இரவு வீட்டிற்குள் நுழைந்ததும் இளமாறன் மனைவியை இதமாய் இழுத்தணைத்து நின்றான்.
“இளா..”
“இருக்கேன்” அவள் கழுத்தில் உதடசைத்து உச்சரித்தான். கூச்சத்தில் உடலை சிலிர்த்தாள் ரோஜா.
“தேங்க்ஸ்” என்றான் ஆத்மார்த்தமாக.
“எதுக்கு இளா?” தன் கழுத்தில் இருந்த கணவன் முகத்தை, கண்களை மட்டும் திருப்பிப் பார்த்துக் கேட்டாள் ரோஜா.
“எனக்கு எப்பவும் கூட்டத்தில் கூட தனியா இருக்க ஃபீல் வரும் ரோஜா. பெரும்பாலும் வீட்ல, குடும்பத்துல கூட லெஃப்ட் அவுட்டா தான் உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னைக்கு தனியா நிக்கும் போது கூட நீ என் பக்கத்துல இருக்க ஃபீல். உன் பார்வை என் மேலேயே இருந்தது காரணமா இருக்கலாம். ஆனா, இட் மீன்ஸ் அ லாட் டு மீ. யூ மீன் அ லாட் டு மீ”
அவளின் கண்களை ஊடுருவி சொன்னான். அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவள் மனதை ஆழமாய் தொட்டது.
இளமாறன் அதிகமாக பேசுவதில்லை. ஆனால், அவ்வப்போது இது போல அவனை வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அதிகமாக அவனது அன்பால் அவளை கட்டிப் போட்டு விடுகிறான்.
“நானும், எனது தனிமையும்.. போயே போச்..” அவன் குரல் கரகரத்து கிசுகிசுக்க, ரோஜாவின் மனதும் அவன்பால் அன்பால் கரைந்தது.
அவனிடம் இது குறித்து பேச வேண்டும் என்ற முடிவுடன் இருந்தவள், அதை அப்படியே ஓரமாக ஒதுக்கி வைத்தாள்.
“நான் குளிச்சுட்டு வர்றேன், தூக்கம் வருது” அவளை விலக்கி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
ரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள். அவளுக்கு குடும்பத்தினர் கொடுத்த பரிசு பொருட்களை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்து, பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சிவப்பு நிற சிறிய நகைப் பெட்டியை அடுத்ததாக பிரிக்க, அதில் மெலிதாக இருந்த கைச் சங்கிலியில் ஆங்கிலத்தில் இளமாறனின் முதல் எழுத்தான, “ஐ” இருந்தது. சற்றே கடினமாக இருந்த கைச் சங்கிலியில் ரோஜாவின், “ஆர்” பொறிக்கப்பட்டிருக்க அதை ரசனையுடன் வருடி பார்த்தாள் ரோஜா.
அதனோடு கூடவே ஒரு நெக்லஸும் இருந்தது. ரோஜா அதைத் தனியாக வைத்து விட்டு, கைச் சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
இளமாறன் குளித்து, உடை மாற்றிக் கொண்டே மனைவியிடம் வந்தான்.
“என்ன பார்க்கற ரோஜா?”
“பிரேஸ்லெட் இளா. எப்படியிருக்கு?” அவள் நீட்டியதை கையில் வாங்கிப் பார்த்து, “அழகாருக்கு ரோஜா. எனக்கு ஏன் இப்படி ஐடியா தோனல?” என்று கேட்டான்.
“ரொமான்ஸ்னா என்னனு கேட்கிற உங்களுக்கு எப்படி இந்த ஐடியா எல்லாம் தோனும்?” கண்களில் குறும்பு மின்ன அவள் கேட்க, “ஓய் என்னடி…” என்று அவளை அருகில் இழுத்தான்.
அவன் மேல் வாகாக சாய்ந்தபடி அவன் கைப் பிடித்து அந்த கைச் சங்கிலியை போட்டு விட்டாள் ரோஜா.
அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
அவன் கரத்தை அந்தச் சங்கிலியுடன் வருடினாள். அவனோ அதில் இருந்த ஆரை (R ) வருடி புன்னகைத்தான்.
