ரோஜாவுக்கு கைக் கொடுத்து எழுந்து நிற்க உதவினான் இளமாறன்.
அவன் கண்கள் ரோஜாவின் கை, கால்களை பதட்டத்துடன் ஆராய்ந்தது. ரோஜா காலை சரியாக ஊன்றி நிற்க முடியாமல், உதறினாள். சட்டென அவளை அணைவாக பிடித்துக் கொண்டான் அவன். இடது காலிலும், வலது முழங்கையிலும் லேசான சிராய்ப்பு காயமும், அதிலிருந்து இரத்தமும் கசிய, “சாரி” என்றான் அவன்.
பதட்டம், படப்படப்பு, கோபம் என கலவையான உணர்வுகளை அடக்கிக் கொண்டு நின்றதில் அவளுக்கு மூச்சு வாங்கியது. கைகளில் மிதமான நடுக்கமிருந்தது.
“சாரி, பிளீஸ்” என்றான் மீண்டும்.
அதுவரை கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த ரோஜா, “என்ன சாரி? எதுக்கு சாரி? சாரி, அதை நிஜமா மனசு உணர்ந்து சொல்லணும். சும்மா அர்த்தமில்லாம ஜஸ்ட் லைக் தட் சொல்லக் கூடாது” என்று கத்தினாள்.
“ரோஜா, எதிர்ல ஹாஸ்பிடல் இருக்கு. போகலாம் வாங்க” எதிரில் இருந்த மருத்துவமனையை கண் காட்டி நிதானமாக சொன்னான்.
“ஒரு செகண்ட் மிஸ்ஸாகி இருந்தா என்னாகி இருக்கும் தெரியுமா செஃப்? எவ்வளவு கூலா ஹாஸ்பிட்டல் போகலாம் வான்னு சொல்றீங்க? நீங்க ரோடு கிராஸ் பண்ணும் போது கவனமா இருக்க வேணாமா? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம அப்போ போய் போனை கையில எடுத்துட்டு இருக்கீங்க? அப்படியென்ன தலைப் போகுற அவசரம் நடுரோட்டில் வச்சு போனை எடுக்கிற அளவுக்கு? ஒரு நிமிசம் வெயிட் பண்ண முடியாதா உங்களால?”
“ரோடை அல்மோஸ்ட் க்ராஸ் பண்ணிட்டேன். அதுனால தான்…”
“அல்மோஸ்ட் க்ராஸ் பண்ணிட்டீங்களா? அதை உங்களை இடிக்க வந்த அந்த பஸ்காரன் கிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“சாரி, இனிமே இப்படி நடக்காது.”
“இப்போ நடந்ததுக்கு என்ன பதில் செஃப்? அந்த சாரியை திரும்ப சொல்லாதீங்க.” கத்தினாள்.
சுற்றுப்புறத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு, ரோஜாவை பார்த்தான் அவன்.
“என் கையை விடுங்க. எனக்கு வர்ற கோபத்துக்கு ஏதாவது சொல்லி உங்களை ஹர்ட் பண்ணிடுவேன்” என்ற ரோஜா அவன் கையை உதற முயன்றாள்.
“ரோஜா..”
அந்த அதட்டலில், ஆத்திரத்துடன் விரிந்தது அவள் விழிகள்.
“என்ன அதட்டுறீங்க? நான் மட்டும் உங்களை திரும்பிப் பார்க்கலைன்னா என்னாகி இருக்கும் தெரியுமா? என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.” ரோஜாவின் குரல் தழுதழுக்க, கண்கள் தளும்பி நின்றது.
இப்போது தான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது என்பது புரிந்தவன் அவள் முகம் பார்த்து மௌனமாய் நின்றான். அந்த குரலும், கண்களும் அவனை என்னவோ செய்தது.
“ஒரு செகண்ட் உங்க வீட்டை நினைச்சு பார்த்தீங்களா? உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா, அவங்க எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்க? அன்னைக்கு… உங்கப்பா, அம்மா பதறினது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள..” அவளைப் பிடித்திருந்த அவன் கை சட்டென தளர, அவனை முறைத்துப் பார்த்தாள் ரோஜா.
