கல்லூரியின் இறுதி நாள். தேர்வுகள் முடிந்திருக்க… அனைத்து விதமான படிப்புகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கடைசி கொண்டாட்ட தினம் அது. கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுவது.
இன்று எப்படியும் சம்ருவை விட்டுவிடக் கூடாதென்று நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்திருக்க… சம்ருதி ஆளில்லை.
உற்சாகமாக ஆட்டம் பாட்டமென்று நடைபெற்று கொண்டிருக்க… இவர்கள் சம்ருவை தேடிக் கொண்டிருந்தனர்.
எப்படியோ அந்த கூட்டத்தில் அஞ்சலி கண்ணில் சிக்கினாள்.
“என்ன நாலு பேருடைய முகமும் ஃபியூஸ் போன மாதிரியிருக்கு?” எனக்கேட்ட அஞ்சலி, “ஹோ… பிரியபோறதை நினைச்சு சோகமாக இருக்கீங்களா?” என்றாள். தானே யூகித்தவளாக.
டிஜே சத்தத்தில் கத்தி பேச வேண்டியதாக இருந்தது.
“சம்ரு எங்க அஞ்சலி?”
“ஹான்… கேட்கலை ராஜா!”
“சம்ரு… சம்ரு எங்க. ஆளே காணோம்?” இம்முறை தினேஷ் கத்தி கேட்டிட அவர்களை ஒரு மாதிரி பார்த்து வைத்தாள் அஞ்சலி.
“ஏன் இப்போ இப்படி பாக்குற?”
“நீ அவளோட க்ளோஸ் ஃபிரண்ட் தானே?” என்று கேட்டவளிடம் ராஜாவின் தலை ஆமென்று ஒருவித விரக்தியுடன் ஆடியது.
“அப்புறம் அவள் ஊருக்கு போனதுகூட தெரியாமல் இருக்க?”
அஞ்சலி சொல்லிய பின்னர் தான் நேற்று தேர்வு முடிந்ததும் மதிய வெளையே சம்ருதி ஊருக்கு போய்விட்டாள் என்பது தெரிந்தது.
வருண் கான்ஃபிரன்ஸிற்காக வெளி மாநிலம் சென்றிருக்க… சொல்லாது யாருக்கும் தெரியப்படுத்தாது சம்ரு ஊருக்கு சென்ற விடயம் வருணுக்கு தெரியாததால், விஷ்வாவுக்கும் தெரியவில்லை.
அதைவிட இங்கிருந்து செல்லும்போது ராஜாவிடம் கூட சம்ரு ஒரு வார்த்தை சொல்லியிருக்கவில்லை.
‘மொத்தமாக தவிர்த்துவிட்டாளா?’
விஷ்வாவுக்கு அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
தன்னுடைய காதலுக்காக தனக்குள் போட்டிருந்த அனைத்து தடைகளையும் உடைத்து, தானே சம்ருவுக்கு அழைத்துவிட்டான்.
பல அழைப்புகள் ஏற்கப்படாமல் போக, விஷ்வாவின் அழைப்பின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்ல… சம்ருவால் அனைத்தும் துண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
சுத்தமாக இதனை விஷ்வாவால் நம்ப முடியவில்லை.
படிப்பு முடிந்ததும் கல்லூரி நிர்வாகப்பொறுப்பை ஏற்க நினைத்திருந்தவன் அதைப்பற்றிய சிந்தனையே இன்றி துவண்டிருந்தான்.
மித்ரன் விசாரித்ததற்கு எதையும் மறைக்கவில்லை. சொல்லிவிட்டான்.
“விடுடா… பார்த்துக்கலாம். லவ் மேரேஜ் இல்லைன்னா அரேன்ஞ் மேரேஜ் ரெடி பண்ணிடலாம்” என்று ஆறுதல் படுத்தினான்.
வருணும் அதனையே சொல்ல, விஷ்வா ஓரளவுக்கு தன்னை தேற்றிக்கொண்டாம்.
