நாட்கள் நிற்காது காத்திருக்காது ஓடுவது தானே நியதி. இங்கும் அவ்வாறே!
கோயம்புத்தூர் சென்று வந்த இரண்டு வாரங்களில், ஒருநாள் இரவில் யுகிக்கு வலி வந்துவிட்டதாக வீரய்யன் அழைக்க, இந்நேரத்தில் ஒரு பெண்ணின் உதவி அவசியமென வருண் சொல்ல உடனடியாக வார்டனை சந்தித்து ஊருக்கு செல்ல அனுமதி வாங்கிவிட்டாள்.
கிளம்பி விடுதியை கடந்து வந்த பின்னர் தான் அந்த இருள் நேரத்தில் எப்படி பேருந்து நிலையம் செல்வதென்று தெரியாது கைகளை பிசைந்துகொண்டு நின்றாள்.
அந்நேரம் மீண்டும் வருண் சம்ருவுக்கு அழைத்து… “காலையில் கிளம்பி வந்தால் போதும், வலி விட்டு விட்டு வருவதால் குழந்தை பிறக்க நேரமாகும். அதுவரை நாங்க பார்த்துகிறோம்” என்று அவளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு பேச சம்ரு ஏற்பதாக இல்லை.
தனக்கு அன்னையாய் இருப்பவளை இந்நிலையில்விட சம்ருவுக்கு மனமில்லை. கிளம்பிவிட்டாள்.
கேட்டில் வாட்ச்மேன் அமர்ந்தவாக்கிலே உறங்கிக்கொண்டிருக்க, அவரை எழுப்பி வார்டன் அளித்த அனுமதி சீட்டை காண்பித்து வெளியில் வந்தவளை இருட்டு அச்சுறுத்தியது.
எதையும் யோசிக்கவில்லை வாட்ச்மேன் கண்ணில் படுமாறு நின்று கொண்டவள், விஷ்வாவுக்கு அழைத்துவிட்டாள்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அலைப்பேசி ஒலியில் எழுந்த விஷ்வா, அந்நேரத்தில் சம்ருவின் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. எந்நிலையிலும் அவள் அவனுக்கு அவனது வார்த்தையை மீறி அழைத்திடமாட்டாள். இன்று அழைத்திருக்கிறாள் என்றால்? சட்டென்று தொற்றிக்கொண்ட பதட்டத்துடன் ஏற்றான்.
“ம்ருதி…”
அவளறிந்து வெகு நாட்களுக்கு பின்னர் கேட்கிறாள்.
மனதில் சாரல் பூக்க விழிகளில் நீர் அரும்பியது.
“ம்ருதிம்மா… ஓகே தானடா நீ?”
அவளுக்கான துடிப்பை முதல் முறை வெளிக்காட்டுகிறான்.
மொத்தமும் நிறைந்து போனாள் அவள்.
“என்னடாம்மா இந்நேரத்தில்… உனக்கு ஒண்ணுமில்லையே?” அவளிடம் பதில்லில்லாது போக கவலையாகக் கேட்டான்.
“ம்” என்று இறுகிய குரலில் கூறியவன், “நான் வர ட்வென்டி மினிட்ஸாவது ஆகும். உள்ள போய் இரு” என்றான்.
“இல்லை… கேட்’கிட்டவே தான் வெளியில் நிக்குறேன். உள்ளப்போனா(ல்) திரும்ப வாட்ச்மேன் வெளியில் விடமாட்டார்” என்றவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாது, இணைப்பைத் துண்டிக்க, வருணிடமிருந்து அழைப்பு வந்திருப்பதை கவனித்தான். என்னவென்று அழைத்து விவரம் தெரிந்து கொண்டவன், மீண்டும் ஒரு அழைப்பு… அரை நொடியில் பேசி வைத்து, தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான். மித்ரனிடம் மட்டும் தகவல் அளித்துவிட்டு காற்றை கிழிக்கும் வேகத்தில் சீறிப்பறந்தான்.
என்னதான் வாட்ச்மேன் இருந்தாலும் அந்த இரவு நேரத்தில் தனியாக நிற்பது என்னவோ அதீத அச்சத்தை கொடுத்தது.
‘பேசாமல் காலையில் போகலாமா?’ என நினைத்த நொடி, ‘வி.ஆர் வந்திட்டிருப்பாங்க. இப்போவே போயிடலாம்’ என்று நினைக்க அவளருகில் நிழலாடியது.
ஒரு கணம் திடுக்கிட்டு சீரானாள்.
தினேஷ் தான் கண்களை தேய்த்துக்கொண்டு கொட்டாவி விட்டபடி நின்றிருந்தான்.
“உன் ஃபிரண்ட் பார்டிகார்ட் வேலை பார்க்க சொன்னாங்களா?”
