மாநிலத்தின் மிகப்பெரிய கல்வி அறக்கட்டளை. அதன் தலைமையிடம் திருச்சியில் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களிலும் சுடர் கல்லூரிகள் இயங்குகின்றன.
அதன் நிர்வாகியான அம்மையப்பன் பொறுப்புகள் யாவற்றையும் தன்னுடைய மகனிடம் ஒப்படைத்துவிட்டு மூன்று ஆண்டுகளாக தலை மீதிருந்த பெரும் பொறுப்பை இறக்கி வைத்துவிட்டு முதுமையை அமைதியாக அனுபவித்து கழித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது நாளின் விடியல் ரசனையான தேநீர் பருகுதலில் தொடங்கி இரவு குடும்பத்துடன் அமர்ந்து சிறிது நேரம் சந்தோஷமாக பேசுவதோடு முடிவடையும்.
அளவான குடும்பம். அம்மையப்பனின் மனைவி சுஜாதா. மூன்று மக்கள்
மாதம் ஒரு முறை மனதில் தோன்றும் தங்களுடைய கல்லூரிக்கு சென்று மேற்பார்வையிட்டு, மாணவர்களிடையே நிறை குறை கேட்டறிந்து வருவான். எப்போதும் தன்னை பணிச்சுமையிலே வைத்திருப்பான். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தால் நினைவுகள் எங்கு தன்னை கொன்று தின்றுவிடுமோ என்கிற பயத்திலேயே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வேண்டாமென்று மறுத்துக்கொண்டிருந்த நிர்வாக பொறுப்பை தானாக கையில் எடுத்துக்கொண்டான். தந்தைக்கு ஓய்வு அளித்தவனாக.
சொல்லப்போனால் அம்மையப்பன் கேட்ட நேரமெல்லாம் நிர்வாகி இருக்கையில் அமராது, தன்னுடைய சிந்தையை மூழ்கடிக்கவே பணிகளை தலையில் சுமக்க ஆரம்பித்திருந்தான். அதுவரை கல்லூரிகளின் செயல்பாடுகள் மற்றும் மற்ற ரிஜிஸ்டர்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அனைத்தும் அவனது கட்டுப்பாட்டில்.
விஷ்வா கல்லூரிகள் பொறுப்பை ஏற்றதும் பள்ளிகள் இல்லாத பல பகுதிகளில் பள்ளிகளை தொடங்கி தங்களின் அறக்கட்டளையின் கீழ் கொண்டுவந்திருந்தான். அதன் பின்னர் பெரும் பகுதிகளிலும் சுடர் பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன. பணியில் இறங்கிய இரண்டு வருடத்தில் கல்லூரிகள் அளவிற்கு பள்ளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்பித்திருந்தான். இதற்கான விஷ்வாவின் உழைப்பு வார்த்தையில் சொல்லிட முடியாதது.
விஷ்வா எதற்கோ பயந்து ஓடிய ஓட்டத்திற்கு பலன் கிட்டியது. இன்று முதன்மை கல்வி நிறுவனம் சுடர் தான்.
அம்மையப்பன் இருந்தவரை முதல் மூன்று இடங்களில் மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்த சுடர் கல்வி குழுமம், விஷ்வா கையில் எடுத்துக்கொண்டதற்கு பின்னர், கடந்த இரண்டு வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
காலை எட்டு மணியளவில் கல்லூரிக்கு செல்ல கிளம்பித் தயாராகி தன்னுடைய அறையிலிருந்து மாடியிறங்கி படிகளில் வந்து கொண்டிருந்த மகனின் அமைதியான அழுத்தமானத் தோற்றத்தை எப்பொழுதும் போல் வியந்து பார்த்தார் அம்மையப்பன்.
“வா விஷ்வா. உட்கார்” என்று தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டவர், “காலேஜ் கிளம்பிட்டியா?” எனக் கேட்டார்.
“ம்.” ஒற்றை வார்த்தையாய் விழுந்த பதிலே அவருக்கு போதுமாக இருந்தது.
விஷ்வா எப்போதும் அளந்து தான் பேசுவான். நறுக்குதரித்தார் போலிருக்கும் அவனது பேச்சுக்கள். அவசியமற்ற பேச்சுக்களை அறவே ஒதுக்கிடுவான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல்லை அவனிடமிருந்து பெற முடியாது.
