கு என விளங்கியது.
அவர்களின் திருமணத்திற்கு முன்பே சில முறை கஸ்தூரி அவளிடம் பேச முயன்றார்தான். ஆனால், ரோஜா தவிர்த்து விட்டாள். இனி மேலும் அது முடியாது என உணர்ந்து இளமாறனின் கடந்த காலத்தை அறிய மனதளவில் தயாரானாள்.
அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த கஸ்தூரி, “இப்படி வந்து உட்காரு ரோஜா” என்று அழைக்க, அவளும் சென்று அமர்ந்தாள். மேஜையில் இருந்த புகைப்படங்களை கையில் எடுத்துக் கொண்டாள்.
கஸ்தூரி அவள் கையில் இருந்த தொகுப்பை வாங்கிப் பிரிக்க, இரண்டு வயது இளமாறன் அவரின் கைப் பிடித்து பற்கள் தெரிய சிரித்தபடி நின்றிருந்தான். அப்படியே அள்ளிக் கொள்ள தூண்டும் புகைப்படம்.
கஸ்தூரி முகம் மலர அந்தப் புகைப்படத்தை வருடினார்.
“மாறனை பத்தி உனக்கு எல்லாம் தெரியும் இல்ல ரோஜா?” அவர் கேட்க, நேராக அவரின் கண்ணைப் பார்த்து, ஆம் என்றாள் ரோஜா.
“சுகந்தி ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கிற எல்லோருக்கும் எப்படியாவது தெரிஞ்சுடும். நீங்க அங்க ரொம்ப வருஷமா கேன்டீன் வச்சுருக்கீங்க இல்ல? உங்களுக்கு எப்படித் தெரியாம இருக்கும்? ம்ம்” அவளிடம் கேட்பது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
அமைதியாக அமர்ந்திருந்த ரோஜாவின் கைப் பிடித்து கொண்டு, தொண்டையை செருமி, “உங்கத்தை சுகந்தி எங்களுக்கு ஒரே பொண்ணு..” கடந்த காலத்தை பகிரத் தொடங்கினார் கஸ்தூரி.
அவளின் உடல் முழுவதும் கண்களும், செவிகளுமாக உருமாறி அமர்ந்திருந்தாள் ரோஜா.
“சுகந்திக்கு முன்னாடி ஒரு முறை, சுகந்திக்கு அப்புறம் ரெண்டு முறை எனக்கு குழந்தை தங்கல. ஆசை ஆசையா ஒரே பொண்ணு போதும்னு மனச தேத்திக்கிட்டு அவளை வளர்த்தோம் நாங்க. செல்லமும், கண்டிப்புமா தான் வளர்த்தோம். குணத்துல ஒரு குறை சொல்ல முடியாத தங்கமான பொண்ணா, ரொம்ப பாசக்காரியா தான் வளர்ந்தா. படிப்புல ரொம்ப கெட்டிக்காரி.
அப்ப இருந்தே எங்களுக்கு விசேஷங்கள், பண்டிகைகளுக்கு சமையல் பண்ற வேலைதான். நிறைய நேரம் பொண்ணு எங்க கூடவே வந்து நிப்பா, கூட மாட வேலை செய்வா. அவ பிளஸ் டூ படிக்கும் போதே டாக்டருக்கு படிக்கணும் சொன்னப்போ எங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியல. ஆனா, அவ ஆசைப்பட்டதை படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம்”
“அப்போ யதேச்சையா உங்க தாத்தாவோட ஊர்க்காரங்களை ஒரு விஷேஷத்தில் பார்த்தோம். இவருக்கு அக்கா முறையுள்ள குடும்பம் தான் அவங்க. உங்க மாமா சங்கரன் ஃபேமிலி பத்தி தான் சொல்றேன்.”
“…..”
“பசங்க பத்தி பேச்சு வரும் போது எங்க பையனும் டாக்டருக்கு தான் படிக்க ஆசைப்படுறான். நாங்க விசாரிச்சு சொல்றோம்னு சொன்னாங்க. சுகந்தி நல்ல மார்க் வாங்கவும், அவங்க கிட்ட தான் போனோம். அவங்க பிள்ளையோட சேர்த்து, என் பொண்ணுக்கும் ஹெல்ப் பண்ணாங்க.
“என் மக சுகந்தி டாக்டருக்கு படிக்க போனா. எங்களுக்கு அவ்ளோ பெருமை. அங்கதான் மாப்பிள்ளை சங்கரனும் படிச்சார். அடிக்கடி நம்ம வீட்டுக்கு எல்லாம் வருவார். நல்லா பழகுவார். கடைசி வருஷம் படிக்கும் போது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாங்க. எங்கிட்ட வந்து சொல்லவும் செஞ்சாங்க. நாங்க ரெண்டு குடும்பமும் சொல்லி வச்சது போல சந்தோசமா அவங்களுக்கு சம்மதம் சொன்னோம்.
ஒரே ஊர், தூரத்து சொந்தம், ரெண்டு பேரும் டாக்டர், இப்படி நாங்க சரின்னு சொல்ல பல காரணங்கள். ஆனா…” அவர் மேலே தொடராமல் நிறுத்த, ரோஜா எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.
அடுத்தென்ன என்ற ஆர்வம் அவளிடம் துளியுமில்லை.
