எந்தவொரு உறவிலும் வலிந்து அன்பை திணிப்பதால் வலிகள் மட்டுமே எஞ்சும்.
இளமாறன் வாழ்வில் ரோஜா வரும் வரை அவனுக்கு உறவுகளை வெறுத்த நிலைதான். அன்பை எதிர்பார்த்த இடத்தில் கிடைக்காத ஏக்கத்துடன் வெறுப்பு முகமூடி அணிந்து விலகியே நின்றான் அவன்.
மற்றவர்கள் அனைவரும் பாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு கூட்டில், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க, தான் மட்டுமே தனித்து விடப்பட்ட உணர்வில் தான் விலகி ஓடினான் அவன்.
தாத்தா, அம்மம்மா, அப்பா என அனைவர் மேலும் அவனுக்கு மனதின் ஆதங்கத்தை மீறிய அன்பு உண்டு. ஆனால், அம்மாவிடம் அவை எல்லாவற்றையும் தாண்டி அன்பை மட்டுமே எதிர்பார்த்தான்.
அவன் விலகி நின்ற காரணத்தினால் மட்டுமே அம்மாவுக்கு அவப் பெயர் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை. ஒருவேளை அவன் குடும்பத்துடன் இருந்திருந்தால், மருத்துவர் சுகந்தி திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றவர் என்ற பெயரே வெளியில் வந்திருக்காது. தெரிந்திருக்காது.
அவன் வாழ்க்கையில் குற்றம் சாட்ட வேண்டும் என்றால், நிறைய பேரை கைக் காட்டுவான். ஆனால், முதலில் அவனை நோக்கித் தான் அவன் விரல் நீளும். அந்த மனமுதிர்ச்சியும், பக்குவமும் அவனுக்கு இப்போது தான் வந்திருக்கிறது.
தனித்து தான் மட்டும் ஒட்டாமல் நிற்கும் தன் குடும்பத்தை தவிர்க்க வேண்டுமென்றே படிப்பு, பயிற்சி, வேலை என பல வருடங்களாக பல மாநிலங்களில் பதுங்கிக் கொண்டான். ஆனால், உள்ளுக்குள் பாசத்தின் ஏக்கம் நிறைந்தே இருந்தான்.
ஓர் சாலை விபத்தில் அனைத்தையும் மாற்றிப் போட்டாள் அவனின் ரோஜா. அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றினாள்.
அவள் விளையாட்டாக சொல்வது போல, அவளுக்கு பூர்வீகம் சொர்க்கம் தான் போலும். தேவதை வம்சம்.
அவனுக்கான அனைத்தையும் அவனுக்கு திருப்பித் தந்தவள், அவள் வந்தப் பிறகு தான் அவனிடம் எல்லா உறவுகளும் நெருக்கமானது.
அதுவரை தங்களின் அன்பை அவனிடம் சேர்ப்பிக்கும் வழி தெரியாமல் தத்தளித்த அவன் குடும்பம், ரோஜாவை அந்த வழியாக்கி கொண்டது.
ஆரம்பத்தில் அறியாமையால் அவனுக்கு பல வலிகளையும் அவர்கள் தந்தது என்னவோ நிஜம் தான். ஆனால், முடிவில் எல்லாம் சுபமே.
இப்பொழுது கஸ்தூரிக்கு மகளின் மீதான கோபம் அறவே இல்லாமல் போனது போல, சங்கரனுக்கு தன் கடந்த காலத்தின் தவறான முடிவுகளின் மேலான வருத்தம் குறைந்தது போல, சுகந்திக்கு மகனின் மீதான ஏக்கம் சற்றே மட்டுப்பட்டிருந்தது என்பது தான் உண்மை.
காலம் என்பது எல்லாவற்றுக்கும் அருமருந்து.
ஒரு விபத்து தான் இளமாறன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைத்தது.
அன்றைக்கு அவன் முகத்தை மடியில் ஏந்தி, “உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்று பதட்டத்துடன் அவனுக்கு ஆறுதல் சொன்ன ரோஜா, அவனின் ஆறுதலாகிப் போனாள்.
ரோஜா மட்டும் அவன் வாழ்வில் வந்திருக்கா விட்டால், இன்னமும் வெறுப்பையும், கசப்பையும் தூக்கி சுமந்து கொண்டே திரிந்திருப்பான்.