‘எனக்காக ஃபீல் பண்ண ரெண்டே ரெண்டு ஜீவன் தான் இருக்கு. அவங்களை தவிர யாருக்கும் என் இழப்பு பெருசா பாதிக்காது ரோஜா. என்னை எளிதா கடந்து, மறந்திடுவாங்க. இப்போ மட்டும் அவங்க ஞாபகத்தில் நான் இருக்கேனா என்ன?’ மனதில் புலம்பி வருந்திக் கொண்டான்.
“எப்பப் பாரு கையில போனை வச்சுட்டு கனவு காணுறவங்களை, செல்ஃபி, வீடியோ பைத்தியங்களை, பார்த்தாலே பத்திக்கிட்டு வரும் எனக்கு. நமக்கு டெக்னாலஜி வரமா தான் இருக்கணும். சாபமா இருக்கக் கூடாது. நம்மளோட ஆக்கத்துக்கு தான் டெக்னாலஜி. அழிவுக்கு இல்ல” பேசியபடியே ரோஜா நடக்க முற்பட, அவளைப் பிடித்தபடி கூடவே நடந்தான் இளமாறன்.
திடிரென்று திரும்பி, “உங்க போனை கொடுங்க” என்றாள்.
அவன் ஒரு நொடி அதிர்ந்துப் பார்க்க, “இளா..” என்று அழுத்தமாக அழைத்தாள்.
கேள்விகள் எதுவும் இல்லாமல், தன் அலைபேசியை கையில் எடுத்தவன், வேகவேகமாக குறுஞ்செய்தி ஒன்றை தட்டச்சு செய்ய, ரோஜா பல்லைக் கடித்தாள்.
மறுநொடியே அவளிடம் தன் அலைபேசியை தந்திருந்தான், அவனை முறைத்துக் கொண்டே அவள் வாங்க, “ஒரு மீட்டிங்க்காக ஏர்லைன் ஆஃபீஸ் வந்தேன். இப்போ வேற வேலையா இருக்கேன், மீட்டிங்க்கு வரலைன்னு அவங்களுக்கு இன்பார்ம் பண்ணேன் ரோஜா” என்று விளக்கம் கொடுத்தவன், “என்னோட வண்டி அங்கருக்கு, எடுத்துட்டு வரவா? உன்னால நடக்க முடியுமா?” என்று அவன் அக்கறையுடன் கேட்க, “இதோ இருக்க ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு வண்டி?” என்று விட்டு வேகமாக நடக்க முயன்று, வலியில் முகம் சுருக்கினாள்.
அவளை அமைதியாக மருத்துவமனை அழைத்து சென்றான். அங்கிருந்த செவிலியர் அவளின் காயங்களை பரிசோதித்து, பெரிதான அடியில்லை என்று உறுதி செய்தனர். இரத்தக் கறை சுத்தம் செய்து, சிராய்ப்பு காயங்களுக்கு மருந்திட்டு கொண்டிருக்க, இளமாறன் எழுந்து வெளியில் சென்றான்.
பத்து நிமிடங்கள் கழித்து சிகிச்சை பெற்று, காயங்களில் சிறிய கட்டும், அவை புரையோடாமல் இருக்க ஊசியும் போட்டுக் கொண்டு ரோஜா வெளியில் வர, மருத்துவமனை வாயிலில் அவளுக்காக தனது இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தான் இளமாறன்.
“உங்களுக்கு வெளில வேலை எதுவும் இருக்கா ரோஜா?” அவள் மறுப்பாக தலையை அசைத்தாள்.
ரோஜா சரியென்றும் சொல்லவில்லை. அவனது அழைப்பை மறுக்கவும் இல்லை.
“பிளீஸ்” என்று அவன் சொல்ல, மெலிதான தயக்கத்துடன் அவன் பின்னால் அமர்ந்தாள். வண்டியை சீரான வேகத்தில் நிதானமாக செலுத்தினான் மாறன்.
ஹோட்டலுக்கு பின் புறமாக சென்று பணியாளர்களுக்கென்று இருக்கும் வழியில் நுழைந்து, வண்டியை நிறுத்தி விட்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அவனது அறைக்குள் நுழைந்ததும், “ஃப்ரெஷ்ஷாகி வாங்க ரோஜா. நான் இப்போ வந்துடுறேன்” என்று விட்டு விலகிச் சென்றான்.
ரோஜாவின் உடலில் இன்னமும் நிதானம் வந்திருக்கவில்லை. அங்கிருந்த சோஃபாவில் தயக்கத்துடன் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
முதல் முறை விபத்து நேர்ந்த காட்சி, இரத்தம் தோய்ந்த இளமாறனின் முகம் அவள் மனக் கண்ணில் வர, தற்போது அவன் மீது ஆத்திரமாக வந்தது.
