புருஷோத்தமனுக்கு சுடர் அறக்கட்டளையின் மீது ஓர் கண்.
என்னதான் மனைவியின் அண்ணன். தங்கையின் கணவனென்று தன் தந்தைக்கு மேலாக நிறைவாகவே அம்மையப்பன் செய்திருந்தாலும் அதெல்லம் புருஷோத்தமனுக்கு போதவில்லை.
சுடர் அரியணையில் அம்மையப்பன் அமர்ந்திருக்கும் போதெல்லாம், அங்கு தான் அமர வேண்டுமென்கிற வெறியே அவருள் எழுந்திடும்.
விஷ்வா சிறுவயதில்… சுடர் அறக்கட்டளை நலிவில் இருந்தபோது, எப்படியும் அம்மையப்பனால் சமாளிக்க முடியாது விட்டு ஓடிவிடுவான். தான் அங்கு ஆட்சி செய்திடலாம் என்ற அவரின் எண்ணத்தையெல்லாம் இரண்டே வருடத்தில் முறியடித்திருந்தார் அம்மையப்பன்.
சுஜாதாவின் அன்பான குணம் கண்டு தான், விஸ்வேஸ்வரன் தன் மகன் அம்மையப்பனுக்கு சுஜாவை மணம் முடித்து வைத்தார். சுஜாவும் அன்பானவர், குடும்பத்தின் சூழலறிந்து அனைவரையும் அரவணைத்து செல்பவர் தான். என்ன ஒன்று அண்ணனென்றும் வந்துவிட்டால் அவரின் உலகம் பார்வை இழந்துவிடும்.
அதனால் அம்மையப்பன் எப்போதும் புருஷோத்தமன் விடயத்தை மனைவியிடம் வைத்துக்கொள்ளமாட்டார்.
தங்கையை கொடுத்து அக்ககுடும்பத்தில் நுழைந்துவிடலாம் என்ற புருஷோத்தமன் எண்ணம் நிறைவேறாது போக, சுஜாவின் மூலம் இந்திராவின் மீது தனக்கு விருப்பமென்று பேசி, இந்திராவையும் தன் பக்கம் இழுத்து அக்குடும்பத்தின் மருமகனாக நுழைந்தவரால், அவர் விருப்பத்திற்கு ஒன்றும் தேற்ற முடியவில்லை.
வருடங்கள் இருபத்தி மூன்று கடந்தும் அம்மையப்பனை அவரால் தன் வழிக்கு கொண்டுவர முடியவில்லை.
அம்மையப்பன் தங்கை கணவருக்கு தான் தான் செய்ய வேண்டுமென்று அன்பாக செய்தவை யாவும் புருஷோத்தமனுக்கு அவர் யாசிப்பாகக் கொடுப்பதாகத்தான் தெரிந்தது.
காமாலை காரனுக்கு அனைத்தும் மஞ்சளாகத் தெரியும் என்பார்களே அதே கதை தான். தன்னிடம் குற்றம் இருப்பதால் பார்ப்பது யாவும் புருஷோத்தமனுக்கு குறையாகத்தான் தெரிந்தது.
யாசிப்பு என்று நினைப்பவருக்கு அதனை திருப்பிக் கொடுத்திட மட்டும் மனமில்லை.
மித்ரன் பிறந்தது முதலே அவனை தன் கையுக்குள் போட்டுக்கொள்ள எவ்வளவோ முயற்சித்தார். முடியாது போனார். அடுத்து விஷ்வாவும் அவருக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்தான்.
மித்ரன் அம்மையப்பன் வார்ப்பு என்றால், ஆளுமை, அதிகாரம், தோற்றம் என அனைத்திலும் விஷ்வா விஸ்வேஸ்வரனின் பிரதிபிம்பமாக இருந்தான்.
குடும்பமே இத்தனை புத்தி உடையதாக இருந்தால், தான் என்ன செய்வதென்று அவரால் நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
அதனால் முடிந்தவரை சுஜாவை வார்த்தையால் வளைத்தே தனக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இதுவும் பற்றவில்லை.
மித்ரன், விஷ்வாவிடம் சிறுவயதில் முடியாததை இப்போது நடத்த நினைத்தார்.