அம்மையப்பன் கல்லூரி சீட்டில் அமருமாறு பலமுறை அழைத்திட, மனம் திடமாக இல்லாததால் இப்போதைக்கு வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
தேர்வு முடிவுகள் வந்தது.
வருணிடமிருந்து சம்ரு மேல்நிலை படிக்கப்போவதாக தகவல் வந்தது.
நடப்பது எதுவும் புரியாது மனதால் தத்தளித்தான் விஷ்வா. தவிக்கவிட்டுக் கொண்டிருந்தாள் சம்ருதி.
“ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க விஷ்வா. எதுலையாவது கவனம் செலுத்து” என்று மித்ரன் கூறிட, மேல்நிலை படிக்க முடிவு செய்தான். ஆனால் சுடரில் படிக்க முடியுமென்று தோன்றவில்லை.
எப்படியிருந்தாலும் விஷ்வாவின் பயணம் சுடரில் தான். ஆனால் இந்நிலையில் அங்கு சென்று மீண்டும் இயல்பாய் படிக்க முடியுமென்று அவன்மீது அவனுக்கே நம்பிக்கையில்லை. ஆதலால் வெளிநாடு சென்று படித்தான்.
விடயமறிந்த சம்ரு தன்னால் தானென்று வருந்தினாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் அமைதியாக படிப்பில் கவனம் வைத்தாள்.
தினேஷ் சென்னையில் வேலையில் அமர்ந்துவிட்டான்.
ராஜாவும் வேலைக்கு செல்கிறான். வழக்கம்போல் அவனது அம்மா வெளியூருக்கு அனுப்ப முடியாதென்க திருச்சியிலேயே இருக்கின்றான்.
சுசி வீட்டிலிருக்கிறாள். சுசியின் தந்தை கண்டிப்பானவர். அரசு வேலையில் பணிபுரிகிறார். மகளையும் அரசு பணியில் அமர்த்திட வேண்டுமென்று அரசு தேர்வுக்கு மகளை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். சுசியும் வேண்டா வெறுப்பாக புத்தகமும் கையுமாக வீட்டிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒரு மூலையில் இருந்தனர்.
அஞ்சலிக்கும் மித்ரனுக்கும் எப்படியாவது திருமணம் செய்து வைத்திட வேண்டுமென்று இந்திரா தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதற்காக மேலே படிக்கின்றேன் என்றவளை வீட்டோடு வைத்திருக்கிறார்.
அஞ்சலி மட்டும் தான் சம்ருவுடன் தொடர்பில் இருந்தாள். அலைப்பேசி வாயிலாக. அவள் மூலமாகத்தான் அவளே அறியாது விஷ்வாவை பற்றி சம்ரு தெரிந்து கொண்டிருக்கிறாள்.
சம்ரு தவிர்த்து மற்ற நால்வரும் வாரம் ஒருமுறை கான் காலில் இணைந்து விடுவர். விஷ்வா உட்பட.
வருண் மூலமாக சம்ருவை பற்றி அறிந்துகொண்டாலும், விஷ்வாவாக எதுவும் கேட்டிட மாட்டான்.
சம்ரு எப்போதும் அமைதி தான். இப்போது இன்னும் அமைதியாகிப்போனாள். அந்த அமைதி அதிகம் பாதித்தது வீரய்யனை. அவர் வரை சரியென யோசித்தது, மகளின் சந்தோஷத்தை பரித்துவிட்டதை தாமதமாகத்தான் உணர்ந்தார்.
நாட்கள் நகர்வதிலும் அவர்களின் அன்றாட பணியிலும் எவ்வித மாற்றமுமில்லை. ஒரே சீராக சென்றது.
அன்று காலை நேரமே இந்திரா தன்னுடைய அண்ணனின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
சுஜாதா தனது அண்ணியை வரவேற்று உபசரித்துக் கொண்டிருக்க… வீட்டிலிருக்கும் ஒவ்வொருவராக தத்தம் பணிகளுக்கு செல்ல கிளம்பி உணவுக்கூடம் வந்தனர்.
