“இப்போ சொல்லு ரோஜா. உங்க வீட்ல வந்து பேச சொல்லவா? வேண்டாமா?”
“ஏன் அப்படி கேட்கறீங்க? எனக்கு உண்மை தெரியும்ன்றதால என்ன மாறிடுச்சு இப்போ? நீங்க அதைச் சொல்ல தயங்கினீங்க அதான் எனக்குத் தெரியும்னு சொன்னேன். மத்தபடி சுகந்தி மேமை நான் என்னைக்கும் ஜட்ஜ் பண்ணது கிடையாது. இனி மேலும் பண்ண மாட்டேன். என்னைப் பொறுத்தவரை ஜட்ஜ் பண்ற அளவுக்கு அவங்க என்ன பண்ணிட்டாங்க?” சற்றே கோபத்துடன் கேட்டவளை திடுக்கிடலுடன் பார்த்தான் இளமாறன்.
“உலகம் உங்களை மாதிரி யோசிக்கிறது இல்ல ரோஜா” விரக்தியாக சொன்னான்.
“உலகம் என்ன யோசிக்குதுன்னு பார்த்திட்டு இருக்க அளவுக்கு எனக்கு நேரமில்ல செஃப். ஐ ஆம் வெரி பிஸி வித் மை ஓன் லைஃப்.” கைகளை காற்றில் வீசி சொன்னவள், காற்றை விட வேகமாக அவன் மனம் வருடி வசீகரித்தாள். அவன் இதழ்கள் லேசாக பிரிந்து முகம் மொத்தத்தையும் நிறைத்தது புன்னகை.
“ஓகே. தென், உலகத்தை விடுங்க. உங்க வீட்ல என்ன சொல்லுவாங்க?” அந்தக் கேள்வியில் சற்றே தடுமாறினாள்.
“அப்பா சரின்னு தான் சொல்லுவார். அவருக்கு கண்டிப்பா உங்களைப் பிடிக்கும். அது என்னால கன்பார்மா சொல்ல முடியும்.” அவன் கேள்வியாக புருவம் உயர்த்த, “ஏன்னா நீங்க செஃப்” என்றாள் சிரிப்புடன்.
தங்களின் சுற்றுப்புறத்தை கண்களால் ஒரு முறை சுழற்றி விட்டு, “ம்ம்” என்றான்.
“அம்மாவை சம்மதிக்க வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.”
“ஏன்?”
“எனக்கும், ரகுக்கும் வீட்ல கல்யாணம் பேசியிருந்தாங்க” அவள் சொல்ல, கையில் எடுத்த வடையை மீண்டும் தட்டில் போட்டவனின் முகம் சட்டென இறுகிப் போனது.
“அந்த கல்யாணப் பேச்சை எங்கம்மா பிசினஸ் டீலா தான் பார்த்தாங்க” என்றவள், தன் அப்பாவிற்கும், ரகுவின் தாத்தாவிற்குமான உறவை அவனுக்கு விளக்கினாள்.
“அம்மாவோட ஆசையெல்லாம் எனக்கும் நித்யாக்கா மாதிரி மாப்பிள்ளை அமையணும்னு தான்.”
“நித்யா?”
“என்னோட அக்கா. அவளுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு. குட்டிப் பையன் இருக்கான். அக்கா வீட்டுக்காரர் நல்ல வேலையில் இருக்கார். சொந்த பிசினஸ் கிடையாது. அக்கா ஓகே சொல்றதுக்கு முன்னாடியே அம்மா இந்த மாப்பிள்ளையை தான் முடிக்கணும்னு அப்பாகிட்ட சொல்லிட்டாங்க”
“….”
“ரகுவை எங்கம்மா வேணாம்னு சொல்லவும் அதான் காரணம். பிசினஸ் பண்றவங்களுக்கு குடும்பத்தை கவனிக்க நேரம் இருக்காதுன்னு அம்மா சொல்வாங்க. அவங்க சொந்த அனுபவம் அப்படி” இருவரும் தங்களின் குடும்பத்தை, அதன் அந்தரங்கத்தை பகிரவில்லை. ஆனாலும், சொல்லாத வார்த்தைகளின் பின்னிருந்த அர்த்தம் இருவருக்கும் புரியத் தான் செய்தது.
