ரோஜாவிற்கு ஒன்பதாம் மாதம் பிறக்கையில் அதற்காகவே காத்திருந்த சித்ரா, வெகு விமர்சையாக மகளுக்கு வளைகாப்பு நடத்தினார்.
இளமாறனின் மொத்த குடும்பமும் அவர்களோடு இருந்தது. அவரவர் ஆசைப்படி, வசதிப்படி அவளுக்கு தங்க வளையல்களை பரிசளித்தனர்.
வளைகாப்பு முடிந்து சிறிது நேரம் ஓய்வாக அமர அறைக்கு வந்தாள் ரோஜா.
இன்னும் பத்தே நிமிடங்களில் அவன் முகம் பாராமல் பெற்றோருடன் வீடு சென்று விடுவாள் மனைவி என்பது இளமாறனை கலங்க வைத்தது.
அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“இளா, நான் இங்க பக்கத்துலயே தான் இருக்கப் போறேன். நீங்க நினைச்ச நேரம் அங்க வரப் போறீங்க. அப்புறம் என்ன?” என்று அவனை சமாதானப்படுத்தினாள் ரோஜா.
திருமணமான நாளில் இருந்து முதல் முறையாக மனைவியை பிரியப் போகிறான் அவன்.
இதுநாள் வரை அன்றில்கள் போல என்றுமே பிரிந்ததில்லை அவர்கள்.
ரோஜா அம்மா வீடு சென்றாலும், அவளோடு சென்று விடுவான் இளமாறன்.
முன்னரே அவனது மனநிலை அறிந்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா, ரோஜா கூட நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை” என்று தயக்கத்துடன் மருமகனை அழைத்திருந்தார் சிவஹரி.
அப்போது பதில் சொல்லாதவன், இந்த நொடி மனைவியை பிரிய முடியாமல் முடிவு செய்து விட்டான் அவன். மாமனாரிடம் சம்மதம் சொல்லி மனைவியின் வீட்டோடு சென்று விட்டான்.
சிவஹரி மகளுக்காக வாங்கிய வீடு தற்போது தயாராகி இருந்தது. அதனால், மகளின் வாடகை வீட்டை நிரந்தரமாக காலி செய்து இங்கு வரச் சொல்லி விட்டார் அவர்.
ரோஜாவின் பிரசவம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதங்கள் கழிந்த பிறகு, குழந்தையுடன் அவர்கள் நேராக புது வீட்டுக்கு செல்லலாம் என அவர் சொல்ல, சரியென்றான் இளமாறன்.
அவன் பெற்றோர்களும் எதற்கும் கருத்தோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.
அவர்களின் விருப்பம், அவர்களின் முடிவு, அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள் அவர்கள்.
மகள் தங்கள் வீட்டுக்கு வந்ததும் தான் சித்ரா நிம்மதியாக உறங்கினார் என்றே சொல்லலாம்.
மகளுக்காக கீழ் தளத்தில் ஓர் அறையை சுத்தம் செய்து ஒதுக்கி தயாராக வைத்திருந்தார். ரோஜா, இளமாறன் அந்த அறையை தான் பயன்படுத்தினார்கள்.
சித்ரா கணவருடன் உணவகம் செல்வதையும் நிறுத்தி விட்டார். மகளையும் செல்ல அனுமதிக்கவில்லை அவர்.
ரோஜாவிற்கு பிரசவ தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களே இருந்த நிலையில் ஒரு மழை நாளின் இரவில், கணவனை மெல்ல எழுப்பினாள் ரோஜா.
“ரோஜா, என்ன பண்ணுது? வலிக்குதா?” நொடியில் உறக்கத்தை விரட்டி, பதறினான் இளமாறன்.
அவனுக்கான பதிலை ரோஜாவின் முகமே சொன்னது. அவன் தோளை அழுத்தி பிடித்தாள் அவள்.
பலமுறை அவனிடம் இது பற்றி பேசியிருந்தார் சுகந்தி. ரோஜாவிற்கு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும், வலி வரும் இடைவெளியை குறித்துக் கொள்ள வேண்டும், பதற கூடாது என்றெல்லாம் அவர் அறிவுரை சொல்லியிருக்க, அந்த நிமிடம் அனைத்தும் மறந்து அவன் மனம் நிர்மலமான உணர்வு.