அன்று இதே சாலை முடிவில் தான் என் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நான் முக்கியமில்லை. என் மேல் அவர்களுக்கு அன்பில்லை என்ற எண்ணம் தந்த சோகத்துடன் தான் வண்டியோட்டி விபத்தில் சிக்கினான் அவன்.
ஆனால், இன்று அதே மருத்துவமனை முன்பு மனைவிக்காக காத்திருந்த இளமாறன் புதிய மனிதன். உறவுகள் அவனுக்கு தரும் பிடி பிரியத்தை பெரிதாக பார்க்க கற்றவன். இந்த வாழ்க்கைப் பாடம், அவன் வலிக்க கற்றது.
இதே மருத்துவமனைக்கு இரத்தக் காயத்துடன் வந்தவன், இப்போது மனக் காயமும் ஆறி நிற்கிறான். இந்த மருத்துவமனையோடு ரோஜாவிற்கு இருந்த தொடர்பு தான் அவனுக்கு குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதோ அவனை நோக்கி நடந்து வருகிறாள். ஏழு மாத வயிறை தள்ளிக் கொண்டு, அவனைச் சுற்றி இயங்கும் மொத்த உலகத்தையும் மங்கலாக்கி, அவனை மட்டுமே பார்த்து புன்னகைத்து வரும் அந்த கண்களில் தெரியும் அவனுக்கான காதல் எப்போதும் அவன் ஜீவனை உறைய வைக்கும்.
அவனின் பேரன்பின் தாகம், அவளின் விழிகளை பார்த்ததும் தீரும் அதிசயத்திற்கு என்ன பெயர் வைக்க?
இதோ இவளுக்காக, இவளின் அன்புக்காக மாறா விட்டால், அவன் என்ன மனிதன்? இந்த இளமாறன், ரோஜாவின் இளமாறன்.
அன்புத் தருமிடங்களில் மனம் மொத்தமாய் மண்டியிடுவதை தவிர்க்க இயலாது தானே?
“ஹலோ செஃப். ஏன் டல்லா இருக்கீங்க?” அவனென்றால் ரோஜாவுக்கு அதீத அன்பு தான். ஆனால், இப்படி தாய்மையில் தோய்ந்து வரும் இந்த குரல், அவனுக்குள் இருக்கும் இளமாறன் எனும் சிறுவனின் மனதை மயிலிறகால் வருடியது.
“ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? கேன்டீன் வந்திருக்கலாம் இல்ல? ஏன் இங்கேயே நிக்கறீங்க” கேட்டபடி அவன் அருகில் வந்து, பொது இடம் என்றும் பாராமல், அவனை நெருங்கி நின்றாள் ரோஜா.
ரோஜாவின் தலையில் கை வைத்து அழுத்தி, “உனக்காக வெயிட் பண்றதுக்கு தான் இந்த ஜென்மம் எடுத்திருக்கேன்” உருக்கமாக சொன்னான்.
“இளா.. எப்படி பேசுறீங்க பாருங்க” என்று கிண்டலாக சொல்லி, ரசித்து சிரித்த ரோஜா, வேகமாக தன் இரு கைகளையும் கொண்டு வயிறை மூடினாள்.
“என்னடி?”
“நீங்க இப்படி பேசுறதை கேட்டு என் பையன் கோபிச்சுக்க போறான்” கிளுக்கி சிரித்தபடி அவள் சொல்ல, இளநகை புரிந்தான் இளமாறன்.
“சாப்பிட்டீங்களா இளா?”
இல்லை என்று தலையசைத்தான்.
“அப்போ உள்ள வாங்களேன். அம்மா, இன்னைக்கு சின்ன வெங்காயம், பூண்டு போட்டு பச்சை மணத்தக்காளி வத்தக் குழம்பு கொண்டு வந்திருக்காங்க. அத்தை ஃப்ரெஷ் மாங்காய் தொக்கும், பிடி கருணை கிழங்கு பொடி மாஸும் எடுத்துட்டு வந்திருந்தாங்க. நான் சாப்பிட்டேன், ரொம்ப நல்லா இருந்தது. நீங்களும் வாங்க, சாப்பிடலாம். நீங்க இங்க வரை வந்துட்டு சாப்பிடாம போனா, அம்மா திட்டுவாங்க இளா” ரோஜா அவனை வற்புறுத்த,
“நீ வீட்டுக்கு வந்து ஏதாவது சிம்பிளா எனக்கு செஞ்சு கொடு. நான் சாப்பிட்டுக்கறேன்” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ரோஜா.