“எங்க வீட்ல வந்து பேசுங்க செஃப். ஆனா, நான் அப்பா, அம்மா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்று அவள் சொல்ல,
“ஒருவேளை அவங்க சம்மதிக்கலைன்னா?” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.
“நீங்க சம்மதம் வாங்கும் வரைக்கும் வெயிட் பண்ணுவேன் செஃப்.” முடிவாக சொன்னாள்.
“இந்த ஜென்மம், இதுக்கு அடுத்த ஜென்மம்.. ஏழேழு ஜென்மம் பத்தில்லாம் எனக்குத் தெரியாது செஃப். நான் உங்க கூடவே இருக்கணும்னு இல்ல. நீங்க என் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறேன். வில் யூ?” அவள் வார்த்தைகள் மெல்ல மெல்ல அவனுள் நிறைந்தது.
ரகுவரனிடம் மட்டுமல்ல, இது நாள் வரை எந்த ஆணிடமும் வந்திடாத உணர்வொன்று அவன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் உதயமாக, அவனது உறவாக முடிவெடுத்தாள் ரோஜா.
“நானும் எங்க வீட்ல பேசுறேன் ரோஜா” என்றவன், காஃபியை குடித்து முடித்ததும் எழுந்தான். அவளின் அலைபேசியை வாங்கி, தன் எண்ணிற்கு ஒரு அழைப்பு விடுத்து விட்டு கிளம்பி விட்டான்.
அவன் இருந்தவரை வேகமாக துடித்த இதயத்தை இயல்பாக்கி அவளும் இயல்பானாள் ரோஜா.
இளமாறன் அன்றிரவு வீடு சென்றான். அம்மம்மா, தாத்தாவிடம் தன் விருப்பத்தை சொன்னான்.
“ரோஜான்னா? நீ எந்தப் பொண்ணை சொல்ற? உங்கம்மா ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிற ரோஜாவா?” கஸ்தூரி சந்தேகம் கேட்க, “உன் பேரன் உயிரை காப்பாத்தின ரோஜாவை சொல்றான் அவன்” என்று பதிலடி கொடுத்தார் சுவாமிநாதன்.
“சரி தாங்க. ஆனா நம்ம பொண்ணு ஹாஸ்பிடல்ல தானே வேலை பார்க்கிறா?”
“இங்க பாரு கஸ்தூரி. எதுவும் தெரியாத மாதிரி கேள்விக் கேட்டு என் கோபத்தை கிளப்பாத. அந்த பொண்ணோட அப்பா, நம்ம சுகந்தி ஹாஸ்பிடல்ல கேன்டீன் வச்சிருக்கார். நீ காலை ஒடிச்சுட்டு அங்க கிடந்தப்போ நேரா நேரத்துக்கு உனக்கு காப்பியும், சாப்பாடும், டிஃபனும் கொண்டு வந்து கொடுத்தது அந்தப் பொண்ணு தான். உனக்காக காரம், உப்பு கம்மியா போட்டு சமைச்சு எடுத்துட்டு வந்து கொடுத்தப்போ மகராசின்னு சொன்ன அதுக்குள்ள மறந்துட்டியே?”
“நா அதெல்லாம் மறக்கல”
“அப்புறம் வேற எதை மறந்த? அன்னைக்கு இதோ நிக்கிறானே, உன் பேரன். இவன் உயிரை காப்பாத்தினதுக்கு கையை பிடிச்சு கண்ணீர் விட்டு நன்றி சொன்னியே. அதையா?” கோபத்தில் குரலை உயர்த்தி அவர் கேட்க, கஸ்தூரியின் முகம் களையிழந்து போனது.