“நீங்க இதெல்லாம் போட மாட்டீங்க தெரியும். உங்க வேலைக்கு இதெல்லாம் போட கூடாதுன்னும் தெரியும். ஆனா, எனக்காக போட்டுக்க முடியுமா? ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும்?” கெஞ்சலாக அவள் கேட்க, “ம்ம்” என்றான்.
அவள் கைப் பிடித்து அவளுக்கான சங்கிலியை போட்டு விட்டான். ரோஜா இருவரின் கரத்தையும் அருகருகே வைத்து அழகு பார்த்தாள்.
“வாவ்.” என்றாள். சிரித்தான் இளமாறன்.
ரோஜா எட்டி அலைபேசியை எடுத்து இருவரின் கரத்தையும் அப்படியே புகைப்படம் எடுத்தாள். “ஐ, ஆர்” ஒன்றையொன்று தொட்டு உரசிக் கொண்டிருந்தது.
“சசி அண்ணாகிட்ட தேங்க்ஸ் சொல்லணும்.” அவளின் கைச் சங்கிலியை வருடியபடி அவன் சொல்ல, “எதுக்கு?” என்ற ரோஜாவிற்கு அப்போதுதான் காரணமே புரிந்தது.
“இது நித்யாக்கா கொடுக்கல. உங்கம்மா நமக்கு கொடுத்தது. நீங்களும் இருக்கும் போது தானே கொடுத்தாங்க?” என்றவள், “நெக்லஸ் கூட கொடுத்தாங்க. பார்க்கறீங்களா?” என்று கேட்க, அவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.
“இளா..” ரோஜாவின் குரலில் கலைந்த இளமாறன் இணைந்திருந்த அவர்களின் கரங்களையும், அந்த கைச் சங்கிலியையும் வெறித்துப் பார்த்தான்.
“கோபமா?” அவள் மீண்டும் கேட்க கடுமையாக முறைத்தான். ஆனால், அந்தக் கைச் சங்கிலியை கழற்றவில்லை அவன்.
ரோஜா கேட்டுக் கொண்டபடி அடுத்து வந்த இரு நாட்களும் கூட அவன் அதை அணிந்தேயிருந்தான். மூன்றாம் நாள் ரோஜாவாக தான் அதை அவன் கையில் இருந்து கழற்றி எடுத்து பத்திரப்படுத்தினாள்.
ரோஜாவின் கரங்களில் நிரந்தரமாக தங்கி விட்டது அந்த நகை. மனைவியின் கரங்களை வருடும் போது அதையும் சேர்த்தே உணர்ந்தாலும் எதுவும் சொல்வதில்லை அவன்.
மறுநாள் காலையில் இளமாறன் படுக்கையில் இருந்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, ரோஜா அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“இளா எனக்கு லேட்டாச்சு. உங்களுக்கு டிஃபன் செய்ய நேரமில்ல. சாரி.” என்றாள்.
“நான் சட்னி அரைச்சு வச்சுட்டு போறேன். சூடா தோசை ஊத்திக்கறீங்களா?” புடவையை கட்டி முடித்து, தலைமுடியை மொத்தமாக அள்ளி கொண்டையிட்டபடி கேட்டாள்.
மெல்ல நகர்ந்து படுக்கை விளிம்புக்கு வந்து, குனிந்து மனைவியின் புடவையை சீர் செய்து விட்டான் அவன்.
“எனக்கு ப்ரேக்பாஸ்ட் வேணாம்”
“ஏன் இப்படி பண்றீங்க இளா? எனக்கு நேரமாச்சு. அதான் செய்ய முடியல. அதுக்காக சாப்பிடாம போவீங்களா? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணக் கூடாதா?”
“ப்ச், நான் ஹோட்டல் போய் சாப்பிட்டுக்கறேன்” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ரோஜா.
“நான் சமைச்சா தான் சாப்பிடுவீங்களா? ஒரு நாள், ஒரே ஒரு நாள் வீட்ல நீங்க சமைச்சா என்ன? அதுவும் சட்னி அரைச்சு வைக்கிறேன் சொல்றேன். ஒரு தோசை ஊத்தி சாப்பிட முடியாதா உங்களால? பேரு தான் பெரிய செஃப். ஆனா, வீட்ல சமைக்க கெஞ்சணும்” கோபத்தில் எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிந்தாள் ரோஜா.