“பருப்பும், அப்பளமும் போதும்.” அவன் சொல்ல, “உங்களுக்கு இரக்கமே இல்லையா? இப்பவும் நான் தான் சமைக்கணுமா?” என்று மூச்சு வாங்க வசனம் பேசினாள் ரோஜா.
“அப்புறம் ஏன் சாப்பிடீங்களான்னு கேட்ட? சோறு போடுற ஐடியா இல்லனா எதுக்கு கேட்ட?” அவன் கோபம் போல குரல் உயர்த்தி கேட்க,
“மனசாட்சி இருக்கா உங்களுக்கு? இந்தா இருக்கு நம்ம கேன்டீன். ஒரு நிமிஷம் கூட ஆகாது. உள்ள போனா சுடசுட சோறு கிடைக்கும். ஆனா..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,
“ஆனா, எனக்கு என் ரோஜா தான் சமைக்கணும்” என்றான் இளமாறன்.
“நல்லா வக்கணையா பேசறீங்க செஃப்” என்று அவன் வயிற்றில் குத்தினாள்.
“ஆஆஆ” என்று கத்தியவன் சிரிக்க, தொற்று வியாதியாய் அவளையும் தொற்றியது அந்தச் சிரிப்பு.
“மாறா, வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” சுகந்தியின் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தார் அவர்.
“ஆமாத்த.” ரோஜா சொல்ல, “அப்போ உங்களோட நானும் வரவா? எனக்கு அடுத்து ஈவ்னிங் தான் பேஷண்ட்ஸ் பார்க்கணும்” என்று அவர் சொல்ல,
“வாங்க” என்று அழைத்தான் இளமாறன்.
மாற்றம் ஒன்று தான் நிரந்தரம் அல்லவா?
அவருக்காக மகன் காரின் முன் பக்க கதவை திறந்து விட புன்னகையுடன் ஏறி அமர்ந்தார் சுகந்தி.
ரோஜா பின் பக்கத்தில் அமர்ந்து பயண தூரம் முழுவதும் சலசலத்து கொண்டே வந்தாள். அவளோடு இணைந்து இளமாறனும் அம்மாவிடம் கதைப் பேசினான்.
ரோஜா அருகில் இருக்கும் போது மட்டுமே வெளிப்படும் மகனின் இந்த இதமான பக்கத்தை தன் இதயத்தில் நிறைத்து கொண்டார் சுகந்தி. துளி பொறாமை உணர்வு எழுந்ததை அவரால் தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும், மகனின் அன்பு இப்போது அவருக்கு புரிந்தது. வெறும் பெயரிலும், அழைப்பிலும் என்ன இருக்கிறது? அது வெளிப்படுத்தும் அன்பு தானே பிரதானம் என்பது காலம் கடந்தே அவருக்கு புரிந்தது.
மூவரும் வீடு வர, மருமகளை ஓய்வாக உட்கார வைத்து விட்டு மகனுக்காக அவரே சமைத்தார் சுகந்தி.
குளிர்சாதன பெட்டியில் வெண்டைக்காய், புடலங்காய் மட்டுமே இருக்க, தக்காளி ரசம், புடலங்காய் கூட்டு வைத்து, அப்பளம் பொரித்து வைத்தார். அவரே நின்று மகனுக்கு பரிமாற அமைதியாய் உண்டு முடித்தான் இளமாறன்.
அவர்கள் மூவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அம்மாவை அழைக்க வந்தாள் வெண்பா.
“ஹாய் அண்ணி” என்று நேராக ரோஜாவிடம் வந்தாள் அவள்.
பயிற்சி மருத்துவராக தன் பயிற்சியை அண்ணியிடம் தான் அதிகம் செய்தாள் அவள். கஸ்தூரி பாட்டி சொல்லிய கை வைத்தியங்களை எல்லாம் பொறுப்பாக செய்தாள் அவள்.
“அத்த, என்னை காப்பாத்துங்க” என்று ரோஜா போலியாக அலறினாலும், வெண்பாவை தடுத்ததில்லை.
ரோஜாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் கழுத்து, முதுகு, இடுப்பு என பிடித்து விட ஆரம்பித்தாள் வெண்பா.
“தேங்க்ஸ் வெண்பா” என்ற ரோஜா உடல் லேசானதில் கண் மூடிக் கொண்டாள்.
