அத்தோடு நூறாவது முறையாக வருணிடம் நம்பாது கேட்டிருந்தாள் சம்யுக்தா.
“நிஜமாவா மாமா?”
“ம்ம்…” தொலைக்காட்சியில் காலை நேர செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தவன் ஒற்றை எழுத்தாய் பதில் வழங்கினான்.
“ஒத்துக்கிட்டிங்களா?” அவள் பல்வேறு விதமாக கேட்டபோதெல்லாம் அவனது பதில் ஆமென்று தான் வந்தது. அப்போதும் நம்ப முடியாது கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
“நீயெப்படி மாத்தி மாத்தி கேட்டாலும் ஒரே பதில் தான் யுகி. நான் ஓகே சொல்லிட்டேன்.”
“இந்த ஓகே’வை அவள் மழையில் நனையறதுக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே! அவளுக்கு காய்ச்சல் வராமலாவது இருந்திருக்கும்.”
சொல்லிய மனைவியை அழுத்தமாக ஏறிட்ட வருண்…
“ஷீ இஸ் ஸ்டில் இன் லவ் வித் ஹிம்” என்றான்.
“மாமா…” யுக்தாவிடம் அப்படியொரு அதிர்வு.
காதல் தோல்வியால் தான் தன்னுடைய தங்கை, திருமணத்தை மறுக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.
ஆனால், இத்தனை வருடங்கள் ஆகியும் சம்ரு அவனை நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்பது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை.
“அந்த பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சே மாமா?”
“ஹ்ம்ம்…”
“எப்படி மாமா, இது தப்பில்லையா? அவங்க இப்போ இன்னொரு பொண்ணோட ஹஸ்பென்ட். இவள் இன்னமும் அவங்களை நினைச்சிட்டு இருக்கிறது சரியில்லை மாமா” என்று யுக்தா முடிக்கும் முன் சம்ருதியின் குரல் அங்கு ஓங்கி ஒலித்தது.
“என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டியாக்கா?”
சம்ருவின் கேள்வியில் யுகியிடம் ஸ்தம்பித்த நிலை.
“அச்சோ சம்ரு அப்படியில்லடாம்மா!” என்று பதறி அருகில் வந்த யுக்தாவின் கைகளை பற்றிக்கொண்ட சம்ரு,
“நான் என்னோட காதலை மட்டும் தான் சுமந்துட்டு இருக்கேன். இன்னொருத்தியோட கணவரை இல்லைக்கா” என்று உடைந்து அழுதாள்.
காதல் எத்தனைக்கு எத்தனை சுகமளிக்குமோ… அதில் அவ்வளவு வலிகளையும் கடந்து வரவேண்டியிருக்கும்.
“அக்கா தப்பா சொல்லியிருந்தால் மன்னிச்சிடுடா” என்ற யுக்தா சம்ருவை அணைத்துக்கொண்டாள். அவள் அழுது முடியும்வரை முதுகை நீவிவிட்டபடி இருந்தாள்.
‘சம்ருவின் காதல் மட்டும் நிறைவேறியிருந்தால்… இந்நேரம் அவளின் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருந்திருக்காது.’ யுக்தாவால் நினையாது இருக்க முடியவில்லை.
சம்ரு காதலித்தவனின் குணம் அப்படியானது. காதலை சொல்லிக்கொள்ளா நேரத்திலேயே தன்னுடைய கண்ணின் இமைபோல் சம்ருவை பார்த்துக் கொண்டவனாயிற்றே. வாழ்வில் மட்டும் இணைந்திருந்தாள் சொல்லவும் வேண்டுமோ?
“அழுதது போதும். நான் சொன்னது நினைவிருக்குல்ல?”
வருண் கேட்டதற்கு சம்ரு ஆமென்பதுபோல் தலையசைத்தாள்.
“உங்களுக்குள்ள என்ன டீலிங்?”
வருண் மற்றும் சம்ருதியிடம் ஒருசேர வினவியிருந்தாள் சம்யுக்தா.
“அவள் சொல்றதை நாம் ஏற்றுக்கொண்டால், அவள் திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்லணும். அது தான் டீல்.” சொல்லிய வருணை நம்பாது பார்த்தாள் யுக்தா. தன்னுடைய நமபிக்கையின்மையால் தங்கையிடம் கேட்கவும் செய்தாள்.
“உண்மையாவே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியா?”
“உடனே இல்லைக்கா. ஒன் இயர் போகட்டும்” என்ற சம்ருவை அப்போதும் நம்பாமல் தான் பார்த்து வைத்தாள் யுக்தா.
வருணுக்குமே தெரியும், அவளின் காதலை விடுத்து அவள் இன்னொருவனை மணந்துகொள்ள மாட்டாளென்று. இந்த ஒரு வருட டைம் கூட, அதற்குள் வேறு ஒரு திட்டம் வகுத்து திருமணத்தையே தவிர்ப்பதற்குதான். சம்ரு பிறந்தது முதல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளின் மனதை வருணால் கணிக்க முடியாதா என்ன?