ரோஜா மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.
“ரொம்ப வலிக்குதா ரோஜா?” மனைவியின் வியர்த்த முகம் பார்த்து பயந்து அவன் கேட்க, “இப்போ ஓகே. ஆனா, திரும்ப வலி வரும் போல. இல்லன்னா, ஃபால்ஸ் பெயினா கூட இருக்கலாம். அத்தைக்கு கால் பண்ணுங்க” வலியில் முகம் சுருக்கியபடி அவள் பேச, அவனுக்கு அப்போது தான் மண்டையில் மணி அடித்தது.
அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து சுகந்திக்கு அழைத்தான்.
அவனது அழைப்பை உடனே ஏற்று, “மாறா, ரோஜா எப்படியிருக்கா?” என்று தான் கேட்டார் அவர்.
“அத்த…” என்று பின்னிருந்து ரோஜா கத்த, “மாறா, உடனே ஹாஸ்பிடல் கிளம்பி வாங்க. நான் ரெடியா இருக்கேன்” என்று அதிகம் பேசாமல் அழைப்பை துண்டித்தார் அவர்.
சென்னையை இரக்கமின்றி மழை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.
அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இளமாறன் அறைக் கதவை திறக்க, பக்கத்து அறையில் இருந்த சித்ரா மகளின் பேச்சு சத்தத்தில் எழுந்து வெளியில் வந்து நின்றிருந்தார்.
ரோஜாவின் பெற்றோர் உதவியுடன் அந்த மழை நாளின் இரவில் மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்றான் இளமாறன்.
கனமழை காரணமாக மெதுவாக தான் காரை செலுத்தினான். அவர்கள் கார் மருத்துவமனையை அடையும் போது அங்கே அவர்களுக்காக சுகந்தி, வெண்பா மற்றும் சங்கரனுடன் காத்திருந்தார். வினோத் தான் அவர்களை அழைத்து வந்திருந்தான்.
ரோஜாவிற்கு அடுத்து வலி வரும் முன் பிரசவ அறையில் இருந்தாள் அவள்.
அப்போது நள்ளிரவு ஒரு மணி. ஆனால், அதிகாலை நான்கு மணியாகியும் கூட ரோஜா கதறிக் கொண்டே இருந்தாலே ஒழிய குழந்தை வெளியில் வந்த பாடில்லை.
அம்மாவின் அனுமதியுடன் ரோஜாவின் கைப் பிடித்தபடி பிரசவ அறையில் இருந்த இளமாறனின் கைகளை போராடி களைத்த சோர்வில் பற்றினாள் ரோஜா.
“என்னால முடியல இளா” என்று அவள் அழுகுரலில் சொல்ல, அவனுக்கு கண்கள் கலங்கியது.
“ஆபரேஷன் பண்ண சொல்லவா ரோஜா? உனக்கு சிசேரியன் ஓகே வா?” அவன் அக்கறையுடன், அவளின் முகம் நோக்கி குனிந்து கேட்க, “ம்ம்” என்றாள் ரோஜா.
அந்நேரம் அவர்கள் பேச்சை கேட்டபடி அறைக்குள் வந்த சுகந்தி, “மாறா, வெளில போய் நில்லு” என்று மகனை அதட்டினார். அவன் தயக்கத்துடன் மனைவியை திரும்பி திரும்பி பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினான்.
மேலும் அரை மணி நேரம் அவனுக்கு உணர்வு போராட்டமாக கழிய, பிரசவ அறையில் இருந்து தலையை வெளியில் நீட்டி, “அண்ணா, உள்ள வாங்க” என்றாள் வெண்பா.
அவன் உள்ளே சென்ற நொடி, ரோஜா கதறி கண் மூடினாள்.
அந்த அதிகாலை பொழுதில் அந்த மருத்துவமனை அறையை தன் அழுகையால் நிறைத்தபடி பிறந்தாள், இளமாறனின் மகள்.
“மாறா, பெண் குழந்தை. ரோஜா, இங்க பாரு குட்டியை” சுகந்தியின் குரல் நெகிழ்ந்து, உடைந்து வந்தது.