“நீங்க ஏன் வீட்ல சமைக்க மாட்டேங்கறீங்க?” இடுப்பில் கை வைத்து கோபமாக அவள் கேட்க, “நான் வேலையை வீட்டுக்கு கொண்டு வர்றதில்ல மிஸஸ் இளமாறன்” என்று கண் சிமிட்டி சொன்னவன், எழுந்து குளியல் அறைக்குள் சென்று மறைந்தான்.
“என்னது?” என்று கத்திக் கொண்டிருந்தாள் ரோஜா.
“எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கிறார். கடவுளே.. இவரை..” புலம்பிக் கொண்டே அவசர அவசரமாக சமைத்தாள்.
அப்போதும் அவனுக்கு பிடித்ததாக தான் சமைத்தாள்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவு கலந்து, தேவையான உப்பும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி வைத்தாள். அதற்கு தேங்காய் சட்னி அரைத்து தாளித்தாள்.
இளமாறன் குளித்து தலையை துடைத்தபடி வெளியில் வர, அவன் கையில் சூடான கேழ்வரகு அடையும், தேங்காய் சட்னியும் கொடுத்தாள்.
உணவு என்று வந்து விட்டால் அவன் இளகி கொடுப்பதில்லை. ரோஜா கொடுத்ததை வாங்கி உண்ணத் தொடங்கினான்.
அவன் தட்டில் இன்னொரு அடையை வைத்து, “அம்மாப்பா ரெண்டு பேரும் இன்னைக்கு நித்திக்கா கூட பெங்களூர் போய்ட்டா, நான் அவங்க வர்ற வரைக்கும் பிஸியா இருப்பேன் இளா. நேத்து நீங்களும் சேர்ந்து தான் அப்பாவை நித்திக்கா வீட்டுக்கு போய்ட்டு வரச் சொன்னீங்க. இப்போ இப்படி அடம் பண்ணா, நான் எப்படி சமாளிப்பேன்? நான் ஒரு வாரம் கேன்டீன் சீக்கிரம் போற மாதிரி இருக்கும்…” என்று படபடத்தாள் ரோஜா.
“ரிலாக்ஸ் ரோஜா. எனக்கு மதியத்துக்கு மேல ஹோட்டல் போனா போதும். மாமா வர்ற வரைக்கும் டெய்லி உன் கூட நான் கேன்டீன் வர்றேன். ஓகே?” அவன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்து உள்ளே ஓடினாள்.
சமையல் அறையில் இருந்து திரும்பி வந்தவளின் கையில் இருந்த அடையை தானே எடுத்து தட்டில் வைத்து கொண்டான் இளமாறன்.
“அப்பவும் நீங்க சமைக்க மாட்டீங்க? அப்படித்தானே?” ரோஜா கடுப்புடன் கேட்க, “எனக்கு சமைச்சு போட என் பொண்டாட்டி இருக்காடி. நான் ஏன் ஹோட்டல் போய் சாப்பிடணும்” என்று வக்கணையாக பேசியபடி அடையை ருசித்து உண்டான்.
“ம்க்கும்” உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டு சமையல் அறைக்கு சென்றாள் ரோஜா.
அன்று மாலையே மூத்த மகளுடன் பெங்களூர் சென்று விட்டார்கள் சித்ரா, சிவஹரி தம்பதியினர்.
சித்ராவிற்கு பிள்ளை சுமக்கும் மகளை கூடவே வைத்து சீராட்ட கொள்ளை ஆசை. ஆனால், சிவஹரி தொழிலை விட்டு எங்கும் நகர்வதாக இல்லை.
மகள்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பெற்றோருடன் பேசி அவர்களை மருமகன்கள் துணையுடன் சம்மதிக்க வைத்திருந்தனர்.
அப்பாவை வேலை நேரத்தில் தேடினாலும் கூட ரோஜாவிற்கு அம்மா இல்லாமல் தான் எதுவுமே ஓடவில்லை.
சித்ராவிற்கு சென்னை, பெங்களூர் எல்லாம் பொருட்டே அல்ல. எங்கிருந்தாலும் அவர் மனம் மகள்களின் நலனை மட்டுமே யோசித்திருக்கும். அவரின் வழக்கமாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மகளை அழைத்து பேசி விடுவார் அவர்.
ஆனாலும், ரோஜாவின் மனம் பெற்றோரை அதிகமாக தேடியது.