சம்ருதாவை ஆராய்ச்சியாய் ஏறிட்டான்.
வருணின் பார்வையை எதிர்கொள்ள முடியாது…
“டயர்டா இருக்குக்கா. கொஞ்ச நேரம் படுக்கிறேன்” என்று நழுவிவிட்டாள்.
“இவள் அவனை மறக்கலாம் மாட்டாள் யுக்தா. நீ சொன்ன மாதிரி இன்னொரு பொண்ணோட கணவனாக அவனை அவள் நினைக்கவே இல்லை. அவள் காதலித்த பையனாக மட்டுமே இன்னமும் காதலித்துக் கொண்டிருக்கிறாள். இந்த காதல் எல்லாவிதமான பைத்தியக்கார செயலையும் செய்திடும் போல.” காதலித்து மணம் முடித்த வருணுக்கே காதலில் சம்ருவின் பித்துநிலை கோபத்தை கொடுத்தது.
சொல்லாத காதலுக்காக, இல்லாமல் போன காதலுக்காக ஒருத்தி வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிக்கொள்வாளா என்கிற தார்மீக கோபம் அது.
“நாளைக்கு சேலம் கிளம்பணும். ரெண்டு நாளாகும் திரும்பிவர. அதுக்கேத்த மாதிரி பேக் பண்ணிக்கோ” என்றான்.
அவனுக்கு பதில் சொல்ல முடியாததால், “எங்க பேச்சுக்கு நடுவில் நீங்க வரவேண்டாம் மா…” மாமா என்று சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தியவளாக, அவனின் வாயினை அடைத்துவிட்டோம் என்ற எண்ணத்தில் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.
‘நினைத்தது நடக்கும்வரை அமைதியாக இருந்திட சம்ரு.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் பயணம் முழுவதும் மௌனமாகவே வந்தாள்.
நடுவில் உணவுக்காக இறங்கிய போதும், சாப்பிட மட்டுமே வாய் திறந்தாள்.
அவர்கள் செல்ல வேண்டிய இடம் வரும் வரை தருணின் குரல் மட்டுமே அவ்வவ்போது ஒலித்தது.
“நைட் ஹோட்டலில் ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு போய் பார்க்கலாம்.” சேலம் வந்ததும் சொல்லிய வருண், நால்வர் தங்குவதுபோலான அறை எடுத்தான்.
சம்ரு அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.
நடப்பது சரியாக நடக்க வேண்டுமென்ற படபடப்பு அவளை சிறு நடுக்கத்துடனே வைத்திருந்தது.
******
சுசித்ரா கல்லூரிக்கு வந்த நேரம் விஷ்வா ரவுண்ட்ஸ் சென்றிருந்தான். அவன் முடித்து வரும் வரை அவனுக்காக அவனது அலுவலக அறையில் காத்திருந்தாள்.
தனது பணியை முடித்து தன்னுடைய அறைக்குள் நுழைந்த விஷ்வா, அவனது இருக்கை இருக்கும் அறைக்கு முன்னால் சிறு கூடம் போலிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்திருந்த சுசியை பார்த்தாலும் என்னவென்று கேட்காது கடந்து சென்றான்.
‘இந்த கோபத்துக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை’ என்று முணுமுணுத்தவள், கதவினை தட்டிவிட்டு உள் நுழைந்தாள்.
மாணவர்கள் எண்ணிக்கை கணக்கடங்கிய ரிஜிஸ்டரை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
உள் வந்தவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன்.
“சாப்பிட வா விஷ்வா!”
அவளின் அழைப்புக்கு மறுப்பேதும் சொல்லாது அங்கிருந்த சிறு அறைக்குள் எழுந்து சென்றான்.
ஏற்கனவே மேசையில் சுசி எடுத்து வைத்திருந்த உணவை, அவளை அனுமதிக்காது தானே தட்டில் வைத்து சாப்பிடத் துவங்கினான்.
“மித்ரன் எப்போ வறான்?”
தன்னை பார்த்தபடியே நின்றிருந்தவளிடம் வினவினான்.
“ஏன் உனக்கு தெரியாதா?” கேட்டவள் அவன் முறைத்ததில் அமைதியாக இருக்கை ஒன்றில் அமர்ந்துவிட்டாள்.
“கேள்வி கேட்டால் பதில் சொல்லி பழகு. திருப்பி என்னையே கேள்வி கேட்காத” என்றவன் எழுந்து கொண்டான்.
“முழுசா சாப்பிடுடா!” எங்கே தான் பேசியதில் பாதி உணவோடு எழுந்துவிட்டானோ என்று வேகமாக கூறினாள்.
