விடியல் சம்ருவுக்கு அதீத பரபரப்பில் தொடங்கியது. அக்கா, மாமா எழுவதற்கு முன் எழுந்து தயாராகி நின்றவள், காலை உறக்கம் கலைந்ததில் சிணுங்கிய தருணையும் கிளப்பி நிறுத்தியிருந்தாள்.
“எங்க சித்தி போறோம்?” குளித்த பிறகும் உறக்கத்தில் மூடிய கண்களை கசக்கியவாறு தருண் கேட்டிட, அவனுக்கு பால் வரவழைத்து கொடுத்தவள், யுகியை தட்டி எழுப்பினாள்.
எழுந்த யுகி நேரத்தை பார்க்க… அதுவோ ஆறு முப்பதை காட்டியது.
“அதுக்குள்ள கிளம்பிட்ட?” ஆச்சரியமாக வினவினாள்.
“சீக்கிரம் வேலை முடிஞ்சிட்டால் ஊருக்கு கிளம்பிடலாமே!” என்ற சம்ருவின் மனதில் பரிதவிப்பு.
அவளவனுக்கும் இவ்வூருக்கும் தொடர்பு உள்ளதே! சொல்லப்போனால் இவர்கள் இப்போது செல்லவிருக்கும் இடம் கூட, அவனது அறக்கட்டளையின் கீழ் தான் இயங்குகிறது.
அவனை பார்க்க நேர்ந்துவிட்டால், அத்தோடு மரித்துவிடுவாள் அல்லவா? அதற்கே இத்தனை அவசரம் அவளிடம்.
“இப்போவே போனால் வேலையாகுமா சம்ரு?” இவ்வளவு காலையில் அங்கு போனால் அனுமதி கிடைக்குமா என்கிற சந்தேகம் யுகிக்கு.
“நான் எல்லாம் பேசிட்டேன்’க்கா” என்றவள், வருணை எழுப்புமாறு தமக்கைக்கு ஜாடை காண்பித்தாள்.
“அதுக்குன்னு வந்துட்டு, இங்கு ஏன் உட்கார்ந்திருக்கணும். அங்கு போய் உட்கார்ந்திருப்போம்” என்ற வருண் தான் தூங்காது உன்னுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று மறைமுகமாகக் காட்டினான்.
வருண் எழுந்து அமர்ந்ததுமே சம்ரு, தருணுக்கு அருகில் சென்றுவிட்டாள்.
“ஒத்துகிட்டு இவ்வளவு தூரம் வந்தாச்சு. அப்புறமும் எதுக்கு மாமா அவகிட்ட வம்பு பண்றீங்க?” கணவனை அதட்டியவளாக யுகி கிளம்ப ஆயத்தமாகினாள்.
ஒருவழியாக ஒன்பது மணிக்கெல்லாம் அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தெரிவதற்கு வாய்ப்பிலை என்றே சம்ருதி நினைத்திருந்தால். அத்தனை பெரும் அறக்கட்டளையை நிர்வாகிப்பவன், யார் யார் காப்பாகத்திற்கு வருகிறார்கள், நிதி கொடுக்கிறார்கள், குழந்தையை தத்தெடுக்கின்றனர், பெரியவர்களை விட்டுச் செல்கின்றனர் என்று ஒவ்வொருத்தரை பற்றியும் அறியமாட்டான் என்பது சம்ருவின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அவளின் எண்ணத்திற்கு எதிராக இருந்தான் அவன்.
இப்போது அவள் மாட்டானென்று அடுக்கிய காரணங்களை முடியுமென்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறான்.
சுடர் அறக்கட்டளையின் கீழ் வரும் ஒவ்வொரு துறையிலும் இன் அண்ட் அவுட் முதல் அங்கு ஒரு உயிர் தும்மினாலும் அவன் தகவல் அறிந்திடுவான்.