“தெரியுது தானே, அப்புறம் ஏன் கேட்குற?” என்றவன் “இந்நேரத்தில் எதுக்கு கிளம்புற?” எனக் கேட்டான். அவன் குரலும் முகமும் தூக்கத்தில் இருந்தது.
“சாரி தினேஷ்..”
“ஹோ… வேற?”
“என்னால தான் உன் தூக்கம் கெட்டுப்போச்சு” என்றாள்.
“பாருடா…” என்றவன், “உன்னைவிடவா?” என்றதோடு, “விஷ்வாவுக்கு நீ வேற உறவில் முக்கியமா இருக்கலாம். அதே அளவுக்கு ஃபிரண்ட்ஷிப் அப்படிங்கிற உறவில் எனக்கும் ராஜாவுக்கும் நீ ரொம்பவே முக்கியம். இனி தேர்ட் பெர்சன் மாதிரி பேசாதே!” என்றான்.
“ம்ம்…” தலையாட்டினாள். நெகிழ்வாய்.
“கேட்டதுக்கு பதில் வரல?”
“அக்காக்கு லேபர் பெயின் வந்து அட்மிட் பண்ணியிருக்காங்க!”
“சரிடா… கவனம்” என்ற தினேஷ் இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தவனாக சாலையை பார்க்க, விஷ்வா அவனின் முன் ஒரு இன்ச் இடைவெளியில் வண்டியை நிறுத்தியிருந்தார்.
“ஆத்தீ…” என்று பயத்தில் நெஞ்சில் கை வைத்துவிட்டான் தினேஷ்.
“நண்பனாடா நீ? ஒரு செகெண்டில் உயிர் போய் வந்திருச்சு” என்றான்.
தினேஷின் பேச்சு காதில் வாங்கினாலும், விஷ்வா சம்ருவைத்தான் முறைத்து பார்த்திருந்தான்.
“பாப்பாவ தெரியும் தம்பி. ஐயாவோட அங்கு வரும்போது பார்த்திருக்கேன்” என்றார் அவர்.
“அய்யோ அதெல்லாம் வேண்டாம். இப்போ ட்ரெயின் கிடையாது. பஸ் ஸ்டாப்பில் விட்டால் போதும்” என்றவள் விஷ்வா பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.
“ரொம்ப ஃபாஸ்டா போக வேண்டாம் அங்கிள். வழியில் இறங்கணுன்னா தனியா விடாதீங்க” என்று அவருக்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்கியவன், தன்னையே ஆச்சரியமாகப் பார்த்திருந்த சம்ருதியை ஏறிட, அவள் சட்டென்று இமை தாழ்த்தினாள்.
சம்ருதியின் மீதான அக்கறையை தினேஷ் வாய் பிளந்து பார்த்திருந்தான்.
‘இம்புட்டு நாளா இந்த லவ்வை எங்கடா ஒளிச்சு வச்சிருந்த? அக்கறை ரொம்பத்தான் உருகி ஓடுது.’ இதுதான் தினேஷின் மனதில் ஓடியது.
பைக்கிலிருந்து இறங்கிய விஷ்வா சம்ருதியின் கையிலிருந்த பையை வாங்கி காரில் வைத்திட, அவள் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
ஓட்டுநர் சங்கர் தினேஷுடன் நின்றிருக்க…
“அங்கிள் ரொம்ப வருசமா நம்ம வீட்டில் டிரைவரா இருப்பவர். பயப்பட வேண்டாம்” என்று அவள் முகம் பாராது கூறினான்.
தனக்காக இத்தனை யோசித்து செய்யும் இந்த விஷ்வாவை அவ்வளவு பிடித்தது அவளுக்கு.
‘லவ் யூ விஷ்வா!’ மனதிற்குள் மட்டுமே சொல்லிக்கொண்டாள்.
ஆனால் அவளின் மனம் பேசும் மொழியை அவளது கண்கள் அவனுக்கு காட்டிக்கொடுத்தது.
மனதில் கொட்டும் காதல் மழையை அவளுக்கு காட்டாது மறைத்தான்.
‘ஒருநாள் சத்தமா வாய் திறந்து என்கிட்ட சொல்லுவ. அப்போ நான் சொல்றேன்.’ நினைத்தவன் டிரைவரை அழைத்து காரை கிளப்பக் கூறினான்.
தினேஷிடம் கூறியவள், விஷ்வாவிடம் தலையை மட்டும் அசைத்தாள். போய் வருவதாக.
வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை விஷ்வா அது சென்ற திசையையே வெறித்திருந்தான்.
“இந்த செம் முடிந்தால், அடுத்த செம் வேகமா பறந்திடும் விஷ்வா. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த சொல்லாத காதல்?” எனக் கேட்டான் தினேஷ்.
