“மகப்பேறு மருத்துவம், ரெண்டு வருஷம் மேல் படிப்பு முடிச்சுட்டு, அங்கேயே ட்ரைனிங் எடுத்துட்டு மூனு வருஷம் கழிச்சு அவங்க ஊருக்கு வரும் போது மாறனுக்கு நாலு வயசு.”
ரோஜா எட்டி மேஜையின் மேலிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.
நாலு வயது ரோஜாவை, இடுப்பில் தூக்க முடியாமல் தூக்கி வைத்திருக்கும் நித்யாவின் புகைப்படம் அவளின் கண் முன் வந்தது.
அத்தோடு அப்பாவின் மடியில் சிறுமியாய் அவளும், அம்மாவின் மடியில் நித்யாவும் அமர்ந்திருக்கும் குடும்பப் படம் நினைவிலாடியது.
பேரப் பிள்ளைகள் தாத்தா பாட்டியிடம் வளர்வது காலங்காலமாக நடப்பதுதான். அது இயல்பானது என அறிந்தே இருந்தாள் அவள். ஆனால், பெற்றோர் இருந்தும் இல்லாதது போல, அவர்களை விட்டு விலகி வாழ்வதும், வளர்வதும் எத்தனை கொடுமையான விஷயம். இருவருக்கும். குழந்தை மட்டுமல்ல, பெற்றோருமே அவனைப் பிரிந்து தவித்திருப்பார்கள் தானே?
“அந்த மூனு வருஷமும் லீவுக்கு ஊருக்கு வந்தாங்கதான். நிறைய காசு செலவு பண்ணி வருவாங்க. அப்போ எல்லாம் இவ்வளவு வசதி கிடையாது. ஆனாலும், பிள்ளையை பார்க்காம தவிச்சு போய் வருவா என் பொண்ணு. ஒரு வாரத்துக்கு ஊருக்கு வர்றவ கிட்ட மாறன் ஒட்டவேயில்ல. குழந்தை என்ன பண்ணுவான், பாவம். சுகந்தி ஏமாந்து அழுதுட்டே போவா. அவ விட்டு போனதில் இருந்து அவ திரும்பி வர்ற வரைக்கும் மாச மாசம் மாறன் போட்டோவை அவளுக்கு அனுப்புவோம் நாங்க.”
“உங்க தாத்தா அவனை ஸ்டுடியோ தூக்கிட்டு போய் ஃபோட்டோ எடுத்து மகளுக்கு அனுப்புவார். இல்லனா, ஆள் கூட்டி வந்து வீட்ல வச்சு ஃபோட்டோ எடுத்து அனுப்புவோம். அது அவளுக்கு போய் சேர நிறைய நாள் எடுக்கும். ஃபோட்டோ கிடைச்சதும் போன் பண்ணி பேசுவா. குழந்தை அம்மான்னு போன்ல சொன்னா, அப்படி அழுவா.”
இப்போது சுகந்தியின் கோணமும் புரிய தலையசைத்தாள் ரோஜா. அவளின் கலங்கிய கண்களைப் பார்த்து, “அச்சோ, உன்னை அழ வைக்கிறேனா நானு?” என்று கரிசனத்துடன் கேட்டார் கஸ்தூரி. ரோஜா இமைகளை மூடித் திறந்து கண்ணீரை உள்ளிழுத்து, மறுப்பாக தலையசைக்க,
“மாறன் கூட வாழப் போற உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும் நினைச்சேன் நான். ஊர்ல நாலு விதமா கதை சொல்லுவாங்க. ஆனா, உண்மை வேற தானே? நடந்தது என்னனு உனக்கு தெரிஞ்சா மாறனை நீ புரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு தான் சொன்னேன் ரோஜா. உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு முயற்சி பண்ணேன்.” அவளின் கையை விட்டு கன்னம் பற்றி சொன்னார் கஸ்தூரி.
“ஆனா, உன்கிட்ட தனியா பேச சரியான நேரம் அமையல” என்று அவர் சொல்ல, அந்த நேரத்தை அவள் அமைய விடவில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ரோஜா.
அவளுக்கு இளமாறனை பிடித்திருந்தது. அவனை, அவனுக்காகவே பிடித்தது. அந்தப் பிடித்தத்தில் பிரியம் கூட்ட விரும்பினாலே தவிர பரிவை கலக்க விரும்பவில்லை அவள்.