தன்னுடைய கட்டுப்பாட்டில் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதால் கடைக்கோடி தொழிலாளி முதல், உயர் பதிவி பணியாள் வரை தெரிந்து வைத்திருந்தான். யார் எப்படி அவர்களது குடும்பம், சூழல் என்று அனைத்தும். அப்படித்தான் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழிருக்கும் இல்லங்களில் என்ன நடக்கிறது, இன்று புதுவரவு என்ன என்பதை முதல், யார் யார் வெளியில் சென்றனர், அங்கிருப்போர் என்ன செய்கின்றனர் அவர்களின் விருப்பு, வெறுப்பு என அனைத்தும் தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
காப்பகத்தின் பொறுப்பாளர் தின நடவடிக்கைகள் அனைத்தையும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது அவனிடம் எழுதப்படாத சட்டம்.
அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
இருவருமே ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் நெருங்கிடத்தான் விருப்பமில்லாது தள்ளி செல்கின்றனர்.
அவளின் காதல் எல்லாம் வேண்டுமென்றே அடக்கப்படுகிறது என்றால், அவனது காதல் எல்லாம் மொத்தமாய் அமிழ்ந்துபோனது அவனுள்.
வேண்டாமென்று மறுத்துவிட்டு காதலென்று முன்நிற்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
மறுத்தவளை நோக்கி முன் செல்ல அவனது துவண்ட மனம் விருப்பம் கொடுக்கவில்லை.
“இப்போ அவன் உள்ளே இருந்தால் என்ன செய்வ?”
வருணின் கேள்வியில் சம்ருவின் முகம் அப்பட்டமாக அச்சத்தைக் காட்டியது.
“பதில் சொல்லு சம்ரு? அவங்களுக்கு தெரிஞ்சிடாதா? மாமா சொல்ற மாதிரி உள்ளிருந்தால் என்ன பண்ணுவ?”
“அய்யோ அக்கா… யார் இருந்தால் என்ன இல்லைன்னா என்ன? என் வாழ்க்கையில் அவங்க யாரோவாகி மூணு வருசமாச்சு. இப்போ அவங்களுக்கு முதலில் என்னை நினைவிருக்கோ இல்லையோ? என் பெயர் நினைவிருந்தால் கூட ஆச்சரியம் தான்” என்றவள் உள்ளே நுழைய, யுகியும் தருணுடன் அவளை பின் தொடர்ந்தாள்.
இருவரும் சில அடிகள் முன் சென்றதும், தன்னுடைய சட்டை பையில் செயலிலிருந்த அலைப்பேசியை எடுத்து காதில் வைத்த வருண்…
“அவள் சொன்னது கேட்டுச்சாடா தம்பி?” என்று கடுகடுவென்று வினவினான்.
“இப்பவாவது நான் சொல்றதை கேளுடா! இன்னும் அறுபது வருடமானாலும் அவள் யாரையும் கல்யாணம் செய்துக்கமாட்டாள். அதுக்கு ஆதாரம் தான் உன் குழந்தையை அவள் தத்தெடுக்க வந்திருப்பது. உன்கூடத்தான் வாழ முடியல… உன்னோட உயிரையாவது நான் என்கூட வச்சிக்கிறனே என்பது தான் அவளோட எண்ணம். அதுகூடவா உனக்கு புரியல?” வருணின் கேள்வியில் உள்ள உண்மை அவனுக்கு புரியத்தான் செய்கிறது.
ஆனால் அவனும் என்ன செய்வான் மனதளவில் அவன் தூய்மையானவன் தான். ஆனால் உடலளவில் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாகியவனாயிற்றே! எப்படி அவனால் ஏற்க முடியும்.
“எதாவது செய்து அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வையுங்க. அப்புறம் எதுக்கு மாமான்னு நீங்க இருக்கீங்க? நான் ஒரு புரொபைல் சென்ட் பன்றேன். அவளுக்கு மேட்ச் ஆகும். பேசி பாருங்க” என்றான் அவன்.
“விஷ்வா?!”
வருண் அதிர்ந்து விளித்தான்.
“விஷ்வா… விஷ்வரூபன்… வி.ஆர்” என்றான் அமர்த்தலாக.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என்று நொடித்த வருண், “இதெல்லாம் எங்கு போய் முடியப்போகுதோ!” என்றான்.