அவனும் வாய் ஓயாமல் பேசிய நாட்களும் உண்டு. அந்த பக்கங்கள் யாவும் அவனது குடும்பத்தினரே அறிந்தது கிடையாது.
“சுஜா…” அம்மையப்பன் அடுக்களை நோக்கி குரல் கொடுக்க,
சுஜாதா கையில் பாலுடன் வேகமாக வந்தார். சரியாக விஷ்வாவின் அருகில் வரும்போது அவரது புடவை தடுக்கிட, சுஜாதா சுதாரிக்கும் முன் கவனித்துவிட்ட விஷ்வா, அன்னையை ஒரு கையாளும் பால் நிரம்பிய கண்ணாடி தம்ளரை ஒரு கையாளும் பிடித்து, கீழே விழாது தடுத்திருந்தான்.
“எத்தனை தடவைம்மா சொல்றது, இப்படி ஓடி வராதீங்கன்னு. அப்பா கூப்பிட்டால் உடனே வரணுமா என்ன?” என்றவனின் அதட்டலுக்கெல்லாம் சுஜா எதிர்வினை ஆற்றாது, அவனது கடிதலில் இருந்த அக்கறையை மட்டும் உணர்ந்தவராக புன்னகையோடு மகனை பார்த்திருந்தார்.
“இப்படி வரலன்னா, இந்த பாலையும் குடிக்காமல் கிளம்பிடுவியே” என்றவர், “நான் ஒருவாட்டி பேசி பார்க்கட்டுமா விஷ்வா?” எனக் கேட்டார்.
“அம்மா…” வீடே அதிர கத்தியவன்,
சுஜாதாவின் உடல் நடுக்கத்தை கண்டு கொள்ளாது,
“முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்” என்றவனாக, அம்மையப்பனிடம் சிறு தலையசைப்புடன் வெளியேறியிருந்தான்.
மகனின் கத்தல் ஒன்றும் அவருக்கு புதிதல்ல. இப்படி அரண்டு நிற்பதும் புதிதல்ல.
மனைவியின் அருகில் வந்த அம்மையப்பன்,
“அவனுடைய சுபாவம் இதுதான்னு தெரியுமே! அப்புறமும் எதுக்கு ஒவ்வொரு முறையும் இப்படி பயந்து நடுங்குற?” என்று கேட்டார்.
“அவன் என் மகன்’ங்க. ஒருவார்த்தை அவன்கிட்ட பேச முடியுதா? எதை கேட்டாலும் அழுத்தமான பார்வை. இப்போ நான் என்ன கேட்டன்னு இந்த கத்து கத்திட்டு போறான்?” குறைப்பட்டவராக இருக்கையில் அமர்ந்தார்.
“நீங்க என்ன கேட்டிங்கன்னு உங்களுக்கே மறந்துபோச்சா? இருங்க அண்ணாக்கு கால் பண்ணி கேட்கிறேன்” என்று அவர்களிடம் வந்த அனு தன் மெடிட்ட வயிற்றை பற்றியவளாக மெல்ல இருக்கையில் அமர்ந்தாள்.
அனு வந்ததை கவனித்த சுசித்ரா,
“ஸ்ரீ எழுந்துட்டாளா அனு?” எனக் கேட்டவாறு கிச்சனிலிருந்து வந்தாள்.
அனு விஷ்வாவின் தங்கை. சுசி விஷ்வாவின் அண்ணன் மித்ரனின் மனைவி. அவர்களுக்கு ஸ்ரீநிதி என்கிற ஐந்து வயது மகள் இருக்கின்றாள்.
அவ்வீட்டின் பொறுப்பு மொத்தமும் சுசியிடம் தான். மாமியார் மருமகளிடையே இருக்கும் ஒற்றுமை வெளியாட்களுக்கு ஆச்சரியமே!
மித்ரன் மென் பொருள் நிறுவனம் வைத்துள்ளான். அது அவனது சொந்த முயற்சி. அதனின் தொடக்கத்திற்காக தந்தை கொடுத்த பணத்தை ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருப்பி கொடுத்திருந்தான். கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அம்மையப்பன் மறுத்தும், தன்னுடைய தொழிலில் மித்ரன் என்கிற தனி மனிதனாக கால் ஊன்றிடவே விரும்பினான். மகனின் எண்ணம் அறிந்து பெருமை கொண்டவர், அவன் திருப்பி கொடுத்த பணத்தை அப்படியே தன்னுடைய பேத்தியின் பெயரில் வங்கியில் போட்டு வைத்துவிட்டார்.