அன்று தான் விஷ்வா சம்ருவை அருகில் நேருக்கு நேர் பார்த்தது. பேசியது.
சம்ரு மருத்துவமனை சென்ற போது குழந்தை பிறந்து சில நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தது.
சந்தோஷம் மட்டுமே அங்கு.
விஷ்வாவுக்கு அழைத்த வருண் மகன் பிறந்திருப்பதையும், சம்ரு வந்துவிட்டதையும் சொல்லி வைத்தான்.
“எப்படிம்மா இவ்வளவு சீக்கிரம் வந்தாய்?” வீரய்யன் கேட்டிட, சம்ரு மறைக்கவெல்லாம் இல்லை. உண்மையையேக் கூறினாள். அவருக்குத்தான் ஏற்கனவே அவளைப்பற்றி இருந்த கவலையின் பாரம் கூடிப்போனது.
சம்ருவிடம் விரைவாக பேசிட வேண்டுமென்று முடிவெடுத்தார்.
சுகப்பிரசவம் என்பதால் அடுத்த நாளே யுகி வீட்டிற்கு வந்துவிட்டாள்.
நான்கு நாட்கள் யுகியுடன் இருந்த சம்ரு, வார இறுதி நாளான சனியன்று திருச்சி கிளம்பியிருக்க, விஷ்வா கோயம்புத்தூர் புறப்பட்டிருந்தான்.
இந்த இடைப்பட்ட தினங்கள் விஷ்வாவுக்கு சூன்யமாகத்தான் இருந்தது. பிள்ளையார் முன் வைக்கும் ரோஜாவை எதிர்பார்த்தது அவனது இதயம். இல்லையென்றதும் ஏமாற்றம் கொண்டது.
ஏற்கனவே ஞாயிறு அன்று வருணின் குழந்தையை பார்க்க போகவேண்டுமென்று நினைத்திருந்தவன், சம்ருவை பார்த்தே ஆக வேண்டுமென மனம் பிடித்த அடத்தில் சனிக்கிழமையே சென்றிருந்தான்.
குழந்தைக்கு அவனுக்கு தெரிந்த அளவில் அனைத்தும் வாங்கியிருந்தான்.
வருணே மலைத்துவிட்டான்.
“கடையை காலிபண்ணிட்ட போலடா” எனக்கூறி சிரித்தான்.
தன்னுடைய குரல் கேட்டும் சம்ரு உள்ளே இருக்கமாட்டாளே என நினைத்தவனின் கண்கள் வீட்டைச்சுற்றி அலைப்பாய்ந்தது. வீரய்யன் கவனித்துக் கொண்டுதானிருந்தார்.
“என்னன்னு தெரியல… வந்ததுலேர்ந்து ரொம்ப அமைதியா இருக்கா(ள்). என்கிட்டவே பேசல. மொபைல் வைபிரேட் ஆனதை பார்த்துக்கிட்டேதான் பெஞ்சில் தலை வைத்து படுத்திருக்காள். ஆனால் அட்டெண்ட பண்ணல. நான் சொன்னதுக்கும் எதுவும் சொல்லல. அதான் நானே அட்டெண்ட் பண்ணிட்டேன்” என்று ஒரே மூச்சில் அவள் சொல்லி முடிக்க… ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த நால்வருக்குமே சம்ருவுக்கு என்னவானது என்கிற யோசனை தான்.
வகுப்பு மணியடிக்க அஞ்சலி போனை வைத்துவிட்டாள்.
விஷ்வா வேகமாக சம்ருவின் வகுப்பு நோக்கி செல்ல… பேராசிரியர் வந்துவிட்டதால் சம்ருவை பார்க்காது திரும்பியிருந்தான்.
அடுத்தடுத்த நாட்களும் இதே தொடர் கதை தான்.
விஷ்வா சம்ருவை நேரில் பார்க்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.
தினமும் பிள்ளையார் முன் சென்று பூவின்றி ஏமாறுவதும் வாடிக்கையானது.
அன்று கேன்டினில் சம்ருயின்றி அஞ்சலி மட்டும் தனித்திருக்க, விஷ்வா கேங் தற்செயலாக அவளை சந்தித்தது.
அஞ்சலி தன்னுடைய பேக்கிலிருந்து காய்ந்து உதிர்ந்திருந்த ரோஜாக்களை எடுத்துக்கொண்டிருந்தாள்.
“என்ன இவ்வளவு குப்பை? இது பேக்’ஆ குப்பைத்தொட்டியா?” ராஜா கிண்டல் செய்தான்.