இளமாறனை அவனுக்காக மட்டுமே விரும்பி திருமணம் செய்தாள். அவனது கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருந்தாலும் அது அவளின் முடிவை பாதிக்கக் கூடாது என்றே நினைத்தாள்.
“நீ ஃபோட்டோ பார்க்கிறதுன்னா பாரு ரோஜா” என்று அவர் சொல்ல, மீண்டும் பக்கங்களை புரட்டினாள்.
“என் பொண்ணுக்கு அனுப்ப எடுத்த ஃபோட்டோ தான் இதெல்லாம். அவளுக்கு ஒன்னு அனுப்பிட்டு, எங்களுக்கு ஒன்னு வச்சுக்கிட்டோம்” என்றவர், சிறிது நேரம் அந்த காலத்திற்கே சென்றது போல அமைதியாக இருந்தார்.
ரோஜா பக்கங்களை திருப்ப இப்போது தாத்தா பாட்டியுடன் சிறுவனாக இளமாறன் நின்றிருந்தான். சில சில புகைப்படங்களில் சிரிப்புடன் இருந்தான். தவழும் குழந்தையாய், தாத்தா மேல் உப்பு மூட்டை ஏறியபடி, பாட்டி இடுப்பில் என அவன் இருக்க, அதைப் பார்த்ததும் ரோஜா முகம் மலர்ந்தது. அடுத்த ஆல்பத்தை அவள் பிரிக்க, அதில் அவனது பெற்றோருடன் நின்றிருந்தான். எப்படியும் ஐந்தாறு வயதிருக்கும்.
அதில் சுகந்தி மிக அழகாக இருந்தார். ரோஜா அவரையே உற்றுப் பார்க்க, “இந்த ஃபோட்டோ நம்ம ஹாஸ்பிடல் கட்டும் போது எடுத்தது மா. சரியா பூஜை போட்ட அன்னைக்கு எடுத்தது. உங்க அத்தை அப்போ வினோத்தை வயித்துல வச்சிருந்தா” புகைப்படத்தில் இருந்த நிகழ்வை பகிர்ந்தார் கஸ்தூரி.
“அவங்க படிப்பை முடிச்சுட்டு வந்தும் கூட வேலை, வீடுனு ஒரே ஓட்டமா ஓடிட்டுதான் இருந்தாங்க. மாறன் எங்ககிட்டயே இருந்துட்டான். நாங்களும் நாலு பேர் வச்சு வேலை பார்த்த நேரம் அது. பெரும்பாலும் பிள்ளை தனியாதான் இருப்பான். ரொம்ப சமத்து. பெருசா சேட்டை பண்ண மாட்டான். ஒரு இடத்தில உட்கார்ந்து அமைதியா விளையாடிட்டு இருப்பான். அவங்கப்பா கிட்ட மட்டும் நல்லா ஒட்டிப்பான். அவரும் எந்த நேரம் வீட்டுக்கு வந்தாலும் பையன் கூட உட்கார்ந்து, கதை பேசி, விளையாடி, அவர் கூடவே தூங்க வச்சுப்பார்”
“…..”
“அப்படியே இருந்திருக்கலாம் இந்த மாறன். எங்க? அதுக்குள்ள வினோத் பொறந்துட்டான். உங்க அத்தை ஹாஸ்பிடல் கட்டி முடிச்சா. ரெண்டு பேரும் திரும்ப பிஸியாகிட்டாங்க. அடுத்த வருஷமே வெண்பாவும் பொறந்துட்டா. அவ்ளோதான். என் பேரனை பார்க்க ஆளில்ல. அவனுக்கு எட்டு வயசு இருக்கும் அப்போ. திடீர்னு பயங்கர காய்ச்சல் பிள்ளைக்கு, அப்படியொரு சூடு. உடம்புல கை வைக்க முடியல. சோர்ந்து கண்ணெல்லாம் சொருகி ஒரு மாதிரி ஆகிட்டான். நாங்களும் ஒரு கல்யாண ஆர்டருல பிஸியா இருந்தோம் அன்னைக்கு. வீட்ல வேலைக்கு இருந்தவங்க தகவல் சொல்லி, அடிச்சு பிடிச்சு வீட்டுக்கு வந்து பிள்ளையை தூக்கிட்டு ஹாஸ்பிடல் ஓடினோம்.”