“காய்ச்சல் எப்படியிருக்கு?”
“யாருக்கு? எனக்கா? காய்ச்சல் இல்லையே!”
“நீங்க சொல்லவே வேண்டாம்.”
“அக்கறை இருந்தால் நேரில் வந்து பார்த்துக்கிறது!”
“அண்ணா…”
“உன் குழந்தையை அவளுக்காக விட்டு கொடுக்கிறியா விஷ்வா?” எனக் கேட்ட வருணிடம்…
“ஒரு குழந்தைக்கு அப்பாவிட அம்மா ரொம்ப முக்கியம் வருண் அண்ணா” என்ற விஷ்வாவின் குரல் வெகுவாக உடைந்திருந்தது.
“உறவு, காதல் எல்லாம் மனசு சம்மந்தப்பட்டது விஷ்வா. நீ நினைப்பது போலில்லை” என்றான்.
“நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“ஆமாம் என்கிட்ட மட்டும் நல்லா பேசு. வெளியில் உன்னை வாயில்லா அப்பிராணி மாதிரி பார்க்குறாங்க” என்ற வருணின் கூற்றில் விஷ்வா சத்தமாக சிரித்தான்.
வருணுக்கு அவனது சிரிப்பில் கண்கள் பனித்துவிட்டது.
விஷ்வாவுக்கு உணவு கொண்டு வந்த சுசித்ரா, பையினை விட்டுச்சென்றதால் அதனை எடுப்பதற்காக மீண்டும் வந்திருக்க, தன்னுடைய நண்பனின் சத்தமான சிரிப்பில் நெகிழ்ந்து நின்றாள். அதிசயம் ஒன்று நிகழ்ந்தேறியது போன்று பிரம்மித்து பார்த்தாள்.
“போன் வச்சிட்டு போங்க… அப்புறம் நீங்க இல்லாமலே அவள் வேலையை முடிச்சிடப்போறாள்” என்ற விஷ்வாவிடம்…
“வாழ்க்கை எல்லாருக்கும் செக்கெண்ட் சான்ஸ் குடுத்திடாது விஷ்வா. என்னை பொறுத்தவரை முதல் வாய்ப்பைவிட இரண்டாவது வாய்ப்பு தான் முக்கியமானது. ஏனென்றால் முதல் வாய்ப்பில் சொதப்பியவற்றையெல்லாம் இரண்டாவது வாய்ப்பில் நடக்காது பார்த்துக்கொள்ளலாம்.
எனக்கென்னவோ நீ சம்ருவுடன் சேரத்தான் உன்னுடைய முதல் வாழ்க்கை கோணலானதோன்னு தோணுது. சம்ருவை கல்யாணம் செய்துகிட்டு கோணலை சரி பண்ணிடேன்” என்றான் வருண். அதீத தீவிரமாக.
விஷ்வாவிடம் யோசனை.
வருண் சொல்லியவற்றை மனதோடு ஆராய்ந்தான்.
“சரி விஷ்வா உன் அண்ணி கூப்பிடுறாள். நான் கோயம்புத்தூர் போயிட்டு கால் பன்றேன்” என்று வருண் வைத்துவிட, அலைபேசியை மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்த விஷ்வா தனக்கு முன்னே நின்றிருந்த சுசியிடம், “நீயின்னும் போகலையா?” என்று வினவினான்.
‘என்ன கேட்டாள், எதிலிருந்து கேட்டான்னு தெரியலையே! எல்லாமே கேட்டிருப்பாளோ?’ சுசியாகக் கேட்காது எதையும் உளறக்கூடாது என அமைதியாக இருந்தான்.
“ஃபோன்ல யாரு?”
“ஃபிரண்ட்.” அலட்டிக்கொள்ளது கூறினான்.
“ஹோ…”
“ஏன் எனக்கெல்லாம் ஃபிரண்ட் இருக்கக்கூடாதா?”
“இருக்கலாம். தப்பில்லை. ஆனால், உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என் ஃபிரண்ட்ஸ். இப்போ யாரோடவும் நீ டச்ல இல்லைன்னு எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் உன்னை இந்தளவுக்கு சிரிக்க வச்ச அந்த ஃபிரண்ட் யாருன்னு தான் தெரியல” என்றாள். அவளிடம் அவனை ஆராயும் தன்மை.
