மாலை ஏழு மணியளவில் அம்மம்மா வீடு வந்தான் இளமாறன். பெரியவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்று தினமும் அலைபேசியில் சொல்ல, இன்று அவர்களுக்காக நேரம் ஒதுக்கி வந்திருந்தான் அவன்.
அவன் அம்மம்மா, தாத்தாவுடன் வசிக்காமல், அவனுக்கு வேலை மற்றும் சொந்த உணவகம் இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் நினைத்த நேரம் வேலைக்கு செல்ல ஏதுவாக தனியாக வீடேடுத்து தங்கியிருக்கிறான்.
அவனுக்காக வீட்டின் கேட்டை திறந்து விட்ட தாத்தா, “மாறா வாப்பா” என்று பேரனை வரவேற்றார்.
வண்டியை வாயிலில் அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு, தாத்தாவோடு வீடு நுழைந்தான் இளமாறன். மனதில் எத்தனை கவலைகளும், குழப்பங்களும் இருந்தாலும் தாத்தா, அம்மம்மாவைப் பார்த்ததும் அது கரைந்து போகும் அதிசயம் அவனுக்கு என்றுமே புரிந்ததில்லை.
இன்று மதியத்தில் இருந்தே மனது லேசாக இருக்கிறது தான். ஆனால், அதன் காரணங்களை அவன் ஆராய விரும்பவில்லை. அந்த உணர்வு பிடித்திருந்தது. உணவை காட்டிலும் வேறொரு விஷயம் பிடிப்பது அவனுக்கு புதிது. அதை ருசித்து அனுபவித்தான் அவன். அதே உணர்வுடன் பெரியவர்களை பார்க்க வந்திருந்தான்.
“மாறா, ஒரே ஊர்ல இருந்துட்டு உன்னைப் பார்க்காம இருக்க முடியல ராஜா. நீ பேசாம எங்க கூடவே இருந்தா என்ன?” கையில் இருந்த தண்ணீர் சொம்பை அவனை நோக்கி நீட்டியபடி கேட்டார் கஸ்தூரி.
அவனுக்கும் ஆசையிருக்கிறது தான். ஆசையை காட்டிலும், பெரியவர்கள் உடல் நலன் குறித்த அக்கறை பல நேரங்களில் அவனுக்கு அதிக பயத்தை கொடுத்திருக்கிறது. தனியாக இருக்கும் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் என்று நினைக்கையிலே அவனுக்கு நெஞ்சுப் பதறுகிறது. பல வருடங்களாக இங்குதான் வசிக்கிறார்கள். மகள், மருமகன், பேரப் பிள்ளைகள் என சுகந்தி குடும்பம் அடிக்கடி அவர்களை வந்துப் பார்த்துச் செல்லும். அவர்களோடு மட்டுமல்ல, இளமாறனோடும் வந்து தங்க மறுத்து விட்டார்கள் பெரியவர்கள்.
இந்த வீட்டோடு அவர்களுக்கு பல வருட பந்தம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை அவர்கள். தன்னால் முடிந்தவரை பெற்றோரை வற்புறுத்தி பார்த்து, அவர்கள் வர மறுத்ததும் பெற்றோருக்கு தேவையான உதவியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டார் சுகந்தி. அதிலேயே நிம்மதியடைந்தான் இளமாறன்.
“இந்த வீட்டுக்கு வந்து எங்களோட இருக்கவா இத்தனை யோசனை மாறா?” சுவாமிநாதன் பேரனின் தோளில் தட்டிக் கேட்க, “நீங்க என் கூட வந்திடலாம் இல்ல தாத்தா?” என்று அவர்களைக் கேட்டான் அவன்.
“இப்போ நாங்க அங்க வந்தாலும் தனியா தானே இருக்கணும்? பேசாம நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. எங்க பேத்திக்கு துணையா நாங்க வந்துடுறோம்” கஸ்தூரி சொன்னதும் அப்படியே நழுவி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்.
“அதான பார்த்தேன். கல்யாண பேச்சு ஆரம்பிச்சா போதுமே, பதில் சொல்லாம ஓடிடுவான்” புலம்பினார் அவர்.
“கஸ்தூரி, அவன் வந்ததும் வராததுமா இந்தப் பேச்சை எடுக்கணுமா நீ?” கடிந்துக் கொண்டார் சுவாமிநாதன்.
அதைக் கேட்டபடியே முகம் கழுவி வெளியில் வந்தான் இளமாறன்.
“வா மாறா, வந்து இப்படி உட்காரு. சிவாஜி படம் போட்டிருக்கான், பார்ப்போம்.”
“என்ன படம் தாத்தா?”
“பலே பாண்டியா. நல்ல படம்ப்பா. நீ பார்த்துட்டு இரு. நான் போய் உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்”
கஸ்தூரி உள்ளறைக்கு செல்ல, அவரின் பின்னே சென்று உணவுகளை எடுத்து வந்து வைக்க அவருக்கு உதவினான் அவன்.
தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் படம் ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டே பொதுவான விஷயங்களை பேசியபடி இரவு உணவை உண்டார்கள் மூவரும்.