அரை மணி நேரம் சென்றிருக்கும், ரோஜாவிற்கு கண்கள் சொருகியது.
“நேரமாச்சு, நாம கிளம்பலாம் வெண்பா. நீ போய் ரெஸ்ட் எடு ரோஜா. நாங்க போய்ட்டு வர்றோம் மாறா” என்றபடி மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினார் சுகந்தி.
ரோஜா எட்டாம் மாத இறுதி வரையும் வேலைக்கு சென்றாள். இரு குடும்பத்தினரும் அவளைத் தடுக்கவில்லை.
அவள் மட்டும் தனியாக வீட்டில் அமர்ந்திருப்பதற்கு, மருத்துவமனை பணிச் சூழல் இன்னுமே பாதுகாப்பு என்று தான் இளமாறனும் நினைத்தான். ஆனால், அவள் சோர்வாக தெரிந்தால் வற்புறுத்தி வீட்டிலிருக்க வைத்து விடுவான் அவன்.
அன்றும் அப்படித்தான். ரோஜா சோர்வாக தெரிய, சில மணி நேரங்களுக்கு மட்டும் ஹோட்டல் சென்று வேலையை முடித்து விட்டு வீடு வந்து விட்டான் இளமாறன்.
இரவு உணவை முடித்து விட்டு தோட்டத்தில் இருவரும் காலாற நடந்துக் கொண்டிருந்தார்கள்.
எட்டு மாத வயிறுடன் ரோஜா சிரமப்பட்டு நடக்க, அவளைப் போலவே அடி மேல் அடி வைத்து நடந்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
“இளா பையனுக்கு பேர் யோசிச்சீங்களா?”
“பொண்ணு..”
“இல்ல, பையன்”
“பொண்ணு டி. எனக்கு பொண்ணு தான் பொறப்பா. அவளுக்கு நான்..” அவனை முடிக்க விடாமல், “ஓஹோ” என்றாள் ரோஜா.
“பத்து மாசம் சுமக்கிறது நான். பாவம் பார்த்து உங்களை பேர் செலக்ட் பண்ண சொன்னா, பொண்ணு பொண்ணு சொல்றீங்க?” இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றவளை ரசித்து பார்த்தான் இளமாறன்.
தலை முதல் கால் வரை அவளை ரசனையாய் வருடியது அவன் கண்கள். ரோஜா சற்றே எடை கூடி, மேடிட்ட வயிறுடன், நீண்ட கூந்தலை முன் பக்கமாக போட்டபடி நிற்க, அவன் மனம் தடுமாறி நின்றது.
மென்மையாய் அவளை இழுத்து அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டான்.
“இளா, போதும். வாங்க, தூங்க போகலாம்” என்று அவன் கைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள் ரோஜா.
அவள் ஏதேதோ கதை பேச, அவன் அசதியில் “ம்ம்” கொட்டியபடி உறக்கத்தில் அமிழ்ந்தான்.
தூக்கத்தில் மனைவியின் இடையில் கைப் போட்டவனை உலுக்கி எழுப்பினாள் ரோஜா.
“இளா.. இளா.. எழுந்திருங்க..”
“தூக்கம் வருது ரோஜா. பிளீஸ்”
“ப்ச், இளா…”
“கண்ணை மூடு ரோஜா. தூக்கம் தானா வரும்”
“வரலையே..”
“படுத்தாத ரோஜா. மனுஷனை நிம்மதியா தூங்க விடுறியா நீ?” புலம்பிக் கொண்டே எழுந்து அமர்ந்து அவளின் கால் பிடித்து விட்டான்.
“என்னை காய போட்டு கால் பிடிக்க விடுறியே. இது உனக்கே நல்லா இருக்கா?” அவன் கேள்வியில் ரோஜா கிளுக்கி சிரிக்க, “சிரி டி. நல்லா சிரி. இப்போ அடுத்தென்ன? எழுந்து நடக்க போற, அப்படித்தானே?” அவன் சந்தேகமாக கேட்க,
“இல்ல. ஏதாவது ஸ்வீட்டா சாப்பிடணும் போல இருக்கு இளா” என்று சிணுங்கினாள் ரோஜா.
அவளின் கர்ப்பம் உறுதி செய்த நாளில் இருந்து இது தான் நடக்கிறது. பல நாட்கள் அவள் நடுஇரவில் கணவனை எழுப்பி, “பசிக்கிறது” என்பதும், “காரமா சாப்பிடணும் போல இருக்கு. கேக் வேணும், ஐஸ் கிரீம் வேணும்” என்பதும் அவளின் வாடிக்கையாகி இருந்தது.