“நான் இதுக்கு முன்பு சிரித்ததே இல்லையா என்ன?”
அவளது முக்கியமான கேள்வியை முழுதாக தவிர்த்தான். அப்பட்டமாக அவளுக்கும் அது தெரிந்தே இருந்தது.
“பதிலுக்கு பதில் கேள்வி கேட்டால் என்ன அர்த்தம் விஷ்வா?”
“நான் ஏன் பதில் சொல்லணும்?”
இதென்ன அர்த்தமற்ற விதண்டாவாதம் என்று தான் சுசிக்கு தோன்றியது.
“ரொம்ப ஸ்மார்ட் அப்படின்னு நினைப்பா?”
“இல்லையா பின்ன?”
“விஷ்வா…..” அவள் பற்களை கடித்தாள்.
“நான் தான் விஷ்வா என்பதில் டவுட்டா உனக்கு?”
“எப்பா கேள்வியின் நாயகனே ஆளை விடு. நான் உன்னை ஒன்றுமே கேட்கல. நான் கிளம்புறேன்” என்றவள் அவனிடம் எதையோ கண்டுகொண்டவளாக சென்றிருந்தாள்.
சிறிது நேரத்தில் வருணிடமிருந்து தகவல் வந்தது. புலனத்தை திறந்து பார்த்தவனின் விழிகள் நெஞ்சம் சிலிர்க்க பன்னீராய் துளிர்த்தது.
“சாம்…(sam)” விஷ்வாவின் இதழ்கள் பிரிந்து மெல்ல உச்சரித்தன. மூன்று வருடங்களுக்கு பின். மனதோடு மட்டுமே உச்சரித்த பெயர் இன்று அவன்வழி வெளிக்காற்றில் கலந்தது.
அவனது உள்ளத்து தேவதையின் கையில் அவன் உயிர்நீரில் பூத்த புதுமலர். புகைப்படம் தன் முன்னே உயிர் பெற்றுவிடாதா என்கிற ஏக்கம். தவிப்பு இதயத்தின் மூலையில் கூடிக்கொண்டே போனது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று தான்… மனதின் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
மரத்து போய்விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்த அவனது உணர்வுகள் யாவும் அவள் ஒருத்தியிடம் தஞ்சம் கொண்டுள்ளது என்பதை அக்கணம் புரிந்து கொண்டான்.
எப்போது சம்ரு தன்னை தொடர்ந்து கொண்டிருக்கிறாள், தனது பிள்ளையா அவள் பிள்ளையாக வளர்க்க முடிவெடுத்திருக்கிறாள் என்பதை வருண் மூலமாகத் தெரிந்து கொண்டானோ அந்நொடியிலிருந்து தனக்குள் புதைத்தவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர்ந்து மீட்டுக் கொண்டிருக்கிறான்.
சம்ருவுக்காக அவனது குழந்தை பிறந்து பத்து நாட்களாகியும், விஷ்வா நேரில் சென்று பார்க்கவில்லை.
குழந்தை இல்லம் வந்த அடுத்த நொடி விஷ்வாவுக்கு செய்தி கிடைத்துவிட்டது.
தனது மகவு ஒரு நொடி கூட தனித்து இவ்வுலகில் இருந்திடக் கூடாதென்று அப்போதே திருச்சியிலிருந்து சேலம் நோக்கி புறப்பட்டவனுக்கு, கிடைத்த செய்தி பனிச்சாரலாய் மனதை சிலிர்க்க வைத்திட… மூன்று வருடங்களுக்கு பின்னர் லேசான மனதோடு, ஒளிர்ந்த முகத்தோடு காப்பகம் செல்வதை தவிர்த்து திரும்பிச் சென்றான்.
வருணிடமிருந்து புகைப்படங்கள் வந்து கொண்டே இருக்க…
விஷ்வாவின் அமிழ்ந்த காதல் பொங்கி வழிய காத்திருந்தது.