“என்ன நக்கலா” எனக்கேட்ட அஞ்சலி, “சம்ரு தினமும் ரோஜா வாங்கிட்டு வர சொல்லுவாள். அவங்க அக்காக்கு டெலிவரின்னு ஊருக்கு போயிருந்தவள், அந்த வீக் ப்ரைடே கால் பண்ணி, மண்டே பன்ஞ்ச் ஆஃப் ரோஸஸ் வாங்கிட்டு வா, நான் சண்டே வந்திடுவன்னு சொன்னாள். மண்டே வாங்கிட்டு வந்தால், வேணாம் சொல்லிட்டாள். இனி எப்பவுமே இந்த ரோஜாவுக்கு வேலையிருக்காது, தினமும் வாங்கிட்டுவர வேண்டியத்தில்லைன்னு சொல்லிட்டாள். பேக்கில் தனி ஜிப்பில் வச்சிருந்ததால் எடுக்க மறந்துட்டேன். இத்தனை நாளில் எல்லாம் காய்ந்து போச்சு. இதான் ரீஸன்” என்றாள்.
அஞ்சலி சொல்லும்வரை ராஜா குறுக்கிடவில்லை.
சம்ரு, விஷ்வாவின் காதலில் இந்த ரோஜாக்களுக்கு எத்தனை முக்கிய இடமென்று அறிந்தவர்களுக்கு விஷ்வாவை நினைத்து வருத்தமாக இருந்தது.
நாட்கள் நகர, சம்ரு அதே நிலையில் தான் இருந்தாள்.
கல்லூரி, படிப்பு, விடுதி… இப்படித்தான் அவளது நாட்கள் சென்றன.
விஷ்வா தவிர்த்து மற்ற மூவரும் பலவிதமாகக் காரணம் கேட்டும் சம்ருதி ஒரு வார்த்தை பேசவில்லை.
ராஜா தான் அதிகம் கடுப்பாகியது.
“முன்னாடி அவன் பண்ணான். இப்போ நீ பண்றியா? என்னதான் ஆச்சு சம்ரு உனக்கு?”
அதுநாள் வரை அழுதிடக் கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருந்த அவளது மனதின் திடம் காற்றாகிப்போக, சத்தமாக அழுத்துவிட்டாள்.
அவர்களுக்கு சற்று தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவரும் அருகில்வர, சம்ரு பேசியது தெளிவாகக் கேட்டது.
“என்கிட்ட எதுவும் கேட்காத… ரீஸன் சொல்ற நிலையில் நானில்லை. அவங்க பேசாத, பார்க்காத சொன்னப்போ நான் காரணம் எதுவும் கேட்காமல் சொன்னதை செய்தேன் தானே! இப்போ என்ன மட்டும் ஏன் காரணம் சொல்லுன்னு தொல்லை பண்றீங்க?” சம்ருவிடம் அப்படியொரு கோபம்.
சுசி ஆச்சர்யமாக பார்த்தாள். அதே ஆச்சரியம் மற்றவர்களிடத்திலும்.
“சம்ரு சத்தமா பேசியே இன்னைக்குத்தான் பார்க்கிறேன். இவ்வளவு கோபம் வருமா?” சுசி கேட்டாள்.
“எங்களுக்கே இப்போதான் தெரியும். ராஜா எப்படி நிக்குறான் பாரு” என்றான் தினேஷ்.
இது சம்ருவின் இயலாமையின் வெளிப்பாடென்று யாருக்கும் தெரியவில்லை.
“ஏன் சம்ரு இப்படிலாம் பேசுற?”
“ப்ளீஸ்… ராஜா!”
…. ராஜா மேற்கொண்டு ஏதோ கேட்க முனைய…
“ராஜா” என்று அழைத்திருந்தான் விஷ்வா.
விஷ்வாவின் குரல் கேட்டதும் யாரையும் பாராது அங்கிருந்து விலகிச் சென்றிருந்தாள் சம்ருதி.
அப்பட்டமான உதாசீனம்.
விஷ்வாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதைவிட, சம்ருவின் நடவடிக்கையை முற்றிலும் ஏற்கமுடியவில்லை.
‘என் சம்ரு இவளில்லை.’ மனம் கலங்கி நின்ற விஷ்வாவை பார்க்க மற்ற மூவரால் முடியவில்லை.
விஷ்வா வருணிடம் காரணம் கேட்டிட… வருண் சம்ருவிடம் பேசினான்.
“உங்க தம்பிக்காக என்கிட்ட இதைப்பற்றி கேட்டால், எப்பவுமே என்கிட்ட பேசாதீங்க மாமா” என்று சொல்லி அழைப்பை வைத்திருந்தாள்.
அதே இணைப்பில் மியூட்டில் இருந்தவாறு அவள் சொல்வதை கேட்ட விஷ்வா முதல் முறையாக காதலில் வலியை உணர்ந்தான்.
வருணால் கூட இருவருக்குமிடையே என்னவென்று அறிந்து சரிசெய்திட முடியவில்லை.