காரிருளை கிழித்துக்கொண்டு வான்மேகம் மழைநீரை பூமியில் கொட்டிக்கொண்டிருந்தாள். எங்கும் காற்றின் பேரிரைச்சல். நீர் தெறிக்கும் ஓசை. நீரின் குளுமை கோடை காலத்தையும் மார்கழியாக மாற்றியிருந்தது.
நொடிக்கு ஒரு மின்னல் வெட்ட… இடியின் சத்தம் திசையெங்கும் மத்தளம் கொட்டியது.
சாலையெங்கும் கணுக்கால் மூழ்கும் வெல்லம்.
அடிக்கும் காற்றுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துவிடும் போல் இயற்கை தன் போக்கில் மழையாய் காற்றாய் பூமிக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்.
அந்த மழை இரவில், சிறு பூச்சிகள் கூட தங்களது வீடான துளைகளுக்குள் தஞ்சம் கொண்டிருக்க…
இருபத்தியேழு வயதான இளம் காரிகை மட்டும், அரங்கேறி கொண்டிருக்கும் இயற்கையின் சூழலை கருத்தில் கொள்ளாது மொட்டை மாடியில் மார்பிற்கு குறுக்கே தன்னிரு கைகளையும் கட்டிக்கொண்டு அசைவேன பாரென்று இறுக்கமாக நின்றிருந்தாள்.
கொட்டும் வான் நீர் உடலை ஊசியாய் பதம் பார்த்தாலும், ஈரத்தின் சில்லிப்பு பாதம் வழி உச்சியை துளைத்தாலும், வீசும் காற்று அவளின் திடத்தை சிதைத்தாலும் தன்னுடைய பிடிவாதத்தில் பிடிவாதமாக இருந்தாள் பேதை.
அவள் சம்ருதி.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில், மாநிலத்தின் புகழ்வாய்ந்த அறக்கட்டளையான சுடர் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறாள். இப்போது விடுமுறைக்காக கோயம்புத்தூர் வந்திருக்கிறாள்.
பிடிவாதம் பிடிக்கக் கூடாதென்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியை, மழையில் நின்று கொண்டு வரமாட்டேனென்று நகராது அடமாக நிற்பதற்கும், சம்ருதியிடம் வலுவான காரணம் ஒன்று உள்ளது.
அவள் வேண்டும் காரணம் அவளது உடன்பிறப்பானா சம்யுக்தாவுக்கு சரியாகப்படவில்லை. அவர்களின் மறுப்பை விருப்பமாக மாற்றுவதற்கே இந்த போராட்டத்தில் இறங்கியிருக்கிறாள் சம்ருதி.
“சம்ரு சொல்றதை கேளு. உனக்கு மழை ஒத்துக்காதுடி.” சம்யுக்தா கத்தல் யாவும் ஓடும் மழை நீரில் வீணென கரைந்தது.
“மாமா வந்தால் பிரச்சனை ஆகிடும் சம்ரு” என்று அழைத்துக் கொண்டிருந்த யுக்தாவுக்கு மழை நீரில் கால் வைக்கவே அச்சமாக இருந்தது.
அந்நேரம் வெட்டிய மின்னலில் அரண்டவளாய் “மாமா” என்று அவள் கத்தியிருக்க, மாடியேறி வந்திருந்தான் வருண்.
வந்தவன் விடாது மழையில் அசையாது நின்றிருந்த சம்ருதாவை ஒரு பார்வை பார்த்தான். நொடிக்கும் குறைவான பார்வை. இருப்பினும் அத்தனை அழுத்தம் தொக்கி நின்றது அதில்.
“அவள் அவளோட பிடிவாதத்தோட அளவை காட்டும் போது நாம் நம்முடைய பிடிவாதத்தை காட்டுவோம். நீ வா” என்று மனைவியை கையோடு அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டான் வருண்.
“அவளுக்கு மழை ஒத்துக்காது மாமா.” தங்கையை நினைத்து வருத்தம் கொண்டாள் யுக்தா.
“அதுக்காக அவள் கேட்குறதை நிறைவேத்தி கொடுக்க சொல்றியா? அவள் ஒண்ணும் நம்ம தருண் குட்டி கிடையாது. புரியாமல் தெரியாமல் அடம் பிடிக்கிறதுக்கு” என்ற வருணுக்கு சம்ரு மீது முதல் முறையாக கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
அவள் முன் நின்றால் வருந்துபடி ஏதேனும் பேசிவிடுவோமோ அல்லது கோபத்தில் அடித்து விடுவோமோ என்று அஞ்சியே மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வந்திருந்தான்.
“காத்து பயங்கரமா இருக்கு மாமா.” யுகியின் பார்வை மாடி படிகளின் மீதே இருந்தது.
மனைவியின் பயந்த சுபாவம் அறிந்தவன், அவளிடம் சத்தமிட்டதற்கு தன்னையே நிந்தித்தவனாக நெற்றியில் தட்டிக்கொண்டவனாய் “சாரிடி” என்று அவளின் கன்னம் பிடித்தான்.
“போங்க மாமா. பாப்பா அங்க…” என்றவள் வரியை முடிக்காது, தேம்பியபடி இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
தன்னிடம் முறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் யுகியையும், சம்ரு இருக்கும் திசையை அடைந்திட வழியாக இருந்த மாடிப்படியையும் சில கணங்கள் மாற்றி மாற்றி பார்த்தவன் தன்னிரு கைகளையும் இடையில் ஊன்றியவனாக ஆயசாமாக தலையை இருபக்கமும் ஆட்டினான்.
