ரோஜா பதட்டத்தில் அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்து நின்றிருக்க, அவளுக்கு நெருக்கமாக நின்று அவள் முகம் நோக்கி குனிந்திருந்தான் இளமாறன்.
ரோஜாவின் கண்கள் உணர்ச்சி மிகுதியில் கலங்கியிருந்தது. அவனுக்கு முதல் முறையாக விபத்து நேர்ந்த தினத்திலும் இப்படித்தான் இருந்தாள். புடவை, பூ, நகைகள் என மெல்லிய அலங்காரத்துடன் தேவதையாய் நின்றப் பெண் அவன் முகத்தை கையில் ஏந்தி, கண்கள் கலங்க பயத்துடன், பதட்டத்துடன், அவன் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவன் கண்களைப் பார்த்தது அவனுக்கு இன்னமும் தெளிவாக நினைவிருக்கிறது.
ரோஜாவின் அந்த முகத்தை, அந்த கண்களை, அந்த நிமிடம் அவள் தந்த நம்பிக்கையை, பரிவை அவனால் என்றைக்குமே மறக்க முடியாது. அவன் ஜீவனில் உறைந்திட்ட கணம் அது.
இப்போதும் அதேப் பார்வை தான் பார்க்கிறாள். ஆனால், பதட்டத்திற்கு பதில் பயமும், தவிப்பும், காதலும்? காதல் என்று தான் தோன்றியது. இல்லையேல், குறைந்த பட்சம் அதை ஈர்ப்பு என்று அடித்து சொல்லி விடுவான் அவன். வறண்ட நிலம் நீரை உள்ளிழுத்துக் கொள்வதை போல அவள் பார்வையை மொத்தமாக தனக்குள் இறக்கிக் கொண்டான்.
“ரோஜா” கரகரத்த குரலில் மென்மையான அழுத்தத்துடன் அழைத்தான்.
அவனது அழைப்பையும் மீறி அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியம் அவளை உலுக்கியிருந்தது.
“வாழ்ந்துத் தொலைக்கிறேன். என் கூடவே மட்டும் இரு” என்ன மாதிரியான வேண்டுதல் இது?
தன் ஜீவனை கண்ணில் தேக்கி வைத்தபடி அவன் கேட்டதும் உறைந்தவள் தான். அதிலிருந்து மீளவே இல்லை.
மெல்ல அவள் தோளை பற்றினான். கண்களை சிமிட்டி இப்போது அவனைப் பார்த்தாள். அவன் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பாராமல் தண்ணீர் எடுத்து நீட்டினான்.
ஒற்றை வார்த்தைக் கூட பேசாமலே தொண்டை வறண்டு போய் இருந்தது அவளுக்கு. மறுக்காமல் வாங்கி அருந்தினாள். அவன் மெல்ல விலகி நின்றான்.
ரோஜா கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பாராமல், அந்த திறந்த வெளி உணவகத்தை இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்க வீக் எண்ட் பகல்லயும், மத்த நாள்ல டின்னர் மட்டுமும் சர்வ் பண்றோம்” அவன் சொல்ல, காலியான உணவகத்தின் காரணம் புரிந்தது.
அவளின் அமைதி அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவளின் அண்மையே போதும் என்பது போல நின்றிருந்தான்.
“செஃப்..”
“உங்களை வீட்ல கொண்டு போய் விடுறேன். வாங்க” அவளின் தயக்கம் புரிந்து நடந்துக் கொண்டான்.
“நானே கேப் புக் பண்ணி போய்க்கறேன்”
“ஓகே”
அவளுக்கான வாடகை காரில் ஏறி, அவன் கண் பார்வையில் இருந்து மறையும் வரை அசையாமல் அங்கேயே நின்றிருந்தான் இளமாறன்.
ரோஜா வீடு வந்தப் பின்னர் தான் இயல்பானாள். இத்தனை முக்கியத்துவம் கொடுத்து அவளிடம் யாரும் பேசியதாக அவளுக்கு நினைவில்லை. இளமாறனின் பார்வையும், வார்த்தைகளும், அவனது அண்மை தந்த வெம்மையும் கூட இன்னும் கதகதப்பாய் அவளுக்குள் இருப்பது போலிருந்தது.