“இதுக்குமேல சாப்பிடணும்ன்னா, பிளேட்டையும் பாக்ஸையும் தான் சாப்பிடணும்.” அவன் என்னவோ கோபமாகத்தான் கூறினான். ஆனால் அவளுக்கோ வந்த சிரிப்பை மறைக்க முடியவில்லை.
“ஏற்கனவே இரும்பை முழுங்கியவன் மாதிரி தான் சுத்திக்கிட்டு இருக்க. இதில் இதையும் சாப்பிடு, இன்னும் நல்லாயிருக்கும்” என்றவளின் தலையில் கொட்டியவன்,
“அதான் சாப்பிட்டேனே… வீட்டுக்கு கிளம்பு. ஓடு” என்று அவளை விரட்டினான்.
“எதே… ஓடுறதா!” என்றவள், “எங்கையாவது அண்ணின்னு மரியாதை இருக்கா பாரு” என்றாள்.
“பொண்ணு பார்க்க வந்தப்பவே நீ வேணான்னு அவன்கிட்ட எவ்வளவோ சொன்னேன். மித்ரன் கேட்கலையே. இப்போ அவனோடு சேர்ந்து எங்க குடும்பமும் உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குது” என்றவனின் பேச்சில் புசுபுசுவென மூச்சினை வெளியேற்றியவளாக அவனை முறைத்தாள்.
சுசிக்கு நன்றாகத் தெரியும். அவனால் தான் தனது திருமணம் தான் காதலித்த மித்ரனுடன் நடந்தது என்று. தம்பி சொல்லியதால் மட்டுமே மித்ரன் தன்னை பெண் பார்க்க வந்தானென்றும். தோழிக்காக அவள் சொல்லாமலே அவளது காதலை நிறைவேற்றி கொடுத்தவன் இப்படி பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.
“எனக்கு வேலையிருக்கு நீ கிளம்புரியா!” வாசல் பக்கம் கை காட்டினான்.
“இந்த காலேஜில் எனக்கும் ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு.” சட்டமாக தாளாளர் இருக்கையில் சென்று கால் மேல் காலிட்டு அமர்ந்து அவனை மிதப்பாக பார்த்து வைத்தாள்.
அமைதியாக அவளுக்கு முன்னிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன், முன்பு தான் பார்த்துக்கொண்டிருந்த பதிவேட்டை பார்க்கத் தொடங்கினான்.
“உனக்கு என்கிட்ட பயம். பேச தயக்கம். இதை நான் நம்பணுமா?” என்றவனின் கவனம் முழுக்க தன்னுடைய வேலையில் தான் இருந்தது.
“அத்தை பாவம் விஷ்வா.”
“ம்ம்…”
“எதுக்குடா அவங்ககிட்ட அப்படி கத்துன?”
“உனக்குத் தெரியாதா?”
சுசியிடம் மௌனம்.
“அம்மாவா பையன் நல்லாயிருக்கணும் தான் நினைப்பாங்க விஷ்வா!” சொல்லியவளை நோக்கி அடிபட்ட பார்வை ஒன்றை வீசினான்.
“எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி… இங்க ரொம்ப வலிக்குது சுசி.” தன்னுடைய இதயத்தை குத்தி காண்பித்தான்.
“விஷ்வா… அவளுக்கு இன்னும் மேரேஜ் ஆகல தானே?”
“எனக்கு ஆகிருச்சே சுசி.”
“விஷ்வா!”
“உண்மை சில நேரங்களில் அன்’கம்ஃபோர்ட்டபிள் ஆக்கும் சுசி. அதுக்காக உண்மை பொய் ஆகிடாதே! நான் அவளை எந்தளவுக்கு லவ் பண்ணனோ அதே அளவுக்கு கட்டிகிட்டவளோடு உண்மையா குடும்பம் நடத்தியிருக்கேன்” என்றவனிடம் உண்மையை உரக்கக்கூறும் உறுதி.
“அவளுக்கு கல்யாணம் ஆகலன்னு உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
“ஒரு இண்டியூஷன். அவள் உன்னை லவ் பண்ணதுக்கு, அவ்வளவு சீக்கிரம் கல்யாணமெல்லாம் பண்ணியிருக்கமாட்டாள். அவள் என்கிட்ட பேசிய நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கு. ப்பா, எவ்வளவு காதல் அவளுக்கு உன் மேல்.” சொல்லிய சுசியின் தேகம் சிலிர்த்து அடங்கியது.
‘ஆம் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் காதல். என் பிள்ளையை அவள் பிள்ளையாக வளர்க்குமளவுக்கு என்மீது காதல்.’ விஷ்வாவின் மனம் ஊமையாய் கதறியது. எப்பேர்ப்பட்ட காதலை இழந்திருக்கிறான் அவன். துரதிஷ்டசாலி.
கண்ணின் ஓரம் கசிந்த ஒற்றை துளி நீரை சுசிக்கு காட்டாது சுண்டி விட்டான்.