அப்படியென்ன வாழ்க்கையின் மீது அப்படியொரு அசட்டை? என்ற அவளின் யோசனையை கலைத்தான் இளமாறன்.
“ரோஜா”
“ம்ம்”
“பிளீஸ், முகம், கை கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்” அவனது அறையின் மூலையில் இருந்த ஓய்வறையை கைக் காட்டினான்.
அவள் எழுந்து செல்ல, தன் மேஜை மேலிருந்த இன்டர்காமை எடுத்து எண்களை அழுத்தினான்.
“காஃபி சொல்லி இருந்தேன் இல்லையா?. அதை கேன்சல் பண்ணிட்டு லஞ்ச் அனுப்பிடுங்க பாலாஜி. ம்ம். சிம்பிளா ஏதாவது ஓகே தான். இல்ல, அவர்தனா பஃபேல இருந்து கொடுத்து விடுங்க. ரெண்டு பிளேட்ஸ்” அந்த ஹோட்டலின் தென் இந்திய உணவகமான அவர்த்தனாவில் இருந்து இருவருக்குமான உணவினை அனுப்பச் சொல்லி விட்டு அவன் நிமிர, ரோஜா முகத்தில் பனித் துளிகளாக நீர்த் துளிகள் மின்ன வந்து நின்றாள்.
அவளை நோக்கி டிஸ்யூவை நகர்த்தியவன் கண்கள், அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தது.
அவள் கண்களில் பசித் தெரிந்தது. வெறும் காஃபி போதாதென்று தான் மதிய உணவை சொல்லியிருந்தான் அவன்.
“லஞ்ச் சாப்பிடலாம் ரோஜா. இப்போ வந்திடும்” என்று அவன் சொல்லும் போதே, உணவு அடங்கிய ட்ரேவுடன், கதவை தட்டி விட்டு இருவர் உள்ளே வந்தனர்.
அப்போது அலைபேசி அடிக்கும் சத்தம் கேட்க, தன் கைப்பையை பார்த்தாள் ரோஜா. மாறனின் அலைபேசி தான் அடித்தது. அதைக் கடுப்புடன் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவனுக்கு வந்த அழைப்பை ஏற்று, “ஹாய் ஷெரீஃப், எஸ் எஸ். ஹோட்டல்ல பிஸியா இருக்கேன். எஸ். கண்டிப்பா நாளைக்கு பார்க்கலாம்” என்று பேசி முடித்து வைத்தான்.
அவர்களுக்கான உணவை எடுத்து வந்தவர்கள், அவன் அறையில் இருந்த மேஜையில் உணவை அவர்களே போட்டுக் கொண்டு உண்பதற்கு வசதியாக வைத்து விட்டு அவர்கள் வெளியேற, “உட்காருங்க ரோஜா” என்றான் மாறன்.
வேலைக்கான நேர்காணல், பயண அலைச்சல், மதிய வெய்யிலில் அலைந்தது என மிகவும் சோர்ந்து போயிருந்த ரோஜாவிற்கு உணவின் மணம் அதுவரை அடங்கியிருந்த அவளது பசியை தூண்டி விட்டது.
அவனுக்கு எதிரே சென்று அமர்ந்தவள் தன் அலைபேசியை கையில் எடுக்க, மாறனின் உதட்டில் புன்னகையின் சாயல்.
“அம்மா, நான் வர கொஞ்சம் லேட்டாகும்.” அவனது புன்னகையை கண்ணை சுருக்கி பார்த்தபடி அம்மாவிடம் பேசினாள் ரோஜா.
“ம்ம், இன்டர்வியூ எப்பவோ முடிஞ்சது மா. இல்ல, லஞ்ச் சாப்பிட வந்தேன்மா. நம்ம செஃப் இளமாறன் இல்ல? அவங்க கூட. ம்ம். வீட்டுக்கு வந்து பேசுறேன்ம்மா. ம்மா, நான் வந்து எல்லாத்தையும் சொல்றேன். பை” அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டபடி அமர்ந்திருந்தவனின் கண்களில் வந்துப் போன உணர்ச்சிகளை அவதானிக்க முயன்று தோற்றாள் ரோஜா.