அறையின் ஓரமாக மிரட்சியுடன் ஒதுங்கி நின்றிருந்த இளமாறன், மெல்ல முன்னே சென்றான்.
சுகந்தி குழந்தையை தூக்கி அவனிடம் காண்பித்தார்.
அவனுக்கு உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்கி, பேச்சு மறந்து போய் இருந்தது. சட்டென ரோஜாவை திரும்பிப் பார்த்தான்.
“பொண்ணு” என்று சிரமப்பட்ட புன்னகையுடன், கண்கள் ஒளிர கணவனைப் பார்த்து முணுமுணுத்து புன்னகைத்தாள் ரோஜா.
சுகந்தி குழந்தையை செவிலியிடம் கொடுக்கும் முன் ஒற்றை விரல் நீட்டி தொட்டுப் பார்த்தான் இளமாறன்.
தொட்ட விரல் நுனி மட்டுமல்லாது அவனது ஒட்டு மொத்த உடலும் சிலிர்த்தது. அந்த நிமிடம் முதல் அவனின் மொத்த உலகமுமானாள் அவள்.
ஆதினி.
அவனின் முதலானவள், தொடக்கமானவள். அவனுக்கு அப்பா என்னும் தொடக்கத்தை தந்து அவன் வாழ்வில் முதலானவளாய் ஒற்றை பார்வையிலே மாறிப் போனவள்.
அவன் வாழ்வில் ரோஜாவை யாராலும் மறக்க செய்ய முடியாது என்ற அவனின் கர்வத்தை உடைத்தெறிந்தவள்.
அங்கே ஆதினி மட்டுமல்ல, அவளோடு இளமாறனும் புதிதாக பிறந்து வளர்ந்தான்.
அவளோடு ஒவ்வொரு அடியையும் சேர்ந்தே எடுத்து வைத்தான்.
அவன் ரோஜாவை நெஞ்சு நிறைய நேசிக்க காரணமாகி போனாள் ஆதினி.
ஆதினி இரண்டு வீட்டினருக்கும் அனைத்துமாகி போனாள்.
நித்யா தன் மகளை போலவே தங்கை மகளிடமும் அதிக பாசம் வைத்திருந்தாள், அதனால் அவளைக் காண அடிக்கடி சென்னை வந்து விடுவாள்.
மித்ரனுக்கு தன் தங்கை மிருதுளாவை போலவே இருக்கும் சித்தியின் மகளை அதிகம் பிடித்தது. அவனது பிடிவாதத்திற்காகவே ஆதினியை காண சென்னை வந்தார்கள் அவர்கள். இல்லையென்றாலும் ரோஜாவை பார்க்காமல் நித்யாவால் இருக்கவும் முடியாது. ரோஜா, அவளின் தங்கை மட்டுமே அல்லவே. அது புரிந்து சசிகுமாரும் குடும்பத்தை அழைத்து வந்தான்.
சுகந்தி, சங்கரன் விரும்பிய நேரமெல்லாம் குழந்தையை வந்து பார்த்தார்கள். வினோத், வெண்பா அவளுக்கு விளையாட்டு பொருட்களாக வாங்கி குவித்தார்கள்.
பேரனின் மகளை தங்களின் கொள்ளு பேத்தியை கொண்டாடி கொஞ்சி தீர்த்தார்கள் சுவாமி நாதன், கஸ்தூரி தம்பதியினர்.
ரோஜாவும், இளமாறனும் முதல் முறையாக அவர்கள் வீடு சென்று குழந்தையுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள்.
ஆதினியை பார்த்துக் கொள்வதில் கஸ்தூரி, சுகந்தி இருவருக்கும் ஒரே போட்டியும், தகராறும் தான்.
“அம்மா இதெல்லாம் குழந்தைக்கு கொடுக்க கூடாது மா. அவளுக்கு சேராது” என்று கை வைத்தியம் பார்க்கும் அம்மாவை எச்சரித்து அதட்டுவார் சுகந்தி.
“உன்னையே நான் தான் வளர்த்தேன். என் கொள்ளு பேத்தியை எனக்கு வளர்க்க தெரியாதா? அவளுக்கு எது கொடுக்கணும், எது கொடுக்கக் கூடாதுனு எனக்குத் தெரியாதா? நீ டாக்டர் தான். ஆனா, உங்க இங்கிலீஷ் மருந்து எல்லா நேரமும் வேலை செய்யாது. அதுனால நீ பேசாம இரு” என மகளின் வாயை அடைப்பார் கஸ்தூரி.
