ரோஜா அன்றும் அதிகாலையிலேயே அப்பாவுடன் மருத்துவமனை செல்லத் தயாராகினாள்.
சித்ரா மகளுக்கு காஃபி கொண்டு வர, அதை கையில் வாங்கிக் கொண்டு, “நானும், அப்பாவும் கேன்டீன் போய் காஃபி குடிச்சுக்க மாட்டோமா ம்மா? நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க?” என்று கேட்டாள் ரோஜா.
“அப்பாவுக்கு காலையில் காஃபி இல்லாம வேலை ஓடாது. உனக்கும் அப்படித் தானே? எனக்கு இதுல என்ன பெரிய சிரமம்? நீங்க கிளம்பினதும் நாள் முழுக்க நான் சும்மா தானே இருக்கேன். அப்போ படுத்து தூங்கிக்கறேன். அப்பா கார்ல வெயிட் பண்றார் பாரு. நீ கிளம்பு”
“ம்ம். நான் சாயங்காலம் சீக்கிரம் வரவா மா? வெளில எங்கயாவது போவோமா?”
“இல்ல ரோஜா. இன்னொரு நாள் போலாம். நீ சீக்கிரம் வர்றதா இருந்தா எனக்கு மாகாளிக் கிழங்கும், பச்சை மிளகும் வாங்கிட்டு வர்றியா? நித்தி ஊறுகாய் கேட்டா, செஞ்சு குடுத்து விடலாம். அது இருந்தா நல்லா சாப்பிடுவா உங்கக்கா”
“நீங்க அப்பாகிட்ட சொல்லியிருந்தா வாங்கிட்டு வந்திருப்பாரே மா. வாரத்துல ரெண்டு, மூனு நாள் அப்பா தானே திநகர் கேன்டீன் போய்ட்டு வர்றாங்க? ம்ம்?”
“உன்கிட்ட கேட்டா நீ தான் செய்யணும். உன்னால முடியாதுன்னா, வாங்கிட்டு வர முடியாதுனு நேரா சொல்லு. அதை விட்டுட்டு எதுக்கு உங்கப்பாவை இதுல இழுக்கற? எனக்கு அவர்கிட்ட சொல்லத் தெரியாதா? இல்ல, நான் கேட்டதும் உடனே வாங்கிட்டு வரப் போறாரா, உங்கப்பா?”
அம்மாவின் அந்தக் குரலில் பயந்து இறுகி நின்றாள் ரோஜா. அமைதியும், நிதானமும் நிறைந்து நின்ற சித்ராவின் கண்களில் இருந்த உணர்வை அவள் அறிவாள்.
“இல்லம்மா, நீங்க கேட்டது திநகர்ல இருந்துதான் வாங்கிட்டு வருவேன். அதான் சொன்னேன்.” சித்ரா அசையாமல் இருக்க, “நீங்க கேட்ட அன்னைக்கே நம்பி அண்ணாகிட்ட சொல்லி வச்சுட்டேன் மா. இன்னைக்கு கண்டிப்பா ஞாபகப்படுத்தி, வாங்கிட்டு வர்றேன்”
“ம்ம்”
“வர்றேன் மா”
“ரோஜா, ரகு எல்லாத்தையும் பார்த்துப்பான், தானே? அவங்க வீட்ல என்ன சொன்னாங்கன்னு எதுவும் சொன்னானா?”
“ம்ம். ரகு உன் முடிவை ஏத்துக்கிட்டாலும், அவங்க வீட்ல எப்படி எடுத்துப்பாங்கன்னு யோசிச்சாலே எனக்கு தலை வலிக்குது. இதுல உங்கப்பாவை நினைச்சா…”
“அம்மா, பிளீஸ். எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறீங்க. அப்பாகிட்ட நான் சொல்லிக்கறேன்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ரோஜா, நேரமாச்சு” என்று பின்னால் இருந்து கத்தினார் சிவஹரி. சித்ரா மறுப்பாக தலையை அசைத்து மகளை அனுப்பி வைத்தார்.
அன்று மாலை சொன்னது போலவே அம்மா கேட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு சற்றே தாமதமாக வீடு வந்தாள் ரோஜா.