சில நொடிகளில் யுகியின் அருகில் பொத்தென்று அமர்ந்தவன், இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
‘எப்படியிருந்தவள்?’ நினைக்கவே மனம் பாரமானது. நினைவுகள் சுமையானது.
“மாமா…”
வருணிடம் அசைவில்லை.
“அவள் கேக்கிறதை செய்து கொடுத்திடலாம் மாமா. அவள் ஆசை இதையாவது நிறைவேத்தி வைப்போமே. அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேணுமே!” யுகி இரைஞ்சுதலாய் கேட்டாள்.
“இப்போ மட்டும் இதை செய்தோம்ன்னு வை… இதுதான் சாக்குன்னு கல்யாணமே வேணான்னு இருந்திடுவாள்.” இம்முறை வருண் கத்தவில்லை. ஆனால் தான் சொன்னது தான் நடக்கும் எனும் உறுதி. வார்த்தையில் அத்தனை அடர்த்தி.
“இன்னமும் அவள் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவான்னு உனக்கு நம்பிக்கை இருக்கா மாமா?” யுகியின் குரல் உடைந்து வந்தது.
“இப்போ என்னை என்னதான் பண்ண சொல்ற யுக்தா?”
“ப்பா… ம்மா…”
“தருண் கூப்பிட்றான்…” வருண் இழுக்க,
“அச்சச்சோ… மேல என்கூடத்தான் நின்னுட்டு இருந்தான் மாமா” என்று யுகி வேகமாக எழுந்து மேலே ஓட, வருணும் அவள் பின் ஓடினான்.
மொட்டை மாடி வாயிலான முதல் படியில் நின்று சிறுவன் கத்திகொண்டிருந்தான்.
“என்னோட மெடிக்கல் கிட் எடுத்துட்டு வா” என்று மனைவியை விரட்டினான்.
சம்ருவின் கூந்தல் பின்னலை அவிழ்த்தவன், துண்டால் துவட்டியபடி அவளின் கன்னம் தட்டி, அவளை விழிக்க வைக்க முயன்று கொண்டிருந்தான்.
யுகி வருணின் மருத்துவ பையை கொண்டு வந்து கொடுக்க… அவளது கையிலிருந்து வாங்கியவன்,
“ஹேர் டையர் போடு” என்று சொல்லிவிட்டு, மருந்தினை எடுத்து ஊசியில் ஏற்றி சம்ருவின் கையில் துளைத்து உடலுக்குள் செலுத்தினான்.
“பாடி ரொம்ப கூல் ஆகிருச்சு. இன்னும் கொஞ்ச நேரமிருந்திருந்தாலும் விறைச்சு போய் சேர்ந்திருப்பாள்” என்ற வருண், எவ்வித தயக்கமும் பார்க்காது சம்ருவின் பாதத்தை சூடு பறக்க தேய்த்துவிட்டான்.
“மேக்சிமம் தர்ட்டி மினிட்ஸ். கண் விழிச்சிடுவாள். முதலில் அவளுக்கு ட்ரெஸ் மாத்திவிடு” என்ற வருண் மகனை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.
வருண் என்னதான் பெண்கள் இருவருக்கும் சொந்த தாய்மாமன் மகனென்றாலும் யுகிக்கு முன்பு சம்ரு தான் நல்ல நெருக்கம். அவன் கை பிடித்து அவள் சுற்றாத இடமே இல்லை.
வருணின் நீண்ட நாள் ஆசை கனவான அவனது காதல் நிறைவேற காரணமே சம்ருதி தான். யுகியுடன் காதலாய் ஒரு வாழ்க்கை அவன் வாழ்கின்றானென்றால் அதன் அஸ்திவாரம் சம்ருதி.
ஆனால் இன்று மட்டுமல்ல அன்றும் அவளது விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் வருண்.
விழியாலேயே மனைவியை அழக்கூடாது என்று தேற்றிய வருண், இருவருக்கும் முன் சென்று அமர்ந்து, யுகியின் கையிலிருந்த தட்டினை தான் வாங்கிக்கொண்டு, மற்றொன்றை காண்பித்து யுகியை சாப்பிடுமாறு கூறியதோடு, உணவினை எடுத்து தானே சம்ருவின் வாய் அருகே கொண்டு போனான்.
‘இனி எப்படியும் கணவன் தன் தங்கையை சரி செய்திடுவான்’ என்று அறிந்திருந்த யுகி நமக்கு எந்த நிலையிலும் சோறு தான் முக்கியம் என்ற ரீதியில் இருவரையும் கருத்தில் கொள்ளாது சாப்பிட ஆரம்பித்தவள், தருண் தனியாக இருப்பதாக சென்றுவிட்டாள்.
வருண் உணவு அடங்கிய கையை நீட்டிக்கொண்டே இருக்க… யுகியிடம் மருத்தவளால், அவனிடம் மறுக்க முடியாது முறைத்துக்கொண்டே ஆ வாங்கிக்கொண்டாள்.
“ப்ளீஸ் மாமா.” உணவு வாயோடு அவள் கேட்க, கண்களில் நீர் தலும்பியது.
“ஐ நீட்… ஒன் வேலிட் ரீஸன்.” அடுத்த வாய் உணவை ஊட்டிட உயர்ந்த அவனது கை அவள் சொல்லிய பதிலில் அப்படியே அதிர்ந்து நின்றது.
“சம்ரு…!”
“ப்ளீஸ்… இந்த சந்தோஷமாவது எனக்கு கிடைக்கட்டுமே மாமா!”
சம்ருதியின் இந்த பதிலில் வருண் உள்ளுக்குள் சுக்கு நூறாக நொறுங்கிப்போனான்.