“நீங்களா இருக்கப் போய் தப்பிச்சீங்க. வேற யாராவது இருந்தா, இந்நேரம் அவங்க காது தீஞ்சி போற அளவு திட்டியிருப்பேன்”
‘ஏன், நான் என்ன ஸ்பெஷல்?’ என்ற கேள்வியை மனதில் தான் கேட்டான் அவன்.
“ஆமா, இந்த லஞ்ச் எதுக்கு? எனக்கு தேங்க்ஸ் சொல்றதுக்கா?”
“இது காஃபி சாப்பிடுற நேரமில்ல. அதான்” என்று இருவருக்கும் உணவைத் தட்டில் பரிமாற தொடங்கினான்.
“சாப்பிடுங்க ரோஜா, ஐ பிராமிஸ் யூ, இனிமே ரொம்ப கவனமா இருப்பேன்” அதற்கு மேல் அவனை முறைக்க, நக்கல் பேச முடியாமல், அமைதியானாள்.
இப்போது மீண்டும் அவன் அலைபேசி ஒலியெழுப்ப, அவளின் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் கனலை கக்கியது. இம்முறை அழைப்பின் ஒலி வித்தியாசமாக இருக்க, ஒரு ஆர்வத்தில் ரோஜா எட்டிப் பார்க்க, “டாக்டர்” என்று காட்டியது திரை.
யார் அந்த டாக்டர்? என்று யோசித்து, சுகந்தி டாக்டரா? என்று அவள் கண்கள் விரிய, சட்டென கை நீட்டி அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் மாறன்.
அடுத்த நிமிடமே மீண்டும் அடித்தது அலைபேசி. அவன் அதையும் எடுக்காமல் துண்டிக்க, அடுத்த அழைப்பு அதே ஒலியில் வந்தது. இம்முறை, “அப்பா” என்று காட்டிய திரையை பார்த்து விட்டு அழைப்பை ஏற்றான் அவன்.
“ஹாய் ப்பா. ஆமா. வேலையில் இருக்கேன். ம்ம், நைட் பேசறேன். இல்ல, வீட்டுக்கு வர முடியாதுப்பா. ம்ம், வர டிரை பண்றேன். பை” அவன் பேசுவதை கேட்டபடியே அமர்ந்திருந்தாள் ரோஜா.
அவன் நடுரோட்டில் வைத்து அழைப்பை ஏற்றதன் காரணம் இப்போது அவளுக்கு புரிந்தது. வெளி அழைப்புகளுக்கு ஒரு ஒலியும், வீட்டினருக்கு என்று வித்தியாசமாக ஒரு அலைப்பொலியும் வைத்திருக்கான் அவன். அம்மாவோ, அப்பாவோ இருவரில் யாரோ ஒருவர் அழைத்திருக்க, சாலையை கிட்டத்தட்ட கடந்து விட்ட எண்ணத்தில் அலைபேசியை எடுத்திருக்கிறான் என்பது விளங்கியது. ஆனாலும் அதை சரியென்று அவள் மனம் ஏற்க மறுக்க, “உங்கம்மா போன் பண்ணாங்கன்னு அவசரமா எடுத்திருக்கீங்க. ஆனா, அதுனால உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா, உங்கம்மாவால அதைத் தாங்கியிருக்க முடியுமான்னு யோசிச்சு பாருங்க செஃப். அவங்க எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாங்க?” அவள் பேசிக் கொண்டே போக, இளமாறன் கைக் கட்டி நிமிர்ந்து அமர்ந்து அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் எந்த உணர்ச்சிகளும் இல்லை.
‘அவங்களுக்கு நான் எந்த உறவும் இல்லை.’ வெறுப்பாக நினைத்துக் கொண்டான். அது அவன் கண்களில் அப்பட்டமாக தெரிய, ரோஜா அவனைப் புதிராக பார்த்தாள். அவளுக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது.
“சாப்பிடலாம் ரோஜா. சாப்பாடை காக்க வைக்கக் கூடாது”
அவன் நீட்டிய தட்டை கையில் வாங்கிக் கொண்டாள் ரோஜா.
“ஆந்திர போஜனம், வாவ்” என்றாள் மெய்யான வியப்புடன்.
தட்டில் இருந்த சிறிய கரண்டியை கண் காட்டி, “நமக்கு ஸ்பூன் எல்லாம் செட்டாகாது. கையில சாப்பிடுறேன்” என்றாள்.