“என்னாச்சு பாட்டி?” முதல் முறையாக கேள்வி கேட்டாள் ரோஜா.
“எங்க கிட்டருந்து பதறியடிச்சு பிள்ளையை வாங்கி, ஹாஸ்பிட்டலுக்குள்ள தூக்கிட்டு ஓடினா உங்கத்தை. ஆனா, எனக்கு மாறனை அப்படிப் பார்த்ததும் மனசு ஆறல. என் மேலயும் தான் தப்பிருந்தது. பிள்ளையை நானும் தான் பொறுப்பா பார்த்திருக்கணும். ஆனா, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு அங்க வேலை பார்க்கிற அத்தனை பேர் முன்னாடியும் உங்க அத்தையை கூறு போட்டுட்டேன்.”
ரோஜாவுக்கு மருத்துவமனை செய்தியை பற்றி நன்றாக தெரியும். ஆனால், அதை செய்ததும் இவர்தான் என்று தெரியாது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடியே பிள்ளை பெக்குறது திறமை இல்ல. அவனை சரியா வளர்க்க தெரியணும். டெய்லி நாலு பிரசவம் பார்க்கிற. ஆனா, சொந்த பிள்ளையை பார்க்கல. நீயெல்லாம் என்ன டாக்டருன்னு கத்தி.. என் பொண்ணோட மான, மரியாதை எல்லாத்தையும் அவ ஹாஸ்பிடல்ல வச்சும் பறக்க விட்டுட்டேன். நான் ஒரே ஒரு நாள் கோபத்துல பேசினது. இன்னமும் கதை கதையா அந்த ஹாஸ்பிடல்ல சுத்திட்டு இருக்கு. என் பொண்ணு எத்தனை பேருக்கு விளக்கம் சொல்லுவா?. ஒரு கட்டத்துல அப்படியே கண்டுக்காம விட்டுட்டா.. ஒருவேளை மாறன் அவ கூட இருந்திருந்தா இந்த பேச்சு நின்னிருக்கும்.”
“ஆனா, வினோத், வெண்பா ரெண்டு பேரும் ரொம்ப சின்ன குழந்தைங்க அப்போ. சுகந்தியால மூனு குழந்தைகளையும் கவனிக்க முடியலன்னு, நான்தான் மாறனை கூடவே வச்சு பார்த்துக்கிட்டேன். ஆனாலும் அவ மேல எனக்கு ரொம்ப கோபம். அதுக்கு அப்புறம் மாறனை எங்ககிட்ட விடல அவங்க. தனியா வீடு பார்த்து, பிள்ளைங்களோட போய்ட்டாங்க. அவங்கப்பா வலுக்கட்டாயமா மாறனை எங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிப் போனார்.”
“ஆனா, போன வேகத்தில திரும்பி எங்ககிட்டயே வந்துட்டான் மாறன். சுகந்தியும், மாப்பிள்ளையும் வந்து எத்தனையோ முறை அவன்கிட்ட பேசி, கெஞ்சி, கொஞ்சி, சமாதானப்படுத்தி பார்த்துட்டாங்க. ம்ஹூம், எதுக்கும் இறங்கி வரல அவன். இங்கயே எங்க கூடவே இருந்துட்டான். ஸ்கூல், காலேஜ், வேலைன்னு அப்படியே ஓடிடுச்சு அவன் வாழ்க்கை.” ஒரு பெருமூச்சுடன் அவர் சொல்லி முடிக்க, ரோஜா சேலையை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
“ரோஜா” அவளின் தோளை தொட்டு அழைக்க, நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
“இது உனக்கு தெரிஞ்சிருக்கணும்னு தான் சொன்னேன். நீ, உங்க அத்தையை இதுக்காக…” என்று கஸ்தூரி தயக்கத்துடன் ஆரம்பிக்க, சட்டென அவர் புறம் திரும்பி, “ச்சே ச்சே பாட்டி. என்ன பேசுறீங்க நீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டாள் ரோஜா.