அடையும், அவியலும், தேங்காய் சட்னியும் தேவாமிர்தமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு விள்ளலையும் ரசித்து உண்டுக் கொண்டிருந்தான். பொதுவாக அவனுக்காக சிரத்தை எடுத்து அவனுக்கு பிடித்ததாக பார்த்து சமைத்து வைப்பார் கஸ்தூரி. இப்போது அவரால் தொடர்ந்து அடுப்பு முன் நிற்க முடியவில்லை, அவனும் தனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்பாக அவரிடம் சொல்லி விட்டான். பேரன் என்று வரும் போது பாசம் முன்னே நின்று விடுகிறது. தாத்தா சமைத்திருந்தார் இன்று.
பெரியவர்கள் இருவரும் இரவில் எளிமையான உணவையே எடுத்துக் கொள்வார்கள். பேரனுக்காக அடை செய்து விட்டு அவர்கள் இருவரும் இட்லி, சாம்பார் சாப்பிட்டனர்.
“காயம் எல்லாம் நல்லா ஆறிடுச்சா மாறா? அம்மாவை போய் பார்த்தியா? என்ன சொன்னா?” கஸ்தூரி கேட்க, “ம்ம். போன வாரம் போய் அப்பாவை பார்த்தேன். ஆக்சிடென்ட்டான தடயமே உடம்புல இல்லைனு சொல்லிட்டார்னு சொல்ல ஆசைதான்.” சிரிப்புடன் அடையை மென்றபடியே சொன்னான்.
“பெத்தவளுக்கு உன் கல்யாணத்தை பார்க்க ஆசையிருக்காதா ராஜா? உனக்கு எங்க மேல இருக்க பாசத்துல எங்களுக்கு வயசாகுறது உன் கண்ணுக்கு தெரியல. அப்படியே தெரிஞ்சாலும், நீ அதை பெருசு பண்ணல. அவ்ளோ தான். ஆனா, உண்மை என்னன்னா, இன்னும் எத்தனை நாளைக்கு நானும், உங்க அம்மம்மாவும் இப்படி நல்லா பேசிட்டு, நடமாடிட்டு இருப்போம்னு டாக்டரான உங்கம்மாவால கூட உறுதியா சொல்ல முடியாது. எல்லாம் அந்த ஆண்டவன் கையில தான் இருக்கு. எங்களுக்கு ஏதாவது ஆகும் முன்ன..” பேரனின் கலங்கிய முகத்தை பார்த்து, சட்டென பேச்சை பாதியில் நிறுத்தி கொண்டார் சுவாமிநாதன்.
“உங்க டாக்டரை அவங்க புள்ளைங்கள மட்டும் பார்க்க சொல்லுங்க. என்னைப் பார்த்துக்க நீங்க இருக்கீங்க.” அழுத்தமாக சொன்னான்.
“நான் என்ன குழந்தையா? எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும். அவங்க இன்னைக்கு உங்களைப் பார்க்க வந்தாங்களா? இல்ல உங்களுக்கு கால் பண்ணி இதெல்லாம் பேச சொன்னாங்களா?”
“எல்லாம் உன்னால, நீ தான் அவன் மனசுல வெறுப்பை விதைச்ச. இப்போ அவனை மாற்றிக்க சொன்னா, எப்படி முடியும்? ஐந்தில் வளையாதது எப்பவும் வளையாது”
தாத்தாவின் கோபம் பார்த்து, “ப்ச் தாத்தா. என்னை திட்டுங்க. எதுக்கு அம்மம்மாவை பேசுறீங்க?” என்று கையை உதறியபடி கேட்டான் மாறன்.
“உன்னை பேச எனக்கு எப்படி மனசு வரும் மாறா? திட்டி, அடிச்சு, கண்டிச்சு தான் வளர்த்தேன். ஆனா, உன் மனசுல இருந்த வெறுப்பை மாத்தவே நினைக்கல நாங்க. அது எங்க தப்புதான்”
“இப்போ நான் என்ன பண்ணனும்? சுகந்தி டாக்டர் விரும்பற மாதிரி கல்யாணம் பண்ணிக்கணும். அவ்ளோ தானே? பண்ணிக்கிறேன்” என்று அவன் முடிக்க, “நல்லது மாறா. இதை கேட்கதான் இவ்வளவு போராடினோம். இதோ நான் அவளுக்கு போன் பண்ணி சொல்றேன். நீ சம்மதம் சொல்லிட்டன்னு..” பரபரத்த கஸ்தூரியின் கைப் பிடித்து நிறுத்தி,
“இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என்றவன்,
“பிளீஸ் தாத்தா. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். அதுக்கு முன்னாடி தங்கச்சி கல்யாணத்தை முடிக்க சொல்லுங்க” என்று முடித்தான்.
“மூத்தவன், நீ இருக்கும் போது எப்படி அவளுக்கு கல்யாணம் பேசுவாங்க ராஜா?”
“ஏன் மாட்டாங்க? வீட்ல பொண்ணு இருக்கும் போது முதல்ல அவளுக்கு தானே முடிப்பாங்க?”