இளமாறன் சொன்னது போலவே தினமும் அவளுடன் கேன்டீன் வந்து உதவினான்.
மறுநாள் அவளின் பெற்றோர்கள் பத்து நாட்கள் கழித்து சென்னை திரும்புவதாக இருந்தனர்.
“நீ கேட்ட சம்மர் ட்ரெஸ், மைசூர் சில்க் அப்புறம் கூர்க் காஃபி பொடி எல்லாம் வாங்கிட்டேன் ரோஸ் குட்டி. உன் செஃப்க்கு மாமா ஏதோ வாங்கி இருக்காங்க. அம்மா வேற உனக்காக பார்க்குறதை எல்லாம் வாங்கி குமிச்சுட்டு இருக்காங்க. உனக்கு வேற எதுவும் வேணுமா நீ சொல்லு?” நித்யாவிடம் பேசிக் கொண்டே வீட்டினுள் கணவனை தேடிக் கொண்டே நடந்தாள் ரோஜா.
“இதுவே போதும் கா.” என்ற ரோஜா, மற்றவை பேசி அழைப்பை துண்டித்தாள்.
“இளா..”
“இங்க இருக்கேன்” தோட்டத்தில் இருந்து குரல் கொடுத்தான்.
வீட்டு சுற்றுச் சுவரில் சாய்ந்து அமர்ந்து வானை வெறித்திருந்தான் இளமாறன்.
ரோஜா அவனுக்கு நெருக்கமாக சென்று அமர்ந்தாள்.
“காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை”
இளமாறன் அலைபேசியில் எஸ்பிபி இசைக்க, யேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் இளமாறன்.
அவனது இந்த பரிமாணம் அவளுக்கு புதிது. அந்தப் பாடலும், அதன் வரிகளும் மனதைத் தொட கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“அழுது புரண்டு நான் அலறிய ராத்திரிகளில் நிலா இருந்தது. சோறும் இருந்தது. ஊட்டத்தான் தாயில்லை”
என்று நா.முத்துக் குமாரின் வரிகளைச் சொன்னான் இளமாறன்.
அவன் குரல் திடமாக தான் இருந்தது. ஆனால், அவன் சொன்னதைக் கேட்டவளின் மனம் உடைந்தது.
“என் வாழ்க்கையை இந்த ரெண்டே வரிகள்ல அடக்கிடலாம் ரோஜா. என்கிட்ட வேற எதுவும் கேட்காத.”
“சாரி” ஏனோ அவளுக்கு கண்கள் கலங்கியது. அழுகையை அடக்கியதில் மூச்சுக் குழாயில் அவஸ்தையாக வலி அழுத்தியது.
“நீயெதுக்கு சாரி சொல்ற?” அவன் கேட்க,
“தெரியல.” என்றாள்.
“என் அம்மம்மா, டாக்டர் எல்லோரும் நடந்ததை அவங்கவங்க வெர்ஷனா உன்கிட்ட சொல்லியிருப்பாங்க தானே? ஏற்கனவே உனக்கு எல்லாமும் தெரியும்னும் போது, புதுசா நான் என்ன சொல்லிடுவேன்னு எதிர்பார்க்கிற ரோஜா?” அந்தக் கேள்விக்கு நிச்சயமாய் அவளிடம் பதிலில்லை.
“அவங்க சொல்லாத எதுவும் என் வாழ்க்கையில் நடக்கல ரோஜா. இன்னைக்கு அவங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை”
“கோபம் இல்லையா? அப்புறம் ஏன் அவங்களை அம்மான்னு சொல்ல மாட்டேங்கறீங்க இளா?”
“உறவுகள் உணர்வுபூர்வமானது ரோஜா.”
“…”
“உலகத்தின் எந்த மூலைக்கு நான் போனாலும், சுகந்தி டாக்டர் மகன் தான். ஆனா, அந்த உறவு எனக்கு அந்த உணர்வை கொடுக்கணும் இல்லையா?” அவன் பேச பேச ரோஜாவிற்கு அழுகை வரும் போலிருந்தது.
“அந்த உணர்வை கொடுக்க நீங்களும் வாய்ப்பு கொடுக்கணும் இல்ல இளா?”