அவருக்கு தெரியவில்லை… ஐந்தில் வளையாத ஒன்று எவ்வயதிலும் வளைந்து கொடுக்காதென்று.
அஞ்சலியை இவ்வீட்டிற்கு மருமகளாக்கிட வேண்டுமென்பதே தற்போதைய அவரின் திட்டம்.
இந்திராவுக்கு அந்த சுடர் ராஜ்ஜியத்தின் அடுத்த தலைமுறை ராணியாக தன் மகள் வலம் வரவேண்டுமென்ற ஆசை. அதற்காக மித்ரனுக்கு மணம் முடித்து, அவ்வீட்டின் மூத்த மருமகளாக்கிட பேராசை கொண்டார்.
புருசோத்தமனுக்கு அப்படியில்லை. இருவரில் ஒருவர். இப்போது மித்ரன் சுடர் வேண்டாமென்று தனி கம்பெனி ஆரம்பிப்பதால், அவரின் ஒரே சாய்ஸ் விஷ்வா தான்.
அம்மையப்பன் தான் சில நாட்களுக்கு முன்பு சொல்லிவிட்டாரே! சுடரின் அடுத்த வாரிசு விஷ்வா என்று. அதனை மித்ரனும் ஆமோதித்த அல்லவா அன்று பேசியிருந்தான்.
அதனால் தான் தன் மகளை விஷ்வாவிடம் நெருக்கமாக்கிட முயன்றார்.
என்னதான் அஞ்சலி புருஷோத்தமனின் மகளாக இருந்தாலும், அவளிடம் விஸ்வேஸ்வரனின் ரத்தமும் கலந்திருக்கிறதே. மகளே தன் பக்கம் இல்லை என்பதை விரைவில் தெரிந்துகொள்ளவிருக்கிறார்.
அஞ்சலி அத்தான் என்றழைத்து விஷ்வா மறுத்துவிட்டான். அதற்காக அஞ்சலி வருந்தலாம் இல்லை.
“இட்ஸ் ஓகே விஷ்வா. சேம் ஏஜ் தானே எனக்கு ஒண்ணுமில்லை. மித்ரன் அத்தானை நேம் சொல்லி கூப்பிட்டதுக்கு அம்மா அட்வைஸ் பண்ணி ஒருவழி செய்துட்டாங்க. அந்த எக்ஸ்பீரியன்ஸ் திரும்ப வேண்டான்னு உன்னையும் அப்படி கூப்பிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தாள்.
விஷ்வா விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அஞ்சலி இந்திராவுடன் வந்து பார்த்துவிட்டு ஒரே நாளில் சென்றிடுவாள். அதனால் இருவருக்குமே ஒருவரைப்பற்றி ஒருவர் ஒன்றும் தெரியாது.
அஞ்சலியின் பேச்சினை வைத்தே அவள் அவளது தந்தை போலல்ல என்று கண்டுகொண்டான் விஷ்வா.
“இட்ஸ் ஓகே” என்றவன் எழுந்துகொள்ள…
“உட்காரு மாப்பிள்ளை. உன்கிட்டதான் பேச வந்திருக்கேன்” என்றார்.
விஷ்வா அவரை ஆராய்ந்தபடி அமர்ந்தவன்,
“இந்த மாப்பிள்ளை உறவெல்லாம் வேண்டாம். நான் உங்க தங்கச்சி மகன் என்கிற உறவே போதும். அதனால் நீங்களும் என்னை பெயர் சொல்லி அழைத்தால் போதுமானது” என்றான்.
அவர் விஷ்வாவை பிடிக்க, வைக்கும் ஒவ்வொரு அடியையும் தகர்த்துக்கொண்டே வந்தான் விஷ்வா.
கோபம் வந்தாலும் காரியம் பெரியதென்று முகத்தை சீராக வைத்து பேசினார்.
“அஞ்சலியும் நம்ம காலேஜில் தான் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் சேர்ந்திருக்காள். காலேஜில் கொஞ்சம் பார்த்துக்கோ விஷ்வா” என்றார்.
