புருஷோத்தமனின் பேச்சை கேட்டு கண்ணீர் வழிய அதிர்ந்து நின்ற சம்ரு, வீரய்யனின் ஓய்ந்த தோற்றம் கண்டு பதறியவளாக, நொடியில் தன்னை சீர்படுத்திக்கொண்டவளாக அவர் அருகில் சென்றாள்.
“என்னப்பா கால் வலிக்குதா? இங்கவே உட்கார்ந்துட்டிங்க?”
மகளின் குரல் கேட்டதும், கலங்கியதால் தாழ்த்தியிருந்த முகத்தை மாற்றிக்கொண்டவராக தலை நிமிர்த்தினார்.
“என்னப்பா?”
“ஒண்ணுமில்லைடா… படியேறும்போது கால் தடுமாறிடுச்சு. அப்படியே உட்கார்ந்துட்டேன்” என்று காரணம் கூறியவர்,
“கிளம்புவோமா?” என்றார்.
“சரிப்பா! போகலாம்.”
புருஷோத்தமனின் பேச்சு மகளுக்கு தெரிந்தால் தாங்கிக்கொள்ள மாட்டாளென்று வீரய்யனும், தனக்கு தெரிந்துவிட்டதென்றால் தந்தையின் வருத்தம் கூடிப்போகுமென்று சம்ருவும் நடந்ததை கடந்துவிட நினைத்தனர்.
தந்தை, மகள் இருவரையும் பார்த்ததும் செண்பகம் பாட்டி அருகில் வர,
“சுசிகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்’ப்பா” என சம்ரு மேடைக்கு சென்றாள்.
அவளுக்கு வேண்டிய அனைவரும் மேடையில் தான் இருந்தனர்.
“சம்ரு வறாள்!” தினேஷ் சொல்ல அனைவரின் பார்வையும் அவள்மீது படிந்தது.
மேடை ஏறியதும்… விஷ்வாவின் அழுத்தமான பார்வையை சம்ருவாள் உணர முடிந்தது. இருப்பினும் அவன் பக்கம் தன் கருவிழியை கூட அவள் திருப்பவில்லை.
முன்பே தந்தைக்காக எட்ட நின்றவள், இப்போது முற்றிலும் தூரம் சென்றாள்.
“கிளம்புறேன் சுசி. போயிட்டுவறேன் மித்துண்ணா.”
சம்ரு மித்துண்ணா என்றதும் மித்ரனின் முகம் தானாய் தம்பியின் பக்கம் தான் திரும்பியது.
“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே!” சுசி சொல்லிட, மறுத்துவிட்டாள் சம்ரு.
மித்ரனுக்கு அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது. ஆனால் அதனை அவன் ஆராயவில்லை. இதுவே அவர்களாக சொல்லும்போது கேட்டுக்கொள்வான். தானாக பிறரின் தனிப்பட்ட விடயங்களுக்குள் நுழைந்திடமாட்டான்.
எதுவாகயிருந்தாலும் விஷ்வா சரி செய்திடுவான் என்ற எண்ணத்தில் சம்ருவின் தலையில் கை வைத்தவனாக அவளுக்கு விடைகொடுத்தான்.
ராஜா, தினேஷிடம் கூட சம்ரு ஒருவார்த்தை பேசவில்லை.
அப்போது மேடையேறிய சுஜா… கீழிறங்கும் சம்ருவை பார்த்துக்கொண்டே,
“எவ்வளவு லட்சணமா இருக்காள். யாருடா அது” என்று ராஜாவிடம் கேட்டார்.
சம்ரு பேசவில்லையே என்கிற கடுப்பிலிருந்த ராஜா…
“எல்லாம் உங்க ரெண்டாவது மருமகள் தான்” என்று சொல்லிவிட்டான்.
சுஜா அதிர்ந்து விஷ்வாவை பார்த்திட…
அவன் அமைதியாக நின்றிருந்தான்.
“என்னடா சொல்றான் இவன்?”
“சொன்னவனையே கேளுங்க?” என்ற விஷ்வா மேடையைவிட்டு இறங்கிவிட்டான்.