“நான் உன்கிட்ட சொன்னது ரொம்ப கொஞ்சம் தான். ஆனா, நிறைய நடந்தது. எங்ககிட்ட திரும்பி வந்த மாறன் அப்புறம் அவங்க அம்மாகிட்ட போகவே முடியாதுன்னு அடமா இருந்துட்டான். அப்பா, தம்பி, தங்கச்சி கூட எல்லாம் நல்லா பேசுவான். ஆனா, அவனோட அம்மாவை அப்படியே விட்டு விலகி வந்துட்டான். அம்மாகிட்ட பேச கூட மாட்டான். அவகிட்ட நேரா பேசி பல வருஷம் ஆச்சு.”
“உன் புருஷனை போல, அவனைப் பார்த்து நீயும், உன் அத்தை மேல கோபத்தை வளர்த்துக்க போறன்னு தான், எல்லாத்தையும் இப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன் ரோஜா. உங்க அத்தை மேல தப்பில்ல மா. நான்தான், எல்லாத்துக்கும் காரணம். என் பேச்சுதான் என் பேரனை இப்படி தனியா நிக்க வச்சது. அவனை வச்சுட்டே எத்தனையோ நாள் அவங்க அம்மாவை திட்டி இருக்கேன். குழந்தை மனசுல அது ஆழமா பதியும்னு என் புத்தியில் உரைக்கவே இல்ல”
“எனக்கு புத்தி வந்தப்போ, காலம் கடந்து போச்சு. அவனும் அம்மாவை விட்டு ஒரேடியா ஒதுங்கிட்டான்” அவர் சொல்ல, ஏன், எதனால் என்று கேட்டிட துடித்தாள் ரோஜா. ஆனாலும் ஒரு தயக்கம் அவளை தள்ளியே நிறுத்த, எதுவும் கேட்கவில்லை.
“அம்மா..” அறை வாசலில் நின்றபடி வீட்டு உதவியாளர் அழைக்க, மெல்ல எழுந்து கொண்டார் கஸ்தூரி.
“உங்களுக்கு நைட்டுக்கு சாப்பிட என்ன செய்யட்டும்?” என்று அவர் கேட்க, “இதோ வர்றேன்” என்ற கஸ்தூரி,
“நீ ஃபோட்டோ பார்த்திட்டு இரு ரோஜா. நான் இதோ வந்துடுறேன்” என்று வெளியில் சென்றார்.
“சரிங்க பாட்டி” என்ற ரோஜா நன்றாக கட்டிலில் அமர்ந்து மீண்டும் புகைப்படங்களை பார்வையிடத் தொடங்கினாள்.
இப்போது அவள் கையில் இருந்த ஆல்பத்தில் முழுக்க முழுக்க குடும்பத்துடன் இருந்தான் இளமாறன். அவளுக்கு அதைப் பார்க்கவே இதமாக இருந்தது. மிக குறைந்த புகைப்படங்கள் தான் எனினும் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என உறவுடன் நின்றவனை பார்க்கவே உவப்பாக இருந்தது.
அவன் வளர வளர மீண்டும் தனிமை. பால்யம் தொடங்கி, பள்ளி, கல்லூரி என வரிசைப் படுத்தப்பட்ட புகைப்படங்கள்.
சிறுவனாய், இளைஞனாய் இளமாறனின் தோற்றத்தை இமை வழியே இதயத்திற்கு கடத்தினாள்.
அவன் புன்னகையுடன் நிற்கும் புகைப்படங்களை பார்க்கும் போதெல்லாம் அவளது பற்களும் வெளியில் தெரிந்தது.
ஆனாலும், மனதின் ஓரத்தில் அரித்த உறுத்தலை அவளால் ஒதுக்கி தள்ள முடியவில்லை.
மீண்டும் அவனது சிறு வயது புகைப்படங்களையே பார்த்தாள் அவள்.
அடுத்து அவன் சிரிப்புடன் குடும்பமாக நிற்கும் புகைப்படங்களை பார்த்தாள். சற்று நேரம் இதையே மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருந்தாள்.
“ரோஜா, இன்னொரு காஃபி குடிக்கிறியா?” கஸ்தூரி அவளை நோக்கி வந்தபடி கேட்க, “இல்ல வேணாம் பாட்டி” என்று மறுத்தவள், “நான் இதுல சில ஃபோட்டோஸ் எடுத்துக்கவா?” என்று தயக்கத்துடன் அவரிடம் கேட்டாள்.