“சுடர் காலேஜ் ரொம்ப சேஃப். இந்த அனாவிசிய பயம் தேவையில்லாதது” என்றவன், “அவள் பி.டெக் நான் பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட் ஸ்டடி. பில்டிங்கே வேற வேற… கண்ணால் பார்த்துக்கவே சான்ஸ் இருக்காது. அவளை அவளே பார்த்துகிற செல்ஃப் டிப்ஃபன்ஸ் அவகிட்ட நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்” என்றான்.
அவ்வாறு சொல்லியதோடு, “இருக்குதானே?” என்று அஞ்சலியையும் பார்த்து வினவினான்.
“ஆபியஸ்லி” என்றவள், “நான் என்ன கே.ஜி ஸ்டூடன்ட்டாப்பா? பார்த்துக்கசொல்லி சொல்றீங்க” என்று சிரிப்பினூடே கேட்டாள். புருஷோத்தமனால் மகளை விஷ்வாவை வைத்துக்கொண்டு கடிந்துகொள்ளக்கூட முடியவில்லை.
“ஓகே விஷ்வா. என்ன தான் நம்ம காலேஜா இருந்தாலும் பொம்பளை பிள்ளை. அந்த பயம் தான்” என்று சமாளித்தார்.
“பொண்ணுங்க தான் இப்போ எல்லாம்” என்ற விஷ்வா, “என்னதான் நாடு முன்னேறனாலும் சில விடயங்களில் சிலரை மாற்ற முடியாது” என்று கூர்மையகாக் கூறினான்.
அவன் என்ன பொருள் வைத்து கூறினானோ… ஆனால் அவனது வார்த்தைகள் அவரை நன்கு தாக்கியது.
“அப்புறம் ஒரு விடயம்” என்ற விஷ்வா,
“நம்ம காலேஜ் இல்லை. தாத்தாவுடையது. இப்போ அம்மையப்பனுடையது” என்றான் அழுத்தில் அடர்த்தி கூட்டி.
“விஷ்வா…” சுஜா மகனை அதட்டினார்.
“அவர் என் அண்ணன்டா. அவருக்கு இல்லாத உரிமையா?” எனக் கேட்டார் சுஜா.
“உறவில், அன்பில் உரிமையை கொடுக்கலாம். உழைப்பில் கொடுக்க முடியாதும்மா. பிறர் உழைப்பில் உரிமை கொண்டாடினால் அதற்கு பெயர் துரோகம்.”
மகனின் பேச்சினைக் கேட்டபடி உள்வந்த அம்மையப்பன்,
“சபாஷ்” என்று கைதட்டினார்.
புருஷோத்தமனின் முகம் கருமை படர்ந்து சிறுத்துப்போனது.
“சின்ன பையன் ஏதோ பேசுறான். அதுக்கு புத்தி சொல்லாமல் கைதட்டிட்டு வறீங்க?” சுஜா மகனிடம் காட்ட முடியாத கோபத்தை கணவரிடம் காட்டினார்.
“அவன் சரியா சொல்லியிருக்கான். அவனுக்கு நான் சொல்லிக்கொடுக்குற அளவுக்கு மேலவே புத்தி இருக்கு” என்ற அம்மையப்பன்,
“அப்படியே என் அப்பா விஸ்வேஸ்வரனை பார்க்கிற மாதிரி இருக்குப்பா” என்று மகனின் இரண்டு பக்க புஜத்தையும் பிடித்தவராக மனம் நெகிழ்ந்து பிடியில் அழுத்தம் கொடுத்தார்.
“வாம்மா அஞ்சலி. நாளையிலிருந்து காலேஜ். அங்கு எதுனான்னா, மோஸ்ட்லி நான் அங்கு ஆபிஸில் தான் இருப்பேன். என்கிட்ட சொல்லு பார்த்துக்கலாம்” என்றார் அவளின் தலை வருடி பரிவாக.
“அவளை அவளே பார்த்துப்பாள். நீங்க ஒண்ணும் பண்ணத்தேவல” என்று விஷ்வாவின் மீதான ஒட்டுமொத்த கோபத்தையும் அதில் காட்டியவாராக மகளை கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
“விடுங்கப்பா” என்ற விஷ்வா, “அஞ்சலி அவங்க அப்பா அளவுக்கு செல்பிஷ் இல்லன்னு நினைக்கிறேன்” என்றான்.