அம்மாவிடம் சோர்வாக இருக்கிறது என்று சொல்லி உறங்கும் சாக்கில் தனது அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
மறுநாள் அப்பாவுடன் கேன்டீன் சென்றாள். அங்கு மருத்துவர் சுகந்தியை யதேச்சையாக சந்திக்க நேரிட அவரது மகன் முகம் மனக்கண்ணில் வந்தது. அத்தோடு அவனது கேள்வியும்.
அம்மா, அப்பா, வேலை, வாடிக்கையாளர்கள், உணவு என்று மனதை திசைதிருப்ப அவளுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை இயந்திரத்தனமாக செய்தாலும், உள்ளுக்குள் ஒன்று மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அது இளமாறனின் கோரிக்கை.
மாலையே அதற்கு மேல் தள்ளிப் போட விரும்பாமல் நித்யாவிற்கு அழைத்து விட்டாள் ரோஜா.
“ஹாய் ரோஸ்குட்டி, உனக்கு ஒரு குட் நியூஸ். நாங்க அடுத்த வாரம் ஊருக்கு வர்றோம். ஏற்கனவே பிளான் பண்ணது தான். நீ தானே கேட்டுட்டே இருந்த? உங்க மாமா இப்போதான் ஓகே சொன்னாங்க. வெள்ளிக்கிழமை காலையில அங்க இருப்போம்”
“ஓகேக்கா. அம்மாகிட்ட சொல்லிட்டியா?” என்ற தங்கையின் பதில் நித்யாவுக்கு ஏமாற்றம் அளித்தது. தங்கள் வருகை குறித்த செய்தி தங்கையை மிகவும் மகிழ்ச்சியாக்கும் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள்.
“ஆமா, என்கிட்ட போறதா சொன்னியே. அங்க என்ன நடந்தது?” நித்யா கலக்கத்துடன் கேட்க, அதற்கு மேல் எதையும் மறைக்கவில்லை ரோஜா. தனிமை வேண்டி மருத்துவமனையின் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவள், நடந்த அத்தனையும் அக்காவிடம் ஒப்பித்தாள். இளமாறன் திருமணம் செய்ய கேட்டான் என்று மட்டுமே சொன்னாள்.
அக்காவே என்றாலும், அவன் சொன்ன வார்த்தைகளை, அந்த உணர்வை பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை ரோஜா.
“ஓ? இந்த பார்வை, பேச்சு, பழக்கம், அப்புறம் காதல் இதெல்லாம் இல்லாம நேரா கல்யாணமா?” என்று சிரித்த நித்யா, “நிஜமா கல்யாணத்துக்கு கேட்டாரா ரோஜா? நீ ஏன் பதில் சொல்லல?” என்றும் கேட்க, “என்ன பதில் சொல்ல சொல்ற கா?” என்று கோபமாக கேட்ட ரோஜா, “எஸ் சொல்லணும்னு நினைச்சேன் நித்தி கா.” என்றாள் சிரிப்புடன்.
“வீட்டை நினைச்சு, அப்பாக்கு பயந்து நீ எஸ் சொல்லல” என்றாள் நித்யா. தங்கையின் எண்ணங்களை அவள் நன்கு அறிவாளே.
“அப்படியில்ல கா. ஆனா, அவருக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்க எனக்கு மனசு வரல”
“சரி, என்ன பதில் சொல்லப் போற?”
“நான் அம்மாகிட்ட சொல்லப் போறேன் கா”
“நான் உன் பதிலை கேட்டா, நீ அம்மாக்கிட்ட சொல்றேன் சொல்ற? நிச்சயமா அம்மாக்கு பிடிக்காது ரோஜா. அம்மாவை விடு, அப்பா என்ன சொல்வார் யோசிச்சியா?” நித்யா சொல்ல, இங்கே வாடினாள் ரோஜா.
“நான் ஊருக்கு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணு ரோஜா. நாம சேர்ந்து அம்மாகிட்ட சொல்லலாம். அப்புறம் இளமாறன் கிட்ட நான் பேசணும். எனக்கு ஓகேன்னா தான் விஷயம் அம்மா வரைக்குமே போகும். புரிஞ்சுதா?”