“இன்னொரு வாய்ப்பு கொடுக்க இதென்ன வேலையா ரோஜா? இன்னொரு வாய்ப்புன்னு சொல்லும் போதே முதல் முறை அவங்க தவறிட்டாங்கன்னு அர்த்தம் ஆகுது தானே?”
“எஸ். அதை உங்கம்மாவே ஒத்துக்கறாங்களே இளா. அவங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு பண்ணது தப்புன்னா, இன்னைக்கு மனசு மாறி மன்னிப்பு கேட்கிற அவங்களை நீங்க உதாசீனம் பண்றதுக்கு பேர் கொடுமை இல்லையா?”
“ஆமா, நான் கொடுமைக்காரன் தான். என்ன இப்போ?”
“கோபப்படாதீங்க இளா, பிளீஸ்.”
“சஃபரிங் இஸ் வெரி பெர்சனல் ரோஜா. வலியும், வேதனையும் அதை அனுபவிக்கிறவனுக்கு மட்டும் தான் புரியும். என் வலியை என்னப் பண்ணாலும் உன்னால புரிஞ்சுக்க முடியாது ரோஜா. வாயும், வயிறும் மட்டுமில்ல. வலியும் வேற தான்” என்றான் விரக்தியாக.
“எனக்கு உங்க வலி புரியுது இளா. நான் கேட்கிறது எல்லாம் உங்க காயத்தை ஏன் இத்தனை வருஷமா தூக்கி சுமக்கறீங்கன்னு தான். லெட் கோ இளா, பிளீஸ். காயத்தை ஆற விடாம குத்தி கிளறி புண்ணாக்கிட்டே இருந்தா எப்படி சரியாகும்?”.
“காலத்துக்கும் ஆறாத காயங்கள் உண்டு ரோஜா.”
“நீங்க பண்றது விதாண்டவாதம். உங்க பாட்டி, தாத்தா, அப்பா எல்லோர்கிட்டயும் நல்லா பேசுற நீங்க வேணும்னு உங்கம்மாவை ஹர்ட் பண்றீங்க. மத்தவங்களை மன்னிக்க முடிந்த உங்களால, ஏன் உங்கம்மாவை மட்டும் மன்னிக்க முடியல?”
“ஏன்னா அவங்க ஏதோ ஒரு வகையில் என் கூட இருந்தாங்க. இவங்க இல்ல. உனக்கு புரியுதா? இல்லையா? புரியாட்டி தயவு செஞ்சு பேசாம இரு.” அதற்கு மேல் பொறுமையை கடைப்பிடிக்க முடியாமல் கத்தினான் இளமாறன்.
ரோஜா அந்தக் குரலில் ஒரு நொடி மிரண்டு, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“என்னடி வேணும் உனக்கு?” அவன் கோபமாக கத்த, இவனுக்கு தன்னிடம் இப்படியெல்லாம் கடினமாக பேச வருமா என்று பார்த்தாள்.
“நான் என்னப் பண்ணனும்னு எதிர்பார்க்கிற நீ?” முயன்று வருவித்த அமைதியுடன் அழுத்தமாய் கேட்டான்.
ரோஜா பதட்டத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
“எந்த உறவையும் வலுக்கட்டாயமா இழுத்துப் பிடிக்கவோ, சேர்த்து வைக்கவோ முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, உங்கம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க. அவங்களை அம்மான்னு கூப்பிடலாம் இல்ல இளா? பாசத்தை காட்ட தாய் தவறினா என்ன? தனயன் நீங்க சரி பண்ணலாம் இல்ல?”
“நான் ஏன் சரி பண்ணனும்னு நினைக்கிற ரோஜா? நான் மட்டும் ஏன் பண்ணனும்? என்னை வேணாம்னு தூக்கிப் போட்டவங்க, எனக்கும் வேணாம்” அவள் முகத்திற்கு நேராக குனிந்து கத்தினான்.
“இல்ல. வேணாம்னு…நீங்க பொய் சொல்றீங்க”
“என்னது? என்ன சொன்ன நீ?” அவளை விலக்கி தள்ளி விட்டு சடாரென எழுந்து நின்றான்.
அதீத கோபத்தில் அவன் உடலே இறுகிப் போக, “போடி” என்று கை வீசி கத்தி விட்டு வீட்டுக்குள் போனான் இளமாறன்.
ரோஜா அதிகம் பேசி விட்டோம் என்ற உறுத்தலுடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.