“அம்மா, ஐயோ சொல்லக் கூடாது சொல்லியிருக்காங்க இல்ல?” கண்ணை உருட்டி, மிரட்டி அவன் கேட்க, “சா…ரி” என்று தன் பால் பற்களை காட்டி சிரித்து மயக்கினாள் குழந்தை.
அந்தச் சிரிப்பை பார்த்த பின் மன்னிக்காமல் இருக்க முடியுமா? மகளை கையில் அள்ளி முத்தமிட்டு மீண்டும் படுக்கையில் நிற்க வைத்தான் அவளின் அப்பா.
“குட்டிம்மா, அசையாம நேரா நில்லுங்க. அப்பா தலை பின்னிடுறேன்”
“சரிப்பா” சமத்தாய் சொன்னாள் குழந்தை.
அவளின் முதுகை நிறைத்த நீள முடியை கோதி பிரிக்கத் தொடங்கினான்.
“அப்பா..”
“என்ன குட்டிம்மா?”
“அம்மா, நானு ஒரே ட்ரெஸ்.”
“ஆமாடா குட்டிம்மா. என் அழகு தேவதைங்க, நீங்க ரெண்டு பேரும் ஒரே போல ட்ரெஸ்” அன்பில் தோய்ந்து ஈரமாய் வந்தது அவன் வார்த்தைகள். மகளின் கன்னத்தையும் மென்மையாய் ஈரமாக்கினான் அவன்.
“நீங்க மட்டும் ஏன் சேம் ட்ரெஸ் இல்ல?” மெல்ல திரும்பி இடையில் கை வைத்து கேட்ட அந்த சின்ன உருவம், அவன் மனதை மொத்தமாக கொள்ளை கொண்டாள்.
மகளின் கேள்வியில் இருந்த அப்பாவித்தனம் அந்த அப்பாவிற்கு சிரிப்பை தந்தது. அவன் சத்தமாக சிரிக்கவும், மகளும் கிளுக்கி சிரித்தாள்.
உலகின் மொத்த அன்பும் அவன் கண்களில் வழிய, மகளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.
“குட்டிம்மாவும், ரோஜாம்மாவும் எல்லோ கலர் பட்டு போட்டிருக்காங்க. அப்பா, பட்டு வேட்டி. ஆனா, குட்டிம்மா ட்ரெஸுக்கு மேட்ச்சா எல்லோ ஷர்ட் போட்டிருக்கேன், பாருங்க. சோ, அப்பாவும், பாப்பாவும் சேம், சேம்” என்று இருவரின் உடையையும் ஒன்றாக இழுத்து அவன் காண்பிக்க,
“ஆமாப்பா” என்று அதிசயித்த குழந்தை, “எல்லோ, எல்லோ டர்டி பெல்லோ” என்று சொல்லி இரு கரங்களாலும் வாய் மூடி சிரிக்கத் தொடங்கினாள்.
குழந்தையோடு சேர்ந்து அவனும் சிரிக்க, அவர்களை கலைத்தது அந்த குரல்.
“இளா, இளா, இங்க வாங்களேன்” மனைவியின் குரலில் அவன் முகம் மென்மையாக, “அம்மா கூப்பிடுறாங்க பாப்பா. வா, போவோம்” என்றான் மகளிடம். சரியென்று தலையசைத்து அவன் கைப் பிடித்து நடந்தாள் மூன்றரை வயது ஆதினி.
அவர்கள் இருவரும் பக்கத்து அறைக்கு வர, அங்கே பட்டுச் சேலையை கட்டத் திணறிக் கொண்டிருந்த ரோஜா, அவர்களைப் பார்த்ததும் சோர்ந்து படுக்கையில் அமர்ந்தாள்.
ரோஜாவை கண்டதும், “அம்மா..” என்று ஓடி வந்து அவள் வயிற்றில் முகம் புதைத்தாள் ஆதினி.
மகளை கொஞ்சி, முத்தமிட்டு, “ஆதினி செல்லம், பெரியம்மாகிட்ட போங்க. அம்மா சேலையை கட்டிட்டு இப்போ வந்திடுவேன்” ரோஜா சொல்லவும், திரும்பி அப்பாவை பார்த்தாள் மகள்.
அவன் கண்ணால் அனுமதி கொடுக்கவும், அவனிடம் வந்தாள்.
மகளை அழைத்துச் சென்று அவளின் பாட்டி சித்ராவிடம் விட்டுவிட்டு அவன் அறைக்குள் வருவதற்குள், “இளா, இளா” என்று அவன் பெயரை ஏலம் விட்டாள் அவன் மனைவி.
“இருக்கேன் டி, இங்க தான் இருக்கேன்” அறையின் கதவை சாத்தி விட்டு வந்து மனைவியை அணைத்தான்.