அனுவிற்கு திருமணம் முடிந்து கணவன் வினித் உடன் கோயம்புத்தூரில் வசிக்கின்றாள். வினித் கன்ஸ்டரக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறான். அங்குள்ள சுடர் கல்லூரியை அனு தான் பார்த்துக்கொள்கிறாள். ஆனால் மொத்த கல்வி குழுமமும் விஷ்வாவின் தலைமை மற்றும் கண்காணிப்பில் தான் இயங்குகிறது. அனு இப்போது ஏழு மாத கருவை சுமந்து கொண்டிருப்பதால் அன்னை வீட்டில் இருக்கின்றாள்.
“அவளே குளிக்கிறன்னு போயிருக்காள் அண்ணி” என்ற அனு,
“நீங்க ஏம்மா அண்ணாக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அந்த பேச்சை எடுத்தீங்க?” ஆற்றாமையாகக் கேட்டாள்.
“குழந்தையை வைத்து அவள் பேசிய பேச்சை மறந்துட்டிங்களா அத்தை?” எனக் கேட்ட சுசி… “இப்போ தான் கொஞ்சநாளா நிம்மதியா இருக்கான். அதையும் கெடுக்கலாம் பாக்குறீங்களா? இனியாவது அவன் விருப்பத்தை யோசியுங்களேன்” என்று சுஜாவிடம் கூறிய சுசி அவர் மீது காட்ட முடியாத கோபத்தை கிச்சனிற்குள் சென்று காய்கறிகளிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.
“அண்ணி சொல்றதில் தப்பில்லைம்மா. அண்ணா வாழ்கைக்கு நீங்களும் ஒரு காரணம் தான்.” சொல்லிய மகளை வேதனையோடு பார்த்தார் சுஜா.
“இப்படியெல்லாம் பார்த்தால் சும்மா விட்ருவோமா? இதுக்குமேல அண்ணாகிட்ட மட்டுமல்ல, யார்கிட்டையுமே இதை பேசாதீங்க. மொத்தமா மறந்துடுங்க” என்ற அனு தந்தைக்கு கண் காட்டிவிட்டு, “அனு ஸ்கூலுக்கு கிளம்பிட்டாளான்னு பார்க்கிறேன்” என்று எழுந்து சென்றாள்.
“நான் என்னங்க தப்பு பண்ணேன்?” ஆத்தமாட்டாது கேட்ட சுஜா கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார்.
“நீ பண்ணது தப்பாகிருச்சு. விடு சுஜா. விஷ்வா சொன்ன மாதிரி முடிஞ்சது முடிஞ்சதாவே போகட்டுமே!” என்றார்.
“அவன் இப்படியே இருந்திடுவானாங்க?” மகனின் வாழ்க்கை குறித்த பயம் அவரின் கேள்வியில் தெரிந்தது.
“கொஞ்சநாள் போகட்டும் சுஜா. அவனிடம் பேசுவோம். ஒரு முடிவெடிப்போம். மித்ரனை பேச சொல்லுவோம்” என்ற கணவரை இப்போது சுஜா நன்கு முறைத்தார்.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பாக்குற?”
“தம்பியை எதிர்த்து அவன் பேசிட்டாலும். விஷ்வா சொல்றதைத்தான் மித்ரன் கேட்கிறான். சில நேரத்துல எனக்கே டவுட் வருது யாரு அண்ணா, யாரு தம்பின்னு” என்ற சுஜா…
“விஷ்வா வாழ்க்கையில ஒரு நல்லதை பார்த்துட்டேன்னா, நிம்மதியா இருப்பேன்” என்றார்.
“அதுக்காக அவன் நிம்மதியை கெடுக்கணுமா?” என்று பட்டென்று கேட்டுவிட்ட பின்னரே வார்த்தையின் வீரியம் உணர்ந்தார் அம்மையப்பன்.
சுஜாதாவின் கண்கள் பொலபொலவென்று கண்ணீரை கொட்டியது.