“பொண்ணு நல்லாயிருந்தா ரெண்டாவது மருமகளா ஆக்கிக்க வேண்டியதுதானேன்னு சொல்றான் ‘ம்மா. அவன் பேச்செல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க” என்று ஏதோ உளறி சுஜாவை சமாளித்தான் தினேஷ்.
அஞ்சலி மண்டப வெளிவாயில் வரை சம்ருவுடன் சென்றாள். அவளிடமும் அளவான பேச்சுதான். அதுவுமில்லாமல் அஞ்சலி புருஷோத்தமனின் மகள். அவர் பேசிய பேச்சுக்கு முன்புபோல் அஞ்சலியிடம் சாதாரணமாக சம்ருவால் பேசிட முடியவில்லை.
ஆனால் வீரய்யன் ஒன்றுமே நடவாததைப்போல் அஞ்சலியிடம் சில வார்த்தைகள் பேசிச்சென்றார்.
ரயில் நிலையம் வந்து ரயிலில் ஏறி அமர்ந்த பின்னர் தான் சம்ருவுக்கு உடலின் இறுக்கம் தளர்ந்தது.
வீரய்யனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
‘என்ன பேச்சு பேசிவிட்டார்.’ நினைக்க நினைக்க ஆற்றமாட்டாது மனம் வெதும்பினாள்.
‘இப்படியொரு பேச்சு அவருக்கு கிடைக்க தான் தானே காரணம்.’ மனதோடு அழுகையில் கரைந்தாள்.
மலை நெருங்கும் முன் கோயம்புத்தூர் வந்துவிட்டனர். பேச்சின்றி அமைதியாகவே பயணத்தை கழித்திருந்தனர்.
ரயில் நிலையத்தில் கிராமத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறி அமர்ந்தது தான்,
வீரய்யனின் உடல் சடசடவென வியர்வையால் நனைந்து போனது.
“ஆத்தா சம்ரு…” தீனமான குரலில் அழைத்தவர், இடதுபக்க நெஞ்சை கையால் பிடித்துக்கொண்டு அவள் மீதே சரிந்தார்.
“அப்பா…” என்னவென்று தெரியாது, திடீரென எப்படியென்று அழுதவளை தேற்றி, ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்ல கூறினார் செண்பகம்.
“வீராவுக்கு ஒண்ணுமாகாதுத்தா. அழுதா சரியாப்போவுமா?” என்ற பாட்டி, வீரய்யனை மருத்துவமனையில் சேர்த்த பின்னரும் சம்ருவை விட்டு விலகவில்லை.
ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் வீரய்யன் அனுமதிக்கப்பட்டிருக்க…
மருத்துவர் வந்து என்ன சொல்வாரோயென்று உயிரை கையில் பிடித்து அமர்ந்திருந்தாள் சம்ருதி.
தன்னால் தானென்ற குற்றவுணர்வு அவளை பாடாய்ப்பாடுத்தியது.
புருஷோத்தமன் பேசியதை மனத்திற்குள்ளேயே வைத்து அழுத்தம் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
வெளியில் வந்த மருத்துவர்,
“கொஞ்சம் சிவியர் அட்டாக் தான். ரொம்ப மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். மூச்சு சீரானால் தான் எதுவும் சொல்ல முடியும்” என்று சொல்லி செல்ல…
சம்ருவுக்கு உலகமே தலைகீழாக சுழன்றது.
“அப்பா… அப்பா…” என்று அரற்றியவளை என்ன பேசியும் செண்பகம் பாட்டியால் அமைதிப்படுத்த முடியாதுபோனது.
அழுதால் தான் அவளின் பாரம் குறையுமென்று பாட்டியும் அவள் போக்கில் விட்டுவிட்டார்.
அந்நேரம் சம்ருவின் அலைப்பேசி ஒலிக்க… அவள் மரத்து அமர்ந்திருக்க, பாட்டி தான் அட்டெண்ட் செய்தார்.
“எனக்கு ட்யூட்டி முடிஞ்சிருச்சு அம்மு. எங்க இருக்கீங்க. நான் ஸ்டேஷன் வந்து பிக்கப் பண்ணிக்கவா?” என்று எதிர்முனையிலிருந்து கேட்டான் வருண்.