அவனும் நேரத்தை பார்க்காமல் அவள் கேட்டதை வீட்டில் செய்து கொடுத்து விடுவான். அவனால் செய்ய முடியாததை வெளியில் சென்று வாங்கி வந்தாவது கொடுத்து விடுவான். இல்லையென்றால் அவளை சமாளிக்க முடியாது.
இப்போது அவன் நிமிர்ந்து மனைவியை பார்க்க, “டோனட்ஸ் வேணும்” என்றாள் ரோஜா.
இளமாறன் நேரத்தை பார்த்தான். பனிரெண்டு முப்பது என்றது அலைபேசி.
சன்ன சிரிப்புடன், “எழுந்து வா, செஞ்சு தர்றேன்” என்று அவளின் கைப் பிடித்து படுக்கையில் இருந்து கவனமாக எழுப்பி, சமையலறை கூட்டிச் சென்றான்.
அவளுக்கு அங்கே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர செய்து, அவன் வேலையில் இறங்கினான்.
கணவன் தனக்காக சமைக்கிறான் என்பதே மிகுந்த ஆனந்தத்தை தர, ஒட்டு மொத்த பற்களையும் காட்டி புன்னகைத்தபடி அமர்ந்திருந்தாள் ரோஜா. ஆனால், அவனோ சமையல் மேடை ஓரத்தில் இருந்த கூடையை திறந்து எதையோ எடுத்து, மைக்ரோவேவ் அவனில் சூடு செய்து, தட்டில் எடுத்து வைத்தான்.
ரோஜா மெல்ல எட்டிப் பார்க்க, கத்தியை எடுத்து வெட்டி, அதில் எதையோ நிரப்பி அவளிடம் நீட்டினான்.
“ஐயோ, எனக்கு வேணாம். இது செல்லாது இளா. நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கு கடையில் வாங்கினது வேணாம். எனக்கு நீங்க செஞ்சது தான் வேணும்” அடமாக அடித்து அவள் சொல்ல,
“அடி வாங்க போற. இதுவும் நான் செஞ்சது தான். நம்ம ரெஸ்டாரண்ட்டுக்கு பண்ணது. இன்னைக்கு காலைல ஒரு பேட்ச் சூடா பண்ணதும் உனக்கு எடுத்துட்டு வந்தேன். இதைப் பார்த்தும் சாப்பிடணும் சொல்லுவன்னு தான் உனக்குத் தெரியாம இங்க கொண்டு வந்து வச்சேன். இப்போ வாய் பேசாம, சாப்பிடு” என்று அவன் அதட்டவும், அவனை முறைத்துக் கொண்டே கையில் இருந்ததை பார்த்தாள்.
“பம்பலோனி (Bomboloni)” என்று அவள் முணுமுணுக்க,
“ம்ம், அதே தான்” என்றான் அவன்.
“இந்நேரம் இதை சாப்பிட்டா டைஜஸ்ட் ஆகுமா செஃப்? அப்புறம் நாளைக்கு அத்தையும், அம்மாவும் திட்டப் போறாங்க” அவள் தட்டை பார்த்தபடி கவலையுடன் கேட்க,
“ஒன்னு தானே சாப்பிட போற? ஒன்னும் ஆகாது. சாப்பிட்டு ஓமம் போட்டு சுடுத் தண்ணி குடி” என்றவன் வெந்நீர் வைக்க, ரோஜா இத்தாலிய டோனட்டான பம்பலோனியை ரசித்து ருசிக்கத் தொடங்கினாள்.
அவள் உண்டு முடித்ததும் குடிக்க வெந்நீரும், ஓமமும் கொடுத்தான் இளமாறன்.
அதன் பின்னர் எங்கே அவர்கள் தூங்க? மனைவியுடன் வீட்டை அளந்து, கதை பேசி, சிரித்து, இரவு நெடுநேரம் கழித்து அவள் மடியில் படுத்து இளமாறன் உறங்கி விட, அதன் பின்னரே கட்டிலில் சாய்ந்தமர்ந்து ரோஜாவும் உறங்கினாள்.
சிறிது நேரத்தில் கண் விழித்து மனைவியை நேராக படுக்க வைத்தான் இளமாறன்.