“இளா, சேலை கசங்குது” அவள் சிணுங்க, “ம்ம்” என்றவனின் கரங்கள் மனைவியின் மேடிட்ட வயிற்றை மென்மையாய் வருடியது.
அவன் தொடுகை உணர்ந்து குழந்தை அசைய, அந்த உணர்வில் உடல் சிலிர்க்க கண் மூடினான்.
“இளா..” பொறுமை காற்றில் கரைய கடுப்புடன் அழைத்தாள் ரோஜா.
“இருக்கேன் ரோஜா” மென்மையாய் உச்சரித்து அதே மென்மையுடன் மனைவியின் உதடுகளை ஈரமாக்கினான்.
“நான் இப்பதான் உங்க கண்ணுக்கு தெரியறேனா?” அவள் கோபிக்கவும், சிரித்தான் இளமாறன்.
“எப்பவும் மகளையே கவனிங்க, என்ன?” என்று முறைத்து,
“அவளுக்கு நித்திக்கா தலை பின்னி விடுறேன் சொன்னா. அக்காகிட்ட விடாம நீங்க ஏன் உங்க பொண்ணு கூட மல்லுக்கட்டிட்டு இருக்கீங்க?” ரோஜா கேட்க, பதிலுக்கு அவளை முறைத்தான் இளமாறன்.
“சரி, சரி. எனக்கு சேலை கட்ட ஹெல்ப் பண்ணுங்க. என்னால குனிஞ்சு பிளீட்ஸ் எடுக்க முடியல. எல்லாம் உங்களால தான்” அவள் புகார் போல சொல்ல, “ஆமா, நீ ஒன்னுமே பண்ணல” என்று சாதாரணமாக சொல்லி அவளை வெட்கப்பட வைத்து, அவள் சொன்ன வேலையை செய்தான் அவன்.
“சீக்கிரம் இளா, லேட்டாகுது. அத்தை நம்மளை தேடப் போறாங்க” அவளின் கோபமும், எரிச்சலும் கர்ப்பக்கால ஹார்மோன்களின் காரணத்தினால் அல்ல.
அன்று இளமாறனின் தங்கை வெண்பாவிற்கு திருமணம்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக அம்மா வீட்டில் தான் அவர்கள் இருந்தார்கள்.
இளமாறன் அந்த வீட்டின் மூத்த மகனாக, பொறுப்பான அண்ணனாக முன் நின்று தங்கைக்காக எல்லாம் செய்தான். அப்பா, தம்பியுடன் இணைந்து திருமண பொறுப்புகளை கவனித்தான்.
அன்று அதிகாலை வெண்பாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.
மாலை வரவேற்பிற்கு உடை மாற்ற ரோஜாவின் அம்மா வீடு வந்திருந்தார்கள் அவர்கள்.
ரோஜாவிற்கு புகுந்த வீட்டில் மூத்த மருமகளாக நிறைய வேலைகள் இருந்தது. ஆகையால், அவளுக்கும், அவள் கணவன், மகளுக்கும் உடை, நகை என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து காத்திருந்தார் அவளின் அம்மா சித்ரா.
தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என்று அக்கறையுடன் அவள் மகள் ஆதினியை கவனித்துக் கொள்வது மொத்தமும் அக்கா நித்யா தான்.
இப்போது நேரமாவது குறித்து ரோஜா கவலைப்பட, “நம்மள உங்கத்தை தேட மாட்டாங்க ரோஜா. பிளீஸ் பதறாம இரு. நான் அவங்ககிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். கொஞ்சம் லேட்டா வருவோம்னு. கெஸ்ட் வர்றதுக்கு முன்னாடி போய்டலாம்” என்று அவளின் புகாரை புறங்கையால் தள்ளி விட்டான் இளமாறன்.
அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து பட்டுப் புடவையை சரி செய்து விட்டான். ரோஜாவின் கால்களில் இருந்த வெள்ளிக் கொலுசு அவன் கண்ணில் பட்டுத் தொல்லை செய்ய, அழுத்தமாய் தொட்டு வருடினான்.
“இளா..” ரோஜா உறும,
“இருக்கேன்..” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
“இன்னொரு ஹனிமூன் போகலாமா ரோஜா? இந்த டைம் தூரமா வேணாம். இங்க பக்கத்தில் இருக்க சிம்லா, டார்ஜிலிங், மணாலி போகலாமா?” அவன் ஒற்றை கண்ணடித்துக் கேட்கவும், விழி விரித்தாள் ரோஜா. மெல்லக் குனிந்து அவன் தலை முடியை பிடித்து ஆட்டினாள்.