ஆனால் அவள் தான் பின்னாளில் சுயநலத்தின் மொத்த உருவமாக அவன் முன் நிற்பாள் என்று அந்நொடி அவன் நினைத்திருக்கவில்லை.
வருண் மற்றும் சம்ருதி மதியம் இரண்டு மணியளவில் திருச்சி வந்து சேர்ந்திருந்தார்கள்.
ஆன்லைன் மூலமாக அனைத்தும் முறையாக செய்துவிட்டதால், சுடர் கல்வி வளாகத்திலேயே உட்பகுதியில் தனித்து இருக்கும் மாணவிகள் விடுதிக்கு சென்றார்கள்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து படிக்க வந்திருக்கும் மாணவிகள் பலர் அன்றே வந்திருந்தனர்.
நடைமுறைகளை சரியாக செய்து சம்ருதியை அவளுக்கான அறையில் விட்டு, உடன் தங்கப்போகும் மாணவியையும் பார்த்து பேசி கிளம்பினான் வருண்.
வருணுடனே விடுதியை விட்டு வெளியில் வந்தாள் சம்ருதி.
“இனி உங்க ரொமான்ஸுக்கு நடுவில் நந்தி மாதிரி நானிருக்கமாட்டேன்.”
“வாலு” என்று அவளின் காதை வலிக்காது திருகினான்.
“ரொம்ப மிஸ் பண்ணுவேன்.”
“எதை… எங்க ரொமான்ஸையா?”
“மாமா” என்று முறைத்து நின்றவள், அவன் சிரிக்கவும் சிரித்துவிட்டாள்.
“ஓகே அம்மு. கிளம்புறேன். விஷ்வாவை மீட் பண்ணனும். நீ மாமாக்கு கால் பண்ணி பேசிடு. நிம்மதியா ஃபீல் பண்ணுவாரு” என்றவன் அவளின் உச்சியில் கை வைத்து லேசாக ஆட்டியவனாக சென்றுவிட்டான்.
விஷ்வாவுக்கு கால் செய்து கொண்டே ஆட்டோ ஒன்றை பிடித்து ஏறி அமர்ந்தான்.
“வருண்ணா… வந்துட்டிங்களா?” ஆர்வத்தோடு வினவினான்.
“வந்துட்டேன் விஷ்வா.”
“வீட்டுக்கு வாங்க.”
“இல்லை விஷ்வா, நீ உச்சி பிள்ளையார் கோவில் வந்திடு. நானும் அங்கு தான் போயிட்டு இருக்கேன்” என்ற வருண் வைத்துவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ராஜாவுடன் உச்சி மலை நோக்கி பறந்தான் விஷ்வா.
வருணை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கப்போகும் துள்ளல்.
‘இவரை பார்க்கவே இத்தனை தவிப்பா இருக்கே. அவளை பார்க்கும் போது எப்படி இருக்கும்?’ எதுவொன்றென்றாலும் விஷ்வாவின் மனம் சம்ருவிடம் தான் கரை சேர்ந்தது.
“டேய் மெதுவா போடா. காது காத்துல பிச்சிக்கும் போல.” ராஜா விஷ்வாவின் வேகத்தில் மிரண்டு போனான்.
“எங்கடா போறோம். அதையாவது சொல்லேன்?”
“பிள்ளையாருக்கு பொண்ணு பார்க்க போறோம்.”
“எதே? பிள்ளையாருக்கு பொண்ணா?” என்று அதிர்ந்த ராஜா, “இது அவருக்கு தெரியுமாடா?” எனக் கேட்டு, “அவரே பாவம். பொண்ணு கிடைக்கலன்னு சிங்கிள் சிங்கமா உச்சி மலையில் போய் உட்கார்ந்திருக்கார். அவரை ஏண்டா வம்புக்கு இழுக்கிற?” என்றான்.
“இறங்கு!”