அம்மையப்பன் தங்கையை வரவேற்று சாப்பிட அழைத்தார். இந்திரா மறுத்துவிட்டார். சாப்பிட்டு வந்துவிட்டதாக.
“சீக்கிரம் சாப்பிட்டு வாங்கண்ணா. கொஞ்சம் பேசணும்.”
“என்ன விடயம் இந்திரா?”
“எல்லாம் நல்ல விடயம் தான். சாப்பிட்டு வாங்க” என்றார் இந்திரா.
‘இன்னைக்கு என்ன பூதம் கிளம்பப்போகுதோ?’ மனதில் நினைத்தவராய் நகர்ந்தார் அம்மையப்பன்.
மித்ரன் இந்திராவை பார்த்து “வாங்க அத்தை” என்றதோடு முடித்துக்கொண்டான்.
“பாடமெல்லாம் நைட்டு தூங்கபோறதுக்கு முன்ன முடிக்கிறதில்லையா அனு. உனக்கு கேட்க வேற ஆளில்ல… சாப்பிட்டு இருக்கவனை ஏன் தொந்தரவு பண்ற?” என்று தன்னுடைய கணீர் குரலில் கேட்டார்.
அனுவின் முகம் நொடியில் சின்னதாகிப்போனது. தன் தந்தையை சுருங்கிய முகத்துடன் ஏறிட்டாள்.
அம்மையப்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதுபேசினாலும் உள்ளர்த்தம் கண்டுபிடித்து பேசி சண்டையை உருவாக்கி விடுவார் இந்திரா. அதற்காக அம்மையப்பன் மகளிடம் கண்மூடி சமாதானம் செய்தார்.
அம்மையப்பன் வேண்டுமானால் தங்கையென்று நினைக்கலாம், மித்ரன் நினைக்க வேண்டிய அவசியமில்லையே.
தன் தங்கைக்காக அவன் பேசினான்.
“என் தங்கச்சி என்கிட்ட கேட்காமல் யாருக்கிட்ட கேட்பா(ள்) அத்தை” என்ற மித்ரன், “என் உறவுகள் எப்பவும் எனக்கு தொந்தரவாகமாட்டாங்க” என மிக மிக அழுத்தமாகக் கூறினான்.
அவர் பேசிய தேவையில்லா பேச்சுக்குதான் அவன் பதில் பேசினான். ஆனால் அவருக்கோ அவன் தன்னை அவமதித்து விட்டதாகத் தோன்றியது.
மித்ரன் அனுவுக்கு உணவு ஊட்டிக்கொண்டே, பாடமும் சொல்லிக்கொடுத்து அவள் எழுத உதவி செய்தபடி இருந்தான்.
இந்திரா என்பவரை அவன் கருத்திலே கொள்ளவில்லை.
மனதில் பொருமிய இந்திரா…
“இதெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்கு மித்ரா… உனக்குன்னு ஒருத்தி வந்து சொன்னால், நீ கேட்டுத்தானே ஆகணும்” என்றார்.
இந்திராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
‘உனக்கு மாமியாராகிட்டு உன்னை கவனிச்சிக்கிறேன்’ என நினைத்த இந்திரா அமைதியாக இருந்தார்.
“என்னண்ணா தெரியாத மாதிரி கேட்குற… மித்ரனுக்கும் அஞ்சலிக்கும் தான் கல்யாணம் பண்ணலாம் அசைப்படுறோம்” என்று சுஜாவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் இந்திரா.
அம்மையப்பன் மனைவியை ஏறிட…
“அஞ்சலி நம்ம வீட்டுக்கு வரப்போற பொண்ணுதாங்களே!” என்று முகமெல்லாம் சிரிப்போடு கூறினார் சுஜா.