ரோஜா அனைத்தையும் ஒதுங்கி நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்ப்பாள்.
ஆனால், இளமாறனால் அப்படியிருக்க முடியாது.
“என் செல்லத்தை இப்படி குடுத்துட்டு நீங்க சண்டை போடுங்க” என்று மகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் போவான் அவன்.
அவர்களின் உலகம் அலாதியானது. அன்பால் நிறைந்தது. ஆதினி அப்பா பெண்.
“ஹலோ மிஸ்டர் செஃப்” என்று சீண்டலாக அழைத்து, “என்னை கண்ணு தெரியுதா?” என்று பொய் கோபத்துடன் அவனிடம் மல்லுக்கு நிற்பாள் ரோஜா.
“இரு வர்றேன்” மகளை மாமியாரிடம் கொடுத்து விட்டு வந்து மனைவியை இழுத்து அணைத்துக் கொள்வான்.
“என் கண்ணுக்கு உன்னை தெரியாம இருக்குமா டி? என் ரோஜா, அப்படியே பன்னீர் ரோஜா மாதிரி கும்முனு வாசமா இருக்க. என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ. தெரியுமா?” என்றபடி அவளை உச்சி முகர்வான். முத்தத்தில் தொடங்கி மொத்தமாய் அவளை நிறைப்பான்.
மகளும், மனைவியும் அவனுக்கு நிறைவான வாழ்வை நிரந்தரமாக தந்தார்கள்.
இப்பொழுது அவர்களின் புது வீடு முழுமையாக தயாராகியிருக்க, ஆதினிக்கு ஆறு மாதமாகையில் புது வீட்டிற்கு குடும்பமாக குடி பெயர்ந்தார்கள்.
சுகந்தி, சங்கரன் இருவரும் மகனின் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.
அத்தோடு தங்களின் சொத்தின் ஒரு பகுதியை பேத்திக்கு எழுதி வைத்தார்கள். அந்த விஷயத்தில் இளமாறனால் அவர்களை தடுக்க முடியவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கள் பரம்பரை வீட்டை அவனுக்கு எழுதி வைக்கும் போதும், மருத்துவமனை நிர்வாக பொறுப்பின் பதவியை பெற்றோர் அவனுக்கு கொடுக்கும் போது பெற்றோருடன் வாக்குவாதம் செய்து, வேண்டாம் என்று சண்டையிட்டிருக்கிறான் அவன்.
அதிலும் சுகந்தியிடம் தன் கோபம் முழுதையையும் வார்த்தைகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறான்.
ரோஜா அவனை காண நேர்ந்த பொழுகள் அவை என அவன் அறியான். அந்த காரணங்களை அவளும் அறியாள். ஆனால், இன்று முறையாக அவர்களின் வாரிசை வந்தடைந்தது அவன் பெற்றோரின் சொத்து.
அவனால் மறுக்க முடியவில்லை. பெற்றோரை மேலும் காயப்படுத்த விரும்பவில்லை அவன்.
சிவஹரி சொன்னது போல, அவர்களின் உழைப்பை அவனால் உதாசீனம் செய்ய முடியாது, பெற்றோரை அவர்களின் போக்கில் செல்ல விட்டான்.
அவர்கள் மூவராக புது வீட்டில் குடும்பமாய் வாழ்க்கையை வாழ தொடங்கினார்கள். இளமாறனின் சொந்த உணவகத்திற்கு மிக அருகிலேயே வீடு இருந்தது அவனது வேலையை எளிதாக்கியது.
பல மாதங்களுக்கு பின்னர், இரண்டு குடும்பங்களும் இல்லாமல் நிறைந்த தனிமை அவர்களுக்கு வாய்த்தது.
தங்களுக்கு இடையில் குழந்தையை கிடத்தி நிர்மலமான மனதுடன், நிம்மதியாக உறங்கினார்கள்.
ரோஜா குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை வீட்டில் இருக்கும் முடிவில் இருந்தாள். அவள் முடிவை ஆதரித்தான் இளமாறன்.