“எய்யா வருண். நான் பாட்டி பேசுதேன். நாங்க வந்து ரெண்டு மணி நேரமாச்சுப்பா. வீராவுக்கு உடம்பு முடியல… ரயிலு பக்கத்திலிருக்க ஆஸ்பத்தரியில் சேர்த்திருக்கோம். வெரசா வாய்யா. புள்ளைய இப்படி பாக்க நோவுது” என்றார்.
விடயம் அறிந்ததும் தான் வேலை செய்யும் அரசு மருத்துவமனையிலிருந்து விரைந்து வந்திருந்தான்.
“அம்மு…”
வருணின் குரல் செவி நுழைந்ததும் “மாமா” என்று ஓடி வந்தவள் அவனை அணைத்து கதறினாள்.
“என்னால் தான் மாமா. நான் தான் அப்பாவை படுக்க வச்சிட்டேன். எல்லாம் என்னால் தான்” என்று அழுதவளை, அவளின் பேச்சின் காரணம் புரியாது தேற்ற முடியாது தவித்தான்.
வரும்போதே யுகிக்கு அழைத்து பொறுமையாக விவரம் சொல்லியிருந்தான்.
சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் வெளிவர,
இன்னமும் தன்னை அணைத்தபடி அழுது கொண்டிருந்த சம்ருவை விலக்க… அவளோ அவனின் சட்டையை இறுக பிடித்துக்கொண்டு,
“போகாத மாமா. பயமாயிருக்கு. அப்பாவை எழுந்துக்க சொல்லு” என்று பித்து பிடித்தவள் போல் பிதற்றினாள்.
“டாக்டர் வராங்கடா. என்னன்னு கேட்போம்” என்றவன், அவளை விலக்கி அமர வைத்து செண்பகம் பாட்டியிடம் சம்ருவை கண்காட்டிவிட்டு மருத்துவரிடம் சென்றான்.
அந்த மருத்துவருக்கு வருணை ஏற்கனவே தெரிந்திருந்தது. அதனால் தான் எதுவும் சொல்லாது வருணிடம் வீரய்யனின் மருத்துவ அறிக்கையை கொடுத்தார்.
முழுதாய் ஆராய்ந்து பார்த்த வருண்…
“இப்போ ஓகே தானே டாக்டர்?” என வினவினான்.
“ஆல்ரைட்… பட் திரும்ப வர நிறைய சான்சஸ் இருக்கு. எதையோ மனசுல வச்சிட்டு வேதனைபடுறார். அதென்னனு சரிபண்ணுங்க. இல்லைன்னா திரும்ப வரும். வந்தால் உயிருக்கு ஆபத்தில் முடியும். உங்களுக்கே தெரியும்” என்று அவர் முடித்துக்கொண்டார்.
வருண் ரொம்ப நேரமாக வராது இருக்க…
அப்பாவுக்கு ஏதும் சீரியஸோ என்று வருணைத்தேடி மருத்துவரின் அறைக்கு வந்த சம்ரு மருத்துவர் சொல்லிய அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
வருணுக்கு வேண்டுமென்றால் வீரய்யனின் மனதை அழுத்தும் விடயம் என்னவென்று தெரியாதிருக்கலாம். ஆனால் சம்ருவுக்கு? தான் தான் தந்தையின் இந்நிலைக்கு காரணமென்று மொத்த பழியையும் தன்மீதே ஏற்றினாள்.
தருண் பிறந்த சமயத்தில் வீரய்யன் பேசியவற்றை மனம் தானாக நினைத்தது.