“அப்போ சரி சுஜா… வரும்போதே நாள் பார்த்துட்டு தான் வந்தேன். நாளைக்கே நல்லநாள் தான். காலையிலே வந்திடுங்க” என்றவராக இந்திரா எழுந்து தன்னுடைய பட்டு புடவையின் தலைப்பை விரித்து முன் கொண்டு வந்தவராக…
“கிளம்புறேன் சுஜா” என்று நகர…
“மித்ரன் கிட்ட கேட்டுட்டு நாளைக்கு வறோமா இல்லையான்னு நைட்டு கால் பன்றேன் இந்திரா” என்றார் அம்மையப்பன்.
“என்னண்ணா… நானே வந்து கேட்டன்னு உங்க பவுசை காட்றீங்களா?” என்றார் இந்திரா.
அவரின் வார்த்தை அம்மையப்பனுக்கு பிடிக்கவில்லை. முகம் சுழித்தார்.
“அவன் என்னங்க சொல்றது. பெத்தவங்க நாம சொன்னால் அவன் கேட்டுத்தானே ஆகணும்” என்று முன் வந்தார் சுஜாதா.
“பெத்தவங்கங்கிறதுக்காக என் பிள்ளைங்களை கேட்காமல், அவங்க சம்மதமில்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது” என்று மனைவிக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியவர், “மித்ரன் வரட்டும் பேசிட்டு சொல்றோம்” என்றவராகக் கல்லூரிக்கு கிளம்பிவிட்டார்.
சுஜாதாவை முறைத்த இந்திரா…
“இவரென்ன சொல்றது நான் நேரா மித்ரன்கிட்டவே கேட்டுகிறேன்” என்றவராக அங்கிருந்து நேராக மித்ரனின் அலுவலகம் தான் சென்றார்.
மித்ரன் முக்கியமான மீட்டிங்கில் இருக்க…
டாம்பீடகமாக அலுவலகத்தின் உள்ளே வந்தவர், “மித்ரன் இருக்கானா?” என்று ரிஸப்ஷனில் கேட்டார்.
அங்கிருந்த பெண் தன்னுடைய முதலாளியை மரியாதையின்றி விளிக்கும் இந்திராவை மேலும் கீழும் அளவிட்டாள்.
அடர் நிறத்தில் பெரிய பார்டர் வைத்த பட்டு புடவையே அவரின் ஆடம்பரத்தை பறைசாற்றிட…
“அப்பாயின்மெண்ட் இருக்கா மேம்?” என்று பணிவுடன் கேட்டாள் அப்பெண்.
“யாருக்கு அப்பாயின்மெண்ட் இருக்கா கேட்குற, இந்த ஆபீஸுக்கே முதலாளி நான்தான். நீ என்னை கேள்வி கேட்காமல், மித்ரன் ரூம் எதுன்னு சொல்லு” என்று மிரட்டினார் இந்திரா.
“சார் ரூமில் இல்லை மேடம். மீட்டிங்கில் இருக்கிறார். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று இருக்கையை கைகாட்டியவளை முறைத்த இந்திரா,
“என்னையே வெயிட் பண்ண சொல்றியா நீ. அவனை பார்த்திட்டு வந்து உன் வேலைக்கு வேட்டு வைக்கிறேன்” என்று சத்தமிட்டார்.
ரிசப்ஷனிஸ்ட் சொல்ல சொல்ல கேட்காது மீட்டிங் ஹால் நோக்கி நடந்தார்.
ஒரு அறைக்கு முன் பெயர் குறிப்பிட்டிருக்க, கதவை தட்டாது கூட அதிரடியாக திறந்து உள் நுழைந்திருந்தார்.
ரிசப்ஷனிஸ்ட் பயந்துவிட்டாள்.
“மேடம்… மேடம்…” என்று அவர் பின்னே ஓடிவந்தாள்.
கதவு திறந்ததும் முக்கிய கூட்டத்திலிருந்த அனைவரும், மித்ரன் உட்பட யாரென்று பார்த்தனர்.
நீள்வட்ட மேசையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மித்ரனை கண்ட இந்திராவுக்கு அவனின் ஆளுமை தான் முதலில் கண்ணில் பட்டது.