“ம்ம்”
“அதுக்குள்ள நீயும் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. எனக்கென்னமோ இன்னமும் உனக்கு அவர் மேல இருக்கறது சாப்ட் கார்னர்னு தான் தோணுது. அதுக்காக கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிறது சரி வராது ரோஸ்குட்டி”
“நித்திக்கா, அந்த முடிவை நான் எடுக்கிறேன். பிளீஸ்”
“ம்ம். ஆனாலும், அந்த இளமாறன் பிளான் பண்ணி தான் உன்னை லஞ்ச் கூப்பிட்டு இருக்கார். இல்ல?”
“என்னமோ சொல்ற. ஆனாலும், ஒரு மூனு, நாலு முறை பார்த்த ஒருத்தியை எப்படி வாழ்க்கை துணையா இவங்களால செலக்ட் பண்ண முடியுது?” நித்யா கேள்வி எழுப்ப, “உன்னை பொண்ணு பார்க்க வந்த மாமாவை ஒரே பார்வையில் நீ ஓகே சொன்னக்கா. நிச்சயத்துக்கு அப்புறம் தான் பேசி, பழகினீங்க ரெண்டு பேரும். உங்களை விட அதிக முறை மீட் பண்ணிட்டோம் நாங்க” சன்ன சிரிப்புடன் பதில் சொன்னாள் ரோஜா.
“நீ அப்படி வர்ற. ரைட்டு. இப்படி பேசியே அப்பாவை சமாளிச்சுடுவ போலயே?”
“ரோஜா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத. என்ன?” என்ற அக்காவிற்கு உத்திரவாதம் தந்தவள், அதை செயல் படுத்தவில்லை.
அக்கா சொன்னதை மனதில் ஓட்டிப் பார்த்தாள். இளமாறன் எதையும் முன் கூட்டி திட்டமிட்டு கேட்டது போல அவளுக்குத் தோன்றவில்லை.
அந்த நிமிடம் நிகழ்ந்து விட்ட மாயம் அது. அந்தக் கேள்வியை கேட்பதற்கு அதை விட பொருத்தமானதொரு தருணத்தை அவன் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அவளுக்கு அதை இப்போது நினைக்கையிலும் மெய் சிலிர்த்தது.
அடுத்த வந்த நாட்கள் அவள் எண்ணங்கள் முழுவதையும் நிறைத்திருந்த இளமாறனை, நான்கு நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனையில் சந்தித்தாள் ரோஜா.
அவளது விழிகள் அவனை எதிர்பாரா ஆச்சரியத்தில் விரிந்துக் கொண்டது. ஆனால், அவளைச் சந்திக்க வராமல் கடந்துப் போனவனை, “ஹாய் செஃப்” என்று சத்தமாக அழைத்து நிறுத்தினாள்.
“எப்படி இருக்கீங்க? என்ன இந்தப் பக்கம்?” ரோஜா அவனை நெருங்கி படபடக்க, “டாக்டர் பார்க்க வந்தேன் ரோஜா. காயங்கள் முழுசா குணமாகிடுச்சான்னு ஸ்கேன், ஃபாலோஅப்னு மெடிக்கல் விசிட்” நிதானமாக சொன்னான்.
“ஓ” என்று ஏமாற்றமாக சொன்னவள், “என்ன சொன்னாங்க? ஆல் ஓகே?” என்று கேட்டாள்.
“எஸ். இப்போ நான் பெர்பெக்ட்லி ஆல்ரைட் சொல்லிட்டாங்க” என்றவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் ரோஜா. நேற்று தான் அவனுக்கு விபத்து நேர்ந்தது போலிருந்தது, அதற்குள் காயங்கள் ஆறி, கல்யாணம் வரை வந்து விட்ட அவர்கள் உறவை விசித்திர உணர்வுடன் வியந்துப் பார்த்தாள் ரோஜா.
“காஃபி ரோஜா?”
“எஸ் செஃப். நம்ம கேன்டீன் போகலாம், வாங்க.” என்று நகரப் போனவளை, மறுப்பாக தலையசைத்து தடுத்தான்.