“ஆமா. ஆனா, உன் தங்கச்சி வெண்பாவை விட நீ வயசுல பெரியவன். அதுவும் இல்லாம, அவளுக்கு பார்க்கற வரன் எல்லாம் உங்க பெரிய பையனுக்கு இன்னும் கல்யாணம் முடிக்கலையான்னு கேள்வி கேட்கறாங்க போல. அதான், அம்மா…” கணவர் முறைக்க, பேரன் அதிர்ந்து பார்க்க, சொல்ல வந்ததை அப்படியே விழுங்கிக் கொண்டார் கஸ்தூரி.
சட்டென இருக்கையை பின்னுக்கு தள்ளி, பாதி உணவில் எழுந்துக் கொண்டான் மாறன்.
அவனோ இறுகி நின்றான். பெரியவர்கள் இருவரையும் பார்த்து, “இப்பவும் நான் அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லயில்ல? அவங்க மகளுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும். அதுக்காக நான் இப்போ அவசரமா கல்யாணம் பண்ணிக்கணும் இல்ல? இந்நேரம் எனக்கு ஒரு ஏமாந்த பொண்ணும் பார்த்திருப்பாங்களே? என் வாழ்க்கை எப்பல்லாம் நிம்மதியா போகுதோ, அப்பல்லாம் அதைக் கெடுக்கன்னு ஏதாவது அவங்களுக்கு பண்ணணும். அதானே?” இறுக்கமாக கேள்வி கேட்டான்.
“இந்த கல்யாண நாடகத்துக்கு நீங்க ரெண்டு பேரும் உடந்தையா? என்னை சம்மதிக்க வைக்க, என்னெல்லாம் பேசிட்டீங்க? நீங்க இல்லைன்னா நான்.. நான்…” உடைந்த குரலை காப்பாற்ற தண்ணீரை எடுத்து அருந்திய பேரனின் தோளில் கைப் போட்டு அருகில் இழுத்தார் சுவாமிநாதன்.
“விடுங்க தாத்தா. நான் வீட்டுக்கு கிளம்பறேன்”
“ஐயோ மாறா. நான் எதுவும் பேசலப்பா. நீ இரு. உட்காரு முதல்ல. சாப்பிட்டு முடி.” கஸ்தூரி பேரனை பார்த்துச் சொல்ல, “தாத்தா பிளீஸ்” என்றான் இளமாறன்.
“உனக்கு விருப்பம் இல்லாததை நாங்க என்னைக்கும் செய்ய மாட்டோம் மாறா. அது உனக்கு நல்லாவே தெரியும். உன் கல்யாணத்தை பார்க்க, உன் பசங்களை தூக்கி செல்லம் கொஞ்ச, அவங்களையும் உன்னை வளர்த்தது போலவே வளர்க்க நாங்க ஆசை ஆசையா உயிரை கையில் பிடிச்சுட்டு காத்திருக்கோம். இதுக்கு முன்னாடியும் இதைப் பத்தி உன்கிட்ட பேசியிருக்கோம். இப்போ உங்கம்மா பேர் எடுத்ததும் நீ கோபப்படுற, வீட்டுக்கு போயிட்டு நீயே நிதானமா யோசிச்சி ஒரு முடிவுக்கு வா”
சுவாமிநாதன் சொல்ல, குற்ற உணர்வுடன் தலையசைத்து சென்று கை கழுவி வந்தான் அவன்.
அவன் தட்டில் இன்னும் உண்ணப்படாத அடை, அவியல் மிச்சமிருக்க, அதை உண்ணும் தெம்பு தான் அவனுக்கில்லை. உணவை என்றுமே உதாசீனம் செய்ததில்லை அவன். வீணாக உணவை வீணாக்குவதை விரும்பாதவன் அவன்.
“அம்மம்மா சாரி” என்றான் மனம் கேளாமல்.
“பரவாயில்ல ராஜா. விடுப்பா. நீ. வருத்தப்படாத.” அவனுக்கு குடிக்க தண்ணீர் நீட்டியபடி சொன்னார் கஸ்தூரி.
அதை வாங்கி தொண்டையில் சரித்தான். அதனோடு சேர்த்து தன் மனதில் உள்ள வேண்டாத எண்ணங்கள் அனைத்தையும் விழுங்க விரும்பினான், முடியவில்லை.
“நான் இன்னொரு நாள் வர்றேன் அம்மம்மா. உடம்பை பார்த்துக்கோங்க தாத்தா” விடை பெற்றுக் கொண்டான். அடுத்த பத்தாம் நிமிடம் சாலையில் இருந்தான் அவன்.
உடல் களைத்து, மனம் கலைந்து போய் இருக்க, சாலையில் பதிய மறுத்தது அவன் கண்கள். மிக சிரமப்பட்டு வண்டியை செலுத்தினான். மனம் முழுவதும் பல்வேறு எண்ணங்கள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அதில் தேராய் வந்து நின்றாள் அவள். ரோஜா.
அவள் நினைவே அவனை புன்னகைக்க வைத்தது. ரோஜா ஒன்று அவன் மனதில் மெதுவாக அரும்பாகத் தொடங்கியது.