உள்ளேயும் வெளியேயும் கட்டிடத்தை வைத்தே மித்ரனின் செழிப்பை அளவிட்டவருக்கு, ஏற்கனவே அவன் தான் தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டுமென்கிற ஆசையின் அளவு அதிகரித்தது.
“மீட்டிங் எப்போ முடியும் மித்ரா?”
அவன் அவரை கடந்து பின்னால் பயத்துடன் நின்றிருந்த பெண்ணை பார்த்தான்.
“நீங்க போங்க நர்மதா” என்று அப்பெண்ணை அனுப்பி வைத்தான்.
“சாரி காய்ஸ்” என்று பொதுவாக அனைவருக்கும் மன்னிப்பை வேண்டிய மித்ரன், தன்னுடைய காரியதரிசியிடம் மேற்கொண்டு பார்த்துக்கொள்ளும்படி சொல்லி இந்திராவை கூட்டிக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தான்.
“நீ போ’ன்னு சொன்னாலே அவங்கெல்லாம் வெளிய போயிருப்பாங்க… நீயெதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு வெளியில் வர” என்று அதிகாரமாகக் கேட்டதோடு, இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.
அவர் அவ்வாறு அமர்ந்ததெல்லாம் அவனுக்கு பிரச்சனையில்லை. அவர் நடந்துகொள்ளும் முறை தான் அவனை சீண்டியது.
‘இதென்ன அநாகரிகமாக’ என்று.
“இது என் கம்பெனி. இங்கு எப்படி நடந்துக்கணும் எனக்குத் தெரியும்?”
என்னவொரு கம்பீரம்.
“நம்மகிட்ட வேலை செய்யுறவங்களை அடக்கி வைக்கணும். அப்போதான் மரியாதையா நடந்துப்பாங்க” என்றார். அப்போதும் விடாது.
“மரியாதை நாம் நடந்துகொள்ளும் முறையில் தானா வரணும். அடிச்சி பிடுங்க முடியாது.” மித்ரனின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதைப்போல் அழுத்தமாக வெளிவந்தது.
“உன்னை நிறைய மாத்தணும் போலிருக்கே மித்ரா. எம் பொண்ணு வந்துதான் உனக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கணும் போல” என்று மறைமுகமாக விடயத்திற்கு வந்தார்.
மித்ரன்… காலையில் அவர் வீட்டிற்கு வந்தது, இப்போது இங்கு வந்தது, உரிமையாய் நடந்து கொள்வது, பேசுவது என அனைத்தையும் வைத்து என்ன விடயமாக வந்திருக்கிறார் என்பதை நொடியில் கிரகித்து விட்டான்.
அவன் அவரைபோல் சுற்றி வளைத்து, மறைமுகமாகவெல்லாம் பேசவில்லை. நேரடியாக தனது முடிவை கூறினான்.
“எனக்கு கல்யாணம் செய்வதில் விருப்பமில்லை. அதுவும் அஞ்சலியை… ம்ஹூம். சான்ஸே இல்லை. இதுக்கு மேல எதாவது பேசணும் அப்படின்னா, வீட்டில் பேசிக்கலாம்” என்று வாயில் பக்கம் கை காட்டினான்.
“மித்ரா…” இந்திரா மேசையை தட்டியவராக எழுந்திட…
“இது என்னோட ஆபீஸ். இங்கு இப்படி உங்க இஷ்டத்துக்கு நடந்துக்கவும் கத்தவும் உரிமையில்லை” என்றான். கூர்மையாய்.
“நான் உன் அத்தைடா…”
“என் அப்பாவுக்கே இங்கு உரிமையில்லை. அப்புறம் எப்படி அத்தைக்கு இருக்கும்.”
இந்திரா வாயடைத்து நின்றார்.
“என் திருமணத்தில் முடிவெடுக்க என் அப்பா, அம்மா இருக்காங்க. நான் எப்போ கல்யாணம் செய்துக்கணும் எனக்கு தெரியும்” என்றவன் அவர் நிற்பதை பொருட்படுத்தாது மீட்டிங் ஹால் நோக்கி விரைந்தான்.