“அட தங்கமே. உனக்கு இல்லாததா? எங்க பேரனையே உன்கிட்ட ஒப்படைச்சுட்டோம். அவன் ஃபோட்டோவையா தர மாட்டேன் சொல்லப் போறேன். எது வேணுமோ, எடுத்துக்கோ ரோஜா” சிரிப்புடன் சொன்னார் கஸ்தூரி.
“தாங்க்ஸ் பாட்டி” அகமும், முகமும் மலர நன்றி சொன்னாள்.
அவளைப் பொறுத்தவரை அது சாதாரண புகைப்படம் மட்டும் அல்லவே.
கணவனின் கடந்த காலம் அது. அவனுக்கு அது கசப்பானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் அதை பாதுகாக்க விரும்பினாள் ரோஜா.
முதலில் அவன் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்களை தேர்ந்தெடுத்து எடுத்தாள். ஹாலில் இருந்த தன் கைப்பையை எடுத்து வந்து அதில் வைக்கப் போன கணம், மனம் மாறி அவனது குழந்தை பருவ புகைப்படங்களை மாற்றி எடுத்தாள். அத்தோடு அவன் முகம் மகிழ்ச்சி தொலைத்த புகைப்படங்களையும் சேர்த்துக் கொண்டாள்.
மனம் முழுவதும் கலவையான உணர்வுகளுடன் நேரத்தை பார்க்க அரை மணி நேரம்தான் கடந்திருந்தது. அவள் மனதில் கால் நூற்றாண்டை கடந்த அயர்ச்சி சூழ்ந்திருந்தது.
“மாறன் இப்ப வந்துடுவான் ரோஜா. கோவில் பக்கத்தில தான் இருக்கு. உங்க தாத்தா பொறுமையா நடப்பார். அதான் அவங்க வர லேட்டாகுது” அவள் வாசலை பார்த்தபடி அமர்ந்திருப்பதை பார்த்துச் சொன்னார் கஸ்தூரி.
அவளுக்கு குடிக்க ஆரஞ்சு பழச் சாறுடன் வந்தார். வேண்டாம் என மறுத்து விட்டாள் ரோஜா.
“கொஞ்சமா குடி ரோஜா” என்று கஸ்தூரி அவளை வற்புறுத்திக் கொண்டிருக்கையில் இளமாறனும், சுவாமி நாதனும் வீடு வந்து சேர்ந்தனர்.
அவளையே பார்த்தபடி நடந்து வந்து, “சாரி ரோஜா. தனியா விட்டு போய்ட்டேனா?” என்று கேட்டபடி அவளருகில் வந்து அமர்ந்தான் இளமாறன்.
அதன் பின்னர் அதிக நேரம் அவர்கள் அங்கிருக்கவில்லை.
அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
காரில் வீடு நோக்கி பயணிக்கையில் இளமாறன் இயல்பாக பேச, ரோஜா அவள் உணர்வுகளை போலவே தடுமாறினாள்.
மனதில் மீண்டும் மீண்டும் ஒரேயொரு எச்சரிக்கை ஒலி தான் கேட்டுக் கொண்டேயிருந்தது அவளுக்கு. தன்னைத் தானே எச்சரித்து கொண்டாள்.
குழந்தையை தொலைத்த தாயிடம் சொல்லப்படும் அறிவுரை அது. காணாமல் போன குழந்தை கையில் கிடைத்ததும் பதறி அணைத்து, கதறி அழுது முத்தமிட்டு குழந்தையை பயமுறுத்த கூடாது என்ற வாசகத்தை திரும்ப திரும்ப மனதில் பதிய வைத்தாள்.
ஆனால், அவர்கள் வீடு சென்று அறைக்குள் நுழைந்ததும், கணவனை தாவி அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் ரோஜா. என்ன ரோஜா.. விடுடி என்னை.. ஏய்.. மூச்சு முட்டுதுடி” என்று கத்திய இளமாறன் குரலை காதில் வாங்காமல் இறுக கட்டியணைத்து முத்தமிட்டாள்.
“ரோ….ஜா” திணறினான் இளமாறன். ம்ஹூம், ரோஜா நிறுத்தவில்லை.