“சுகந்தி படிப்பை முடிக்க நாலு மாசம் இருந்தது. அப்போ அதென்ன சொல்லுவாங்க, ட்ரைனிங் டாக்டர்? அதுவா இருந்தா. திடீர்னு ஒரு நாள் வந்து, நான் கர்ப்பமா இருக்கேன் மா. எங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றா.. எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?”
அவர் குரல் இப்போதும் நடுங்கியது. அது கோபத்தினாலா, ஆத்திரத்தினாலா, கவலையினாலா என பிரித்தறிய முடியவில்லை.
“அதைக் கேட்டு அவங்கப்பா ஒன்னுமே சொல்லல. அமைதியா சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். நான்தான் கோபத்துல சுகந்தியை அடிச்சுட்டேன். குழந்தையை பெத்தே தீருவேன்னு பிடிவாதம் பிடிச்சா. ம்ம்.. அப்புறம் வேற வழியில்லாம மாப்பிள்ளை வீட்ல போய் பேசினோம். அந்தம்மா எங்களை நிக்க வச்சு நல்லா கேள்வி கேட்டுச்சு. என்னென்னமோ பேசுச்சு. அவங்க பையன் நல்லவன். எங்க பொண்ணு தான்.. ப்ச், அப்போ என் கோபம் எல்லாம் என் மக மேலதான் திரும்புச்சு. அந்த ஆத்திரத்துல ஊர் பேசுறதுக்கு முன்னாடி நானே அசிங்கமா பேசினேன் என் பொண்ணை..” ரோஜா அதிர்ச்சியை வெளிக் காட்டாமல் அவரைப் பார்க்க,
“உண்மையை தான் சொல்றேன் ரோஜா. இன்னைக்கு இருக்க முதிர்ச்சியும், யோசனையும் எனக்கு அன்னைக்கு இல்ல. கோபமும், ஆத்திரமும்தான் என் கண்ணை மறைச்சது. ஊர் என்ன பேசும்னு யோசிச்சு பயந்து, அந்த ஊருக்கு வம்பு பேச நானே ஒரு வாய்ப்பு கொடுத்தேன். நான் நினைச்சா யாருக்கும் தெரியாம, மறைச்சு, கண்ணியமா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருந்திருக்கலாம். ஆனா, நான் எந்நேரமும் என் பொண்ணை திட்டி, கத்தி, புலம்பியே அவ விஷயத்தை அக்கம் பக்கம், ஊர், உறவுன்னு எல்லோருக்கும் தெரிய வச்சுட்டேன்.” என்றார் வருத்தத்துடன்.
“மாப்பிள்ளை அவர் குடும்பத்தை சமாளிச்சு அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினார். அவரையும், என் பொண்ணையும் ரொம்ப தலை குனிய வச்சேன் நான். ஆனா, அப்போ எனக்கு அது புரியவேயில்ல. என் நியாயம், என் கவுரவம், என் பேர், பெருமை யோசிச்சேனே தவிர, என் மகளை யோசிக்கவேயில்ல நான். அவ மனசை பத்தி யோசிக்கவேயில்ல நான். உங்க தாத்தா எவ்வளவோ எடுத்துச் சொன்னார். அவரையும் சேர்த்து பேசினேன். ஹ்ம்ம்.. என் பொண்ணு பேரை நானே கெடுத்து விட்டேன்..”
“அவ வயித்துல குழந்தையை வச்சுட்டே படிப்பை முடிச்சா. அவங்க கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்துல இளமாறன் பொறந்தான். அப்போ தான் படிப்பை முடிச்சுருந்தாங்க. மேல ரெண்டு பேருக்கும் வெளிநாடு போய் படிக்கணும்னு ஆசையிருந்தது. ஆனா, சுகந்திக்கு பச்ச குழந்தையை விட்டு போக மனசில்ல. இங்கேயே வேலை பார்க்கறேன்னு முடிவா சொல்லிட்டா. ரெண்டு வீட்டு பெரியவங்களும் அவ முடிவை ஆதரிச்சோம். முதல்ல மாப்பிள்ளை மட்டும் வெளிநாடு போய் படிக்கிறதா இருந்தது. ஆனா, எங்க மாப்பிள்ளை தங்கம் அவர். அதான் உன் மாமா. அவருக்கு, உங்க அத்தையும் மேல் படிப்பு படிக்கணும்னு விருப்பம். அவங்க படிக்கும் போதே இதெல்லாம் பேசியிருப்பாங்க போல. பொண்டாட்டியை விட்டுப் போக மனசில்லாம, ரெண்டு வீட்லயும் பேசினார்.”
“உங்க தாத்தா உடனே சரின்னு சொல்லிட்டார். ஆனா, மாப்பிள்ளை வீட்ல ஒத்துக்கல. அதுனால குழந்தையை நாங்க வளர்க்கறோம்னு, நாங்க பொறுப்பெடுத்துக்கிட்டோம். மாறனுக்கு அப்போ பத்து மாசம்தான் ஆகியிருந்தது. சுகந்தி பத்து மாச குழந்தையை விட்டுட்டு படிக்க போனா..” அவர் சொல்ல, சொல்ல அவளுக்கு தொண்டையடைத்தது.
அம்மாவின் மார்பில் முட்டி மோதி பசியாரும் வயதில் அம்மாவை பிரிந்திருக்கிறான் என்பதை நினைக்கவே அவளுக்கு மனது கனத்தது.