வண்டியை நிறுத்தும் போதே ரகு வீட்டு காரை பார்த்து விட்டாள் அவள். மனம் சடுதியில் எச்சரிக்கை நிலைக்கு செல்ல, ரோஜா தானாக வாடியது.
ரகு மறுப்பு சொன்னதும், பிரச்சனை செய்ய வந்திருக்கிறார்களோ என்று பயந்துக் கொண்டே அவள் உள்ளே செல்ல, பெரியவரும், அவரின் மனைவியும் மட்டுமே வந்திருந்தார்கள்.
“இதோ ரோஜாவே வந்துட்டாளே, வாம்மா” பெரியவர் அழைக்க, “ரோஜா, நல்லா இருக்கியா ராஜாத்தி” என்று பாட்டியும் அவர் பங்குக்கு அழைக்க, பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவர்களை வரவேற்று, நலம் விசாரித்தாள் அவள்.
அவள் கையில் இருந்த பையை அம்மாவிடம் நீட்டினாள்.
“அதை எடுத்துட்டு போய் கிட்சன்ல வச்சுட்டு, முகம் கழுவி ஃப்ரெஷ்ஷாகி வா” என்றார் சித்ரா.
“இதோ இப்ப வந்துடுறேன்” பெரியவர்களை பார்த்து சொல்லி விட்டு, அவர்கள் டீ, சுண்டல் உண்பதை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் ரோஜா.
சமையல் அறை தரையிலேயே கையில் இருந்த பையை வைத்து விட்டு, அவசர அவசரமாக அலைபேசியை தேடி எடுத்தாள்.
“தாத்தா, பாட்டி எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க ரகு” என்ற செய்தியை தந்தி போல பாவித்து அவனுக்கு அனுப்பினாள். ஒரு முழு நிமிடம் திரையை பார்த்தபடி அப்படியே நின்றாள். ரகுவரன் அவள் அனுப்பிய செய்தியை பார்க்கவில்லை.
அவளது அறைக்கு செல்ல வேண்டுமெனில் கூடத்தை கடந்தாக வேண்டும். அங்கோ பெரியவர்கள் அமர்ந்திருக்க, அம்மாவின் அறைக்கு போனாள் ரோஜா.
“ரோஜா நேத்தே ரகுகிட்ட அவ முடிவை சொல்லிட்டதா சொல்றா. ஆனா, இன்னைக்கு அவங்க ஐயா வந்து நிச்சயத்தை எப்போ வச்சுக்கலாம்? நேத்து பிள்ளைங்க பேசிக்கிட்டாங்க தானே? இனி நாம பேசுவோம்னு சொல்றார். நான் என்ன பண்ணட்டும்? இன்னும் உங்கப்பா வேற வீட்டுக்கு வரல. அவர் வந்து என்ன சொல்லப் போறாரோ?” மூத்த மகளிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சித்ரா.
நித்யா அந்தப் பக்கம் ஏதோ சொல்ல, மறுநொடி சித்ரா சொன்ன பதிலில், அக்கா என்ன சொல்லி இருப்பாள் என்பதை ரோஜாவால் அனுமானிக்க முடிந்தது.
“நீ என்ன சொல்ற நித்யா? ரகு வீட்ல சொல்லியிருக்க மாட்டான்னா? அப்படியென்ன தலைப் போற வேலை இவங்களுக்கு எல்லாம்? காலம் முழுக்க உன்னையே நெனச்சு உனக்காக வாழுவேன்னு சொல்லி கைப் பிடிக்க போறவ ஞாபகம் இருபத்தி நாலு மணி நேரத்துல ஒரு கால் மணி நேரம் கூட வராதா? அவளுக்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி வீட்ல பேச முடியாதா? நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இவளுக்காக நேரம் ஒதுக்குவான் ரகு? தூங்குறதுக்கு வீட்டுக்கு வந்தா போதுமா?”
“இவ்வளவு யோசிக்காதீங்க ம்மா” அம்மாவை நெருங்கி நின்ற ரோஜாவின் காதில் அக்காவின் ஆறுதல் மொழி விழுந்தது.