யுகிக்கு சுகப்பிரசவம் என்பதால், குழந்தையும் ஆரோக்கியமாக இருந்ததால் அடுத்தநாள் மாலையே வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
அக்காவை கவனித்துக்கொள்ள சம்ரு வந்திருந்தாலும், வருண் அவளை ஒன்றும் செய்யவிடவில்லை. தன்னுடைய மனைவிக்கு அனைத்தும் சின்ன முக சுளிப்புமின்றி அவன் தான் செய்தான். இரவு நேரங்களில் கூட குழந்தை அழும் சமயம் அவன் தான் முதலில் எழுவான். யுகி பால் கொடுத்த பின்னர், அவளை உறங்க சொல்பவன் குழந்தையை மார்பில் போட்டுகொண்டு உறங்கும் வரை தட்டிக்கொடுத்தபடி விழித்திருப்பான். யுகிக்கு வருணின் மீது அதிகப்படியான காதல் ஊற்றெடுத்த தருணம் அது. முன்னரே அவன் அன்பில் நெகிழ்ந்து இருப்பவள் இப்போது முழுதாய் அவனது அன்புக்கு அடிமையாகியிருந்தாள். அவன் இதுநாள்வரை சொல்லாதுவிட்ட காதல் வார்த்தையை அவள் நொடிக்கு நொடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
வீரய்யனுக்கு மூத்த மகளின் வாழ்வை நினைத்து மகிழ்ச்சிக்கொள்ளும் அதே கணம், சிறிய மகளின் வாழ்வை நினைத்து அத்தனை பயமாக இருந்தது.
அந்த பயம் இன்னும் அதிகமாக்கியது சம்ருவின் செயல்.
சம்ரு கோயம்புத்தூர் வந்து நான்கு நாட்களாகியிருக்க… அவளுக்கு விஷ்வாவை காணாது அன்று அதீத தவிப்பாக இருந்தது. என்றுமே விஷ்வா மீதான தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாதவள் அன்று மனதின் தவிப்பை அடக்க முடியாது ராஜாவுக்கு அழைத்தாள்.
அச்சமயம் தான் வீரய்யன் தோப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
சம்ரு வீரய்யனை கவனியாது, தன்னுடைய அழைப்பை ராஜா ஏற்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தாள்.
சம்ரு காதில் வைத்த அலைப்பேசியுடன் நின்றிருக்க, அடுக்களைக்குள் நுழைந்து ஏற்கனவே அவள் கடைந்து வைத்திருந்த மோரை சொம்பில் ஊற்றி குடிக்கத் தொடங்கினார்.
ராஜா அழைப்பை ஏற்றதும்,
“ராஜா அவங்களுக்கு கால் கனெக்ட் பண்ணு. நான் மியூட்டில் இருக்கேன்” என்றாள்.
ராஜா சம்ருவுடன் விளையாட நினைத்து அவளுடன் வம்பு பேசிட…
“ப்ளீஸ்டா. பார்த்தே நாலு நாளுக்கு மேலாகுது. பார்க்கமல் என்னவோ மாதிரி இருக்கு. அட்லீஸ்ட் வாய்ஸாவது கேட்டுக்கிறேன்” என்றாள்.
ராஜாவால் மட்டுமல்ல வீரய்யனாலும் சம்ருவின் தவிப்பை உணர முடிந்தது. குடித்துக்கொண்டிருந்த மோர் தொண்டையில் இறங்க மறுத்தது. அப்படியே வைத்துவிட்டு கூடத்து இருக்கையில் அமர்ந்துவிட்டார். கூடத்து உள் வாயிலில் தான் அவருக்கு முதுகுக்காட்டி நின்று பேசிக்கொண்டிருந்தாள் சம்ருதி.
வீரய்யனுக்கு ஒரு யோசனை…
சம்ருதி நேரடியாக விஷ்வாவுக்கு அழைக்காது ஏன் ராஜா மூலமாக பேசுகிறாளென்று. அப்போது தான் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்த்தவருக்கு பல வருடங்களாகவே இருவரும் முந்தையதுபோல் பேசிக்கொள்ளவில்லை என்பதே அவரின் கருத்தில் பட்டது.
பேசி முடித்து அலைபேசியை அணைத்தவள் திரும்பிட வீரய்யனை கண்டு ஒரு கணம் அதிர்ந்தாள்.
மெல்ல அவரருகே வந்தமர்ந்தாள்.
“அப்பா…”
“நீயும், விஷ்வாவும் பேசிக்கிறதில்லையாம்மா?”
“அப்பா…”
“என்கிட்ட எதையும் மறைக்காதடா?” அவர் சத்தமிட்டிருந்தால் கூட எதையும் சொல்லியிருக்கமாட்டாள். ஆனால் இத்தனை தன்மையாய் அமைதியாகக் கேட்கும்போது அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிவிட்டாள்.