“நான் எதையும் மீன் பண்ணல சுஜா!” மனைவியின் கண்ணீர் கண்டு பதறினார்.
“புரியுதுங்க” என்ற சுஜா, “அதுக்காக அவனை இப்படியே விட்டுட சொல்றீங்களா? நம்ம வீட்டு இளவரசங்க அவன். முன்னது நடந்தது சரியில்லைன்னா பின்னதும் அப்படித்தான் இருக்குமுன்னு இல்லையே” என்று அப்போதும் தன் பிடியிலேயே நின்றார் சுஜாதா.
“இப்போ தான் கடந்து வந்திருக்கான். கொஞ்ச நாளாகட்டும்” என்ற அம்மையப்பன், “நீ திரும்பத்திரும்ப இதையே பேசுறன்னு தெரிஞ்சுது சுசி உன்னை உண்டில்லைன்னு செய்திடுவாள்” என்று அம்மையப்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கையில் பையுடன் வந்தாள் சுசித்ரா.
“நிதியை ஸ்கூலில் விட்டுடுங்க மாமா” என்றவள் தன்னுடைய அத்தையை அழுத்தமாக பார்த்துச் சென்றாள்.
“இவளுக்கு மட்டும் தான் அவன் அடங்குறான். இவள் கொஞ்சம் பேசலாமில்ல அவன்கிட்ட.”
“நீ சுசிகிட்ட வாங்கிகட்டிக்கிட்டாத்தான் அடங்குவ” என்றவர் தன்னுடைய பேத்தியை தேடி நகர்ந்தார்.
தங்களது கல்லூரிக்கு வந்த விஷ்வா, அவனது அலுவலக அறைக்கு முன்னிருந்த உலகின் மூத்த முதல் கடவுளான கணபதியின் திருவுருவ சிலைக்கு முன்னின்று சில நொடிகள் கண்மூடி வணங்கிவிட்டு உள்ளே சென்றான்.
இது அவனது வழக்கம். கடவுளிடம் எவ்வித வேண்டுதல்களும் அவனக்கு இல்லை. வைத்த வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறாது அவனது மனதை ரணமாக்கியிருக்க, நடந்தவைகளின் வீரியம் இதுமட்டுமோடு நின்றதே என்கிற நேர்மறையில் நன்றி சொல்லுவான். அவ்வளவே!
கல்லூரி ஒன்பது மணிக்கு என்றால், விஷ்வா எட்டரை மணிக்கே வந்துவிடுவாம். ஓரிடத்தில் தலைமை சரியாக இருப்பின், மற்றவர்களும் சரியாக செய்வர் என்கிற நம்பிக்கை அவனிடத்தில். ஆதலால் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தான் எப்போதும் எதிலும் சரியாக இருக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டவன்.
‘மிஸ்டர்.பெர்பெக்ட் வெர்சன் அவன்.’
ஓரிடத்தில் மட்டும் சறுக்கி விட்டான். மீண்டுவிட்டான் தான். ஆனால் அதனின் தாக்கம். பச்சை ரணமாய் அவனுள் பொதிந்துள்ளது.
தாளாளர் இருக்கையில் சென்று அமர்ந்தவன் கண்களை இறுக மூடினான்.
காலையில் அவனது அன்னை ஆரம்பித்த வைத்ததின் விளைவு, மூன்று வருடங்கள் பின்னோக்கி சென்று, தன்னவளின் கண்ணீர் நிறைந்த முகத்தை தன்னிரு கைகளிலும் அவன் ஏந்தி நின்ற தருணத்தை அகக்கண் வழியே ரசித்தான்.
அவள் அழுகிறாள். இவன் ரசிக்கிறான். இவர்களது காதலே சற்று விந்தையானது தான்.
சொல்லிக்கொண்டதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. உணர்ந்திருந்தனர். ஒருவர் மனதை மற்றொருவர்.
பார்வையோடு எட்ட நின்று ஜீவித்த சொல்லாத காதல் கதை அது.
சொல்ல வேண்டியவனும், கேட்க வேண்டியவளும் தங்களின் அமைதியில் நிலையாய் நின்றிட, அவன் துடித்த கணங்கள் ஏராளம். அவள் துடிக்க வைத்திட்ட நொடிகள் தாராளம்.