இளமாறன் ஏற்கனவே மனைவியிடம் சொல்லியது போலவே, அவளை ஒரு வாரம், பத்து நாட்கள் என இரு முறை வெளிநாடு அழைத்துச் சென்றான். எல்லாம் ரோஜா ஆசைப்பட்ட இடங்கள் தான். என்னவொன்று மகளுடன் சென்றார்கள். அதில் இருவருக்கும் வருத்தம் ஒன்றுமில்லை. மாறாக மகளோடு சேர்ந்து வேலை நெருக்கடிகள் ஏதுமின்றி, கவலையின்றி நாட்களை ரசித்து செலவழித்து ஊர் திரும்பினார்கள்.
அவர்கள் கடந்த முறை வியட்நாம் சென்று விட்டு வந்ததும் ரோஜாவிற்கு குழந்தைத் தங்கி விட்டது. அதனால் தான் போலி கோபமும், வெட்கமும் கொண்டாள் அவள்.
“ஒன்னும் வேணாம். என்னால இன்னொரு குழந்தை பெத்துக்க முடியாது. அத்தை திட்டுவாங்க. டாக்டர் மருமக நான். பொறுப்பா இருக்கணும்” என்று அவள் சொன்ன தினுசில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
அவன் சிரிப்பை அவள் முறைக்க, எம்பி அவள் வயிற்றில் முத்தமிட்டான் இளமாறன். வெட்கமும், கூச்சமும், காதலும் கண்ணில் வழிய அவனைப் பார்த்தாள் ரோஜா. அந்தக் காதலும், பார்வையும் இளமாறன் இதயத்தை ஊடுருவி ஜீவனை உறைய வைத்தது.
“இப்படி பார்க்காதீங்க இளா” என்று அவன் கண்ணை மூடினாள் ரோஜா. அவள் கையை விலக்கி சிரிப்புடன் எழுந்து கொண்டான் இளமாறன்.
அரை மணி நேரத்தில் தயாராகி இருவரும் வெளியில் வந்தார்கள். மகளையும், மனைவியின் மொத்த குடும்பத்தையும் இரண்டு கார்களில் அழைத்துக் கொண்டு வரவேற்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்தான் இளமாறன்.
நித்யா, ரோஜா இருவரும் சுகந்தியை தேடி மணமகள் வெண்பாவிற்கு ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்றார்கள்.
சசிகுமார், இளமாறனை பின் தொடர்ந்தான்.
சிவஹரி, சித்ரா இருவரும் இளமாறன் வீட்டுப் பெரியவர்களான கஸ்தூரி, சுவாமி நாதனுடன் சென்று அமர்ந்தார்கள்.
கஸ்தூரி, சுவாமி நாதன் இருவரும் வயது மற்றும் மூப்பின் காரணமாக தளர்ந்திருந்தார்கள்.
அவர்களின் ஆரோக்கியம் அவர்களை போலவே தள்ளாடியது. ஆகையால், சுகந்தி அவர்களை தன்னோடு அழைத்துக் கொண்டார்.
அவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள வீட்டோடு செவிலியரை பணிக்கு அமர்த்தியிருந்தார்.
இளமாறன், ரோஜா, ஆதினியுடன் சென்று அவர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டனர்.
இப்போதும் மண்டபத்தின் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மேடை நன்றாக தெரியும்படி அவர்கள் அமர்ந்திருக்க, சித்ரா கணவருடன் சென்று அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“ஹாய், கல்யாண பொண்ணே” என்று கேலியாக அழைத்தபடி வெண்பாவிடம் சென்றாள் ரோஜா.
“ஹாய் அண்ணி” என்று ரோஜா மற்றும் நித்யாவை நிமிர்ந்து பார்த்த வெண்பாவின் முகத்தில் வெட்கத்தின் சாயல். அதில் மேலும் அழகாய் தெரிந்தாள் அவள்.
“ரோஜா, நின்னுட்டே இருக்காத. கால் வீங்கப் போகுது. வா, வந்து இப்படி உட்காரு” அப்போது தான் அறைக்குள் நுழைந்த சுகந்தி, நேராக மருமகளிடம் தான் வந்தார்.
ஒரு இருக்கையை மருமகளுக்காக அவர் இழுத்து போடவும், அதில் அமர்ந்தாள் ரோஜா.
“இவங்களுக்கு கொஞ்சம் தலை அலங்காரம் பண்ணி விடுங்கம்மா” என்று அங்கிருந்த அழகு நிலைய பெண்களிடம் மருமகளை காட்டிச் சொன்னார் சுகந்தி.
“அச்சோ, வேணாம் த்த” ரோஜா மறுக்க, “நீ பேசாம, உட்காரு ரோஜா.” என்று மருமகளை அடக்கினார் அவர்.