“லெட்ஸ் கோ அவுட்” என்றான் வேண்டுகோளாக.
“அப்பா வீட்டுக்கு போய் இருக்காங்க செஃப். அவங்க வர்ற வரைக்கும் நான் இங்கருந்து நகர முடியாதே” அவள் தயக்கத்துடன் சொல்ல, அவளை வற்புறுத்தாமல் அவளை முன்னே செல்லும்படி கைக் காட்டி விட்டு, அவளோடு கூட நடந்தான்.
அங்கே அவர்களது கேன்டீனில் ஓரமாக இருந்த ஒரு மேஜையை ஆக்கிரமித்தான்.
ரோஜா சென்று இருவருக்கும் காபியும், வடையும் எடுத்து வந்தாள். அவனுக்கு எதிரே அமர்ந்தவளின் முகத்தில் பதட்ட ரேகைகள். லேசாக வியர்வைப் பூக்க, துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள். அவர்களையே ஆர்வமுடன் பார்க்கும் பணியாளர்களின் பார்வையை கண்டுக் கொண்டவள், இப்போதே அப்பாவின் விசாரணையை எதிர்கொள்ள தயாராகி விட்டாள்.
“ரோஜா, நான் ஹாஸ்பிட்டலுக்கு உங்களை பார்க்க வரல. சோ, பிளீஸ் ரிலாக்ஸ்.” இளமாறன் சொல்ல, புன்னகைக்க முயன்று தோற்றாள்.
“உங்ககிட்ட இருந்து நான் எந்த பதிலையும் இந்த நிமிஷம் எதிர்பார்க்கல. இன்ஃபேக்ட் நீங்க பதிலே சொல்லலைன்னாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். யூ நோ, அன்னைக்கு இன்னொரு ஜென்மம்னுலாம் நீங்க பேசினப்போ, என்னையும் அறியாம அந்த கேள்வி வந்துடுச்சு. இதுவரை என் லைஃப்ல, என் அம்மம்மாவைத் தவிர எந்த பெண்ணும் என் மேல இவ்வளவு அக்கறை காட்டினது இல்ல. எனக்கு உங்களைப் பிடிக்க அது தான் காரணமா இருக்கும்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன்.” அவள் கண்களை நேராக சந்தித்து அவன் சொல்லிக் கொண்டே போக, ரோஜா அவன் கண்களில் தெரிந்த உணர்வுகளில் தொலைந்தாள்.
அவனை மீறி எதையும் யோசிக்க முடியாது முரண்டியது அவள் மூளை.
“ஐ ரியலி லைக் யூ ரோஜா. கல்யாணம் எல்லாம் யோசிக்காம, நாம நல்ல ஃப்ரெண்ட்ஸா கூட இருக்கலாம். இல்லையா?” அவன் கேட்க, முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு மறுப்பாக தலையசைத்தாள் ரோஜா.
“ரோஜா..”
“ஐ லைக் யூ டூ செஃப். எங்க வீட்ல வந்து பேசுங்க” தன் முடிவை மொத்தமாக அவனை நோக்கி நகர்த்தி வைத்தாள். அவளை அதிர்ந்து பார்த்தவன், தன் முன்னிருந்த காஃபியை அதன் ருசி பாராமல் அருந்தத் தொடங்கினான்.
ரோஜா அவனையே பார்த்திருக்க, அவள் கண்களை சந்திக்க முடியாமல், அந்த உணவகத்தை தீவிரமாக பார்வையிட்டான் இளமாறன்.
“செஃப்..”
“உங்க வீட்ல என்னோட அம்மம்மாவும், தாத்தாவும் வந்து பேசுவாங்க. அது ஓகே தானே? ஏன்னா, நான் அவங்ககிட்ட தான் வளர்ந்தேன். என்னோட அப்பா, அப்புறம்..” அவன் விளக்கி சொல்வதற்குள் விளங்கிக் கொண்டாள். அவனுக்கு சங்கடம் தர விரும்பாமல், “எனக்கு எல்லாம் தெரியும் செஃப். எங்க வீட்லயும் எல்லோருக்கும் தெரியும்.” என்று அவள் கூற, புன்னகைத்தான்.