ஆயிற்று, அவர்கள் புது வீடு வந்து ஒரு மாத காலம்.
ஆதினிக்கு ஏழாம் மாதம் பிறந்திருக்க, தவழ தொடங்கினாள் அவள்.
அந்த காலை பொழுதில் பரபரப்பாக சமையல் அறையில் காலை உணவை சமைத்து கொண்டிருந்தாள் ரோஜா.
மகள் பசித்து அழும் முன் வேலையை முடித்து விடும் அவசரத்தில் இருந்தாள்.
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார், புதினா சட்னி அரைத்து, அதை பாத்திரங்களுக்கு மாற்றி அவள் நிமிர்கையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இங்கே ரோஜாவின் மார்பும் கனக்க, வேகமாக கைகளை கழுவி, உடை மாற்ற ஓடினாள்.
“இளா, ஒரே ஒரு நிமிஷம் அவளைப் பிடிங்க. ட்ரெஸ் ஈரமா இருக்கு. மாத்திட்டு வந்திடுறேன்” கத்தினாள்.
“ம்ம், பொறுமையா வா” என்று மனைவிக்கு பதில் சொன்ன இளமாறனின் கண்கள் மகளின் மேலிருந்தது.
ஆதினி விழித்து வெகுநேரமாகி இருக்க பிள்ளை பசியில் உதடு பிதுக்கி சத்தமாக அழுதாள்.
“ரோஜா..” இளமாறன் குரல் கொடுக்க,
“வர்றேன்..” என்று கத்திக் கொண்டே உடையை சரிப்படுத்தி கொண்டு வந்த ரோஜாவின் காதில் அந்த அழைப்பு விழுந்தது.
“அம்மா…” யார் அழைத்தது?
ஆதினி முதலில் அழைக்க, அவளைத் தொடர்ந்து, “என் செல்லக் குட்டியம்மா” என்றான் இளமாறன்.
ரோஜா அப்படியே உறைந்து நின்றாள். அம்மா என்ற வார்த்தையை இளமாறன் சொல்ல முதல் முறையாக கேட்கிறாள். ஒரு பேச்சுக்காக கூட அந்த வார்த்தையை அவன் சொன்னதில்லை.
ஆதினியும், “ம்மா” என்பாளே தவிர, இப்படி அழுத்தமாக, “அம்மா” என்று இதுவரை உச்சரித்தது இல்லை.
“அ..ம்மா” ஆதினி வீரிட, “என் செல்லக் குட்டி அம்மாக்கு என்ன வேணுமாம்? ஏன் அழுறீங்க?” என்று மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் இளமாறன்.
“ரோஜாம்மா வேணுமா உங்களுக்கு?” என்று அவன் கேட்க, ரோஜா அலங்க மலங்க விழித்து, பின் சுதாரித்து தன் அலைபேசியை தேடி எடுத்து அத்தையை அழைத்தாள்.
“சொல்லு ரோஜா” என்று அந்தப் பக்கம் சுகந்தி பேச,
இங்கே, “என் செல்லத்தோட அம்மாவை காணோமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் இளமாறன்.
“வீட்டுக்கு வாங்க அத்த” என்று சுகந்தியிடம் சொன்னாள் ரோஜா.
“ம்ம்” என்றார் அவர். அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
பின்னணியில், “அம்மா” என்றாள் ஆதினி.
“ரோஜாம்மா, என் செல்லக் குட்டி அம்மா, வாங்க. செல்லத்துக்கு பசிக்குதாம்” இளமாறன் மகளை செல்லம் கொஞ்சி சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
சுகந்தி சமாதானமாகி அலைபேசி அழைப்பை துண்டித்தார்.
“ரோஜாம்மா” திரும்பி மனைவியை பார்த்து இளமாறன் அழைக்க, ஓடிச் சென்று மகளோடு சேர்த்து அவனை அணைத்துக் கொண்டாள் ரோஜா.
இளமாறனின் கரங்கள் தாமாக விரிந்து மனைவி, மகளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது.
“அம்மா…” மீண்டும் அழைத்தாள் ஆதினி, அவனின் தொடக்கத்தை தொடர்ந்தான் இளமாறன்.