“டேய் நிஜமாவே இவரை பார்க்கத்தான் கூட்டிட்டு வந்தியா?” என்ற ராஜா, “என்னடா நாளைக்கு பர்ஸ்ட் டே காலேஜ்… பிள்ளையாருக்கு அட்டெண்டென்ஸ் போடலான்னு வந்தியா?” எனக் கேட்டான்.
ராஜாவின் கேள்விகளை எல்லாம் விஷ்வா ஒதுக்கியவனாக வருணுக்கு அழைத்தான்.
“நான் மேல வந்துட்டேன் விஷ்வா.”
“நான் கீழ இருக்கேன். இதோ வறேன்” என்று மொபைலை வைத்தவன், சுற்றி பார்வையை சுழற்றினான்.
“யாருக்கு போன் பண்ண? இப்போ யாரைத் தேடுற?”
விஷ்வா… தேடியது கிடைத்ததாக, ரோஜா பூக்கள் விற்றுக்கொண்டிருந்த பூக்கடைக்கு சென்று மூன்று ரோஜாக்கள் வாங்கிக்கொண்டு ராஜாவையும் இழுத்துக்கொண்டு மேலேறினான்.
“ஆனாலும் லவ் ஃபீலே இல்லாதவருக்கு, லவ் ஃபிளவர் கொடுத்து ஐஸ் வைக்கிற ஒரே ஆள் நீதாண்டா!”
விஷ்வாவின் இதழ் நீண்டு விரிந்தது.
“இதுக்கு மட்டும் ரியாக்ஷன் வருமே” என்ற ராஜா, “கால் வலிக்குதுடா” என்க, “ஏறுடா… சரியாகிடும்” என்றான் விஷ்வா.
படிகள் இருக்கும் பக்கமே பார்த்தபடி அமர்ந்திருந்த வருண்,
விஷ்வாவை கண்டதும் கை உயர்த்தி அசைத்து தன்னை உணர்த்தியவனாக, விஷ்வா பார்த்துவிட்டதாக எதிர்வினை புரிந்திட…
வேகமாக அவனை நோக்கி ஓடினான்.
விஷ்வாவும் வேக எட்டுக்களுடன் முன்னேற,
பக்கம் வந்த இருவரும் அரை நொடி தாமதித்து இறுக அணைத்துக் கொண்டனர்.
“வருண்ணா…”
“விஷ்வா…”
“டேய்… என்ன பண்றீங்க?” என்று அவர்களின் நிலை பார்த்து அதிர்ந்த ராஜா, “இவர் சம்ரு இல்லை விஷ்வா” என்றதோடு, “அண்ணா இவன் யுகிக்கா இல்லை” என்று கத்தினான்.
அவனின் கத்தலில் விலகிய இருவரும் ஒரே நேரத்தில் “மிஸ் யூ” என்றனர். ஆயிரம் வலிகளை அந்த இரு வார்த்தைகள் உணர்த்திவிடும்.
அதன் பின்னர் இருவரும் தனிப்பட்ட விடயம் எதுவும் பேசவில்லை. பொதுவாக பேசியபடி அருகருகே அமர்ந்தனர்.
ராஜா எதையோ கேட்க வருவதும் தயங்குவதுமாக இருந்தான்.
“என்னடா கேட்கணும்?”
“அதில்லை… இந்த ரோஸஸ் இவருக்கு இல்லை தானே?”
ராஜா கேட்டதில் விஷ்வா வெடித்து சிரித்தான்.
“சொல்லிட்டு சிரிடா. பயந்து வருது.” விட்டால் ராஜா அழுதிடுவான்.
“இல்லை” என்ற விஷ்வா, “சாமி கும்பிடலாம்” என்று சொல்ல, மூவரும் சன்னிதி நோக்கி சென்றனர்.
பிள்ளையாருக்கு ரோஜாவை வைத்த விஷ்வா,
‘ம்ருதி இல்லாமல் நான் மட்டும் தனியா வைக்கிற முதல் பூ இது. நாங்க திரும்ப சேர்ந்து வைக்க நீதான் உதவணும்.’ மனம் நிறைந்த ஆசையுடன் வேண்டினான்.
அத்தனை எளிதில் உன் வேண்டுதல் நடந்திடாதென்று ஆனைமுகத்தான் விஷமப் புன்னகை சிந்தினார்.