“அவங்க தனியா உட்கார்ந்திருக்காங்க மா. நீங்க போய் அவங்ககிட்ட பேசுங்க. அப்பாக்கு சொல்லிட்டீங்க தானே?” என்ற ரோஜாவின் கேள்வியில் அம்மாவின் முகம் மாற, “பிளீஸ் ம்மா” என்றாள் ரோஜா.
“நீ போனை வை நித்தி. அம்மா நைட் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்து, ரோஜாவிடம், “வேகமா முகம் கழுவிட்டு வா” என்று விட்டு வெளியில் சென்றார்.
“ஓ, சாரி ரோஜா. நான் அம்மாகிட்ட இன்னும் பேசவேயில்ல” ரகுவரனிடம் இருந்து வரிசையாக குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன.
“நிச்சயதார்த்தம் பத்தி பேசுறாங்க. யாருக்குன்னு கேட்காதீங்க ரகு” சில, பல கோப எமோஜிக்களை சேர்த்து அனுப்பி வைத்தாள் ரோஜா.
“என்னது?” என்ற அவனது ஒற்றை வார்த்தையில் இருந்தது மகிழ்ச்சியா, அதிர்ச்சியா என்று ரோஜா ஆராயவில்லை.
அலைபேசியை எடுத்து அவனை அழைக்கப் போனவள், “ரோஜா” என்ற அம்மாவின் அழைப்பில், வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
தண்ணீர் குழாயை திறந்தாள், மனதினுள் இத்தனை நாள்கள் அடைத்து வைத்ததெல்லாம் தண்ணீரின் வேகத்தோடு தெறித்து வெளியில் கொட்டியது.
அம்மாவின் கோபம், அப்பாவின் அமைதி, அம்மாவின் அழுகை, அப்பாவின் முறைப்பு, அப்பாவின் புலம்பல், அப்பாவின் அலட்சியம் என ஒவ்வொரு நினைவாக வெளியில் வர, உடலை உதறிக் கொண்டாள்.
கடந்த காலத்தை நினைத்தால் கசப்பு மட்டுமே மிஞ்சும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
பத்து நிமிடங்கள் கழித்து அவள் பளிச்சென்று வெளியில் வரும் போது கூடத்தில் இப்போது அப்பாவும் அமர்ந்திருந்தார்.
ரோஜா அமைதியாக சென்று அம்மாவின் பக்கத்தில் அமர, சிவஹரி மகளைப் பார்த்து விட்டு, பெரியவர் வைத்தியலிங்கத்தை பார்த்தார்.
நேற்று ரகுவிடம் பேசி விட்டு வந்ததும், அம்மாவிடம் சொன்னது போல, அப்பாவிடமும் தன் முடிவை சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்போது யோசித்தாள் ரோஜா.
வைத்தியலிங்கம், வைதேகி தம்பதிகள் என்றால் சிவஹரிக்கு ஆதர்சம். அவர்கள் வீடு தேடி வந்து, பேரனின் நிச்சயதார்த்தம் பற்றி பேசும் போது அப்பாவால் எப்படி அதை மறுக்க முடியும் என்பதை நினைக்கையில் அவளது வாழ்க்கையின் முடிவு அவளை மிரட்டியது.
தன் எதிர்காலம் ரகுவரன் தானா? அவன் நினைத்தால் அதை மாற்றியிருக்கலாமே என்று அவள் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, “இந்த வாரத்துல ஒரு நாள், உங்களுக்கு என்னைக்கு சரியா வருமோ, அப்போ குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வாங்க சிவா. எல்லோரும் உட்கார்ந்து பேசி, தேதி முடிவு பண்ணிக்குவோம். நிச்சயத்தை சிம்பிளா நம்ம பார்ட்டி ஹால் ஒன்னுல வச்சுட்டு.. கல்யாணத்தை…” பெரியவர் பேசிக் கொண்டே போக, சித்ரா மகளை அழுத்தமாக பார்த்தார்.
ரோஜாவின் பார்வை வாசலில் இருந்தது. அதிவேகத்தில் வந்த ரகுவரனின் கார், அதே வேகத்தில் நிற்க, அதிலிருந்து குதித்து இறங்கி உள்ளே வந்தான் அவன்.
ரோஜாவை பார்த்து கண்ணை சுருக்கினான், அந்தப் பார்வையில் அவள் முகம் சுருங்கியது.