“அதில்லங்க. இவனுக்கு சுகந்தி பொண்ணு பார்த்திருக்கா, அது பத்தி இவன்கிட்ட மாப்பிள்ளை பேசும் போது பொண்ணு ஃபோட்டோ கூட பார்க்காம, கல்யாணம் வேணாம்னு சொல்லியிருக்கான். இப்போ வந்து, வேற பொண்ணை பிடிக்குது. அவங்க வீட்ல போய் பேசுங்கன்னு சொல்றான். அப்போ சுகந்தியும், மாப்பிள்ளையும்…”
“யாருடா இவ கூறு இல்லாம பேசிட்டு இருக்கவ?” மனைவியை பேச விடாமல் இடைப் புகுந்து கத்தினார் சுவாமிநாதன்.
“நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.”
“நீ கேட்டது தப்பில்ல. புரிஞ்சுக்கிட்டது தான் தப்பு. உன் மககிட்ட கல்யாணம் வேணாம்னு சொன்னான்னா, அதுக்கு அவங்க பார்க்கற பொண்ணு வேணாம்னு அர்த்தம். இப்போ அவனுக்கு ஒரு பொண்ணை பிடிக்கவும், நம்மகிட்ட வந்து சொல்றான். அவ்ளோ தான்” என்று முடித்து விட்டார்.
இளமாறன் இருவரையும் அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“நாம அவங்க வீட்டுக்கு போய் நம்ம பேரனுக்கு பொண்ணு கேட்கறோம். கல்யாணம் பேசறோம். புரிஞ்சுதா?” அவர் கேட்க, தலையாட்டினார் கஸ்தூரி.
பெரியவர்களின் பேச்சை, அவர்களின் சம்மதமாக, அதைத் தகவலாக ரோஜாவிற்கு உடனே தெரியப்படுத்தினான் அவன்.
“நான் இன்னும் எங்க வீட்ல பேசல செஃப். இந்த வாரம் நித்திக்கா நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருக்கா. அவளுக்காக வெயிட்டிங். அதுவரை நீங்களும் வெயிட் பண்ணுங்க பிளீஸ்” என்று அவனுக்கு பதில் அனுப்பினாள் ரோஜா. சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் அவன்.
ஆனால், அவர்களைப் போல பெரியவர்களுக்கு பொறுமையில்லை.
மறுநாள் மாலையே ஒரு நிச்சயதார்த்தத்தையே நடத்தி விடும் மும்முரத்துடன் ரோஜா வீட்டில் இருந்தார்கள் இளமாறன் குடும்பத்தினர்.
“வாங்க டாக்டர். வாங்கம்மா, ஐயா வாங்க” திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வீடு வந்தவர்களை பரபரப்புடன் வரவேற்ற சித்ரா, அவர்களின் முன்னேற்பாடுகளை பார்த்து அதிர்ச்சியானார்.
“உட்காருங்க டாக்டர். நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன். அப்படியே ரோஜா அப்பாவையும் வரச் சொல்றேன்” தன் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர் பேச, “நீங்களும் உட்காருங்க சித்ரா. நான் ரோஜா அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். ரோஜாவை கூட்டிட்டு வர்றேன் சொன்னார். அதுவரை நாம பேசிட்டு இருக்கலாம்” என்று சித்ராவின் கைப் பிடித்து சிரிப்புடன் சொல்லி முடித்தார்.
சித்ரா அவர்களை புதிராக தான் பார்த்தார். அவர்களை அமர வைத்து தண்ணீர், காஃபி, டீ என்று கொடுத்து உபசரித்தார்.
இருபது நிமிடங்கள் கழிந்திருக்க, சித்ராவுக்கு பதட்டம் கூட, அவர்கள் பேசும் வரை பொறுமை காக்க முடியவில்லை.
“அவர் வர நேரமாகும் போல டாக்டர். நீங்க என்ன விஷயம்னு என்கிட்டயே சொல்லுங்க” என்று கேட்டு விட்டார்.
“எங்க மூத்த மகன் இளமாறனுக்கு உங்கப் பொண்ணு ரோஜாவை கேட்டு வந்திருக்கோம்” என்றார் சுகந்தி.
சித்ரா அதிர்ந்து விழிக்க, சரியாக அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தனர் ரோஜா மற்றும் சிவஹரி.