“ம்ம். பருப்பு பொடி?” அவன் கேள்வியை முடிக்கும் முன்னரே தட்டை அவனை நோக்கி நீட்டினாள்.
அடுத்ததாக கோங்குரா பச்சடி (புளிச்ச கீரை துவையல்) போட்டு சோறை பிசைந்தாள், நெய்யை எடுத்து நீட்டினான் மாறன்.
“என்ன செஃப் நீங்க? ப்ச், கோங்குராவை அதோட புளிப்பு, காரத்தோட அப்படியே சாப்பிடணும். நெய் போட்டு அதோட டேஸ்ட்டை கெடுக்க கூடாது” புன்னகையுடன் நெய்யை கீழே வைத்து விட்டு உண்ண ஆரம்பித்தான்.
அவனுக்கு உணவு தயாரிப்பது வேலை. அவன் சமைத்த உணவை ஒருவர் ரசித்து உண்ணும் போது கிடைக்கும் மனநிறைவு அவனுக்கு வேறெதிலும் கிடைப்பதில்லை.
ரோஜா ஒவ்வொரு கவள உணவையும் அதன் சுவையை சிலாகித்து உண்பதை பார்த்தவன் உதடுகள் புன்னகையை மறைத்து, உணவை விழுங்கியது.
இருவரும் பேசி, சிரிப்பதைக் காட்டிலும் இப்படி எதிரெதிரே அமர்ந்து உணவை பகிர்ந்துக் கொள்வது, ஏதோ ஒரு வகையில் அவனை மிக நெருக்கமாக உணர வைத்தது. அவளைக் காணும் போதெல்லாம் தடுமாறும் மனதிற்கு அவளைக் காண்பித்தே இயல்பாக இயங்க வைத்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
ரோஜா அடுத்து டோமட்டோ பப்புவை (தக்காளி சேர்த்து சமைக்கப்பட்ட பருப்பு) பரிமாறிக் கொண்டாள். இப்போது தயக்கத்துடன் நெய்யை அவள் புறமாக நகர்த்தினான்.
“ஹா.. ஒரே ஒரு ஸ்பூன் போதும்” சோறின் மீது தூவலாக நெய் ஊற்றி பிசைந்தாள்.
“நான் இன்னையில் இருந்து தெலுங்கு தேசமா மாறிடலாம்னு இருக்கேன் செஃப். இந்த பருப்பு இவ்வளவு க்ரீமியா, டேஸ்ட்டா இருந்தா வேறென்ன பண்றது?” கண்ணை சிமிட்டி அவள் கேட்க, அவனோ பதிலே சொல்லவில்லை.
அவனது அனுபவத்தில் எவ்வளவு கேட்டிருப்பான் அவன். நாளையே வெறும் தக்காளி ரசம் கொடுத்தால் கூட தேவாமிர்தம் என்று சொன்னாலும் சொல்வாள் என்று நினைக்கையிலே அவனுக்கு சிரிப்பு வந்தது.
“குட்டி வெங்காய கூரா” எனப்படும் கத்திரிக்காய் குழம்பை கையில் எடுத்தவள், திரும்பவும் அதை மேஜையில் வைக்க, “ம்ம்?” என்றான் கேள்வியாக இளமாறன்.
குட்டி குட்டி கத்திரிக்காய்களை கீறி அதன் உள்ளே வறுத்து அரைத்த மசாலா கலவையை வைத்து, எண்ணெயில் வதக்கி செய்யப்பட்டிருந்த கத்திரிக்காய் குழம்பை பார்க்கையிலேயே அவளுக்கு வாயில் எச்சில் ஊற செய்தது.
“எனக்கு கத்திரிக்காய் அவ்வளவா பிடிக்காது. நான் சாப்பிட்டேன் சொன்னா கூட எங்கம்மா நம்ப மாட்டாங்க” என்றவளின் தட்டில், அந்தக் குழம்பை பரிமாறினான்.
வெண்டைக்காய் வறுவல், கோவைக்காய் பொரியல், சுரைக்காய் கூட்டு என வரிசையாக எடுத்து கொஞ்சமாக அவள் தட்டில் அவன் பரிமாற, “செஃப், ஒரு வார சாப்பாட்டை ஒரே நாள்ல சாப்பிட வைக்காதீங்க” என்று சலுகையாக அலுத்துக் கொண்டாள் ரோஜா.