வெண்பா, ரோஜா, நித்யா என மூன்று பெண்களையும் அழகுப்படுத்தி விடத் தொடங்கினார்கள் அந்தப் பெண்கள்.
சுகந்தி ஏதோ வேலையாக வெளியில் செல்ல, அறைக்குள் வந்தார் சித்ரா. அவர் கையில் இரண்டு சிறிய உணவு பாத்திரம் இருந்தது.
“வெண்பா, நித்யா, இந்தாங்க உங்க ரெண்டு பேருக்கும் பால் பணியாரம்.” என்று ஒரு கிண்ணத்தை குட்டி கரண்டியுடன் அவர்களிடம் கொடுத்து விட்டு, ரோஜாவிடம் திரும்பினார்.
தாய்மையில் மிளிர்ந்த மகளை அவர் பார்த்த பார்வையிலேயே வாஞ்சை கொட்டிக் கிடந்தது.
“இந்தா ரோஜா குட்டி, உனக்கு இளநீர் பாயாசம். உன் வீட்டுக்காரர் கொடுத்து விட்டார்” அதைக் கேட்டதும் ரோஜா மலர்ந்தாள்.
பொதுவாக அவளுக்கு இனிப்பு அத்தனைப் பிடிக்காது. ஆனால், கர்ப்பம் என்று வந்து விட்டால், அவளுக்கு இனிப்பை அதிகமாக தேடும்.
கர்ப்பக்கால சக்கரை வந்து விடக் கூடாது என்று சுகந்தி அவளை மிரட்டி இருந்ததால், இளமாறன் அவளை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
“தேங்க்ஸ்ம்மா” அம்மா நீட்டியதை வாங்கி அருந்தத் தொடங்கினாள்.
“ஏன் ரோஜா, அப்பா சொல்றது உண்மையா? மாப்பிள்ளை வேலையை விட்டுட்டு இன்னொரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க போறாராம்?” என்று அவர் குனிந்து மகளிடம் கேட்க, முதலில் தயங்கி பின்னர் மறைக்க விரும்பாமல் ஆமென்று தலையசைத்தாள் ரோஜா.
சித்ரா மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“உங்கப்பாவை..” என்றவர், சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு, “உனக்கும் இருக்கு. நீ வீட்டுக்கு வா. அம்மா பேசிக்கறேன்” என்று இளைய மகளை மிரட்டிய சித்ராவின் கண்கள் மூத்த மகளையும் முறைத்தது.
அம்மா வெளியில் சென்றதும் சகோதரிகள் இருவரும் வெடித்துச் சிரித்தார்கள்.
“அப்பா சிக்கினார்” என்ற இருவரின் குரலிலும், முன்பை போல பயம் இல்லாமல் சிரிப்பு மட்டுமே இருந்தது.
அங்கே கணவரை பிடித்துக் கொண்டார் சித்ரா.
“சித்ரா, வீட்டுக்கு போய் பேசலாம்” என்று சிவஹரி மனைவியை சமாளிக்க, “என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லல?” என்று கோபத்துடன் கேட்டார் சித்ரா.
“நீங்க கஸ்தூரி அம்மாகிட்ட சொல்லவும் தான் எனக்குத் தெரியுது. மாப்பிள்ளை வேலைக்கு இப்போ என்ன குறை? ஏற்கனவே அவங்களுக்கு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கில்ல? அப்புறம் ஏன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வேலையை விடணும்?” என்று அவர் கேள்விகளாக அடுக்க, சிவஹரி முழித்துக் கொண்டு நின்றிருந்தார்.
“ஏற்கனவே மாப்பிளைக்கு வேலை அதிகம். அவர்தான் நம்ம ரெண்டு கேன்டீனையும் கூட பார்க்கறார். இதுல இன்னொரு ரெஸ்டாரண்ட்..” சித்ரா புலம்பத் தொடங்க,
“சித்ரா…” கரிசனத்துடன் கனிவாக அழைத்தார் சிவஹரி.
“இது நம்ம மாப்பிள்ளை முடிவு. அவர் என்கிட்ட நேத்து தான் இதைச் சொன்னார். இதுல ரோஜாவுக்கும் சம்மதம் போல. அவங்க யோசிச்சு முடிவு செய்திருப்பாங்க சித்ரா. எல்லாம் சரியா வரும். இல்லனா, என்ன? அவங்களுக்கு நாம இருக்கோம். சரியா?” மனைவியின் முகம் பார்த்து அவர் கேட்க, சித்ரா சிந்திக்கத் தொடங்கினார்.
விரைவில் சமாதானமும் ஆகி விடுவார். அவர் அப்படித்தான். அன்பும், அக்கறையும் கலந்த கலவை அவர்.