வீரய்யனுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு.
‘ஒரே வீட்டில் இருந்துகொண்டு இதனை எப்படி கவனிக்காது விட்டேன்’ என்று வருந்தினார்.
சம்ருதி சொன்னதில் விஷ்வாவை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தவருக்கு, அவனின் பக்குவமும் தெளிவும் அவரிடத்தில் அவனை இன்னும் உயர்வாய் எண்ண வைத்தது. அதற்காக பிறர் சொல்லுக்கு அடிபட அவர் தயாராகயில்லை.
“சாரிப்பா…” அழுகையோடு கேட்ட மகளை தன் தோளில் சாய்த்துக்கொண்டவர்,
“நமக்கு இது ஒத்து வராதுடா. அப்பா இப்படி சொல்றனேன்னு தப்பா நினைக்காதடா” என்றவர்,
“விஷ்வா நம்மைப்போல சாதாரண வீட்டு பையனில்லை. அம்மையப்பன் எத்தனை உயரத்தில் இருக்கான் தெரியுமா? நீ படிச்ச ஸ்கூல், படிச்சிட்டிருக்க காலேஜ், எல்லாம் அவனுடையது தான்” என்றார்.
சம்ருவின் விழிகளில் அதிர்ச்சியைவிட பிரமிப்பு தான் அதிகம் வெளிப்பட்டது. அவளுக்குத்தான் சுடர் என்பது எத்தனை பெரிய பிராண்ட் என்று தெரியுமே.
“நாளைக்கு ஊருல, விஷ்வா சொத்து தெரிஞ்சுதான் வீரய்யன் அவனை தாங்கினான் போல. பொண்ணை கொடுத்து சொத்தை பிடிச்சிட்டான்னு ஒரு பய நாக்குமேல பல்லு போட்டு பேசிட்டால் என் உயிர் என்கிட்ட இருக்காது. ஒத்தையில நிக்குதுன்னே செண்பகம் அம்மாவுக்கு மனிதாபிமானத்தில் நாம செய்த உதவிக்கு வேற பேரு வச்சிபுடுவானுவ ஆத்தா. அந்த அவமானத்தை என்னால் தலையில சுமந்துகிட்டு நடமாட முடியாது. அம்மையப்பன் தங்கமான மனுஷன் உங்க விடயம் தெரிஞ்சால் கண்டிப்பா சேர்த்து வைப்பான். ஆனால் அவனுடைய சொந்தபந்தம் சரியில்லத்தா. உன்னை வாழவிடமாட்டாங்க” என்றவர், “வீரய்யன் சொத்துக்கு ஆசைப்பட்டுட்டாங்கிற பேச்சை வரவிட்டுடாத தாயி. இதுல நான் விஷ்வா தம்பியை குறை சொல்லவே இல்லை. அவன் செண்பகம்மா சொந்த பேரனா இருந்திருந்தால், நானே கட்டி வச்சிருப்பேன். அவங்க உசரம் வேற நம்ம இடம் வேற. உறவுக்குள்ள காசு பணம் வேற்றுமை நுழைஞ்சிட்டால் அன்பு பாசமெல்லாம் விலகிப்போயிடும். இந்த அப்பன் உன்கிட்ட கையேந்தி நிக்கிற(ன்)த்தா. ஒத்து வராதது நமக்கு வேண்டாம்” என்று மகளிடம் கை ஏந்தினார்.
அவரின் செயலில் பதறியவள், தந்தையின் கையை பிடித்து நெற்றியில் வைத்துக்கொண்டவளாக,
“உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்யமாட்டேன்’ப்பா” என்றாள்.
அந்நொடி அவளின் இதயம் துடித்த துடிப்பு அவள் மட்டுமே அறிந்தது.
இன்று இதனை நினைத்து பார்த்தவளுக்கு, புருஷோத்தமனின் பேச்சு காதில் எதிரொலிக்க…
‘அப்பா சொல்லியது எத்தனை உண்மையான வார்த்தை’ என்று புரிந்தது.